Chapter 2

"சதி. அண்ணாச்சிக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்கணும். நெறுக்கிறாஹ. ஏட்டி நீ சவுந்திரத்தை அனுப்பு" என்று சொல்லிவிட்டார்.

கொடுக்க வேண்டியது 500 ரூ. அதிகமாக 200 ரூ. சேர்த்துப் பாங்கிற்குச் செக் எழுதியாகிவிட்டது. எதற்கு? எல்லாம் புஸ்தகத்திற்குத்தான்.

"ஏலே! சவுந்திரம், இதைப்போய் மாத்திக்கிட்டு சுறுக்கா வா. மணி பதினொண்ணு ஆயிட்டுதே! போ! போ!" என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த 'செந்த அவஸ்தா' முதல் பாகத்தில் தன்னை மறந்து விட்டார்.

ஒரு மணிநேரம் கழிந்தது. சவுந்திரமும் வந்துவிட்டான்.

எல்லாம் 100 ரூ. நோட்டுக்கள். சட்டைநாத பிள்ளை தன்னை மறந்தவராக இருந்தாலும் ஒவ்வொரு காரியத்தையும் நுணுக்கமாகச் செய்பவர். வந்த நோட்டுக்கள் நம்பரை எல்லாம் குறித்துக் கொண்டார். அப்பொழுதும் ஜரத்துஷ்டிரனுடைய மொழிகளில்தான் மனம். அதை யோசித்துக் கொண்டே ஐந்திற்குப் பதிலாக ஆறு நோட்டுக்களை எடுத்துக் கொண்டு பூவையாப் பிள்ளையைப் பார்க்கச் சென்றார்.

பூமிநாத பிள்ளையின் பூஜை முடியும் சமயம்.