அண்ணனும் தங்கையும்

அதன் பிறகு கல்யாணமும் பார்வதியும் அவளுக்கு எவ்வளவோ உதவி செய்தார்கள். ஊரிலிருந்து பவானியின் தமையனும், அவன் மனைவியும் வந்தார்கள். அருகில் இருந்து எல்லாக் கிரியைகளையும் செய்து முடித்தார்கள். பவானியின் கணவன் இறந்து பதினைந்து தினங்கள் வரையில் யாருமே எதுவுமே பேசவில்லை . ஒரு வழியாக எல்லாம் முடிந்த பிறகுதான் பவானிக்குத் தன் தனிமையைப் பற்றி நினைவு வந்தது.

கொல்லைத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து குழந்தைக்குச் சாதம் ஊட்டிக் கொண்டிருந்த அவள் அருகில் அவள் தமையன் நாகராஜன் வந்து உட்கார்ந்து கொண்டான் .

மெதுவான குரலில் அவனாகவே பேசவும் ஆரம்பித்தான்.

”பவானி! இனி மேல் நீ என்ன பண்ணப் போகிறாய்?" என்று கேட்டான்.

பவானி. விழிகளில் கண்ணீருடன் அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள்.

"என்ன பண்ண வேண்டும் அண்ணா நீதான் சொல்லேன்?'

”நான் என்னத்தைச் சொல்வது? நீயாகவே ஏதாவது சொல்லுவாய் என்று பதினைந்து நாளாகப் பொறுத்துப் பார்த்தேன். நீ ஒன்றுமே பேசவில்லை. எனக்குக் கேட்க வேண்டிய கடமை ஒன்று இருக்கிறதல்லவா?"

ஆரம்பத்தில் அன்புடனும், அனுதாபத்துடனும் பேச ஆரம்பித்த அவன் படிப்படியாகக் கோபத்துடன் பேச ஆரம்பித்தான்.

"உனக்கு இந்த நெஞ்சழுத்தம் ஆகாது. கூடப் பிறந்தவனை அண்டித்தான் இனிமேல் இருந்தாக வேண்டும்”, என்கிற பாவம் தொனிப்பதாக இருந்தது அவன் பேச்சில்.

அவன் வெடுவெடுவென்று பேசியதும் பவானியின் முகம் வாட்டமடைந்தது. மனதுக்குள் எதையோ வைத்துக் கொண்டு வெளியில், ஒன்றுக்கொன்று சம்பந்த-மில்லாமல் அவன் பேசுவது தெரிந்து போயிற்று. ”உன் புருஷன் உனக்கு என்ன ஆதாரத்தை வைத்து விட்டுப் போயிருக்கிறான்? ஏதோ வேலையில் இருக்கிறான். பிக்கல் பிடுங்கல் ஒன்றும் இல்லை என்று தானே அப்பா உயர்வு என்று உன்னைக் கொடுத்தார்? இப்போது நீ நிராதரவாக ஒரு குழந்தையுடன் நிற்கிறாயே?" என்று அவன் ஏச வேண்டியவன். அப்படி ஏசாமல் ”இனி மேல் என்ன பண்ணப்போகிறாய்" என்று நாசூக்காகக் கேட்கிறான்.

குழந்தைக்குச் சாதம் ஊட்டி முடிந்தவுடன் கையை அலம்பிக் கொண்டு பவானி உள்ளே சென்றாள். பீரோவைத் திறந்து அவளுக்காக அவள் கணவன் வைத்து விட்டுப் போன ஆதாரத்தை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

அது ஓர் 'இன்ஷூரன்ஸ் பாலிஸி’. மூவாயிரம் ரூபாய்களுக்கு ’இன்ஷூர்' செய்யப்-பட்டிருந்தது. வேறே எந்தவிதமான ஆதாரத்தையும் நம்பி அவள் இருக்க முடியாது. இருபத்தைந்து வயது நிரம்பிய பவானியின் வாழ்க்கைக்கு அந்த மூவாயிரம் ரூபாய் ஒரு ஆதரவா என்ன? அவளும் அவள் குழந்தையும் அதை வைத்துக் கொண்டு சாப்பிட்டாக வேண்டும்: பாலு பெரியவனாகி விட்டால் அந்த மூவாயிரம் ரூபாயிலிருந்து அவனைப் படிக்க வைத்தாக வேண்டும்.

வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளே அநேகம். ஒரு மாசத்தில் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. அதை ஒரு வருஷத்தில் சம்பாதிக்கிறவர்களும் உண்டு. ஏதோ ஒரு சமயம் என்றால் இருக்கட்டும் என்று எண்ணியே பவானியின் கணவன் மூவாயிரம் ரூபாய்க்குப் ’பாலிஸி' எடுத்துக்கொண்டான். மனைவிக்கும் குழந்தைக்கும் அதுதான் ஆதாரமாக அமையப் போகிறது என்று அவன் கனவிலும் நினைத்தவன் அல்ல. கணவன் மூவாயிரம் சேமித்து வைத்திருப்பதே பவானிக்குத் தெரியாது. மாதச் சம்பளம் நூற்றிருபது ரூபாய் வந்தது. அதில் நூறு ரூபாய் குடும்பச் செலவுக்குக் கணவன் அவளிடம் கொடுத்து விடுவான். மீதி இருபது ரூபாயை அவன் என்ன செய்கிறான் என்பதை அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.

இப்போது பவானியின் தமையன் அந்த மூவாயிரம் ரூபாயடன் அவள் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கிறான். அதை வைத்து பாலுவின் கல்வியை எடை போடுகிறான். 'பூ! அது ஒரு பிரமாதமா? பணமென்று மதிப்பு வைக்காமல் செலவு செய்தால் மூன்றே நாளில் தீர்த்து விடலாம். மதிப்புடன் செலவு செய்தால் மூன்று வருஷங்களுக்குக் காணாது. பிறகு?...' என்று அவன் சிந்தனை செய்வதாகவே பவானி நினைத்தாள்.

தலையைக் குனிந்து நிற்கும் தங்கையையும், அவள் கையிலிருந்த 'பாலிஸி' யையும் மாறி மாறிப் பார்த்த வண்ணம் நாகராஜன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந் தான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவன் போல், ”ஆமாம், நீ இதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.

பவானி பரிதாபமாகச் சிரித்தாள்.

"என்னைப் போய்க் கேட்கிறாயே அண்ணா? உனக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்யேன். நான் என்னத்தைக் கண்டேன் உலகத்தில்?" என்று பதிலளித்தாள்.

"ஹும்... சரி. 'பாலிஸி'யைப் பற்றிக் கம்பெனிக்கு எழுதி பணத்துக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டான்.

பவானிக்கு முதல் கேள்விக்கு விடை கூறுவதற்குக் கஷ்டமாக இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்குப் பதில் அளிக்கத் தயக்கமாக இருந்தது. நிலத்திலே கோடுகள் வரைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். அவள் மனதில் எவ்வளவோ எண்ணங்கள் எழுந்தன. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் அண்ணாவின் பிரம்மாண்டமான இல்லம். பணத்தின் பெருமையிலும் வாழ்க்கையின் நிறைவிலும் பூரித்து இருக்கும் மன்னி கோமதி, அவர்கள் வீட்டுக் கார், வேலையாட்கள். குழந்தை சுமதி. எல்லோரும் அவள் மனக்கண் முன்பு ஆடி அசைந்து தோன்றினர். அந்த வீட்டில் இவள் யாராக மதிக்கப்படுவாள்?

நாகராஜனின் அருமைத் தங்கையாகவா? மஞ்சளும் குங்குமுமாக இருந்த போது அளித்த மதிப்பை மன்னி கோமதி இப்பொழுதும் இவளுக்கு அளிப்பாளா? யார் கண்டது?

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு ஒரு தடவை பவானி ஆமையன் வீட்டுக்குப் போயிருந்தாள். கல்யாணமாகிப் புக்ககத்தில் போய் ஆறு மாசங்கள் குடித்தனம் பண்ணி

விட்டு வருகிறவள். மனசிலே எத்தனையோ ஆசைகள், விருப்பங்கள், வெறுப்புகள், உணர்ச்சிகள் நிறைந்து இருந்தன. யாரிடமாவது தன் வயசுக்கு ஒத்த பெண்ணி படம் அவைகளை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத் துடன் வந்தாள். கோமதி அவளைவிட வயசில் இரண்டு வருஷங்கள் மூத்தவள். அவளும் புதிதாக மணமாகி வந்திருப்பவள் தான். இருவரும் மனம் விட்டு எவ்வளவோ அந்தரங்கமாகப் பேசி இருக்கலாம்.

பவானி வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு விருவிரு வென்று உள்ளே போய் விட்டாள் கோமதி. அவள் சுபாவம் அப்படி.

"கோமு! கோமு! இதோபார், யார் வந்திருக்கிறார்கள்?" என்று நாகராஜன் அவளைப் பல முறைகள் அழைத்தான்.

கோமதி அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்தாள்.

"நான்தான் பவானி வந்ததை அப்பொழுதே பார்த்தேனே. இதற்குப் போய் இவ்வளவு அமர்க்களம் பண்ணுவானேன்?" என்று 'சூள்' கொட்டினாள் கோமதி.