மூர்த்தி வருகிறான்!

அவள் கண் எதிரே சுவரில் காணப்பட்ட அந்தப் பதினைந்தாம் தேதி தான் அவள் மனத்துள் எத்தகைய சிந்தனைகளை எழுப்பிவிட்டது? பழைய நினைவுகளில் லயித்துப் போய் உட்கார்ந்திருந்த பவானி, அடுப்பில் பால் பொங்கி வழிவதைக் கூடக் கவனிக்கவில்லை. கல்யாணராமன் கொடுத்த பால் 'சுரு சுரு' வென்று பொங்கி, பாதிக்கு மேலாக அடுப்பில் வழிந்து போன பிறகு தான் பவானி தன் சுய உணர்வை அடைந்தாள்.

அடுப்பிலிருந்து பாலை இறக்கிக் காப்பி போட்டு முடித்தவுடன், பாலு கொல்லைப் பக்கத்தில் இருந்து பல் தேய்த்துக் கொண்டு உள்ளே வந்தான். அம்மாவின் அருகில் சென்று உட்கார்ந்து அவள் கொடுத்த காப்பியை வாங்கிக் குடித்தான். சிறிது நேரம் இருவருமே பேசாமல் இருந்தார்கள். பவானி மகனின் முகத்தை ஆசையுடன் பார்த்தாள்,

”பாலு! உனக்கு எத்தனாம் தேதி பள்ளிக்கூடம் திறக்கிறார்கள்?" என்று கேட்டாள்.

"ஜுன் மாசம் பன்னிரண்டாம் தேதி திறக்கிறார்கள் அம்மா. மே மாசம் பத்து தேதிக்குள் - ரிஸல்ட்' சொல்லி விடுவார்கள்."

அப்போ நீ பாஸ் பண்ணி விடுவாயோ இல்லையோ? கணக்கிலே நீ புலியாயிற்றே. அதனாலே கேட்கிறேன்" என்று பாதி கேலியாகவும், பாதி கவலையுடனும் விசாரித்தாள் பவானி.

பாலு கன்னங் குழியச் சிரித்தான். *ஓ! பாஸ் பண்ணி விடுவேனே ! கணக்கெல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேன். சமூக நூலில் நான் தான் முதலாகப் பாஸ் பண்ணுவேன். சரித்திரம் அப்படியே ஒரு கேள்வி விடாமல் எழுதி இருக்கேன். அதோடே அம்மா, வாத்தியார்களுக்கெல்லாம் என் பேரிலே கொள்ளை ஆசை. அவர்களுக்கு இடைவேளையின் போது நான் போய் டீ வாங்கி வந்து கொடுப்பேன். கிளாஸிலே பானைத் தண்ணீர் பிடித்து வைத்து கண்ணாடித் தம்ளரை அலம்பி சுத்தமாக வைப்பதும் நான் தான். நம் வீட்டிலிருந்து உனக்குத் தெரியாமல் இரண்டு ஏலக்காய்களை எடுத்துப்போய்த் தட்டி அதிலே போட்டு வைத்து விடுவேன். நல்ல பங்குனி மாசத்து வெயில் வேளையிலே ஏலக்காய் போட்ட ஜலத்தை சாப்பிட்டு என்னை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பார்கள். கவனித்தும் மார்க்குகள் போடுவார்கள் அம்மா!"

பவானிக்கு மகிழ்ச்சியும் கோபமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. இந்தப் பிள்ளை இப்படிப் படிப்பில் அக்கறை இல்லாமல் தண்ணீரிலே ஏலக்காய் போட்டு உபாத்தியாயர்களிடமிருந்து மார்க்கு வாங்கப் பிரயாசைப் படுகிறானே! உண்மையிலே உழைத்துப் படித்தால் பாலு எவ்வளவு கெட்டிக்காரனாக இருப்பான்?' என்று நினைத்து வேதனைப் பட்டாள் அவள்.

