அப்போதே சொன்னேன்

“அப்போதே சொன்னேன், கவனமிருக்கிறதல்லவா? அந்தப் பயல் உருப்படமாட்டான் என்று தெரிந்து சொன்னேன். விளையும் பயிர் முளையிலே என்று பெரியவர்கள் வீணுக்கா சொல்லி வைத்தார்கள்!” என்று ஒவ்வொரு நாளும் நடைபெறும் குளத்தங்கரை மாநாட்டில், கொத்தனார் வேலையிலிருந்து வளர்ந்து ‘காண்ட்ராக்டர்’ ஆகிவிட்ட குத்தாலலிங்கம் அன்று கூறிவிட்டு, உடன் இருந்தவர்களைக் கம்பீரமாகப் பார்த்தார். உடன் இருந்தவர்கள் மூவர். ஒருவர் குத்தாலலிங்கம் தலையில் எப்படியாவது கரம்பு நிலத்தைக் கட்டிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த கலியபெருமாள் வாழ்ந்து கெட்டவர்; மற்றொருவர் தமது மகளை மருமகளாகக் கொள்ள குத்தாலலிங்கம் திட்டமிட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு பூரித்துப் போயிருந்த பொன்னம்பலம்; மூன்றாவது பேர்வழி மாரியம்மன் கோவில் பரம்பரை பூசாரி. ஒவ்வொரு நாளும் - அதாவது குத்தாலலிங்கத்துக்கு வசதியும் ஓய்வும் கிடைத்திடும் நாள் - குளத்தங்கரையில் அவர்கள் கூடுவதும், தங்கள் தீரனூர் புள்ளிகளைப் பற்றிப் பேசுவதும் வாடிக்கை.

குத்தாலலிங்கம் கொத்தனாராக இருந்த வரையில், மற்றவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நிலை! காண்ட்ராக்டர் ஆனபிறகு, அவர் பேசுபவராகவும் மற்றவர்கள் கேட்டுக் கொள்பவர்களாகவும் நிலைமை மாறிவிட்டது.

தீரனூரில் நாட்டாண்மை வீட்டு ‘பெரிய ஐயா’ காலமாகி விட்ட பிறகு, அந்தக் குடும்பத்தைப் பற்றியும் குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு அடிபட ஆரம்பித்தது. பெரிய ஐயா இருந்த வரையில் ‘அந்தப் பேச்சு’ நமக்கு எதற்கு என்று ஒதுக்கி விடுவார்கள்; அத்தனை மதிப்புப் பெற்ற குடும்பம்.

பெரிய ஐயா காலமாகி விட்ட பிறகு, ‘காவேரி’ அம்மா எவ்வளவோ கஷ்டப்பட்டு தன் இரண்டு பிள்ளைகளையும் ஒரு பெண்ணையும் நல்ல முறையிலே வளர்த்து வந்தார்கள்.

பட்ட மரம் துளிர்ப்பது போல, இந்த இரண்டு மகன்களும் அந்தக் குடும்பத்தை மறுபடியும் வளமானதாக்குவார்கள், நாட்டாண்மையை நடத்திச் செல்லுவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கு. இரண்டு பிள்ளைகளில் மூத்தவன் சாத்தப்பன்; துடிதுடிப்பானவன்; அவன் தம்பி தங்கப்பன்; அமைதியானவன்; பெண்ணின் பெயர் வடிவு; நல்ல அழகி.

சாத்தப்பன் சுறுசுறுப்பாகவும் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதையும் கண்டவர்கள், அவன் விரைவில் நல்ல முறையில் படித்துப் பட்டம் பெற்று முன்னுக்கு வருவான் என்று எண்ணிக் கொண்டனர்; பள்ளிக் கூடத்திலேயும் அவனுக்குத் தான் முதலிடம்! தங்கப்பனுக்குக் கிடைத்த மதிப்பே, அவன் சாத்தப்பன் தம்பி என்பதாலேதான்!!

* * *

எதைப்பற்றியும் நுணுகி ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிந்து கூறத்தக்கவர் என்ற பெயர் குத்தாலலிங்கத்துக்கு. சொத்து சேரச் சேர வளர்ந்து கொண்டிருந்தது. குத்தாலம் சொன்னா சொன்னபடி நடக்கும் என்றும் எப்போதோ நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து சொல்லுவார், அந்தத் திறமை உண்டு என்றும் பேசிக் கொள்வார்கள். அவனுடைய முப்பாட்டனார் பெரிய ஆரூடக்காரர் தெரியுமா! அந்த ‘அம்சம்’ துளியாவது இருக்கத்தானே செய்யும் என்று ஆதாரம் கூடக் காட்டினார்கள்.

ஊரிலே பலரும் சாத்தப்பனைப் பற்றிப் பாராட்டிப் பேசியபோது, குத்தாலம் மட்டும் தலையை அசைத்தபடி, “என் மனத்திலேபட்டதைச் சொல்றேன்... அந்தப் பய சாத்தப்பன் ஒழுங்கா இருக்கப் போவதில்லை. போகப் போகத் தெரியும் பாருங்க” என்று சொல்லி வைத்தார்.

அந்தப் பேச்சு நடந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகுதான் அன்றைய குளத்தங்கரை மாநாட்டில் குத்தாலலிங்கம் வெற்றிப் புன்சிரிப்புடன் சொன்னார், “நான் அப்போதே சொன்னேனே, கவனமிருக்கிறதா?” என்று. அன்று அந்தப் பேச்சு வந்ததற்குக் காரணம், தாழைப்பட்டி மிட்டாதாரர் மகள் தருமாம்பாளை, தங்கப்பனுக்குத் தருவது என்று நிச்சயித்துத் திருமணத்துக்கு நாள் குறித்து விட்டார்கள் என்ற செய்தி கிடைத்ததுதான்.

