சந்திரோதயம்

“தங்கள் பெயர்...?”

“சாம்பசிவம்!”

“என் பெயர்..........”

“சந்திரோதயம் என்பேன்!”

காதல் அவனை ஒருகண நேரம் கவியாக்கிற்று.

ஆர்வமுள்ள இளைஞன் - அழகு ததும்பும் மங்கை - அந்தி வானத்தில் அழகு நிலா எழுகிறது - பிறகு...!! கூறவா வேண்டும். இதயகீதம் இவ்வளவு இனிமையாகக் கிளம்பிற்று என்பதை!

பொறி பறக்கும் கண்கள் - கனல் தெறிக்கும் பேச்சு - இவற்றை எதிர்பார்த்துத்தான் அந்த இளைஞன். பூந்தோட்டம் வந்தான். அங்கோ புள்ளிமான் ஆடிற்று. பூங்குயில் பாடிநிலா புதியதோர் உலகையே அவனுக்குக் காட்டிற்று.

ஊரின் பெரிய புள்ளி, சிங்காரவேலு முதலியார் - சிவபக்தர்! செல்வம் நிரம்ப இருந்தது, எனவே அவருக்குச் சிவ பக்தி செலுத்தவும், ஊரார் அதை அறியும்படி காட்டிக் கொள்ளவும், நேரம் இருந்தது, நேர்த்தியான முறையும் அமைந்திருந்தது.

பணம் படைத்த அவர், பிராமண பக்தியுடன் இருந்துவந்தார்! சிவன் கோவிலுக்கும் அவர்தான் தர்மகர்த்தா.

கோவில் குருக்கள் வாஞ்சிநாதர், முதலியாருடைய அத்யந்த நண்பர்!

பகவத் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றவர், பாக்கியவான், நம்ம முதலியார் -எதற்கும் கொடுத்துவைக்க வேண்டுமல்லவா... - என்று வாஞ்சிநாதர், முதலியாரின் அருமை பெருமை பற்றிப் பேசுவார். சிங்காரவேலரும், எல்லாச் சீமான்களையும் போலவே, “அய்யர வாளின்’ அபிலாஷைகளைப் பூர்த்திசெய்து வைப்பதிலே ஓர் அலாதியான ஆனந்தம் அடைந்தார்.

சிங்காரவேலரின், செல்வக்குமாரி, சந்திரா!

அவளைத்தான், சாம்பசிவம் அந்தி சாயும் வேளையிலே கண்டான், எந்த இளைஞனும் தவிர்த்திட முடியாத காதலால் தாக்குண்டான்.

“நான்... சிங்காரவேலரின் மகள்...” என்று சேயிழை சொன்னாள், அவ்வளவுதான், அவன் ‘காதலை’க் கடுங்கோபத் துடன் விரட்டலானான்.

காதல், அவ்வளவு எளிதிலே விரண்டோடிவிடவா செய்யும் - மறுத்தது.

சாம்பசிவம், சிறிதளவு வசதியான குடும்பத்திலே இருப்பவன் - மக்களின் வாழ்வு துலங்கவேண்டும், அதற்கான வழிவகையைக் கூறவும் காணவும் பணிபுரிய வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவன். அவனுடைய வயோதிகத்தாய், மகனுடைய போக்கு கண்டு ஆச்சரியப் பட்டாள் - ஆகவே, அவனுக்கு ஒரு ‘கால்கட்டு’ போட்டு, சரிப்படுத்தவேண்டும் என்று திட்டமிட்டாள்.

இந்தத் திட்டத்தையும் வேதம்மாள், செல்வர் சிங்கார வேலரிடம் சென்று கூறினார் - ஊர்ப்பெரியவரிடம் தானே மனத்திலுள்ள குறையைக் கூற வேண்டும் - அதுதானே முறை! அதே முறைப்படி, வேதம்மாள், தம்மிடம் இருந்த சில ஆயிரம் ரூபாய்களையும், சிங்காரவேலரிடம் தந்தார்கள்.

“எனக்கேனம்மா, இந்த வீண் வேலை! பாங்கில் போட்டு வை - நான் சீட்டு தருகிறேன்!’ என்று முதலியார் மறுத்தார்.

“எனக்கு எந்தப் பாங்கி தெரியுமுங்க - அதிலே போட ஒரு மனுவாம், வாங்க ஒரு மனுவாம்! இதெல்லாம் யாராலே முடியும்.” என்று சமாதானம் கூறிப் பணத்தைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்!

இப்படி, ‘விதவைகளின்’ கண்ணீர், முதலியாரின் பேழையில், ஏராளம்.

அவர் இதனை ‘வாழும் முறை’ என்று எண்ணினாரேயன்றி, தவறு என்றோ, பாபம் என்றோ கருதவில்லை. அவர் மட்டுமா, சிங்காரவேலர்களின் சித்தாந்தமே அது!

ஏழை புழுப்போலத் துடிக்கிறான் - அவன் வயிற்றிலடிக் கிறோமே, தவறல்லவா, பாபமல்லவா என்று எவனாவது கேட்டால் - யாரும் கேட்கமாட்டார்கள்! - அவனவன் எழுத்து அது, நாம் என்ன செய்யமுடியும், என்று தான் சிங்காரவேலர்கள் கூறுவர்.

ஜாதி ஆச்சாரம், மதாச்சாரம் கெடக் கூடாது - கெடும்படி நடந்து கொள்ளக் கூடாது - அப்படி நடப்பதுதான் தவறு, பாபம்!! சிங்காரவேலர் போன்றாரின் தத்துவம் அது!

சாம்பசிவம், ஜாதி, குலம், மதம் என்பவற்றின் காரணமாகச் சமூகத்திலே விளைந்துள்ள கேடுகளைக் களைந்தெறியவேண்டும் என்ற கொள்கை கொண்டவன் - கொள்கையில் உறுதிப்பாடு மிகுந்தவன்.

உழைத்துத்தான் பிழைக்கவேண்டும் என்ற நிலை இல்லை அவனுக்கு - வரைமுறையின் படி நடந்துகொண்டால், அவன் சிங்காரவேலர் போன்றாருக்கு, மருமகனாகி வாழ்வில் விருந்து காணமுடியும். ஆனால் அவனை, நாட்டிலே வீறுகொண்டு எழுந்த சீர்திருத்த இயக்கம் ஆட்கொண்டுவிட்டது. அவன் தொண்டாற்றும் பக்குவம் பெற முனைந்தான், தொல்லைகளைத் தாங்கிக் கொள்ளவும் பழகிக் கொண்டான்.

“என்ன போறாத வேளையோ! எந்தக் கிரகத்தின் கோளாறோ! எப்போது என் வயிற்றில் பால் வார்க்கப் போகிறானோ!” - என்று வேதம்மா விசாரப்படுகிறார்கள், அந்த வீர இளைஞனோ, எப்போதுதான் ஜாதிப்பித்தம் ஒழியப் போகிறதோ, சமத்துவம் மலரப் போகிறதோ, சமதர்ம மணம் பரவப் போகிறதோ, என்று எண்ணி எண்ணி ஏங்கிக்கொண் டிருந்தான்.

புத்துலகக் கழகம் அவனுக்குப் பாசறையாக அமைந்தது. சாம்பசிவம் போன்ற இளைஞர் பலர், அந்தக் கழகத்தில் பணியாற்றி வந்தனர். அவர்களை ஊக்குவித்தும், ஆக்க வேலைகளுக்கு அவர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டு வந்தான் துரைராஜ் - சாம்பசிவத்தின் நெருங்கிய நண்பன். நல்லவர்களை நாசப்பாதைக்கு அழைத்துச் செல்கிறான் - நாட்டின் புனிதமான ஏற்பாடுகளை அழிக்கிறான் - என்று பலர் தூற்றினர், துரைராஜ் என்பவனை. ‘நமது பணி, பலன் தருகிறது. நம்மை ஊரார் கவனிக்கிறார்கள். தூற்றலின் பொருள் அதுதான்! தொடர்ந்து பணியாற்றினால், தூற்றுபவர்களே தொண்டாற்ற முன்வருவார்கள்’ - என்று துரைராஜ் சொல்வதுண்டு. ஆம்! ஆம்! என்றனர் நண்பர்கள் - சாம்பசிவம் உட்பட. ஆனால் சாம்பசிவத் துக்கு மட்டும், தன்னலம் கருதாது தூய்மையும் வாய்மையும் தழைத்திடப் பணியாற்றும் தன் நண்பனை, சிங்காரவேலர் நிந்திக்கிறார் என்பது கேட்டுக் கொதிப்பு ஏற்பட்டது. “கொம்பா முறைத்திருக்கிறது! கோடீஸ்வரனாகக்கூட இருக்கட்டும் அந்தச் சிங்காரவேலர் - கொள்கையை எதிர்க்கட்டும் நாணயமாக - இழி மொழி பேசுவதா எங்கள் கழகத்தைப் பற்றி - இதைக் கண்டிப்பாகக் கேட்டுத் தீரவேண்டும் என்று சினந்தெழுந்தான் - இளம் கன்று! - எனவே சிங்காரவேலரைக் காணச்சென்றான்.