தாயின் முகத்தில் தேங்கி நிற்கும் கவலையைப் பார்த் ததும் பாலு. "அம்மா கட்டாயம் நான் பாஸ் பண்ணி விடுவேன் அம்மா?.அடுத்த தடவை என்னை எந்தப் பள்ளிக்-கூடத்தில் சேர்க்கப் போகிறாய்?" என்று கேட்டு அவள் முகத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் பதில் கூறுவதற்குள் தெருவில் அவனுடைய சிநேகிதர்கள் வந்து அழைத்தார்கள். பாலு விளையாடுவதற்காக வெளியே எழுந்து சென்றான்.

முற்றத்து வெயில் தாழ்வாரத்தில் ஏறி வந்து கொண்டிருந்தது. பவானி குளித்துச் சமையல் செய்வதற்காக கொல்லைப்புறம் போக ஆரம்பித்தவள் தெருக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நின்றாள்.

வாசல் கதவைத் திறந்து கொண்டு நடுத்தர வயதினனான வாலிபன் ஒருவன் வந்தான். நல்ல உயரமும், மிடுக்கான பார்வையும், எடுப்பான நாசியும், அழகான பதாற்ற-முமுடைய அவன் அவளைப் பார்த்ததும் புன் சிரிப்புடன், "கல்யாணராமன் வீடு இதுதானே? டில்லியில் அக்கௌண்ட்ஸ்' ஆபீசில் இருந்து ரிடையர் ஆனவர். அவரைப் பார்க்க வேண்டும்" என்று கேட்டான்.

பவானி சிறிது நேரம் தயங்கி நின்றாள். பிறகு நிதானமாக, ”இதுவும் அவர் வீடுதான். ஆனால் அவர் இங்கு இல்லை. பக்கத்து வீட்டில் இருக்கிறார். இங்கே நாங்கள் குடியிருப்பவர்கள்" என்று கூறினாள்.

"ஓ! ஐஸி! அதுவும் மாமாவின் வீடுதானா? பக்கத்து வீட்டையும் வாங்கி விட்டார் போலிருக்கிறது. நான் இந்தப் பக்கம் வந்து ஆறேழு வருஷங்கள் ஆயிற்று. என் தாயார் அவருடைய கூடப் பிறந்த தங்கை. அவள் போன அப்புறம் மாமாவை நான் பார்க்கவேயில்லை" என்று வந்திருந்த இளைஞன் பேசிக்கொண்டே நின்றான்.

பவானிக்கு என்னவோ போல் இருந்தது. அவளுக்கு இப்படியெல்லாம் பிறரிடம் பேசிப் பழக்கம் இல்லை. நெஞ்சில் உறுதியும், தைரியமும் வாய்ந்தவளாக இருந்தாலும் நடைமுறையில் அவள் வெகு சங்கோஜி. கட்டிய கணவனிடமே அவள் மனம் விட்டுப் பழகப் பல மாதங் கள் ஆயிற்று. ஆகவே தயக்கத்துடன் அவனைப் பார்த்து "இப்படி பெஞ்சியில் உட்காருங்கள். நான் போய் உங்கள் மாமாவையும் மாமியையும் அழைத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

வந்திருந்த இளைஞன் வெகு சுவாதீனமாகப் பெஞ்சியில் வந்து உட்கார்ந்து கொண்டான். பிறகு, "நோ! நோ! அனாவசியமாக உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போகிறேன்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான். அதற்குள் பவானி கொல்லைப்-புறம் சென்று பார்வதி அம்மாளையும் கல்யாணராமனையும் அழைத்து வந்தாள்.

பார்வதி அம்மாள் ஒரு நிமிஷம் தயங்கியபடி அவனைப் பார்த்தாள். ’சட்'டென்று புரிந்து கொண்டவள் போல், ”யார்? மூர்த்தியா? எப்போடா வந்தே?" என்று கேட்டாள்.