தாழைப்பட்டியார் தன் மகளைச் சாத்தப்பனுக்குத் தான் கொடுக்க விரும்புகிறார் என்று ஊரே பேசிக்கொண்டது. சாத்தப்பன் தங்கப்பன் இருவருமே தாரைப்பட்டியை அடுத்த புது நகரக் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். தர்மாவும் கல்லூரி மாணவி.

சாத்தப்பனும் தர்மாவும் ஒன்றாக உலவுவதும் உல்லாச மாகப் பேசுவதும், பூப்பந்தாட்டம் ஆடுவதும் கண்டவர்கள், பொருத்தமான ஜோடி என்றே கூறினார்கள். தாழைப்பட்டியாரும் தமக்கு ஒரு தடையும் இல்லை என்பதை ‘ஜாடை மாடை’யாகத் தெரிவித்திருந்தார்.

ஊரெல்லாம் எதனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்களோ அது நடைபெறவில்லை; சாத்தப்பனுக்கு என்று எந்தத் தருமாம்பாளைக் குறிப்பிட்டுக் கூறி வந்தார்களோ, அந்தப் பெண் தங்கப்பனுக்கு என்று நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது, அதிர்ச்சி பலருக்கு. சாத்தப்பன்? அவன் ஊரில் இருந்தால்தானே அவன் மனநிலை என்ன என்று தெரிந்துகொள்ள.

கல்லூரியில் திறமைமிக்க மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த சாத்தப்பன், என்ன காரணத்தினாலோ, கல்லூரி முதல்வரிடம் கடுமையாகத் தகறாரிட்டுக் கொண்டான்; அதன் காரணமாகக் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டான். ஊரை விட்டே ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளாமல் ஓடிவிட்டான். ஊரை விட்டுப் போகும் முன்பு தங்கப்பனைத் தனியாகச் சந்தித்து அன்புடன் அணைத்துக்கொண்டு. “தம்பி! குடும்பப் பொறப்பு இனி உன்னுடையது” என்று உருக்கமாகச் சொன்னதாகப் பேச்சு உலவிற்று. பொதுவாக ஊரிலே பரவிவிட்ட பேச்சோ, “குடும்பத்திற்கே தலை இறக்கமான காரியத்தைச் செய்து விட்டு சாத்தப்பன் ஓடிவிட்டான்” என்பது.

ஊரைவிட்டு ஓடாமல், எப்படி இங்கே இருப்பான். அவள் போட்ட சொக்குப்பொடி இலேசானதா? என்று ஒரு பேச்சு கிளம்பிற்று. அடியோடு ஆதாரமற்ற பேச்சு அல்ல அது.

“நான் கண்ணால் பார்த்தேன். அவளோடு சாத்தப்பன் ஆடிப்பாடி அலைந்ததை” என்று தருமாம்பாளே கூறியபிறகு சாத்தப்பன் மீது வந்த புகாருக்கு ஆதாரமே இல்லை என்று எப்படிக் கூறிவிட முடியும்.

மேலும் சாத்தப்பன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு ஓடி விட்டதற்கும் ‘ரசவாதம்’ ரங்கலால் தன் தங்கை மங்காவையும் அழைத்துக் கொண்டு அதே ‘இரயிலில்’ பயண

மானதையும், எப்படி ஒன்றாக இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியும்.

வழக்கமாக விடுமுறை நாட்களைத் தாழைப்பட்டி மாளிகையில் கழித்திடும் வாடிக்கையை மாற்றிவிட்டு, தம்பி தங்கப்பனை மட்டும் போகச் சொல்லிவிட்டு, சாத்தப்பன் ரங்கலால் ஆராய்ச்சிக்கூடத்தில் தங்கிவிட்டது, ஆராய்ச்சிக்காகாவா, அல்லது மைக்கண்ணீ என்று கல்லூரி மாணவர்களால் செல்லப் பெயரிடப்பட்ட மங்காவுக்காகவா!

இவ்விதமாகப் பலவிதமான பேச்சு.

சாத்தப்பன் வலையிலே விழுந்திருந்தால் என் மகள் கதி என்ன ஆகி இருக்கும். நல்லவேளை பயல் ஓடிவிட்டான், இனி தங்கப்பனே என் மருமகன் என்று தாழைப்பட்டியார் தெரிவித்து விட்டார். மகனுக்குப் பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைத்ததிலே அம்மாவுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் மூத்தவன் இப்படி ஆகிவிட்டானே, குடும்பத்துக்குக் கெட்ட பெயர் கொண்டு வந்துவிட்டானே என்பதை எண்ணி எண்ணிக் குமுறினார்கள்.

அந்த நிலையில்தான் குத்தாலம் கூறினார் “அப்போதே சொன்னேனல்லவா?” என்று.

இவ்விதமெல்லாம் நடக்கும் என்று அவர் விவரம் ஏதும் சொல்லவில்லையே; ஆனால் தங்கப்பனுக்குத்தான் நல்ல எதிர்காலம் இருக்கும், சாத்தப்பன் ‘சுழி’ நன்றாக இல்லை என்று பொதுப்படையாகச் சொல்லி வைத்தார். பார்க்கப் போனால் அவர் சொன்னது போலவே நடந்துவிட்டது; சாத்தப்பன் எவள் பின்னோடோ ஓடி விட்டான்; தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகன் ஆகும் நிலையைப் பெற்றான்.

கல்லூரியில் புதிதாக ஒரு மண்டபம் கட்டும் ‘காண்ட்ராக்டு’ கிடைக்காது போனதற்குக் காரணம் சாத்தப்பன் என்றோர் சந்தேகம் குத்தாலத்துக்கு. ஆதாரமற்ற சந்தேகம். காண்ட்ராக்ட் குத்தலாத்துக்குக் கிடைக்கக் கூடாது என்று கூட சாத்தப்பன் நினைக்கவில்லை. கல்லூரி முதல்வரிடம் தனியாகப் பேசி ‘காண்ட்ராக்ட் தொகை’ எந்த அளவு இருக்க வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்க்கிறார் என்று அறிந்து கூறும்படி குத்தாலம் கேட்டுக் கொண்டார். சாத்தப்பன் தன்னால் முடியாது என்றும், அது முறையல்ல என்றும் சொல்லிவிட்டான்.

