Chapter 3
"ஸார், கொஞ்சம் புரூப் பார்த்துக் கொடுங்கோ! பேஜ் போடணுமாம்!" என்று குழைந்தான் வடிவேலு. அவனுடைய குழைவுக்கு மரியாதை என்று அர்த்தம்.
"புரூப் எங்கே? கொண்டு வந்தால் தானே!" என்று புஸ்தகத்தின் மீதுள்ள கவர்ச்சியால் சீறினார் பிள்ளை.
"அப்பவே கொண்டுவந்து வச்சுட்டேன்" என்று சொல்லிக் கொண்டே எடுத்துக் கையில் கொடுத்தான் வடிவேலு.
பிள்ளைவாள் அவசரத்தில் 'காலி' 'காலி' யாகத் தாவி, மெய்யெழுத்துக்களையும் ஒற்றுக்களையும் கார்வார் செய்து, கையெழுத்திட்டு வடிவேலு கையில் ஒப்படைத்துவிட்டு, மறுபடியும் புஸ்தகத்தில் சரணாகதியடைந்தார்.
மணியும் மூன்றாயிற்று. மறுபடியும், டெலிபோன் மணியடித்தது.
"ஹல்லோ! யாரது?... நீங்கள் தானா? இன்னும் ஒரு மணி நேரத்தில் பையனை அனுப்புங்கோ எத்தனி பக்கம்? நாலு பக்கமா? வரும் வரும்... லெடவுட் பண்ணிடுங்கோ... அப்படின்னா நானே கையிலே எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறேன்; பையன் புறப்பட்டு விட்டானா? அப்படின்னா இங்கேயே இருக்கேன்" என்று சொல்லி விட்டுப் பேனாவையும் கடுதாசியையும் எடுத்தார்.
பேனாவைத் திறந்து வைத்துக் கொண்டு வெள்ளைக் கடுதாசியைப் பார்த்தபடியே பேனாவை எழுதும் பாவனையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.
சரிப்படவில்லை. மேஜையின் மீது அட்டையையும், பேனாவையும் வைத்துவிட்டுக் கைகளைச் சுடக்கு விட்டார். பிறகு சாவதானமாகக் கொட்டாவி விட்டார்.