கல்யாணராமன் மட்டும் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வீட்டிற்கு வந்தவனுடன் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்கிற காரணத்தினாலோ என்னவோ. ”மூன்று வருஷமாக உன்னிடமிருந்து கடிதமே வரவில்லையே! எங்கே, என்ன பண்ணிக் கொண்டிருந்தாய்? ”என்று கேட்டார்.

மூர்த்தி, சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட தன் கிராப் தலையைத் தடவிக் கொண்டான்.

உண்மையைச் சொல்லுவதா அல்லது அத்துடன் கற்பனையையும் கலந்து சரடு திரிப்பதா என்பது புரியாமல் சிறிது நேரம் யோசித்தான். அப்புறம் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவன் போல் "பம்பாயில் கபாதேவியில் ஒரு பெரிய துணிக்-கடையில் மானேஜராக இருந்தேன். அவர்கள் தான் என்னை இந்தப் பக்கம் அனுப்பி புதிசாகக் கடை திறந்தால் வியாபாரம் நடக்குமா என்று பார்த்து வர அனுப்பி-யிருக்கிறார்கள்" என்றான்.

”ஓஹோ! அப்படியா? சந்தோஷம் அப்பா. உன் அம்மா இருக்கிற வரைக்கும் தான் நீ எதிலும் நிலைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாய். வகையாகக் கண்ணியமாக என் பிள்ளை இருக்கப்போகிறானா?' என்று அவள் என்னிடம் சொல்லி அரற்றிக் கொண்டே இருந்தாள். இனிமேலாவது ஒழுங்காக இருந்தாயானால் சரி' என்று கூறிவிட்டுக் கல்யாணராமன் வீட்டுக்குப் போக எழுந்தார்.

மூர்த்தியின் முகம் வாட்டமடைந்தது. யாரோ முன்பின் தெரியாத ஒரு பெண் எதிரில் மாமா சட்டென்று தன் பூர்வ காலத்தைப் பற்றிப் பேசிக் கௌரவத்தைக் குலைத்தது மூர்த்திக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பவானியை அவன் ஒரு மாதிரியாகப் பாத்து கொண்டே, பார்வதியிடம், "என்ன மாமி! பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என்று குடி வைத்திருக்கிறீர்கள்போல் இருக்கிறது. வேண்டியது தானே?" என்று கேட்டான்.

"ஆமாண்டா அப்பா! வயசானவளாக இருந்தாலும் என்னைப்போல ஒண்டிக்கட்டையாக எனக்கு இருக்கப் பிடிக்காதுடா. நீ தான் உன்னைப் பச்சைக் குழந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். உனக்கு இந்த மாசியோடு முப்பத்தி ஒன்று வயசு ஆகிவிட்டதே. காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால்

மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன் ஆகியிருப்பாய். பிரமசாரிக் கட்டையாய் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டு, நீயும் உன் போக்கும்! ஹும்... எழுந்திருந்து பெங்கள் வீட்டுக்கு வா. குளித்துச் சாப்பிடலாம்" என்று பார்வதி மேலும் அவனைப் பேச விடாமல் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

பவானிக்கு எல்லாம் ஒரே வியப்பாக இருந்தது. சம்பாதிக்கும் ஒரு கண்ணியமான யுவன், ஏன் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்? மூர்த்திக்கு என்ன அழசில் குறைவா? படிப்பில் குறைந்தவனாகவும் தோன்றவில்லை.

பவானியின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் மதித்தது . யார் எப்படி வேண்டு-மானாலும் இருக்கட்டும். அவன் இங்கு வருவதற்கோ , தன்னுடன் பேசுவதற்கோ எந்த விதமான சந்தர்ப்பத்தையும் அவள் ஏற்படுத்திக் கொள்ளமாட்டாள். அதற்கு அவசியமும் இல்லை .

பாலு விளையாடி விட்டுப் பசியுடன் திரும்பி வருவான் என்கிற எண்ணம் எழுந்ததும் பவானி அவசரமாகச் சென்று குளித்துச் சமையல் வேலையில் ஈடுபட்டாள்.