இந்த விரோதத்துக்கும் தன் கணிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்று குத்தாலம், கூறிவிட்ட பிறகு மறுப்புப் பேசுவார் யார், குளத்தங்கரை மாநாட்டில்!

* * *

ஆண்டுகள் மூன்று உருண்டோடின; குளத்தங்கரை மாநாடு வழக்கம் போல நடைபெற்று வந்தது; குத்தாலலிங்கமே தலைமை; மற்றவர்களிலே மட்டும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது; சம்பந்தியாகிவிட்ட பொன்னம்பலம் வேறு வேலைகளைக் கவனிக்கலானார்; கரம்பு நிலத்தை விற்க முடியாத கோபத்தில் கலியபெருமாள் மாநாட்டை வெறுத்துவிட்டார்; மாரியம்மன் கோவில் பூசாரி வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை; செங்கல் சூளை சின்னப்பனும், மரக்கடை மகமதுவும் புதிய அங்கத்தினர் களாகிவிட்டனர்.

* * *

தங்கப்பன் வக்கீலாகி, தர்முவுடன் திருச்சிராப்பள்ளி நகரில், தாழைப்பட்டியார் வாங்கிக் கொடுத்த மாடிக் கட்டித்தில் வசித்துக் கொண்டிருந்தார். தாழைப்பட்டியாரின் மருமகப்பிள்ளை என்பதாலே, கட்சிக்காரர்கள் வந்து குவிவார்களா! கோர்ட்டிலே வக்கீலுடைய திறமை எப்படி என்பதைப் பார்த்துத்தானே! வழக்கறிஞருக்கு வருமானம் கட்டையாவே இருந்தது. ஆனால் அவருக்காகத் திறமையாக வாதாடி தரும் தகப்பனாரிடமிருந்து தாராளமாகப் பணம் பெற்று வந்ததால் குடும்பம் வசதியாக நடந்து வந்தது.

* * *

“தங்கப்பன் கோர்ட்டிலே வாய் திறப்பதே இல்லை தெரியுமா. வக்கீல் வேலைக்கே அவன் இலாயக்கில்லை. எனக்கு அப்போதே தெரியும். நான் அப்போதே சொன்னேன். தங்கப்பன் திறமைசாலி அல்ல என்பதாக, கவனமிருக்கிறதா?” என்று கேட்டார், குத்தாலலிங்கம்.

சாத்தப்பன் மூலமாகக் கல்லூரி காண்ட்ராக்டை முடித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் சாத்தப்பனிடம் பழகி வந்தபோது குத்தாலம், சாத்தப்பன் திறமைசாலி, தங்கப்பன் ஒரு காரியத்திலும் திறமை பெறமாட்டான் என்று கூறியது உண்மை... மாரி கோவில் பூசாரிக்கு அது தங்கப்பன் திறமைசாலியாக மாட்டான் என்பதை” என்று கூறி மற்றவர்களின் பாராட்டுதலை வாங்கித் தந்தான் குத்தாலத்துக்கு. மாரி கோவில் பூசாரியின் அதிகாரத்தைக் குறைத்துவிட வேண்டுமென்று எவனெவனோ எழுதிப் போட்ட ‘மொட்டை’ பெட்டிஷனை ஒன்றுமில்லாமல் செய்வதாக வாக்களித்திருக்கிறார் குத்தாலம்! பூசாரி குத்தாலத்தைப் பூசை செய்துதானே ஆக வேண்டும், செய்தான்.

* * *

அந்த வருஷம் வடிவுக்கு நல்லபடி திருமணமாயிற்று. தாழைப்பட்டியார் ஏற்பாடுதான்; மாப்பிள்ளை சப்-இன்ஸ் பெக்டர்; சென்னை. வழக்கப்படி கண்ணைக் கசக்கியாயிற்று வாரம் தவறாமல் கடிதம் போடு என்று புத்தி சொல்லியாயிற்று. என் கண் போல மாப்பிள்ளே! என்று கொஞ்சியாயிற்று. வடிவு சென்னை சென்றாகிவிட்டது. அந்தத் திருமணத்திற்கும் சாத்தப்பன் வரவில்லை; இருக்கும் இடம் இன்னது என்றுகூட எவருக்கும் தெரியவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள், வழக்கப்படி மாநாடு குளக்கரையில், தொடர்ந்து மூன்று காண்ட்ராக்டுகளில் நஷ்டம் குத்தாலத்துக்கு; சின்னப்பன் யந்திரச் சூளை அமைத்து வளர்ந்துவிட்டிருந்தான். அவனுக்கே தலைமைப்பதவி. மரக்கடை மகமது ஆள் பார்த்துக் கொண்டிருந்தார் முதல் போட்டு வியாபாரத்தைப் பெரிதாக்க. மாரிகோவில் பூசாரி, கோவில்களிலே ஆடு வெட்டக்கூடாது, கோழி அறுக்கக்கூடாது என்று பிரசாரம் செய்தவர்களின் கூட்டத்தில் ஆட்களை ஏவிக் கலகம் செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்குத் தொல்லையில் சிக்கிச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

புத்தம் புதிய படகு மோட்டார், ஊருக்குள்ளே செல்லக் கண்டு, புதுத்தகவல் ஏதோ கிடைக்க இருக்கிறது என்ற ஆர்வத்துடன், மகாநாட்டை அவசர அவசரமாகக் கலைத்து விட்டு குத்தாலலிங்கம் ஊருக்குள் சென்றார்.

* * *

சாத்தப்பன் ஊரைவிட்டுச் சென்றுவிட்ட நாள் முதலாகவே காவேரி அம்மாளின் மனம் நொந்துவிட்டது. தங்கப்பன் தாழைப்பட்டியாரின் மருமகனான போதும் வழக்கறிஞரான போதும், மகள் வடிவுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தபோதும், நொந்துகிடந்த மனத்துக்குச் சிறிது ஆறுதல் கிடைத்தது என்ற போதிலும் சாத்தப்பனைப் பற்றிய நினைவு அவர்கள் மனத்தைவிட்டு அகல மறுத்தது. தாய் உள்ளத்தின் தனித்தன்மைக்கு நிகராக வேறு எதுவும் இருக்க முடியாதே.

