Chapter 4

"அதில்லே அண்ணாச்சி. அவுஹ காலேசிலே ஒரு புஸ்தகம் இருக்கிறது. நான் எழுதும் புஸ்தகத்திற்கு அது கட்டாயம் எனக்கு வேண்டியது. எங்கேயும் கிடைக்காது. அவனை எடுத்து வரச் சொல்லுங்க. பிறகு காணமற் போயிட்டது என்று விலையைக் கொடுத்துவிடுவோம்" என்றார்.

"இம்பிட்டுதானே? ஏலே! அய்யா! நடராசாவை எங்கே?"

"நீங்க அவனைப் புஸ்தகத்தை மாத்திரம் எடுத்துவரச் சொல்லுங்க. அவனுக்குத் தெரியாது சின்னப் பையன்."

நடராஜன் வந்தான்.

"அண்ணாச்சிக்கு ஏதோ புஸ்தகம் வேணுமாம். எடுத்துக் கொண்ணாந்து குடு."

பெயர் எல்லாம் எழுதிக் கொடுத்துப் பையனை அனுப்பியாகிவிட்டது.

"பொறவு, நான் போயிட்டு வாரேன்."

"என்ன அதுக்குள்ளே! வெத்திலை போடுங்க. நம்ம சவுந்தரம் இருக்கானே அவன் ஒரு 100 ரூபா வாங்கினான். இப்போ அப்போ என்கிறான். நீங்க கொஞ்சம் பாக்கணும்."

"நான் கண்டிக்கிறேன். அந்த மாதிரி இருக்கலாமா? போயிட்டு வாரேன்" என்று விடைபெற்றுக் கொண்டார்.