Chapter 3
"அண்ணாச்சி வரணும், வரணும், ஏது இந்தப் பக்கமே காணமே. ஒரு நிமிட்" என்று பூஜையின் 'கியரை' மாற்றி வேகத்தை அதிகப்படுத்தினார். 'மந்திரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு இத்யாதி, இத்யாதி; முற்றிற்று; திருச்சிற்றம்பலம்' என்று முடித்துவிட்டு, "என்ன அண்ணாச்சி? என்ன விசேஷம்" என்றார்.
"ஒண்ணுமில்லை, அந்த விசயத்தை முடுச்சிக்கிடலாம் என்று வந்தேன்"
"ஏது நம்ம துண்டில் ஏதும் மனத்தாங்கலாக எழுதிட்டேனோ?"
"அதொண்ணுமில்லே. கையிலிருக்கப்ப குடுத்திடலாமென்று நினைச்சேன். எனக்குத்தான் மறதியாச்சே" என்று நோட்டுப் பொட்டணத்தைக் கையில் கொடுத்தார். அவர் பிரித்துப் பார்ப்பது போல் கவனித்து விட்டு மடியில் வைத்துக் கொண்டார்.
"சரியாப் பாருங்க."
"அதுக்கென்ன! எல்லாமிருக்கும், எங்கே போகுது?"
"அண்ணாச்சி நம்மகிட்டே ஒரு விசயமில்லா?..."
"சொல்லுங்க..."
"நம்ம பையன் பீ.ஏ.தானே?"
'தன் பெண்ணுக்கு வரன் தேடுகிறாரோ' என்று நினைத்தார் பூவையாப் பிள்ளை.
"ஆமாம் தங்கத்திற்கு வயதுதான் வந்துவிட்டதே. எல்லாம் நாளும் கிழமையும் வந்தா முடியும். அதுக்கென்ன விசாரம்" என்றார் பூவையாப் பிள்ளை.