குடும்பத்தை மறந்து, பெற்ற தாயை மறந்து, எவளுடனோ சென்றுவிடத் துணிந்தவன் முகத்தைக்கூட நான் பார்க்க மாட்டேன் என்று பல முறை குமுறினார் காவேரி அம்மாள். ஆனால் அவர்களுக்கு மூண்ட கோபத்தைவிட அவன் என்ன ஆனான், எங்கு சென்றானோ, என்னென்ன இன்னலுக்கு ஆளானானோ என்ற வேதனைதான் அதிகமாக வளரலாயிற்று.

பெற்ற தாயையும் மறந்துவிடத் துணிந்தானே என்ற எண்ணியபோது மூண்ட கோபத்தைக்கூடத் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் பெற்ற தாயை மறந்து விட்டாலும் ஊரைவிட்டே போய்விட வேண்டும் என்ற அளவுக்கு அவன் மனத்திலே எதனாலே வெறுப்பு ஏற்பட்டது என்பதை எண்ணிடும் போது பீறிட்டுக்கொண்டு கிளம்பிய வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

காவேரிக்கு என்ன! மணிமணியாக இரண்டு பிள்ளைகள்! ஒருவனை வக்கீல் வேலைக்கும், மற்றொருவனை டாக்டர் வேலைக்கும் படிக்க வைக்க ஏற்பாடாகிறது. நாட்டாண்மைக்காரர் இருந்தபோது இருந்ததைக் காட்டிலும் செல்வாக்கு இந்தக் குடும்பத்துக்கு வளரும் என்று நல்லவர்கள் பேசியதைக் காதாரக் கேட்டுக் கேட்டுப் பூரித்திருந்தாள். இடி விழுவது போன்ற செய்தி அல்லவா கிளம்பித் தாக்கிற்று சாத்தப்பன் எங்கோ சென்றுவிட்டான் என்று.

தம்பி! சாத்தப்பன் இதுபோல ஏதாவது விபரீதமாகச் செய்வான் என்று உனக்கு ஏதாவது அறிகுறி தெரிந்ததா என்று கேட்டதற்குத் தங்கப்பன் சரியான பதிலேதும் கூறவில்லை. பாவம்! அண்ணன் இப்படிச் செய்துவிட்டானே என்ற வேதனையில் அவனால் எதுவும் பேசமுடியவில்லை என்று எண்ணம்கொண்ட காவேரி தன் வேதனையை அடக்கிக் கொண்டதுடன், தங்கப்பனுக்கு ஆறுதல் கூறும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தது. எதையும் தாங்கிக் கொள்ளத்தானே பெண் ஜென்மம் என்று காவேரி அம்மாள் வீட்டு வேலை செய்பவனிடம் கூறும்போது கண்களில் நீர் பொலபொலவென உதிர்ந்தது.

உன் பேரிலே உயிர் தங்கம், சாத்தப்பனுக்கு! ஒரு வேளை நீ சரியாகச் சாப்பிடாவிட்டால் உடம்புக்கு என்ன? என்ன? என்று கேட்டுக் கேட்டுத் துடிதுடிப்பான். உன்னை விட்டுப் பிரிய எப்படித்தான் மனம் வந்ததோ, தெரியவில்லையே என்று காவேரி அம்மாள் கூறி உருகுவார்கள். அண்ணன் போக்கே ஒரு தனி தினுசு. தெரிந்ததுதானே! என்று தங்கப்பன் சொன்னபோது காவேரி அம்மாள், இதென்ன கூடப் பிறந்தவன் என்ற பாசம் துளியும் இல்லாமல் பேசுகிறானே என்று வருத்தப்பட்டார்கள். ஆனால் மறுகணம், நம்முடைய வேதனையைக் குறைக்கத்தான் தங்கப்பன் இதுபோலப் பேசுகிறான் என்று கருதி ஆறுதலடைந்தார்கள்.

காதல் என்பது பற்றி கவிகள் வருணனை தரும்போது வசீகரமாகத்தான் இருக்கிறது; ஆனால் அந்தப் பாழாய்ப் போன காதல் ஒரு குடும்பத்தை என்ன பாடுபடுத்திவிட்டது பார்த்தாயா! குடும்ப பாரத்தையே தாங்கக் கூடியவனாகத்தான் இருந்தான் சாத்தப்பன். ஆனால் ஒரு மைவிழியாளின் மையலில் சிக்கியதும், பெற்ற தாயையும் துடிதுடிக்கச் செய்துவிடத் துணிந்துவிட்டான். இதைப் பார்த்த பிறகாவது காதல் கீதல் என்றெல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா? என்று காதற் கலியாணம் செய்து கொள்ள உறுதி தெரிவிக்கும் வாலிபர்களை மடக்கி அடக்க முனைந்தனர் பெற்றோர்.

ஒரு வார்த்தை என்னிடம் அவன் சொன்னதில்லையே. தனக்கு ஒரு பெண்ணிடம் விருப்பம் இருப்பதாக. அவள் எந்த ஜாதியாக இருந்தாலும், என்மகனுடைய மனத்துக்குப் பிடித்தவள் என்றாகிவிட்டால், நானா குறுக்கே நிற்பேன்? எனக்கு ஜாதிகள் வேண்டுமா வேண்டாமா, நியாயமா அல்லவா? காலத்திற்கு ஏற்றதா இல்லையா என்பது பற்றி ஏதும் தெரியாது. ஆனால் மகன் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால் தட்டாமல் தயங்காமல் பதில் சொல்லுவேனே, எனக்கு என் மகன்தான் வேண்டும் என்று என்னிடம் துளிகூட தன் எண்ணம் பற்றிச் சொல்லவில்லையே ஏன்...?