அவன் எரிமலையைக் காணச் சென்றான், குளிர் நிலவைக் கண்டான்!

தந்தையின் போக்கு என்ன என்பது தெரியும் சந்திராவுக்கு - அவள் மனமோ, முற்போக்குக் கருத்துகள் பூத்திடும் பூங்கா.

தாயிழந்த சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் வளர்ந்து வந்தாள் - அங்கு நல்ல சூழ்நிலை - நற்கருத்துகள் அவளிடம் உறவாடின. தந்தையின் பணத்தாசை, அதைப் பாதுகாக்க அவர் கொண்டிருந்த வைதீகக் கோலம், அதைக்கண்டு மக்கள் மயங்கிடும் தன்மை, எல்லாம் அவளுக்குத் தெரியும்.

அவள் அப்படிப்பட்டவள் என்பது, சாம்பசிவத்துக்கு எப்படித் தெரியும்!

அவள், தன்னை அவன் சரியாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, எதிர்பாராமல் ஏற்பட்ட சந்திப்பின் போதே, அவனைச் சில கேள்விகள் கேட்டாள் - பெண்களுக்கே உரிய சாமர்த்தியத்தின் மூலம், தன் நிலையை அவனுக்கு உணரத்த!

சேற்றிலே செந்தாமரை இருந்தால் என்ன செய்வீர் என்று கேட்டாள் - சேற்றிலே இருந்தால் என்ன! பறித்து வரத்தான் வேண்டும் என்று பளிச்செனப் பதிலளித்தான் சாம்பசிவம்.

பாவை மகிழ்ந்தாள். மற்றோர் கேள்விக் கணையை ஏவினாள்.

“வண்டு கொட்டுமே என்று பயந்தால், தேன் கிட்டுமா!” - என்றாள்.

காதல் வயத்தனான சாம்பவசிவம், வண்டுக்குவிரண்டு விடுவதா! - என்று வீரமாகப் பதிலளித்தான். இனிப் பயமில்லை என்று எண்ணிக் கொண்ட ஏந்திழை கூறினாள், “நான் சேற்றி லிருக்கும் செந்தாமரை! சிங்காரவேலர் மகள்!” என்றும்.

சாம்பசிவனுக்கோ, ஆயிரம் தேள் கொட்டுவது போலாகி விட்டது - ஆபத்து! பேராபத்து! இந்த அணங்கிகளிடம் காதல் கொண்டால், கொள்கை மாண்டுவிடும் என்று அஞ்சினான் - காதலைக் கடிந்து கொண்டான் - விரட்டி விட நினைத்தான்! அனுபவமற்றவன்!!

வாஞ்சிநாத சாஸ்திரி, வயோதிகர் - இளமையும் எழிலும் குலுங்கும் லலிதா அவர் மனைவி - இரண்டாந்தாரம்!

கோவில் வருமானம் - ஊரார் தரும் தட்சணை, சன்மானம், இவற்றுடன், செல்வச் சீமான்களின் தயவு - இவ்வளவு இருக்கும் போது இரண்டாந்தாரம், ஏன் கிடைக்காமற் போகிறது, ஐயருடைய கோலம் அருவருப்பைத் தருவதுதான், ஆனால் அழகான சிறு மாளிகை, அந்தஸ்து அளிக்கும் செல்வம், இவற்றைப்பெற, லலிதா விரும்பினாள் - பெற்றாள். இவற்றைப் பெற்றால் போதுமா - எதுவும் அந்த இன்பத்துக்கு ஈடாகுமா - வயோதிக வாஞ்சிநாதரிடம் அவள் பெறக்கூடியதல் லவே அந்த இன்பம், என்று, விஷயமறியாதார் பேசினர். லலிதாவுக்கு வரதன் கிடைத்தான் - ஐயர் மாளிகையிலேயே - அவன் அவர் மருமான் “அடிக்கடி வீட்டுக்கு வருவான் போவான்! நல்ல பயல்!” - என்பார் வாஞ்சி.

யார்டா அது வரதனா - என்று கேட்பார் வாஞ்சி - கண் சிறிது மங்கல் - பருவக் கோளாறு.

ஆமாம் - என்று வரதன் பதிலளித்தபடி, லலிதாவைப் பார்ப்பான் - எப்படி என்கிறீர்களா? எப்படிப் பார்க்க வேண்டுமோ, அப்படி!! அவள், “ஆமாம் கதை அளந்துண்டு காலத்தை ஓட்டிண்டு இருக்கீறே, கந்தப்பன் வீட்டு சிரார்த்தம் போகணும்னு சொன்னீரே -” என்று கூறி, ஐயரை விரட்டுவாள்! ஐயர் பாதுகாப்புக்காக, “வாயேண்டா வரதா! போயிட்டு வருவோம்” என்று அவனை அழைப்பார்! அவளுக்கு அந்த ஆபத்தையும் தடுத்துக்கொள்ளத் தெரியும் - “டேய், அப்பா! வராதா! மூணுநாளாச் சொல்றனே, முந்திரிப்பழம் பறிச்சிண்டு வான்னு, ஆகட்டும் ஆகட்டும்னு சொல்லி ஆசை மாட்டிண்டேதானே வர்ரே...” என்று துவக்குவாள், “இன்னக்கிக் கட்டாயம் ஆகட்டும் மாமி!” என்பான் வரதன்.

“ஏண்டா, இன்னமும் பொய் பேசறே, இப்ப நீ அவர் கூடப்போனா, நேக்கு, முந்திரிப்பழம் பறிச்சுத் தரப்போறது ஏது -” என்பாள்.

“சரி - மாமா - இதோ நான் போய், மாமிக்குப் பழம் பறிச்சிண்டு வந்துடறேன் -” என்று அவன் கிளம்புவான்.

அவர் தனியாக - சந்தேகத்தையும் சஞ்சலத்தையும் சுமந்து கொண்டு! சிரார்த்தம், கவனிக்கச் செல்வார்! வெற்றிப் புன்னகையுடன் கதவைத் தாளிட்டுக் கொள்வாள் லலிதா! முந்திரி! கமலா! ஆப்பில்! மா! பலா! வாழை! பழம் எல்லாம் கொண்டு வந்து குவிப்பான் வர தன்!! ஊஞ்சல் பாடும்! இன்பம், குதூகலிக்கும்! குமாரிக்கு விருந்து!! அங்கே, வேதசால இதிகாசாதி மேன்மையை மகிமையையும் ஆளக்கிக் கொண்டிருப்பார் - இங்கு வரதன் மெல்லிய குரலில்-.

“புது இன்பம் எனக்கு மிக தந்தவளே! கண்ணே! பூலோக மதைச் சொர்க்கம் ஆக்கினயே!! என்று பாடுவான்! அவள் அவனுடைய பாடலையும் ரசித்தாள் ஓரளவுக்குத்தான் - ஐயர் வருகிற வரையில் ஆலாபனம் கேட்டுக் கொண்டே இருக்கவா சம்மதம் இருக்கும்!

வரதன், புத்துலகக் கழகத்தில் புகுந்தான், புதியகொள்கை கள் தனக்கும் உடன்பாடுதான் என்று புளுகிவிட்டு! - ‘லலிதபவனம்’ அவனுக்கு விருந்து மண்டபம் - புத்துலகக் கழகம் அவனுக்குப் பொழுது போக்குமிடம்!!

கொள்கை பேசுவது மட்டும் கூடாது - செயலில் காட்ட வேண்டும் என்ற கட்டம் பிறந்தது. சாம்பசிவம், ‘சரி’ என்றான்! தன் வீட்டில் அப்பாவின் ‘திவசம்’ வருகிறது - அதற்குப் புரோ கிதர் வருவார் - அவரை விரட்டப் போகிறேன், என்று சூள் உரைத்தான். வரதன் வெகுண்டெழுந்தான் - அது அடாத காரியம் என்றான்! என்ன சொல்லுவாள் லலிதா! ஊஞ்சலி லிருந்து ஒரே அடியாகக் கீழே உருட்டியல்லவா விடுவாள்! புத்துலகக் கழகத்திலிருந்து ராஜினாமாச் செய்தான். ஒழிந்தது ஒரு பீடை என்று கூறினான் சாம்பசிவம். வாஞ்சிநாதர் வழக்கப்படி வந்தார், ‘திவச’ காரியத்துக்கு. சாம்பசிவனும் நண்பர்களும் விரட்டினர், வேதம்மாள் பதைபதைத்தாள், ஐயர் ஐதீகத்தை அழியவிடமாட்டேன் என்று ஆர்ப்பரித்தார், அடிதடியில் முடிந்தது சம்பவம் - போலீஸ் நுழைந்தது, சாம்பசிவமும் நண்பர்களும், சிறையில் தள்ளப்பட்டனர் - வாஞ்சிநாதர் வெற்றிச் செய்தியை லலிதாவிடம் கூற ஓடோடிச் சென்றார், அவள் “நேக்குத் தெரியுமே - வரதன் சொன்னான்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு ‘ஸ்நானம்’ செய்யச் சென்றாள்.

