Chapter 6

கதை தானாகவே, தன்னிஷ்டம் போலவே, பின்னிக் கொண்டு போவதைக் கண்டு பயந்து போன சுந்தரம் பிள்ளை, இந்த நெடுமரம் என்ற மதில் சுவர் வந்ததும் நிம்மதியுடன் பெருமூச்செறிந்தார்.

கதை வண்டியைத் தமக்குப் புரியும் வழியில் திருப்புவதற்காக, அந்த அழாத பிரதம மந்திரியைச் சிரச்சேதம் செய்தார்.

அந்த வேலை முடிந்தபின் கதைக்கு உயிர் சந்தேகமின்றி அகன்று விட்டது என்பதை நாடி பிடித்துப் பார்த்தவர் போல நிச்சயப்படுத்திக் கொண்டு அவனை உயிர்ப்பிக்கப் பரமசிவனைக் கூப்பிடலாமா, அல்லது வெறும் மந்திரவாதியைத் தருவித்து அவனுக்கு ராஜா மகளைக் கட்டிக் கொடுத்துக் கதையை மேளதாளத்துடன் 'மங்களமாக' முடித்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கையில், "என்ன ஸார், முடிந்து விட்டதா?" என்று கொண்டே நுழைந்தார் சுந்தரம் பிள்ளையிடம் கதை கேட்ட ஆசிரியர்.

"பையனை அனுப்புகிறேன் என்றீர்களே" என்று சொல்லி எழுந்தார் ஸ்ரீ பிள்ளை.

"பையனிடம் கடுதாசி அனுப்பிவிட்டால் என்றுதான்..." என்று சிந்தித்துக் கொண்டே மேஜையிலிருந்த கடுதாசிகளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார் ஆசிரிய நண்பர்.

"இதுதானா நாலு பக்கம்? - போஸ்டர் எழுத்தில் போட்டாக் கூட நாலு பக்கம் வருமோ என்னமோ? இதற்கு என்ன அர்த்தம்?" என்றார்.

"நீர் தான் சொல்லுமே!"

"சரி வாருங்க, காபி சாப்பிட்டு வரலாம்!" என்றார் நண்பர்.

"வருவது எதற்கு, நேரா வீட்டுக்குப் போவோமே?" என்றார் சுந்தரம் பிள்ளை.

"அங்கே போனால் எழுதுவீரா?" என்றார் நண்பர்.

"போன பிறகு பார்த்துக் கொள்ளலாம், நீங்க எழுந்திருங்க!" என்று கொண்டு மேஜையை எடுத்துப் பூட்ட ஆரம்பித்தார் பிள்ளை.