தங்கப்பா! ஏன் உன் அண்ணன் அந்தப் பெண்ணோடு ஊரைவிட்டுப் போய்விட்டான் தெரியுமா? குடும்பம் கெடக்கூடாது; நாமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும என்பதற்காகத்தான். ஏன் அவ்விதம் சொல்லுகிறேன் என்று கேட்பாய். என் மகனுடைய மனம் எனக்குத் தெரியும். அவன் எப்படியோ ஒருத்தியிடம் பாசம் கொண்டு விட்டான். என்ன குலமோ என்ன நிலையோ... அவளை என் மருமகளாக்கிக் கொள்ள என் மனம் இடம் தராது என்று எண்ணித் திகில் அடைந்திருக்க வேண்டும், முதலில், பிறகு என்னைச் சம்மதிக்கச் செய்தாலும், ‘தகாத’ திருமணம் செய்து கொண்டவன் குடும்பம் என்பதால், உனக்குத் தக்க இடத்தில் பெண் கிடைக்காது என்று எண்ணி இருக்கிறான்; வடிவுக்கு ஏற்ற மணவாளன் கிடைக்கா விட்டாலும் என்ன செய்வது என்று எண்ணி இருக்கிறான். நம்மாலே குடும்பத்திற்கு இழிவும் இடரும் வரவிடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறான்... அதனால்தான், என்னைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, அம்மா! அம்மா! அம்மா! என்று பாசம் பொழிந்து கொண்டிருந்த என் மகன், என்னையே, மறந்து விடத் துணிந்தான்... நீ வாழ, வடிவு வாழ, குடும்பம் வாழ, எப்போதும் தியாக உள்ளம் அவனுக்கு... தன்னைப் பற்றிய நினைப்பைவிட மற்றவர்களின் நலனைப் பற்றிய நினைப்பே அதிகம் அவனுக்கு என்றெல்லாம் காவேரி அம்மாள் கசிந்துருகிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தருமாம்பாள் குறுக்கிட்டு “அத்தே! அவர் பரீட்சை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கும்போது, மனத்தைக் குழப்பிவிட்டு விடாதீர்கள்” என்று சொன்னாள் சாதாரணமான முறையில்தான். ஆனால் காவேரி அம்மாளின் நெஞ்சிலே ஒரு சம்மட்டி அடி விழுந்தது போலிருந்தது. எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவன் எங்கோ கண்காணா இடம் சென்று விட்டான்; மற்றவனை இவள் தன் உடைமை ஆக்கிக் கொண்டு விட்டாள்; இனி எனக்கென்று யார்... இரண்டு பிள்ளைகளுமே எனக்காக இல்லையா... பெற்று வளர்த்து மற்றவர்களிடமே ஒப்படைத்துவிடத்தானா பிள்ளைகள்...! என்றெல்லாம் எண்ணி வேதனை அதிகமாகி படுத்தப்படுக்கையாகி விட்டிருந்தார்கள். டாக்டர்கள் கவலைக்கிடமான நிலைமை என்று தெரிவித்தது கேட்டு, திருச்சியிலிருந்து மனைவியுடன் தங்கப்பனும் சென்னையிலிருந்து வடிவும் வந்திருந்தார்கள். பயந்ததுபோல ஏதும் நேரிட்டுவிடவில்லை; உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர் உறுதி கூறிவிட்டார். மகிழ்ச்சி துள்ளிட வேண்டிய அந்தச் செய்தியைக் கேட்டு, தர்மாம்பாள் டாக்டரிடம் சீறி விழுந்தாள். விவரம் தெரியாதவர்கள் வீண் பயம் கொள்ளுவார்கள். பதறுவார்கள்; “டாக்டர்! நீங்களுமா ஓர் ஆபத்தும் இல்லாதபோது அபாயச் சங்கு ஊதி, அவருடைய வேலையைக் கெடுப்பது, எவ்வளவு முக்கியமான பெரிய கேசை விட்டுவிட்டு வந்திருக்கிறார் தெரியுமா?” என்று கடுகடுப்புடன் கேட்டாள். தருமு பேசியதிலே சிந்திச்சிதறியது காதிலே விழுந்தது காவேரி அம்மாளுக்கு. வேதனை வெடித்துக்கொண்டு வந்தது. சாத்தப்பனை நான் பார்த்தாக வேண்டும்! உடனே வரச் சொல்லுங்க டாக்டர்... எங்கே இருந்தாலும் வரச் சொல்லுங்க... பேப்பர்லே போட்டா வருவானாம்... சொன்னார்கள் டாக்டர்! உங்களைக் கை எடுத்துக் கும்பிடுகிறேன். என் மகனைக் காட்டுங்கள் டாக்டர்... ஒரே ஒருமுறை... கடைசீ முறை... என்று கேட்டுக்கொண்டபோது டாக்டரின் கண்களோ கலங்கிவிட்டன. பத்திரிகைகளில் செய்தி விளம்பரமாக வெளியிட ஏற்பாடு செய்தார் டாக்டர். அந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டுத்தான், பதறிக் கொண்டு சாத்தப்பன் வந்திருக்கிறானோ அவன் மோட்டார்தானோ அது. மோட்டாரில் வர வேண்டிய அளவு அவசரமான, ஆபத்தான நிலை வேறு யாருக்கும் இல்லையே, காவேரி அம்மாளின் நிலைதானே மோசமாக விட்டிருக்கிறது. ஆகவே படகு மோட்டாரில் வந்திருப்பது சாத்தப்பனாகத்தான் இருக்கும் பூசாரி சொன்னபோது, இருக்கலாம் என்று ஆமோதித்தார் குத்தாலம்!; எனக்குத் தெரியும் மறுபடியும் சாத்தப்பன் இந்த ஊருக்கு வருவான் என்பது. நான் அப்போதே சொன்னேனே மரக்கடை மகமதுவிடம் கேட்டுப் பாருங்கள்... எனக்கு அப்போதே தெரியும். சாத்தப்பன் பலே ஆள் என்பது- என்று சூளை சின்னப்பன் கூறிக்கொண்டே மற்றவர்களை அழைத்துக் கொண்டு நாட்டாண்மைக்காரர் வீடு நோக்கி வேகமாக நடந்தான்.

