Chapter 5

மறுபடியும் பேனாவை மூடி வைத்துவிட்டு, மோட்டு வளையைப் பார்த்து யோசனையிலாழ்ந்தார் ஸ்ரீ பிள்ளை.

"... இந்த விசேஷக் கமிட்டிக்கு பிரிட்டனிலிருந்து சட்ட அனுபவம் வாய்ந்த ஒரு நிபுணரையும், கதாசாஸ்திரத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒரு பிரபலஸ்தரையும், பிரிட்டிஷ் ராயல் வைத்திய சங்கத்தைச் சேர்ந்த ஒரு வைத்திய நிபுணரையும் தருவிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது."

"இந்த விசேஷச் செலவுக்கு சமஸ்தான கஜானாவில் போதுமான பணம் இல்லாததினால், ஒரு புதிய வரி போடுவதா, அல்லது ஒரு கடன் பத்திரம் பிரசுரிப்பதா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது."

"அதற்குள் இந்தச் சமாசாரம் பெரிய ராஜாவுக்குத் தெரிந்துவிட, இவ்வித முயற்சிகள் செய்யச் சிற்றரசருக்கு சன்னதின் ஷரத்தின்படி உரிமை கிடையாது என்று ஓலை அனுப்பினான்."

"நாலுவிதமாகவும் யோசித்துவிட்டு இந்த யோசனைகளை அப்படியே ஒதுக்கிவிடுவதுதான் நன்மை என்று மந்திரி நினைக்கலானான்."

"மந்திரியின் நினைப்பு காரியாம்சத்திற்கு வருமுன் ராஜாவுக்கு சஷ்டி அப்தபூர்த்தி விழா வந்து விட்டது. பெரிய ராஜா இந்தச் சிற்றரசனுக்கு வெகு மதியாக ஒரு பெரிய கதைப் புஸ்தகத்தை அனுப்பினான். அது ஒரு லக்ஷத்திச் செல்வானம் பக்கங்கள் கொண்டது."

"புஸ்தகத்தைக் கண்டதும் அதைப் பூராவும் படித்து முடிப்பதற்குத் தமக்கு ஆயுசு இருக்குமோ என்று நினைத்து, சிற்றரசன் சிம்மாசனத்திலிருந்து கொண்டே கண்ணீர் விட்டான்."

"மந்திரி பிரதானிகளும் பிரஜைகளும் ராஜாவைத் தனியாக அழவிட்டுவிடுவதா என்று நினைத்து அனுதாபம் காட்டி கூட அழுதார்கள்."

"இந்தச் சமயத்தில் பிரதம மந்திரிக்கு அழுகை வரவில்லை. நெடுமரம்போல நின்றான்..."

"நெடுமரம் போல நி......" என்று மறுபடியும் அடித்துவிட்டு எழுதினார் சுந்தரம்பிள்ளை.