‘என்ன பண்றது உடம்பை! என்னமோ போலிருக்கே” என்று அன்பாகக் கேட்கிறார் வாஞ்சிநாதர்.

“ஒண்ணுமில்லையே - எப்பவும் இருக்கற மாதிரியாத்தான் இருக்கறேன்” என்கிறாள் லலிதா.

“இல்லையே! என்னமோ ஒரு மாதிரியா, ஆயாசமா இருக்கிறது போலத் தோண்றது” என்கிறார். ஐயர்,

“ஆயாசமாத்தான் இருக்கு - அதுக்கு என்ன செய்யணும் என்கிறீர் -” என்று, வெடுக்கெனக் கூறிவிட்டு, வாஞ்சிநாதரின் உள்ளத்தில் கிளம்பிய கோபத்தை, ஒரு சிறு கண்வெட்டால் போக்கிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.

‘விஷயம்’ பிறகு ஐயரவாளுக்குத் தெரிந்தது! தெரிந்து? தலை தலையென்று அடித்துக் கொண்டார். கொன்றுவிடுகிறேன் என்று கூறினார். குலத்துரோகி! நீ நாசமாப் போக! என்று வரதனைச் சபித்தார்.

கூக்குரல் கேட்டு, தெருவோடு போகிறவர்கள் உள்ளே நுழைந்து என்ன சேதி? என்று கூடக் கேட்டனர். என்ன சொல்லுவார்!

“உங்களுக்குக் கோடி புண்ணியம், போங்க வெளியே” என்றார் அவர்.

“அவருக்கு இப்படி அடிக்கடி காக்கா வலி வரும் - கூவுவர் - கொஞ்ச நேரத்திலே சரியாப்போகும் - நீங்க போங்கய்யா” என்று அவள் அமைதியாகச் சொன்னாள். ஐயர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தாவினார். அவள்’ “இப்படி எல்லாம் கூவிண்டிருந்தா, நான் பொறந்தாத்துக்குப் போறேன்” என்றாள், அவர் பெட்டிப் பாம்பானார்.

வீட்டிலேதான் பெட்டிப் பாம்பு! சிங்காரவேலர் மாளிகையிலே, அவர் சீறினார் - எப்படியாவது, புத்துலகக் கழகத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று. அதற்காகக் கோவிலிலே, முதலியாரும், ஐயரும், பிரமுகர்கள் சிலருமாகச் சேர்ந்து மந்திராலோசனை நடத்தினர். இது தெரிந்த துரைராஜ், மாறுவேட மணிந்து சென்று, அவர்களுடன் உறவாடினான். ஒட்டி உலர்ந்துபோன ஒரு பிச்சைக்காரன் இவ்வளவு தர்மப் பிரபுக்கள் இருக்கிறார்களே ஆளுக்கு ஒரு காலணா கொடுத்தால், தன் பசி நோயைத் தீர்த்துக்கொள்ளலாமே என்று எண்ணி, அவர்களை அணுகினான் விரட்டினார் முதலியார்! விதி! விதி! என்று காரணம் காட்டினர் கனதனவான்கள். கண்றாவியா இருக்கு இதுகளைப் பார்த்தால் - ஜெர்மனியிலே இப்படிப் பட்டதுகளைச் சுட்டுத்தள்ளி விடுவாளாம் - என்று கொடூரமாகக் கூறினார் வாஞ்சி - துரைராஜ் துடிதுடித்தான். தன்னை மறந்தான், மடமடவென்று பேசலானான்.

என்ன கன்னெஞ்சமய்யா உமக்கு!

அந்த ஏழையும் மனிதன் தானே! உம்மைப் போல!

அன்பே சிவம், சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள் - ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டும் என்கிறீரே! அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும்!

அந்த உலர்ந்த உதடுகளில் இருந்தும் உக்கிரம் பிறக்கும், கண்கள் கனலைக் கக்கும்!

புழுவும் போரிடும்!

அப்போது உங்கள் செல்வம், அந்தஸ்து, சாஸ்திரம், யாவும் மண்ணோடு மண்ணாய்ப் போகும்!

துரைராஜ் பேசிவிட்டான் - அவர்கள் புரிந்துகொண்டனர்- பிடித்துக் கொண்டனர் - வேஷம் கலைத்துவிட்டனர் - கம்பத்தில் பிடித்துக் கட்டி, கோவில் திருவாபரணம் ஒன்றை அவன் கையிலே கொடுத்துவிட்டு, போலீசுக்கு ஆள் அனுப்பிவிட்டனர்! துரைராஜ் கள்ளன் ஆக்கப்பட்டான்! காதகர்களின் போக்கைக் கண்டு மனம் குமுறிற்று - நீதி, அன்பு, அறம், இவற்றை எடுத்து வீசினான், தூணோடு சேர்த்துக் கட்டிவிட்டனர்.

காவலுக்கு ஐயர்! மற்றவர்கள் ‘ஆள் அம்பு’ தேடச் சென்றனர்.

முதல் தாக்குதல் - ஏதேதோ வகையான அச்சம் உள்ளத் திலே நச்சரித்தது!

எப்படியாவது, இப்போது தப்பித்துக் கொள்ள வேண்டும் - கள்ளன் என்று கயவர்கள் குற்றம் சுமத்திச் சிறையிலே தள்ளிவிட்டால் கழகத்தவருக்கே இழிவு.

என்ன செய்தாவது, இந்த இக்கட்டிலிருந்து தப்பிவிட வேண்டும், என்று எண்ணினான். எதையும் தாங்கும் பக்குவத்தை இதயம் பெறவில்லை!

களவாடியதாகச் சொல்லித் தன்னிடம் திணிக்கப்பட்ட திருவாபரணத்தை ஐயருக்குக் கொடுத்துவிட்டு, இனி ஜென்ம ஜென்மத்துக்கும் பகவத் நிந்தனையோ பாகவத அபசாரமோ, பிராமண தூஷணையோ செய்வதில்லை, எங்காவது ரங்கோன், பினாங்கு ஓடி விடுகிறேன், என்று கூறினான்; கட்டுகளை அவிழ்த்தார் ஐயர், ஓடிவிட்டான். அவன் நெடுந்தூரம் சென்றிருப்பான் என்று தெரிந்தபிறகு, ஐயர், “ஐயயோ! முதலியாரே! யாரங்கே! ஓடி விட்டானே” என்று கூவினாள்; அழுதார். ஆள் அம்புடன் வந்த முதலியாரிடம், “பய சிம்மம் போலக் கர்ஜித்துண்டு, ஒரு திமிரு திமிரினான் பாருங்கோ, கட்டியிருந்த கயிறு பொடி பொடியாயிட்டுது, பிடிக்கலாம்னு கிட்டெப் போனேன், விட்டான் ஓர் அறையும் குத்தும், நான் என்னசெய்ய முடியும், புலிப்போலப் பாய்ந்தான், ஒடியே போயிட்டான்... இந்தப் பக்கமா...” என்று, துரைராஜ் ஓடின தற்கு எதிர்ப்பக்கத்தைக் காட்டினார். மடியிலே, மாங்காய் மாலை! கண்களிலே தண்ணீர்கூட! தண்ணீருக்குப் பின்னாலே குறும்பு கூத்தாடிற்று, வஞ்சனை உள்ளே வெற்றிக் களையோடு இருந்தது. முதலியார், ஐயர் காட்டிய திக்கிலே ஆட்களை அனுப்பினார். எப்படியும் போலீஸ் பிடித்துவிடும், பத்து வருடத் தண்டனையாவது கிடைக்கும், கோவிலில் புகுந்து கொள்ளை யடிப்பது ‘மகாப்பெரிய பாபம்’ என்றார் முதலியார் சந்தேகமா அதற்கு என்று ஆமோதித்தனர் கனதனவான்கள், சர்வேஸ்வரா! எல்லாம் உன்னோட சோதனை என்று பக்தி பேசினார் வாஞ்சிநாதர்.

ஊரே திடுக்கிட்டுப் போயிற்று, சேதிகேட்டு.

ஆள், நல்லவனாப்பா - ஏதோ ஆச்சார அனுஷ்டானங்களைக் குறை சொல்லிக்கொண்டு இருப்பானே தவிர, பொய்புரட்டு, சூதுவாது, எதுவும் கிடையாதே. அவன் கோவிலில் புகுந்து களவாடினான் என்றால் நம்ப முடியவில்லையே என்று சிலர், கோவில் என்றால்தான் அந்தப் பயல் வைதீகக் கோட்டை, பார்ப்பனீயப் பாசறை என்றெல்லாம் பழிப்பானே, செய்திருப்பான், செய்திருப்பான் என்று சிலர், எப்போது பாவமில்லே புண்ணியமில்லே, மோட்சமாவது நரகமாவது, இதை எல்லாம் பார்த்தது யார் என்றெல்லாம் துடுக்குத்தனமாகப் பேசிக்கொண் டிருந்தானோ அப்போதே எனக்குத் தெரியும், பய, இப்படிப் பட்ட அக்கிரமம் செய்யப் போகிறான் என்பது; இப்படிச் சிலர். புத்துலகக் கழகம் எள்ளி நகையாடப்பட்டது.