மகனைக் கண்ட மகிழ்ச்சியில் காவேரி அம்மாளுக்கு ஒரு புதிய துடிதுடிப்பு ஏற்பட்டது. அந்தத் துடிதுடிப்பே அவர்களின் உயிரையும் குடித்துவிட்டது. கால்களைக் கண்களில் ஒற்றிக் கொண்டபடி கதறிய சாத்தப்பனைக் கண்டு உருகாதவர்கள் இல்லை.

அப்போதே சொன்னேன் ( 2)

தருமாம்பாள் தன் கணவனிடம் “நீங்களும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு கதறுங்கள். காரியம் தன்னாலே ஆகிவிடும்” என்று சொன்னது யார் காதிலும் விழவில்லை.

தாழைப்பட்டியாருக்கு ஆள் அனுப்பினார்கள்! அவர் வந்துதானே சகல ஏற்பாடுகளும் ஆகவேண்டும்.

காவேரி அம்மாள் இறந்துவிட்டார்களே தவிர, அவர்கள் முகத்திலே பதிந்திருந்த பொலிவு, சாவதற்கு முன்பு காணாமல் போயிருந்த தன் மூத்தமகன் வந்துவிட்டதிலே அவர்களுக்குத் தனியானதோர் மகிழ்ச்சி ஏற்பட்டது என்பதை எடுத்துக் காட்டிற்று.

பக்கத்திலிருந்தவன் பராமரித்துக் கொண்டிருந்தவன். குடும்பத்தின் பெயரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தவன் தங்கப்பன்; ஊர் தூற்றும், உற்றார் உறவினர் கேவலமாகப் பேச, எவளுடனோ ஓடிவிட்டவன் இந்தச் சாத்தப்பன் தாயை மறந்து. குடும்பத்தை மறந்து; ஆனால் விந்தையைப் பாருங்களேன், காவேரி அம்மாளின் மனம் அவன் மீதே பதிந்து கிடந்திருக்கிறது. இதைத் தானய்யா, தாய்ப்பாசம் என்பது” என்றார் குத்தாலலிங்கம்.

மகன் என்ன ஆனானோ ஏது ஆனானோ என்று அந்த அம்மாள் கவலைப்பட்டிருப்பார்கள்; மகன் நல்லபடி இருக்கிறான் என்பதைக் கண்டதும் கவலை பறந்தே போய்விட்டது; ஒரு திருப்தி ஏற்பட்டிருக்கிறது. கண்ணை மூடுகிற நேரத்தில், கவலையில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றான் பூசாரி.

படகு மோட்டாரிலே மகன் வந்திருக்கான் என்பது காவேரி அம்மாளுக்குத் தெரியுமோ, என்னமோ? என்று கூறிக்கொண்டி ருந்தார்; சின்னப்பன். அதுவரையில் மோட்டார் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்த முகமது சாத்தப்பன் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்ததும் பதறிப்போய் ஓங்கோல் நகரத்திலே இருந்து மோட்டாரிலே மானாகப் பறந்து வந்திருக்கிறார்... என்று சொன்னதிலேயே, மற்றவர்கள், சாத்தப்பன் பெரிய புள்ளியாகி விட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, புதிய பாசத்துடன் சாத்தப்பனைப் பார்க்கத் தொடங்கினர்.

“குடும்பத்துக்குத் தலைப்பிள்ளையாச்சே! நீதானேப்பா மற்றவர்களுக்குத் தைரியம் சொல்லணும் தம்பியைப்பாரு! திகைத்துக் கிடக்கிறாரு...” என்று பட்டம் சூட்டிப் பேசினார் குத்தாலம்.

“நூறு வயதுக்கு மேலே ஆகி இருக்கட்டும், தாயாரைப் பறிகொடுக்க நேரிட்டால் தாங்கிக் கொள்ள முடியுமா மகனாலே” என்று உருக்கம் கலந்து பேசினார் சின்னப்பன்.

“எல்லாவற்றையும் துறந்துவிட்ட பட்டிணத்தடிகளே அல்லவா, தன்னோட தாயார் காலமானதைக் கேட்டதும் ஓடோடி வந்து பதறினார் கதறினார்...” என்று பூசாரி சொன்னார்.

* * *

“மணிக்கு 60, 70ன்னு மோட்டாரு பறந்து வந்திருக்குது” என்று விவரம் கூறினார் மகமது.

“கார் பெரிசு, புதுசு...” என்று சின்னப்பன் கூறியது கேட்டு, மகமது, தன்னிடம் விவரம் கேட்காமல், இவர்கள் எல்லாம் தங்களுக்குத் தெரிந்தது போலப் பேசுகிறார்களே என்ற எரிச்சலைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு “கார் பெரிசு புதுசு என்பதுதான் தெரியும் உங்களுக்கு. டிரைவர் யார் தெரியுமா... மிலிடரியிலே வேலை பார்த்த ஆசாமி. வேலைக்கு வந்து வருஷம் நாலு ஆகுதாம். மாதச் சம்பளம் இரண்டு நூறு...” என்ற தகவலைத் தந்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்.

“ஒங்கோல் ஊரிலே என்ன தொழிலாம்...”

“பெரிய முதலாளியாம் அங்கே இவரு... ஈயச் சுரங்கம் இருக்கிறதாம்... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யற வியாபாரமாம்...”

“ஈயச் சுரங்கம்னா ஆசாமி பெரிய புள்ளின்னு சொல்லு...”

“முகத்தைப் பார்த்தாலே தெரியலியா லட்சுமி கடாட்சம் பரிபூரணமாக இருக்கற விஷயம்...”

