Chapter 2
தென்புலத்தில், அதாவது யமன் திசையில் சுண்ணாம்பு மட்டிலும் எப்பொழுதும் இருக்கும் - காறைக் கட்டியாகவாவது, அதைச் சூரணமாகவோ அல்லது அவகாசமிருந்தால் மத்தித்து அதன் பூர்வாசிரமத்திற்கு அதைக் கொண்டு வந்தோ, வைத்துக்கொண்ட பின், வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து, காம்புகளைக் கீறிவிட்டுச் சுண்ணாம்பைத் தடவுவார். பிறகு அதில் சீவல் பாக்கோ அல்லது அது இருந்த இடத்தில் கிடக்கும் தூசு தும்பட்டமோ, அதைச் சுமை ஏற்றிப் பொட்டலமாக மடித்து ஒரே கவளமாகப் போட்டுக் கொள்ளுவார்.
பிறகு, புகையிலை தேடு படலம். சாதாரணமாக, அது அருகில் இருக்கும் நண்பருடைய பிரதேசத்தில் ஆக்ரமிப்பாகவே இருக்கும். வாய்மொழியாக 'புகையிலை யிருக்கிறதா?' என்று மரியாதைக்கு எச்சரித்துவிட்டு, பொட்டலத்தை எடுத்துக்கொண்டு வந்து மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பின், புகையிலை கற்றியிருந்த கடுதாசியை மட்டும் எறிந்துவிட்டு, மீதியை ஒரு தடவைக்கு உபயோகித்துவிடுவார்.
இது அவர் பொதுவாக அனுஷ்டிக்கும் விதி.
அன்று அவர் தமது சகபாடியின் மேஜைக்கு அருகில் சென்ற பொழுது அவரும் அதே விருத்தியில் ஈடுபட்டிருந்தார்.
"என்னப்பா வந்துட்டியா, எங்கிட்ட ஒரு தரத்துக்குத்தான் இருக்கும்!" என்று அங்கலாய்த்தார் அவருடைய நண்பர். புகையிலையை வாயில் ஒதுக்கிக் கொள்ளும் வரை பிள்ளை அதைக் கேட்கவில்லை.
"என்ன, இல்லையா? நான் வாங்கிக் கொண்டு வரச் சொல்லுகிறேன்!" என்று சொல்லிக்கொண்டே தம் மேஜைக்கு வந்தவர் ஒரு புஸ்தகத்திற்குள் ஐக்கியமானார்.