“ஏண்டா தம்பீ டோய்! நீ எந்தக் கோவிலைக் பார்த்து வைச்சிருக்கே?” என்று கேலி பேசலாயினர் புத்துலகக் கழகத் தோழர்களைக் கண்டால். கொள்கைப்பற்று நல்ல அளவில் ஏற்படாத நிலையிலிருந்தவர்கள் பலர், புத்துலகக் கழகத்திலிருந்து விலகிக் கொண்டனர்! சாம்பசிவம், செய்தி கிடைத்ததும், பதறினான். துரைராஜ் ஒருபோதும் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்திருக்கவே முடியாது. இதில் ஏதோ சூது இருக்க வேண்டும்; கழகத்தை அழித்தொழிக்க இதைச் சந்தர்ப்பமாகச் சிலர் பயன் படுத்துவர், இது சகஜம். ஆனால் நான் கழகப் பணியை நிறுத்த மாட்டேன் - நிறுத்துவது கூடாது, என்று உறுதி கொண்டான், எப்போதும் போலப் பணியாற்றி வரலானான்.

துரைராஜ், ரங்கோனும் போகவில்லை, சிங்கப்பூருக்கும் செல்லவில்லை. தலைமறைவாகவே உலவலானாள். உள்ளத்தில் வேதனையுடன். தன்னைத்தானே நொந்து கொண்டான். எவ்வளவு கோழைத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! எத்தகைய பைத்தியக்காரத்தனம்! ஏன் நான் ஓடி வர வேண்டும்! ஐயோ! கொள்கையைப் பொறிபறக்கப் பேசக் கற்றுக் கொண்டேனே தவிர உலக அனுபவம் இல்லையே எனக்கு. கள்ளனென்று கூறித் தண்டித்துக் கொடுஞ் சிறையில் தள்ளி விடுவார்களே என்ற அச்சம் கொண்டேன். இதோ, சிறையைவிடக் கொடுமையை அல்லவா அனுபவிக் கிறேன். வழக்கு மன்றத்திலே வாதாடி இருக்கலாம்! நீதிக்காகப் பரிந்து பேசச் சிலராவது முன்வந்திருப்பர்! நான் ஓர் கோழை; அதிலும் ஏமாளி! ஓடிவிட்டால், பழியிலிருந்து தப்பித்துக் கொண்டேன். பழி என்னைப் பற்றிக்கொண்டதே. குற்ற மற்றவனானால், ஏன் ஓடி விட்டான்? ஏன் தலைமறைவாகத் திரிகிறான்? என்று கேட்கிறார்கள் - காதிலே விழத்தான் செய்கிறது. முதல் தாக்குதல், என் மூளையைக் குழப்பிவிட்டது. என் போக்கால், என் நண்பர்களுக்கு, கழகத்துக்கு எத்துணை இழிவும் பழியும் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வது? என்ன செய்வேன்? என்றெல்லாம் எண்ணி எண்ணி மனம் குமுறினான், உருமாறிப்போனான். ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊர், அங்கிருந்து வேறோர் இடம் இப்படி, அலைந்தபடி இருந்தான், அவன் சிறுவயதிலே மலேயாவிலே இருந்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து சில ஆண்டுகளே ஆயிருந்தன, எனவே அவனைச் சுலபத்திலே அடையாளம் கண்டு பிடிக்க அதிகமான வர்கள் இல்லை. அந்த ஒரு வாய்ப்பினால், துரைராஜ், தப்பித்திரிய முடிந்தது. மனமோ சுட்டவண்ணமிருந்தது.

புலன் விசாரித்து விசாரித்துப் போலீசும் ஓய்ந்து போயிற்று.

கோவிலுக்குப் பக்த சிகாமணி ஒருவர், புதிதாக மாங்காய் மாலை செய்து சமர்ப்பித்துவிட்டார்.

பழய மாங்காய்மாலையை லலிதாவுக்கும் காட்டாமல், வாஞ்சிநாதர், மறைத்து வைத்திருந்தார்.

“கோவில் திருவாபரணம்! அந்தப் பயலைப் பாபம் சும்மாவிடாது” என்பார் வாஞ்சிநாதர்.

“ஆமாம்-ஆமாம் -” என்று ஆமோதிப்பார் சிங்காரவேலர்.

“பயல், உருக்கி விற்று விட்டிருப்பான்” என்பார் பிரமுகர்.

“வாங்குபவனுடைய குலத்தையே நாசம் செய்துவிடாதோ?” என்று ஆவேசமாகப் பேசுவார் சிங்காரவேலர். ஐயருக்குத் தெரியும், எத்தனை கோவில் திருவாபரணங்களை முதலியார், உருக்கி எடுத்துச் சீமானானார் என்பது! வெளியே சொல்வதில்லை - மனத்திலேயே போட்டு வைத்திருந்தார்.

முதலியாரிடம், வாஞ்சிநாதர் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்றாலும், அவருடைய அட்டகாசம், அந்தஸ்து, இவை பல சமயங்களில் ஐயருக்கு அருவருப்பு தரும். தன்னை, மரியாதையாக சாமீ! சாஸ்திரிகளே! ஐயரவாள்! என்று முதலியார் அழைப்பார். ஆனால், தன் எதிரிலேயே, வேறு பிராமணர்களைப் பற்றிப் பேசும்போது பாப்பான் - என்று கேலியாகத்தான் பேசுவார். இது வாஞ்சிநாதருக்குக் கோபமூட்டும்; வெளியே பல்லைக் காட்டுவார், மனத்துக்குள், ‘திமிர்’ என்று சபிப்பார்.

“பணம் எப்படியோ சேர்ந்துவிட்டது, நிலம் இருக்கு நேர்த்தியான நஞ்சை, செல்வம் ஏராளமாயிருக்கு, ஊரை அடிச்சி உலையிலே போட்டுண்டான், சீமானாயிட்டான். யார் அவனோட செல்வம் எப்படி எப்படிக் கிடைச்சுதுன்னா கேட்க முடியும், தலைகால் தெரியாமல் ஆடுகிறான். உம்! மன்னாதி மன்னர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாருக்கா, இவன் எம்மாத்திரம்” என்று வாஞ்சிநாதர், கூறலானார், அந்தரங்க நண்பர்களிடம். ஐயருடைய கோபத்துக்குக் காரணம் இல்லாமலில்லை - முதலியார் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மறைமுகமாக, லலிதா-வரதன் லீலைகள்பற்றிக் கேலிசெய்து வந்தார்!

கேலி, கண்டனம் எனும் கட்டங்களைத் தாண்டிவிட்ட காரணத்தால், லலிதா வரதன் காதலாட்டம் தங்கு தடையின்றி வளர்ந்து, இருவருக்கும் சலிப்புதரும் நிலைக்குச் சென்று, சரிவதற்கான கட்டத்தில் இருந்து வந்தது.

வறுமையர் உலகிலே கிடந்தான் துரைராஜ்.

கொள்கை பரப்பிக்கொண்டிருந்தான் சாம்பசிவம்.

காதல் கை கூடாததால் கலக்கமடைந்து கிடந்தாள் கட்டழகி சந்திரா.

பாட்டாளிகளிடம் பழகிய துரைராஜ் - அவர்களிடம் கிளர்ச்சி மனப்பான்மையை மூட்டுவான் - முதலாளிக்கு விஷயம் எட்டும், உடனே வேலையை விட்டு விரட்டப்படுவான். இங்ஙனம், கயிறு அறுந்த காற்றாடியானான் துரைராஜ். ஆனால் கழகம் - கழகம் - என்று மட்டும் அடிக்கடி எண்ணம் குடையும், ஒரு முறைதான் தவறி விட்டோம், வைதீகமும் பணக்காரத் தன்மையும் ஒன்றுகூடி, வாஞ்சிநாதரும் சிங்காரவேலரும் கூட்டு சேர்ந்து நம்மை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டனர். அவர்கள் மீது பழி தீர்த்துக்கொள்ள மட்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்... எண்ணும்போதே இனிக்கிறதே... நிறைவேறுமா...! - என்று எண்ணுவான், வறண்ட சிரிப்புடன் வழி நடப்பான்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களின் ஆதரவினால் தானே, வாஞ்சிநாதர் போன்றாரின் வஞ்சகத் திட்டம் வளர்ச்சி அடைகிறது... சிங்காரவேலர்கள் திருந்தினால்... திருத்தப் பட்டால்... வாஞ்சிநாதர்களின் வஞ்சகம் அவர்களுக்கு விளங்கி விட்டால்... என்று யோசிப்பான், கவலை குறையும்.