“வெளிநாடுகள் போய் வர்ற வேலை நிறையவாம். கப்பல் கப்பலா ஈயம் அனுப்புவாராம்... வருஷத்துக்கு இரண்டு தடவை மூணு தடவை, வெளிநாடு போய் வருவாராம்.”

* * *

தாழைப்பட்டியார் வந்துவிட்டதால் ஒரு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. மற்றத் தகவல்களைப் பற்றிப் பேச முடியவில்லை.

“உன் உடம்பு இருக்கற நிலையிலே நீ அதிகமாகக் கதறி தொந்தரவைக் கொண்டு வந்து விடாதேம்மா. உங்க மாமியாரு பழுத்த பழமான பிறகுதான் காலமாயிட்டாங்க. ஊரிலே இதைத்தான் பெரிய சாவுன்னு சொல்லுவாங்க... அழாதேம்மா, தருமு” என்று தாழைப்பட்டியார் தேறுதல் சொல்ல ஆரம்பித்த கண்டு, தர்மு கண்களைக் கசக்கிக் கொண்டாள். எப்படியோ தாழைப்பட்டியாருடைய பேச்சு காதிலே விழுந்துவிட்டது சாத்தப்பனுக்கு கோபமும் வெறுப்பும் கலந்த குரலில். “அம்மாவுக்கு வயசு உங்களைவிட ஆறு குறைவுதானுங்க” என்று கூறிவிட்டு, பதில் ஏதும் எதிர்பாராதவன்போல வேறு பக்கமாகச் சென்றுவிட்டான். தாழைப்பட்டியாருடைய கோபம், அவருடைய மோட்டார் சாத்தப்பன் மோட்டாருக்கருகே எப்படி அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்ததோ, அதுபோல தன்னாலே சுருண்டு கொண்டது.

* * *

‘பெரிய சாவு’ பற்றிய பேச்சு அடங்க நாலைந்து நாட்கள் பிடித்தன. இதற்குள், வடிவும் அவள் புருஷனும் வந்து சேர்ந்தார்கள். ஊரார் கூட்டம் குறைந்து வீட்டிலுள்ளவர்கள் மட்டும் ‘நிலைமைகளை’ப் பற்றிப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்குள் சாத்தப்பன் ‘சீமான்’ நிலையில் இருக்கிறான் என்ற உணர்வும், அதற்குத் தக்கபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற போக்கும் வடிவமெடுத்துவிட்டது.

“தம்பியோட நினைவுதான் அம்மாவுக்கு... இல்லையானா இன்னும் பத்து வருஷத்துக்காவது இருப்பாங்க.”

தாழைப்பட்டியார் அவ்வளவு பரிவுடன் பேசியது பலருக்கு விந்தையாக இருந்தது. சாத்தப்பன் பார்வையிலேயே இருந்த குறும்புத்தனத்தின் பொருள் மற்றவர்களுக்கு விளங்க வில்லை. தருமாம்பாளைத் தனக்குத் தருகிற எண்ணத்தோடு இருந்தபோது இதே பரிவு கனிவு தாழைப்பட்டியாருக்கு இருந்தது. அந்தப் பழைய நாட்களை இருவரும் நினைவு படுத்திக் கொண்டனர். இருவரைக் காட்டிலும் அந்த நாட்களை அதிக அளவு நினைவுபடுத்திக் கொண்டு தத்தளித்தான் தங்கப்பன்.

தாழைப்பட்டியார் மிட்டாதாரர். ஆனால் செல்வம் புரளும் நிலையில் இல்லை. சாத்தப்பன் தனக்கு இதைவிட அதிகச் செல்வம் புரளும் இடம் வேண்டும் என்ற பேராசை காரணமாகவே, ஓடிவிட்டான் என்றோர் எண்ணம் மிட்டாதாருக்கு.

‘ரசவாதி’ ரங்கலால், பித்தளையைப் பொன்னாக்குபவன், ஆகவே அவன் தங்கையை மணம் செய்து கொண்டால் அளவற்ற பணம் கிடைக்கும் என்ற எண்ணத்தினால்தான் சாத்தப்பன் தருமாம்பாளை உதறிவிட்டான் என்று நினைத்துக் கொண்டார். இல்லையானால், தாராளமாகப் பழகிக் கொண்டு வந்தவன், ஏன் திடீரென்று மாறிவிடவேண்டும்.

எங்கே, தம்பி நாலைந்து நாளாகத் தென்படக் காணோமே.

ரங்கலால் ஆராய்ச்சிக் கூடத்திலேயே இருந்து விட்டேன்.

ஆராய்ச்சின்னு நீதான் தம்பி சொல்றே. ஊரிலே அந்த இடத்தைப்பத்தி தாழ்வாப் பேசறாங்க தெரியுமோ. அந்த ஆள் இருக்கறானே, என்னமோ அவனை மோசக்காரன்னு சொல்றாங்க.

தெரியாதவங்க எதையும் பேசுவாங்க. நாலு குருடர் ஒரு யானையைப் பத்தி என்னென்ன சொன்னாங்கன்னு கதை இருக்குதே, அதுபோல,

தம்பி, உன்னோட சினேகிதனை தாழ்வாகப் பேசுவது உனக்குக் கோபமாகத்தான் இருக்கும். தருமுவுக்குத் துளி கூட பிடிக்கவில்லை, நீ அந்த இடத்திலே பழகறது.

தருமு மட்டுமில்லே ஊரேன்னு சொல்லலாம்...

ஊர் எதையும் பேசும். சும்மாவா பெரியவங்க சொன்னாங்க, உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாதென்று...

இவ்விதமான ‘பேச்சு’தான் முறிவுக்குத் துவக்கமாக இருந்தது. பிறகு நிலைமை வேகமாக வளர்ந்தது.

நம்ப அந்தஸ்துக்குத் தகாது தம்பீ...

தலை எறக்கமா இருக்குதப்பா...

இந்த விஷயத்திலே நான் சற்று கண்டிப்பாகத்தான் இருப்பேன்... ஆமாம்!

