Chapter 3
மீனாம்பாளுடைய மரணவோலை கிடைத்ததின் பிறகு இரண்டு வருஷங்கள் கழிந்துவிட்டன. இதனிடையே எனக்கு நிகழ்ந்த அனுபவங்களை யெல்லாம் விஸ்தாரப்படுத்திக் கொண்டு போனால் பெரிய புராணமாக வளரும். சுருக்கத்தைச் சொல்லுகிறேன்.
அந்த ஆற்றாமையினால் வெளியேறிய நான் அப்படியே காஷாயம் தரித்துக்கொண்டு துறவியாகி வடநாட்டிலே ஸஞ்சாரம் செய்து வந்தேன். “வந்தே மாதர” தர்மத்தை மட்டிலும் மறக்கவில்லை. ஆனால், என்னை ஸர்க்கார் அதிகாரிகள் பிடித்துச் சிறையிடும்படியான முயற்சிகளிலே நான் கலக்கவில்லை, ஜனங்களுக்குள் ஒற்றுமையும், பலமும் ஏற்படுத்தினால் ஸ்வதந்திரம் தானே ஸித்தியாகு மென்பது என்னுடைய கொள்கை, காரணத்தை விட்டுப் பயனைச் சீறுவதில் என் மனங் குவியவில்லை . அங்கங்கே சில சில பிரசங்கங்கள் செய்ததுண்டு. இதுபற்றிச் சில விடங்களில் என்னைப் போலீஸார் தொடரத் தலைப்பட்டார்கள், இதனால் நான் ஜனங்களினிடையே நன்றாகக் கலந்து நன்மைகள் செய்து கொண்டு போக முடியாதபடி, பல தடைகள் ஏற்பட்டன.
ஆகவே, எனது பிரசங்கங்களிலிருந்து எனது நோக்கத்திற்கு அனுகூலத்தினும் பிரதிகூலமே அதிகமாக விளையலாயிற்று. இதையுந் தவிர, எனது பிரசங்கங்களைக் கேட்டு ஜனங்கள் மிகவும் வியப்படைவதையும், மற்றவர்களைக்காட்டிலும் எனக்கு அதிக உபசாரங்கள் செய்வதையும் கண்டு, உள்ளத்திலே கர்வம் உண்டாகத் தலைப்பட்டது.
“இயற்கையின் குணங்களிலிருந்து செய்கைகள் பிறக்கின்றன. மூடன் 'நான் செய்கிறேன்' என்று கருதுகின்றான்” என்ற கீதை வாக்கியத்தை அடிக்கடி மனனஞ் செய்து கொண்டேன்.
இந்த வீண் கர்வம் நாளுக்கு நாள் மிகுதியடைந்து என்னை விழுங்கி, யாதொரு காரியத்துக்கும் பயன்படாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் உண்டாயிற்று. வெளிக்குத் தெரியாமல் - எவருடைய மதிப்பையும் ஸன்மானத்தையும் எதிர்பார்க்காமல் - சாதாரணத் தொண்டிழைப்பதற்கே என்னை மாதா வைத்திருக்கிறா ளென்பதை அறிந்து கொண்டேன்.
எனவே, பிரசங்கக் கூட்டங்களில் சேர்வதை நிறுத்திவிட்டேன். சில தினங்களுக்-கப்பால், எனக்குப் போலீஸ் சேவகர் செய்யும் உபசாரங்களும் நின்று போய்விட்டன, பாதசாரியாகவே பலவிடங்களில் சுற்றிக்கொண்டு பலபல தொழில்கள் செய்துகொண்டு லாஹோர் நகரத்துக்குப்போய்ச் சேர்ந்தேன். அங்கே லாலா லாஜ்பத்ராய் என்பவரைப் பார்க்க வேண்டுமென்ற இச்சை ஜனித்தது.
அவரைப்போய்க் கண்டதில், அவர் என்னிடம் நம்பிக்கை கொண்டவராகி, கோசல நாட்டுப் பிரதேசங்களில் கொடிய பஞ்சம் பரவியிருக்கிறதென்றும், பஞ்சத்தில் கஷ்டப்படும் ஜனங்களுக்குச் சோறு துணிகொடுக்க வேண்டுமென்ற கருத்துடன் தாம் நிதிகள் சேர்த்து வருவதாகவும், பல வாலிபர்கள் தம்மிடமிருந்து திரவியங் கொண்டுபோய் பஞ்சமுள்ள ஸ்தலங்களிலிருந்து உழைத்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு, "நீரும் போய் இவ் விஷயத்தில் வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார்.