சிங்காரவேலர் போன்ற சீமான்களும் வாஞ்சிநாதர் போன்ற வஞ்சக வைதீகர்களும் சமுதாயத்தைச் சீரழிக்கிறார்கள். அவர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்த, அவர்களின் எதிர்ப்பு களைச் சமாளிக்க, வீண்பழிகள் சுமத்தப்பட்டால் அவற்றி லிருந்தும் விடுபட, நமக்குப் பணபலம் வேண்டும்! ஆமாம்! பணம் இருந்தால், அந்தப் பாதகர்களின் கொட்டத்தை அடைக்கலாம்!! முன்புகூட நான் அதற்கேற்றவனாக இல்லை - கோழைத்தனம் குடிகொண்டிருந்தது - இப்போது, வறுமையில் உழன்று அனுபவம் பெற்றிருக்கிறேன். பசி பட்டினி பழக்கமாகி விட்டது. கயவரின் கத்திக்குத்துக்கூட எனக்குக் கிலியூட்டாது, இந்த நிலையில், என்னால், சிங்கார வேலர்களை எதிர்த்து நிற்க முடியும்... எதிர்த்து நிற்க முடியும்... ஆனால் பணம் வேண்டும்!

எந்தச் சிங்காரவேலர் வாஞ்சிநாதர் கீறிய கோட்டினைத் தாண்டாமல் பயபக்தி விசுவாசத்துடன் நடந்து வருகிறாரோ, அவரே, வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை அறியும் நாள் வரவேண்டும் - அறியும்படி செய்ய வேண்டும்... அந்த நாள் தான், என் வெற்றி நாள்!

எந்தக் கழகத்துக்குக் களங்கம் ஏற்படும்படி நடந்துகொண்டு விட்டேனோ, அந்தக் கழகத்தின் பணி, முட்டின்றி நடந்திட என்னாலானதைச் செய்ய வேண்டும்! பணம் தாராளமாகக் கிடைத்தால் கழகத்தின் பணி பன்மடங்கு வளரும்! எத்தர்களின் புரட்டுகளை அம்பலப்படுத்தலாம்! ஏழையின் பக்கம் வாதாடலாம்! ஏற்றம் தரும் செயல் எவ்வளவோ செய்யலாம் பணபலம் கிடைத்தால்....!

இங்ஙனம் எண்ணுவான், பஞ்சையாகிவிட்ட துரைராஜ்!

“உம்மோட பணத்தைக் கட்டிக் கொண்டு அழும்; நான் பொறந்தாத்துக்குப் போறேன்; திரும்பிவரச் சொன்னா... வாரேன்” என்று கூறி விட்டு லலிதா கிளம்பிவிட்டாள்.

“நாலு பணம் காசு சேர்த்தாத் தாண்டியம்மா, நானும் ஊரிலே மதிப்போடு உலர்த்த முடியும். உன் பின்னோடு தாளம் தட்டிண்டு நானும் கிளம்பிவிட்டா நன்னாயிருக்குமா, நீ, போய்விட்டு வா. உடம்புகூட ரொம்ப இளைத்திருக்கு; ஓய்வா, நிம்மதியா, ஒரு வருஷமாவது போய் இரு; நான் மாதத்துக்கொரு முறை வந்து போவேன், சந்தேகப்படாதே” என்று வரதன் சமாதானம் கூறிவிட்டான்.

வாஞ்சிநாதர், வழக்கப்படி “சர்வேஸ்வரா! ஏனோடாப்பா இந்தச் சோதனை” என்று ஆயாசப்பட்டுக் கொண்டார்.

“என்ன பிரமாதமான பணமிருக்கு நம்மிடம், ஒவ்வொரு சீமான் வீட்டுச் செல்வத்தைப் பத்திக் கேள்விப் படும்போது, நம்மிடம் இது இருக்குன்னு சொல்லிக் கொள்ளவே வெட்கமாயி ருக்கய்யா! கோடாலிபுரம் கோவிந்த செட்டியாரைப் பற்றிக் கேள்வியுண்டா? தங்கத்தாலே கோடாலி இருக்கய்யா - நாலு தலைமுறையா இருக்கு - வருஷத்துக்கு ஒரு தடவை பூஜை போடுவாங்களாம் தங்கக் கோடாலிக்கு. எப்படி அந்த ஐஸ்வரியம் வந்ததுன்னு நினைக்கறிங்க. நாலு தலைமுறைக்கு முந்தி, கோவிந்த செட்டியோட குடும்பத் தலைவன், கோடாலி எடுத்துக்கிட்டு, காட்டுக்குப் போயி, கட்டை வெட்டி அதைக் கொண்டு தான் ஜீவனம் செய்றது; பணம் காசு சேர்ந்த பிறகுதான், செட்டிப் பட்டம். கோடாலியும் கையுமாக திரிந்தபோது, பட்டமும் இல்லை, ஜாதியும் கிடையாது - வேட ஜாதின்னு சொல்றாங்க சிலபேர்; இப்ப செட்டியார். கோடாலி மாடசாமின்னா, ஊருக்கே கிலியாம். அந்த மாடசாõமிக்குக் காட்டிலே ஒரு பெரிய புதையல் கிடைச்சுது - அந்த ஐஸ்வரியம்தான் இப்ப, கோவிந்த செட்டி யாரைக் கோடீஸ்வரனாக்கி இருக்கு. போனவாரம், கவர்னரோட வீட்டுக்குப் போயிருந்தாராம்; கவர்னர் கூட தங்கக் கோடாலியைப் பார்த்தாரா போட்டோகூட எடுத்தாங்களாம்” இப்படித் தமது பேராசையை அடிக்கடி சிங்காரவேலர் வெளியிடுவார்.

“பகவான் ஒரு குறையும் வைகல்லே. சகல சம்பத்தும் கொடுத்திருக்கார்; இருந்தாலும் மனஷனுக்குப் பாரேன் ஆசை, பேயாப் பிடிச்சின்டிருக்கு” என்று வாஞ்சிநாதர் எண்ணிக் கொள்வார்.

“பெரிய தப்பய்யா நீ செய்த காரியம்”

“எதைச் சொல்றேள் முதலியாரவாள்...”

“எதைச் சொல்லுவாங்க... நீர் ஏனய்யா இந்த வயதான காலத்திலே கலியாணம் செய்திண்டீர். அடெ, என்னமோ வீட்டுக்குக் காவலா, கை அமுக்க கால்பிடிக்க ஒண்ணு தேவையாச்சேன்னா, சுமாரனாதாகப் பார்த்துக் கல்யாணம் செய் திண்டிருக்கலாம். லலிதாவை...”

“என்ன செய்வது, கர்மம்”

ஊரே கேலிபேசுது, பாரும்.

“அழிஞ்சி போறா, இல்லாததும் பொல்லாததும் பேசறவா”

“சாபம் கொடுக்கிறீரோ! போமய்யா, போம்.”

“முதலியாரவாள்! நேக்கு மனசு ஒண்ணும் நிம்மதியா இல்லே. - வேறே பேச்சுப் பேசுங்கோ”

முதலியார் இரண்டு விஷயங்களைத்தான் பேசிக் கொண்டிருந்தார். ஒன்று வாஞ்சி நாதரின் குடும்பக் கோளாறு - மற்றொன்று தன்னை மிஞ்சும் நிலையிலுள்ள சீமான்களைப் பற்றிய சேதிகள். ஆகவே, லலிதா விஷயத்தை நிறுத்திவிட்டு, சீமான்கள் பற்றிப் பேசலானார். வலையில் விழ வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார் வாஞ்சிநாதர், மெல்ல ரசவாதம் பற்றிப் பேச்சைத் துவக்கினார். கட்டுக்கதை என்றார் முதலியார், அவர் மயங்குமளவு ஆதாரங்களைக் கொட்டிக் காட்டினார் வாஞ்சிநாதர் - ரசவாதத்துக்கான ஏற்பாடு, ஐயர்வசம் ஒப்படைக்கப்பட்டது.

‘ராம்ஜீ’ - ரசவாதம் செய்து வயிற்றைக் கழுவும் பேர்வழி. அவனுடன் கூடிச் சதிசெய்து, முதலியாருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு, அவருடைய நகை, கோயில் நகை, சகலமும் மூட்டையாகக் கட்டிக் கொண்டுபோய் ஒளித்துவிட்டு, பழியை ராம்ஜீ மீது போட்டுப் பசப்பிவிட்டார் வாஞ்சிநாதர்.

புரண்டழுதார் சிங்காரவேலர். பாவிப் பிராமணா, உன் பேச்சைக் கேட்டேனே, கெட்டேனே! என்று கதறினார்.

“யார்டாப்பாவி அந்த ராம்ஜீ” என்று கேட்டார்.

“நேக்கென்ன தெரியும். இமாலம்னு சொன்னான் - நம்பினேன் - நம்ம ரெண்டுபேர் கண்ணிலேயும் மயக்கப் பொடி போட்டுட்டு, மூட்டையை அடிச்சிண்டே போய்ட்டான். என்ன செய்யறது. வாரும் போலீசிலே எழுதிவைப்போம்” என்று அழைத்தார் ஐயர்.

“போலீசுக்குப் போகப்படாதே! பறிபோன மூட்டையிலே கோவில் திருவாபரணமும் இருக்கே” என்று தத்தளித்தார் சிங்காரவேலர்.

“விஷயம் தெரிஞ்சா மானம் போகுமே!” என்று, எரிகிற நெருப்பில் எண்ணெய் கொட்டினார் வாஞ்சிநாதர்.

