Chapter 1
டெலிபோன் மணி காதை அறுத்தது.
ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில் மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதி, 'இருக்கிறது' என்று போட்டு முடித்தார்.
டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது.
மேஜையிலிருந்து எழுதின கடுதாசிகளைக் கம்போஸிங் ரூமுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்த வடிவேலு ஓடி வந்து, ரிஸீவரைக் காதில் எடுத்து வைத்துக் கொண்டு "ஹல்லோ! யாரது?" என்ற சந்தேக வார்த்தைகளைக் கக்கினான்.
"இந்த மகத்தான திட்டம் பம்பாய் மாகாண வாசிகளுக்கு மட்டுமல்லாமல்..." என்று எழுதியபடி மங்கிய டைப் கடுதாசிகளில் கண்ணைச் செருகிக்கொண்டிருந்த ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை அவர்களிடம், "டெலிபோன், ஸார்!" என்று கொண்டே ரிஸீவரைக் கையில் கொடுத்தான்.
பிள்ளையவர்கள் சாவதானமாகப் பேனாவை மேஜை மேல் வைத்தார். சொருகு பலகைமேல் சாய்த்து வைத்தெழுதிய அட்டையை மேஜை மேல் வைத்தார். ஒரு பக்கமாகச் சாய்ந்து தமது ஜோல்னாப் பையைத் தேடிப் பிடித்து அதில் கைக்குட்டையைத் தேடி, அங்கில்லாமல் 'பேப்பர் வெய்ட்' அடியிலிருந்த அதை எடுத்து நெற்றியைத் துடைத்துக் கொண்டார். ஷர்ட் கைகளைத் தள்ளிவிட்டுக் கொண்டு, "என்ன டெலிபோனா?" என்று ரிஸீவரை வாங்கிக்கொண்டு, "யாரது? ஓஹோ நீங்களா? என்ன இரண்டு மூணு நாளா இந்தப் பக்கத்திலேயே காணலியே... அப்படியா? என்ன, கதையா? அதுக்கென்ன? இன்னிக்கு சாயங்காலமா? ரெடின்னு வச்சுக்குங்க!" என்று சொல்லிவிட்டு, பம்பாய் மாகாண மின்சாரத் திட்டத்தில் ஈடுபட்டார்; மும்முரமாக ஈடுபட்டால் டைப் கடுதாசிகள் எத்தனை நேரந்தான் மேஜைமேல் நிற்க முடியும்? நேராகக் குப்பைக் கூடையில் ஐக்கியமாயின.
"வடிவேலு புரூப்!" என்று காய்தாப் பண்ணிவிட்டு, மேஜைக்குள் இருந்த வெற்றிலைச் செல்லத்தை, - வர்ணம் போன மசாலா டின்னுக்கு, அவர் செல்லமாக இட்டிருக்கும் பெயர் - எடுத்துச் சாவதானமாக வெற்றிலை போட ஆரம்பித்தார்.
அவருக்கு வெற்றிலை போடுவது வெறும் சம்பிரதாயமல்ல - மகாயக்ஞம்.
யந்திரம் எழுதி இந்த இந்தத் திக்கில் இன்னின்ன தேவதைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றிருப்பது போல, அவருடைய செல்லத்தில் இன்னின்ன சரக்குகள் இன்னின்ன இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி; ஆனால், இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. எப்பொழுதும் எல்லாம் இருக்காது என்பதைப் பொது விதியாகக் கொள்ளுவதால் ஸ்ரீசுந்தரம் பிள்ளை தம்மைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டதாகக் கருதமாட்டார்.