ஆ! - ஆ! ஆ! ராமசந்திரன் அரசு செலுத்திய நாடு! வால்மீகி முனிவர் புகழ்ந்து போற்றிய நாடு! அங்கு ஜனங்கள் துணியும் சோறு மில்லாமல் பதினாயிரக் கணக்காகத் தவிக்கிறார்கள்! அவர்களுக்கு உதவி செய்யப் போவாயா என்று என்னைக் கேட்கவும் வேண்டுமா? அவர்க ளெல்லோரும் எனக்குத் தெய்வங்க ளல்லவா? அவர்களுக்கு வேண்டியன செய்ய முடியாவிட்டால் இந்தச் சதை யுடம்பை எதன் பொருட்டாகச் சுமக்கிறேன்?. . . . . லாலாவிடம் அனுமதி பெற்றுக் கொண்டு போய்ச் சிறிது காலம் அந்தக் கடமை செய்து கொண்டு வந்தேன். அங்கு கண்ட காட்சிகளைப் பற்றி எழுதவேண்டுமா? எழுதுகிறேன், கவனி.
தேவலோகத்தைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறாயா? சரி! நரகத்தைப் பற்றிக் கேள்வி யுற்றிருக்கிறாயா? சரி! தேவலோகம் நரகலோகமாக மாறி யிருந்தால் எப்படித் தோன்றுமோ, அப்படித் தோன்றியது பகவான் ராமசந்திரன் ஆண்ட பூமி! நான் அங்கிருந்த கோரங்களை யெல்லாம் உன்னிடம் எதற்காக விரித்துச் சொல்ல வேண்டும்?
புண்ணிய பூமியைப் பற்றி இழிவுகள் சொல்வதினால் ஒருவேளை சிறிது பாவமுண்டாகக்கூடும். அந்தப் பாவத்தைத் தவிர வேறென்ன பயன் கிடைக்கப் போகிறது?
உன்னால் எனது தாய் நாட்டிற்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? எழுந்திருந்து வா, பார்ப்போம்! எத்தனை நாள் இப்படி உறங்கி அழியப் போகிறீர்களோ! அட, பாப ஜாதியே, பாப ஜாதியே! ......... இது நிற்க,
ஓரிரண்டு மாதங்களுக் கப்பால், லாலா லாஜ்பத்ராய் எங்களுக்குக் கடித மெழுதி இனி அந்த வேலை போதுமென்று கட்டளை பிறப்பித்து விட்டார்!
பஞ்சந் தீர்க்கும் பொருட்டாக இவர் வாலிபர்களைச் சேர்ப்பதிலிருந்து அதிகாரிகள் ஏதேனும் சமுசயங் கொண்டு மறுபடியும் தம்மைத் தீபாந்தரம் அனுப்பி விடுவார்களோ என்ற சந்தேகத்தை யாரோ அவருடைய புத்திக்குள் நுழைத்து விட்டார்கள்.
நல்லவர்தான் பாபம்; மிகுந்த பக்தி சிரத்தை யுடையவர். தர்மாபிமானத்திலே சிறந்தவர்.
ஆனால், அவரை ஸமுசயமும், பயமும் இடைக்கிடையே வந்து கெடுத்துவிடுகின்றன. என் செய்யலாம்? சாபம், சாபம், நமது ஜாதியைப் பற்றிய சாபம், இன்னும் நன்றாகத் தெரியவில்லை.
ஃ ஃ ஃ
கோசல நாட்டுப் பிரதேசங்களில் பஞ்சத்தின் சம்பந்தமாக நான் வேலை செய்த சில மாதங்களில், ஏற்கெனவே என் மனதில் நெடுங்காலமாக வேரூன்றி யிருந்த ஒரு சிந்தனை பலங்கொண்டு வளரலாயிற்று. தணிந்த வகுப்பினரின் நன்மை தீமைகளிலே, நமது நாட்டில் உயர்ந்த வகுப்பின ரென்று கூறப்படுவோர் எவ்வளவு தூரம் அசிரத்தையும், அன்னியத் தன்மையும் பாராட்டுகிறார்க ளென்பதை நோக்கு மிடத்து எனது உள்ளத்தில் மிகுந்த தளர்ச்சி யுண்டாயிற்று. தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் கடைசி வகுப்பின ரென்பதாகச் சிலர் கருதப் படுகின்றனர். தென்னாட்டைப்போலவே வட நாட்டிலும் இந்த வகுப்பினர் பெரும்பாலும் விவசாயத் தொழிலையே கைக்கொண்டிருக்கிறார்கள். உழவுத் தொழிலுடைய இவர்கள் சாஸ்திரப்படி வைசியர்களாக வேண்டும்.
ஆனால், இவர்களிலே பலர் மாட்டிறைச்சி தின்பது முதலிய அனாசாரங்கள் வைத்துக்கொண்டிருப்பதால் ஹிந்து ஜாதி அவர்களைத் தாழ்வாகக் கருதுகின்றது. ஹிந்து நாகரிகத்திலே பசு மாடு மிகப் பிரதானமான வஸ்துக்களிலே யொன்று. ஹிந்துக்களின் நாகரிகம் விவசாயத் தொழிலைப் பொறுத்து நிற்கின்றது.