பேராசைக்குப் பலியான தந்தை தவிப்பது தெரியாமல், சந்திரா, நகரில் தன் அத்தை வீட்டில் இருந்து கொண்டு, அந்தப் பகுதிகளில் சாம்பசிவம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்யும்போது கட்டுக் களித்துக்கொண்டு, தன் கல்லூரி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

துரும்பாக இளைத்துவிட்டார் சிங்காரவேலர். அவருடைய முடுக்கு, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பேச்சு, எல்லாம் ஓடி ஒளிந்தன. ஐயர் தான் அவருக்குப் பொழுதுபோக்கு, பாதுகாப்பு, எல்லாம்.

அறுபதிருக்கு, ஆனால் ஐம்பதுக்குக் கொண்டுவந்தார் தமது வயதை, மேற்பூச்சுகளின் உதவியால், நல்லூர் ஜமீன்தார்.

அவருக்குச் சந்திரவைப் ‘பாணிக் கிரஹணம்’ செய்து வைத் தால், பறிபோன கோவில் திருவாபரணத்துக்குப் பதிலாக வேறு ‘செட்’ செய்யமுடியும், என்று தேன் தடவினார் வாஞ்சிநாதர். முதலிலே முதலியாருக்குக் குமட்டலாகத்தான் இருந்தது - ஆனால் நிலைமையை ஐயர் விளக்க விளக்க, அது தவிர, தான் மீள வேறு மார்க்கமில்லை என்பது புரிந்தது, சம்மதமளித்தார். சந்திராவை அழைத்துக்கொண்டு வந்தார் சாஸ்திரிகள்; “உமக்கேனய்யா இந்த வயதிலே கல்யாணம்!” என்று என்னைக் கேட்டான் கேலியாக, முட்டாள்! இதோ நல்லூர் ஜெமீன்தாரனுக்குச் சந்திரா!! என்று மனத்திலே எண்ணி மகிழந்தார், பூணூ<லை வெற்றிச் சிரிப்புடன் உருவி விட்டுக்கொண்டார்.

விஷயம் கூறப்பட்டதும், சந்திரா, புலியெனச் சீறினாள். ஐயரைச் சாடினாள்; பணத்தாசை கூடாது என்று முதலியாரைக் கடிந்துகொண்டாள்; “கோந்தைக்கு விஷயம் தெரியாது, கோபிக்கறா!” என்று துவக்கி, ரசவாதச் சம்பவத்தைக் கூறினார் ஐயர். சிங்காரவேலர் சித்திரவரைக்கு ஆளாக்கப் படுவது சந்திராவுக்குத் தெரிந்தது, தத்தளித்தனர்.

காலில் வீழ்கிறார், கண்ணீர் பொழிகிறார், தாயே! என்று அழைக்கிறார், மகளை.

“நிலைமை அறியாமல் ஏதேதோ பேசிவிட்டேன் தந்தையே. நான் உம்மைக் காப்பாற்றுவேன். நல்லூர் ஜெமீந்தாரணியாவேன்” என்று கூறினாள். திருமணம் நடந்தது, திருவாபரணத்துக்கு ஈடான தொகை கிடைத்தது - ஆனால்... அடுத்த மாதமே, சந்திரா விதவையானாள்.

“மலைபோல வந்த துன்பம் பனி போல நீங்கிவிட்டது, முதலியாரவாள்; எல்லாம் பகவத் அனுக்ரஹம். ஓர் ஆயிரம் ரூபாய் கொடுங்கோ” என்று கேட்டார் ஐயர்.

“ஆயிரமா? எதற்கு ஐயரே!” என்கிறார் முதலியார்.

“நல்லூர் சம்பந்தம் முடிந்ததானா, பகவானுக்கு ஆயிரம் ரூபாயிலே அபிஷேகம் செய்து வைக்கறதாக நான் பிரார்த்தனை செய்திண்டிருக்கேன். பகவானோட கிருபாகடாட்சத்தாலே, நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டு, கோவில் திருவாபரணம் செய்யும் சௌகரியம் ஏற்பட்டு, உமக்குவந்த ஆபத்து ஒழிந்து போச்சு பாருங்கோ - அதனாலே ஓர் ஆயிரம் கொடுத்தா அபிஷேகத்தை ஜாம் ஜாம்னு நடத்திடறேன்” என்று விளக்க மளிக்கிறார் வாஞ்சி.

அந்தச் சமயம்தான் தந்தி வருகிறது, நல்லூர் மாப்பிள்ளை இறந்து விட்டார் என்று.

விதவைக் கோலத்தில் சந்திரா உலவக் கண்ட சிங்காலவேலருக்கு, தாங்கொணா வேதனை ஏற்படட்து. தியாகவல்லி! என்னை ஊரார் பழிக்காதிருக்கவேண்டும் என்பதற்காகத்தான் வாழ்வையே பாழாக்கிக்கொள்ள முன்வந்த உத்தமி.

அவளுக்கு ஒரு குறையும் இல்லை என்று அளந்தான் இந்த ஐயர்.

எனக்குச் சொர்ணானுக்கிரஹம் இருக்கிறது, ஆகவோ ரசவாதம் செய்தால் பலிக்கும் என்று புளுகினான், என்னைப் பாழ்படுத்தினான்.

அவருக்கென்ன ஆயுசுக்குக் குறைவா! கல்லுப் பிள்ளையார்போல் இருப்பார்! நல்லயோக ஜாதகம்! என்று நல்லூர் மாப்பிள்ளை விஷயமாக அளந்து கொட்டினான்.

எல்லாமே பொய்த்துப் போய் விட்டது.

நான் என்ன செய்ய! எல்லாம் வினைப் பயன்படிதானே நடக்கும் என்று இப்போது வேறு பாஷையில் பேசுகிறான்.

நான் நடைப்பிணமானேன், அவனோ கொழுத்துத் திரிகிறான்.

கவலையால் என் மேனி அவனோ தங்க நிறமாகிக் கொண்டு வருகிறான்.

என் மகள், கோவெனக் கதறி அழுதாலாவது, நானும் கூடச் சேர்ந்து அழுது என் துக்கத்தை வெளியே கொட்டலாம் - என்னைச் சந்திரா பார்க்கும் பார்வை, “பாவீ! பார்த்தாயா! உன்னால் எனக்கு நேரிட்ட கதியை!” என்று கேட்பது போலிருக்கிறது. என்னால் இந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை - என்றெல்லாம் எண்ணி எண்ணிக் கலங்கினார் சிங்காரவேலர்.

சந்திராவுக்கு நேரிட்ட கதியை அறிந்த சாம்பசிவம் துடிதுடித்தான்.

சிங்காரவேலரின் மகள் என்ற ஒரே காரணத்துக்காகத் தனக்கு அவள் ஏற்றவளல்ல என்று எண்ணினானே தவிர, சாம்பசிவம், சந்திராவை மறந்தவனல்ல.

காதல் மணம், மாதர் விடுதலை ஆண் பெண் சமத்துவம் என்பவை பற்றியெல்லாம் பேசும்போது, அவனுக்குச் சந்திராவின் நினைவுதான் வரும்.

நல்லூர் ஜெமீன்தாரனுக்குத் தாரமாகி ஒரே திங்களில் தாலி இழந்தாள் என்று கேள்விப்பட்டதும், சாம்பசிவம் சந்திராவைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுதான் அறிவுடைமை என்று எண்ணினான். தோட்டத்தில் சந்தித்தனர்.

கண்களிலே களிப்பு இல்லை, குரலிலே இனிமை இல்லை, இளமைகூட விலகிவிட்டதுபோன்ற கோலத்தில் இருந்தாள் சந்திரா.

ஆறுதல்கூற வந்தான் சாமபசிவம், அவனுக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது சந்திராவுக்கு.

நல்லூர் சம்பந்தம் ஏற்பட வேண்டிய நிலைமையைச் சந்திரா விளக்கியபோது, சாம்பசிவம் உருகிவிட்டான். கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் இவ்வளவு அளவுக்குச் சந்திரா எப்படிப் பெற்றிருந்தாள் என்பது அவனுக்கு விளங்கவில்லை.

இனி...? என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து துணிவு பிறக்காததால் தத்தளித்தாள். சோகத்தைக் கீறிக் கொண்டு இலேசான ஓர் புன்னகை பிறந்தது - அதன் பொருள் புரிந்தது, சாம்பசிவத்துக்கு. மீண்டும் சந்திப்போம் என்று கூறிப் பிரிந்தன.

* * *

“தேடிப்போன மூலிகை காலிலே சிக்கிக் கொண்டது” என்று கூறி தூங்கிக் கொண்டிருந்த துரைராஜை தட்டி எழுப்பினார் கந்தபூபதி.

அழகூர் மடாதிபதியின் கையாள்கள், கந்தபூபதியும் முருகதாசரும்.

இருவரும், “பட்டத்துக்கு’ வரும் பாத்தியதை பெற்றவர்கள்.

மடாதிபதியோ மறைய மறுக்கிறார் இரு அடியார்களுக்கும் ஆசை அலையோ மோதுகிறது.

பீடத்தில் வீற்றிருப்பதால் அவர் அனுபவிக்கும் ‘சுகானுபவத்தை’க் காணக்காண, அடியார் இருவருக்கும் ஆவல் கட்டுக்கு அடங்க மறுக்கிறது.

