Chapter 4
மேஜையிலிருந்த பேனாவும் அட்டையும் கையிலேறிவிட்டு, மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்தன.
மேஜையின் சொருகை உருவித் திறந்து நிதானமாக வெற்றிலை மடித்துப் போட்டுக் கொண்டார் ஸ்ரீ பிள்ளை.
புகையிலைக் கட்டத்திற்கு வரும்பொழுது சுறுசுறுப்புத் தட்டியது.
மேஜையிலிருந்த எழுத்துச் சாதனங்கள் கையிலிறங்கின.
"ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தான்..." என்று எழுதி விட்டுப் பேனாவை மூடி மேஜை மீது வைத்து விட்டார்.
சிறிது நேரம் பேந்தப் பேந்தச் சுற்றுமுற்றும் பார்த்து விழித்துக் கொண்டிருந்தார்.
அப்புறம் சில நிமிஷங்கள் கழித்து... "அவன் ஒரு கதைப் பைத்தியம். சண்டைக்கு வந்த எதிராளி ராஜாவிடம், "உனக்குக் கதை சொல்லத் தெரியுமா?" என்று ஒரு தூதுக் கோஷ்டியை அனுப்பிக் கேட்டு விட்டானாம்..."
சுந்தரம் பிள்ளை, மேஜையில் பேனா முதலிய சில்லறைத் தொந்தரவுகளை வைத்துவிட்டு வெளியே வராந்தாவிற்குச் சென்று வெற்றிலையைத் துப்பிவிட்டு வாயைக் கொப்பளித்தார். ஒரு டம்ளர் ஜலம் குடித்து விட்டு வந்து உட்கார்ந்து கொண்டு மறுபடியும் பேனாவை எடுத்தார்.
"... அவனுடைய மந்திரிக்குக் கதை என்றாலே பிடிக்காது. கதை கேட்பதால் தன்னுடைய ராஜ்யத்தின் மீதிருந்த ஆதிபத்திய உரிமையை இழந்து வெறும் சிற்றரசனாகப் போன ராஜாவுக்குப் புத்தி சொல்லிக் கொடுக்க ஒரு யோசனை செய்தான் மந்திரி.
"சர்க்கார் சம்பிரதாயப்படி அதற்கு ஒரு திட்டம் வகுக்க ஒரு விசேஷக் கமிட்டி ஏற்படுத்துவது என்று முடிவு கட்டப்பட்டது..."