விவசாயத் தொழிலுக்குப் பசுவே ஜீவன். ஆதலால், ஹிந்துக்கள் புராதன கால முதலாகவே கோ மாமிசத்தை வர்ஜனம் செய்து விட்டார்கள். ஒரு சிறு பகுதி மட்டும் வர்ஜனம் செய்யாதிருப்பது கண்டு, ஜாதிப் பொதுமை அப் பகுதியைத் தாழ்வாகக் கருதுகிறது. இது முற்றிலும் நியாயம். ஆனால், பஞ்சம், நோய் முதலிய பொதுப் பகைவருக்கு முன்பு நமது உயர்வு - தாழ்வுகளை விரித்துக்கொண்டு நிற்பது மடமை. தாழ்ந்த ஜாதியாரை நாம் மிதமிஞ்சித் தாழ்த்திவிட்டோம். அதன் பயன்களை நாம் அனுபவிக்கிறோம்.
“ஹிருதய மறிந்திடச் செய்திடுங் கர்மங்கள்
இகழ்ந்து பிரிந்து போமோ?”
’முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும். நாம் பள்ளர் பறையருக்குச் செய்ததை யெல்லாம் நமக்கு இப்போது அன்னியர்கள் செய்கிறார்கள். நமது சிருங்ககிரி சங்கரா சாரியாரும், வானமாமலை ஜீயர் ஸ்வாமிகளும் நட்டால், திரான்ஸ்வால் தேசங்களுக்குப் போவார்களானால், ஊருக்கு வெளியே சேரிகளில் வாசம் செய்ய வேண்டும். சாதாரண மனிதர்கள் நடக்கும் ரஸ்தாக்களில் நடக்கக் கூடாது. பிரத்தியேகமாக, விலகி நடக்க வேண்டும். பல்லக்குகள், வண்டிகள் இவற்றைப் பற்றி யோசனையே வேண்டியதில்லை.
சுருக்கம்: நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்க ளென்று பாவித்தோம். இப்போது நம்மெல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள்.
நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினரென்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர், மஹமதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது ஹிந்து ஜாதி முழுதையுமே உலகம் தீண்டாத ஜாதி யென்று கருதுகிறது. வகுப்புகள் உலகத்தில் எல்லா ஜாதியாரிலும் உண்டு, ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு ஜாதியைத் துர்ப்பலப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அன்னியர்களுக் கெளிதாகின்றது. 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'.
1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மகமதியர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்தபோது, நம்மவர்களின் இமிசை பொறுக்க முடியாமல் வருந்திக்கொண்டிருந்த பள்ளர், பறையர் பேரிகை கொட்டி, மணிகள் அடித்துக் கொண்டு போய் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்துகொண்டதாக இதிஹாஸம் சொல்லுகின்றது. அப்பொழுது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராம லிருக்கிறது. பஞ்சத்தில் பெரும்பாலும் பள், பறை வகுப்பினரே மடிந்து போகிறார்கள். இதைப்பற்றி மேற்குலத்தார்கள் தாம் சிரத்தை செலுத்த வேண்டிய அளவு செலுத்தாம லிருக்கின்றனர். எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக் கணக்கான மனிதர்களையும், முக்கியமாக திக்கற்ற குழந்தைகளையும் கிறிஸ்து மதத்திலே சேர்த்துக் கொள்ளுகிறார்கள்.
ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதி பயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது, மடாதிபதிகளும் சந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கொண்டு ஆனந்த மடைந்து வருகின்றனர். நமது தர்மங்களுக்குக் காவலாக நியமிக்கப்பட்டவர்கள் அதர்மங்களை வளர்த்து வருகிறார்கள், ஹிந்து ஜனங்கள்! ஜனங்கள்! ஜனங்கள்! - நமது இரத்தம், நமது சதை, நமது எலும்பு, நமது உயிர் - ஹிந்துஸ்தானத்து ஜனங்கள் ஏனென்று கேட்பாரில்லாமல் பசிப்பிணியால் மாய்ந்து போகின்றனர்.
கோ மாமிச முண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப் படுத்தி, அவர்களை நமது ஸமூகத்திலே சேர்த்து அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்க ளெல்லோரும் நமக்குப் பரிபூர்ண விரோதிகளாக மாறி விடுவார்கள்.
இந்த விஷயத்திலே எனது சிறிய சக்திக்கு இயன்ற வரை முயற்சிகள் செய்யவேண்டு மென்ற அவா எனதுள்ளத்தில் வளரலாயிற்று. பங்காள மென்று சொல்லப்படும் வங்க நாட்டின் கிழக்குப் பிராந்தத்தில் ஸ்ரீ அசுவினி குமார தத்தர் என்ற பெயருடைய தேசபக்தர் ஒருவ ரிருப்பதாகவும், அவர் அந்தப் பிரதேசங்களில் நாமசூத்திரர் (பெயர் மட்டில் சூத்திரர்) என்று கூறப்படும் பள்ளர்களை ஸமூஹ வரம்பி னுள்ளே சேர்த்து உயர்வு படுத்த முயற்சிகள் செய்வதாகவும் கேள்விப் பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.