மடாதிபதியைக் ‘கைலை’ அனுப்பி விடுவது என்று திட்ட மிட்டுவிட்டனர். அதே சிந்தனையுடன் மடாலயத்தருகே உள்ள வனத்தில் உலவுகிறார்கள், அங்கு உருமாறிப் போயிருந்த துரை ராஜ் உறங்கிக் கிடக்கிறான். அவன் ஏறத்தாழ, மடாதிபதியின் ஜாடையாக இருப்பது கண்டு ஆச்சரியம் கொண்டு, புதிதாகத் தந்திரமான திட்டம் தீட்டுகிறார்கள், திரு அருளை மக்கட்கு வழங்கும் தொண்டாற்றக் காவிகட்டிய கண்ணியர்கள்.

வெகுண்டெழுந்த துரைராஜிடம் பேசும்போது, மடாலயம், ஆண்டிகள், எனும் ஏற்பாடுகளையே வன்மையாகக் கண்டிப்பவன் என்பது தெரிகிறது. எனவே தைரியமாகத் தங்கள் திட்டத்தைக் கூறி, துணைக்கு இருக்கும்படி அழைக்கிறார்கள்.

தங்கச் சுரங்கத்துக்கு அல்லவா அழைப்பு வருகிறது என்று எண்ணிய துரைராஜ், பண்டாரங்கள் தீட்டிய முரட்டுத் தனமான திட்டத்துக்குப் பதிலாக, சாதுர்யமாக வேறோர் திட்டம் தயாரித்துத் தருகிறான்.

மடாதிபதி ‘சக்தி பூஜை’யிலே ஈடுபடுவது என்றும், அது போது துரைராஜ் மடாதிபதியின் கோலம் தங்கி ஒருநாள் ‘தர்பார்’ நடத்துவது என்பதும், அன்றே பழைய மடாதிபதியை ஒழித்துக் கட்ட பக்தர்களையே துரைராஜ் தூண்டுவது என்றும் ஏற்பாடு.

மடாதிபதிக்குச் ‘சக்தி பூஜை’க்கான ஏற்பாடு எளிதிலே முடிந்தது. அதுதான் லலிதாவின் தாய் வீடு இருந்த ஊர். ‘சிவத்தொண்டு’ செய்ய அந்தச் சிற்றிடையாள் முன்வந்தாள்.

காலை எல்லாம் சைவத்தைச் சுமந்து நொந்தேன். கட்டழகி! மடத்திலேயோ மன்னார்சாமிகள் வருவதும் போவதும் ஓயவில்லை! என்று கொஞ்சு மொழி பேசினார், லலித பூஜையில் ஈடுபட்டார் - தன்னை மறந்தார் - தர்பார் நாளை மறந்தார் - சோலையிலே வெட்டிவேர்ப் பந்தலிடப்பட்ட சித்திரகூடத்திலே, அவர் களியாட்டத்தில் மூழ்கிக் கிடந்தார்.

‘தர்பார்’ நடைபெற்றது, மடாதிபதி கோலத்தில் துரைராஜ் அமர்ந்தனர் - மடத்தின் பொருளை மக்களுக்கு வாரி வாரி வழங்கினான். “மதி பெற்றேன் மகேசன் அருளால்! புதிய பிறவியே எடுத்தேன். என் அஞ்ஞானம் என்னை விட்டோடி விட்டது; மீண்டும் வரக்கூடும், பக்தர்கள்; வந்தால் விரட்டும் தொண்டு செய்து, புண்ணியம் பெறுவீராக,” என்று உபதேசம் செய்தான். லலித பூஜையை முடித்துக்கொண்டு, ஓடோடி வந்தார் பழையவர், வேறோர் உருவம் அரசோச்சக் கண்டார், அலறினார், ஆர்ப்பரித்தார், ஐயகோ! என்றார், அரனை அழைத்தார், - ஆனால் அனைவரும் சேர்ந்துகொண்டு, “இதோ அஞ்ஞானம் வந்துவிட்டது” என்று கூவி, அடித்துத் தள்ளினர் கீழே. இந்த அமளியைச் சாக்காகக் கொண்டு துரைராஜ் விலையுயர்ந்த நவமணிகள் கொண்ட பேழையுடன், மடாலயத்தை விட்டு வெளியேறிவிட்டான்.

அடுத்த மடாதிபதி கந்தபூபதியா, முருகதாசரா என்பது பற்றிப் பக்தர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர். துரைராஜ், தாடியும் ஜடையும் கலைத்துவிட்டு, வேறோர் புதிய வேடம் அணிந்துகொண்டிருந்தான்.

மாயேந்திரன் ஊரையே ஒரு கலக்குக் கலக்குகிறான்.

பணத்தை அள்ளி அள்ளி வீசுகிறான் - ஆனால், தேர் திருவிழாவுக்கல்ல, தேர்தலுக்குமல்ல; அனாதை விடுதிகள், பள்ளிக்கூடங்கள், படிப்பகங்கள், இவற்றுக்கு.

ஆராதனை, அர்ச்சனை, அபிஷேகம் இற்றைக் கேலி செய்கிறான், அறிவு வளர்ச்சியைப் பாராட்டுகிறான்.

ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தமா, பாட்டாளிகளுக்குப் பரிந்து பேசுகிறான். பயல்கள் பத்து நாளைக்குக் கூவும், பிறகு கும்பி காயும், தானாக வேலைக்குத் திரும்பு என்று ஆலை முதலாளி சேட் எண்ணுகிறார் - ஆனால், மாயேந்திரன், ஆலைத் தொழிலாளருக்குப் பண உதவி தருகிறார்; அவர் களுடைய போராட்டத்தை ஆதரிக்கிறார். ஆலை முதலாளியே மாயேந்திரரிடம் வருகிறார்.

“இவர் பெயர் என்ன தெரியுமாடா வெள்ளே!” என்று கேட்கிறார், மாயேந்திரன் தன் வேலையாளிடம்.

“சேட்டு...” என்கிறான், அந்த அப்பாவி.

“பரமதயாள் சேட்! பாம்பிலே அதிக விஷமுள்ள பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர், இதோ இவனுக்குப் பரமதயாள் சேட்!” என்று கூறிக் கேலி செய்கிறார், மாயேந்திரன்.

“என்மீது என்ன கோபம் ஜீ! நான் தங்களுக்கு என்ன செய்தேன்” என்று கேட்கிறான், சேட்.

“எனக்கா? ஒன்றும் இல்லை. ஆனால் நீ ஏழைத் தொழிலாளருக்குச் செய்யும் கேடு தெரியாதா! அவர்களின் கண்ணீர், உனக்குப் பன்னீர்!! நான் ஏழைத் தொழிலாளருக்குத் தான் நண்பன் உன் போன்ற ஆள் விழுங்கிக்கல்ல, போ!” என்று விரட்டுகிறார்.

தொழிலாளர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

புத்துலகக் கழகம் புதுமை வீரரை வாழ்த்துகிறது.

வாஞ்சிநாதர், மாயேந்திரரைக் காண வருகிறார், ‘அம்பாள் பிரசாதத்துடன்.’

“அம்பாள் பிரசாதம் கிடக்கட்டும் அய்யர்... நமக்குத் தேவை, அம்பாள்...!” என்று ஜாடை காட்டுகிறார் மாயேந்திரன். “புரிகிறது! புரிகிறது! அதற்கென்ன ‘ஜெமீந்தாரவாள்! எதேஷ்டம்’ என்று கூறிக் குதூகலமூட்டுகிறார் வாஞ்சிநாதர்.

“இதெல்லாம் வேண்டாமய்யா... சிங்காரவேலர் மகள் சந்திரா மீது...” என்று தூபமிடுகிறார் மாயேந்திரன்.

“சிரமமான காரியம் - பெரிய இடத்து விவசாரம்...” என்று கூறித் தயக்கம் காட்டுகிறார் வாஞ்சி. பச்சை நோட்டுகளை நீட்டுகிறார் மாயேந்திரர், பல்லிளிக்கிறார் வாஞ்சிநாதர்.

வாஞ்சிநாதருடைய வஞ்சகத்தை வெளிப்படுத்தும் கட்டம் வருவதற்குச் சில காலம் பிடித்தது - கட்டம் உருவெடுத்துக் கொண்டு வந்தது.

ஒருநாள் சிங்காரவேலருக்கு ஆள் அனுப்பி வரவழைத்தார் மாயேந்திரர்.

“அழைத்ததாகக் கேள்விப்பட்டேன், ஓடோடி வந்தேன்” என்று அடக்க ஒடுக்கமாகப் பேசுகிறார் சிங்காரவேலர்.

“ஆமாம், தங்களைப் பற்றி நிரம்பக் கேள்விப்பட்டிருக் கிறேன். பெரிய பக்திமானாம்...” என்று துவக்கினார் மாயேந்திரர்.

“உண்மைதான். இந்த ஊர்க் கோவில் தர்மகர்த்தா...”

“தாங்கள் தானாம்! ஆனால் தங்கள் பக்தியும் பிராமண சேவையும் தங்களுக்கு ஒரு பயனும் தரக் காணோமே. தங்கள் மகள் சந்திரா, பாவம், தாலி அறுத்துவிட்டாள்”

“ஆமாம், தலைவிதி...”

“அந்தத் தலைவிதியைக்கூட உமது பக்தியும் பிராமண சேவையும் போக்க முடியவில்லை, பிறகு என்ன பிரயோஜனம்”

“இதைப் போலத்தான் பேசுவான் துரைராஜ்!”

“அவனைத்தான் அடித்துத் துரத்தியாச்சே”

“ஜெமீதாரவாளுக்கு அவனைத் தெரியுமோ?”

“ஏன் தெரியாது! துரைராஜ் இப்போது உம்மைப் பார்த்தால்...”

“காரி உமிழ்வான்...”

“துரைராஜ் அப்படிப்பட்டவனல்ல... உம்மிடம் பரிதாபம் காட்டுவான்...”

“துரைராஜ் பேசுவதுபோலவே இருக்கிறதே...”

“இருக்கட்டும், நானேதான் துரைராஜ்... என்று வைத்துக் கொள்ளுங்களேன்...”

இவ்விதம் உரையாடல் வளர்ந்தது; வாஞ்சிநாதரின் வஞ்சகத்தை விளக்கி, அவன் போன்றாரின் பேச்சுக்குக் கட்டுப்படுவது எவ்வளவு கண்மூடித்தனமானது என்பதை எடுத்துரைக்கிறார் மாயேந்திரர்.

அதே சமயம் வாஞ்சிநாதர் வருவதாக வேலையாள் கூறுகிறார். உடனே மாயேந்திரர், “வாஞ்சிநாதரின் வஞ்சனம் எந்த அளவுக்குச் செல்கிறது என்பதைக் காட்டுகிறேன். அதோ அந்தத் திரைக்குப் பின்புறம் சந்தடி செய்யாமல் இருந்து கொண்டு, நாங்கள் பேசுவதைக் கேளும் என்று கூறுகிறார். சிங்காரவேலர் கொள்கிறார். சிரித்தமுகத்துடன் வாஞ்சிநாதர் வருகிறார்.

“வாருமய்யா! வாஞ்சிநாதரே! வாரம் இரண்டாகிறது, இன்னமும் காரியம் முடியக் காணோம்.”

“எதைச் சொல்றேள் ஜெமீந்தாரவாள்!”

“சற்றுச் சிரமமாக இருக்கிறது”

“என்னய்யா இழுத்துப் பேசுகிறீர். இரண்டு கையையும் நீட்டி வாங்கியதை...”

“நான் மறப்பேனா...”

“என்னய்யா, என்னைவிட அந்தச் சிங்கார மொதலி மேலானவனா...”

“கிடக்கிறான் தள்ளுங்கோ. நேக்கு அவனோட தயவு எதுக்கு...”

“சிங்காரமுதலிதான் உம்ம பேச்சைத் தட்டி நடப்பதே கிடையாதாமே.”

“ஆமாம் - அப்படித்தான் இருந்தான். கோவில் கட்டடான்னா, கட்டினான்; கும்பாபிஷேகம் செய்டான்னேன், செய்தான்...”

“ரசவாதம் செய்ததுகூட, நீர் சொல்லித்தானாம்...”

“யார் சொன்னா அப்படி, இழுத்து வாரும் இப்படி; நான் ஜோட்டாலே அடிச்சுடுவேன். நான் தலைப்பாடா அடிச்சுண்டேன், வேண்டாம்டா, போதும் உனக்கிருக்கிற சொத்து, ரசவாதம் எதுக்குன்னா - என் பேச்சைக் கேட்டானோ! தன் சொத்து, கோவில் சொத்து பூராவும் பறி கொடுத்தான். நல்ல வேளையாக நல்லூர் சம்பந்தம் ஏற்பட்டுது, இல்லையானா, நாறிப் போயிருக்கும் அவனோட வாழ்வு.”

“அதுவும் தக்கவில்லையே பாபம். தாலி அறுத்து விட்டாளே சந்திரா”

“அறாமல் என்ன ஆகும். அவன் ஆயிரத்தெட்டு ரோகம் பிடிச்சவன்...”

“அப்படிப்பட்ட இடத்திலே சந்திராவைக் கொடுக்கச் சொன்னீரே...”

“நான் சொன்னா! இவன் புத்தி எங்கே போச்சின்னேன்!”

அவ்வளவுதான் பொறுக்கமுடிந்தது சிங்காரவேலரால்.

பாவி! படுமோசக்காரா! என்று இடி முழக்கமிட்டார். புலி யெனப் பாய்ந்தார். வாஞ்சிநாதனின் குரவளையைப் பிடித்துத் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தி நெரிக்கலானார். எவ்வளவு அழுத்தி வாஞ்சிநாதர் சொல்லி வந்த தத்துவங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாரோ, அவ்வளவு அழுத்தமாக நெரிக்கலானார். மாயேந்திரனால் கூடத் தடுக்கமுடியவில்லை. வாஞ்சி நாதன் பிணமாகிக் கீழே விழுந்த பிறகுதான் பிடி தளர்ந்தது, கொலை செய்துவிட்டோம் என்ற உணர்வும் அப்போதுதான் வந்தது. மாயேந்திரன் காலில் வீழ்ந்து கதறலானார். அவரைத் தூக்கி நிறுத்தித் தைரியம் கூறிவிட்டு, “இது சம்பந்தமாகத் திகில் வேண்டாம், நான் கவனித்துக் கொள்கிறேன்.” என்று கூறிவிட்டு, சிங்காரவேலரை வாஞ்சிநாதர் வீட்டுக்கு அழைத்துச் சென்று, துரைராஜ் தூக்கிக்கொண்டு ஓடினதாகக் கூறப்பட்ட மாங்காய் மாலையையும், ரசவாதி ‘அடித்துக் கொண்டு’ போனதாகச் சொல்லப்பட்ட நகைகளையும் காட்டி, வாஞ்சிநாதனின் வஞ்சகத்தைப் படம் பிடித்துக் காட்டினார் மாயேந்திரர்.

திடுக்கிடத்தக்க சம்பவங்கள் உருண்டோடி வந்தன - இவை கண்டு, சிங்காரவேலர் தெளிவுபெற்று, “இனி நான் வஞ்சகத்துக்கு அடிமை ஆக மாட்டேன், வைதீகத்துக்கு இட மளிக்கமாட்டேன், பகுத்தறிவு பரப்புவேன், ஜாதிபேதம் ஒழியட்டும், மூடநம்பிக்கை ஒழியட்டும, புரட்டர்களின் கொட்டம் அழியட்டும்,” என்று ஆவேசத்துடன் கூறிட, அகமிக மகிழ்ந்த துரைராஜ், சந்திராவைச் சாம்பசிவத்துக்கு மறுமணம் செய்து தரும்படி கேட்டுச் சம்மதம் பெறுகிறார்.

மறுநாளே, மாயேந்திரர் தலைமையில் மறுமணம் நடந்தேறுகிறது.

அதேபோது துரைராஜ் மடாலயத்தில் செய்த கபட நாடகம் பற்றி லலிதா மூலம் கேள்விப்பட்டு, மாயேந்திரனின் போக்கையும் கவனித்துப் பார்த்து, துரைராஜே, மாயேந்திரனாக நடிக்கிறான் என்பதைக் கண்டறிந்து, துரைராஜை வந்து மிரட்டுகிறான் வரதன்.

உன்னால் ஆனதைச் செய் என்று கூறிவிட்டு, தானே துரைராஜ் என்பதையும், வாஞ்சி நாதரைக் கொன்றது தானே என்றும் கடிதம் எழுதி வைத்து விட்டுத் தனியாகச் சாம்பசிவத்தைச் சந்தித்து, தான் தான் துரைராஜ் என்பதைக் கூறி, தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பகுத்தறிவுப் பிரசாரத்துக்கே பயன்படுத்தும்படி கூறிவிட்டு, அங்கேயே, நண்பனுடைய அணைப்பில் இருந்தபடியே, இரத்தம் கக்கிக் கீழே வீழ்ந்து இறந்து விடுகிறான், “விஷம் சாப்பிட்டு விட்டேன்! வேலை முடிந்தது!” என்று கூறியவண்ணம்.

அலறிப் புரண்டழுகிறான் சாம்பசிவம். திருந்தி விட்டேன் துரைராஜ், திருந்தி விட்டேன், என்பொருட்டு நீ இறப்பதா! உத்தமனே! என்று உள்ளம் உருகக் கூறிக் கதறுகிறார், வைதீகப் பிடியிலிருந்து விடுபட்ட சிங்காரவேலர்.

மக்களை வஞ்சகர்களிடம் சிக்க வைத்து, அவர்தம் மதியை மாய்த்து, சமூகத்தைச் சீரழிக்கும் பார்ப்பனீயத்தை ஒழிக்கும் பணியாற்றுவேன், நீ துவக்கி வைத்த வேலையைத் தொடர்ந்து செய்து வருவேன் - என்று கூறித் துரைராஜின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறான், சாம்பசிவம்.

(திராவிட நாடு - 1955)