இந்த இடத்துச் சம்பந்தம் வேண்டுமானா, உன் போக்கை மாற்றிக் கொண்டாகணும்.

உன்னைக் கண்டாலே தருமு வெறுப்படையுது... நானுந்தான்... நீ இங்கே அதிகமாகப் பழகாமல் இருக்கிறது நல்லது...

உள்ளே யாரும் இல்லை சாத்தப்பா! இப்படித் திண்ணையிலே உட்காரு... பேச்சுக் குரல் கேட்குதேன்னு யோசிக்கிறாயா... உன் தம்பியோட குரல்தான்...

எதுவோ பாட விஷயமாகத் தருமுவோடப் பேசிக் கொண்டிருக்குது தங்கம்...

தருமுவைப் பத்தி நினைப்பை விட்டுவிடு சாத்தப்பா. நான் வேறே ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். தருமுவோட சம்மதத் தோடத்தான்... உன் தம்பி தங்கப்பனுக்கே கொடுத்து விட முடிவு செய்திருக்கிறேன்...

இப்படிப் படிப்படியாக, ஆனால் வேகத்துடன், நிலைமை வளர்ந்தது. சாத்தப்பன் வருத்தப்பட்டதாகவோ, கோபித்துக் கொண்டதாகவோ தெரியவில்லை. ரங்கலாலிடம் பழகுவது அதிகமாயிற்றே தவிர குறையவில்லை. இந்த நிலையில்தான் சாத்தப்பன், எவரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டே ஓடி விட்டது!

சாத்தப்பனும் தாழம்பட்டியாரும் இவை பற்றிய நினைவிலே நெடுநேரம் ஈடுபட்டிருந்தனர்.

“தம்பீ! உன் கலியாணத்துக்குக் கூடவா ஒரு கடுதாசி போடக்கூடாது” என்று கேட்டார் தாழப்பட்டியார்.

“போடாமல் இருப்பேனா... கலியாணம் ஆகிறபோது?” என்று சாத்தப்பன் சொன்னது தாழப்பட்டியாரை ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது.

“கலியாணம் ஆகவில்லையா!... அப்படியா... அந்தப் பெண்...?”

“ரங்கலாலோட உடன்பிறந்தாளா...? அந்தப் பெண் இறந்து போய்விட்டாள்...”

எவளைக் காதலித்தானோ, எவளுக்காக ஊரையும் உறவையும் விட்டுவிட்டு ஓடினானோ, அவள் இறந்து போய் விட்டாள். மனம் உடைந்து போய், திருமணமே வேண்டாமென்று இருந்து வருகிறான் போல இருக்கிறது என்று எண்ணிக்கொண்ட தாழம்பட்டியாருக்கு, தனக்கு மற்றொரு பெண் இல்லையே என்ற வருத்தமே கிளம்பி வாட்டிற்று. ஈயச் சுரங்கம்! இலட்சக்கணக்கில் வருமானம்! படகு மோட்டார்! எவள் கொடுத்து வைத்திருக்கிறாளோ, என்று எண்ணிக்கொண்டார்; வேதனையும் அடைந்தார்.

“தம்பி! சப் ஜட்ஜு வேலை உனக்குப் பிடிக்குமா...” என்று ஒருநாள் சாத்தப்பன் கேட்டபோது, தங்கப்பனுக்குத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தருமுவுக்கு உள்ளத்தில் ஆவல் குடைந்திடலாயிற்று. தாழம்பட்டியாருக்கோ’ மகிழ்ச்சி தாங்க முடியாத அளவு பொங்கிற்று. தலை அசைத்தான் தங்கப்பன். ஏற்பாடு செய்கிறேன் என்று சுருக்கமாகப் பதிலளித்தான் சாத்தப்பன். ஒரு வாரம் முடிவதற்குள், தங்கப்பன் சப் ஜட்ஜு வேலையில் அமர்ந்தான்.

சாத்தப்பனுடைய செல்வாக்குப் பற்றிய பேச்சு ஊரையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.

குத்தாலம் சொன்னார் “எனக்கு அப்போதே தெரியும். அவனோட ஜாதகம் அப்படிப்பட்டது என்பது அவன் கல்லூரியிலே படிக்கிறபோதே, நான் அவனுடைய சிபாரிசு” வேண்டும் என்று கேட்டேன். நமக்குக் “கொடுப்பினை இல்லாததாலே சாத்தப்பன் உதவி செய்யவில்லை. அப்போதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, எனக்குத்தான் கல்லூரி புது மண்டபக் காண்ட்ராக்டு கிடைத்திருக்கும்” என்று கூறினார், ஏக்கத்துடன்.

“பாருங்களேன், அவரோட செல்வாக்கை. தம்பி! உனக்கு ஜட்ஜு வேலை வேணுமான்னு கேட்டாராம். தங்கப்பன் தலை அசைத்தானாம்; பத்தே நாளிலே ஜட்ஜு வேலை வீடு தேடி வந்திருக்குது. அப்படி அல்லவா இருக்கவேணும்” என்றான் சின்னப்பன்.

“அப்படிப்பட்ட ஓர் அண்ணன் இருக்கிறது தங்கப்பனுக்கு ஒரு பெருமையில்லையா” என்று சொல்லிவிட்டு, தன் அண்ணன் ஆறாயிரம் கடன்பட்டு அதைக் கொடுக்கமாட்டாமல் மஞ்சள் கடிதம் நீட்டியதை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டார் மகமது.

அந்த வட்டத்து வணிகர் சங்கம், ஒரு வரவேற்பு வைபவம் ஏற்பாடு செய்தது, சாத்தப்பனுக்கு.

சப்ஃ ஜட்ஜ் தங்கப்பனுடைய அண்ணன், என்ற காரணம் காட்டியதும், அமைச்சர் ஒருவரே, வைபவத்துக்குத் தலைமை வகிக்கச் சம்மதமளித்தார். அவருக்கு அடுத்த முறை அத்தொகுதியில் நிற்கவேண்டும் என்ற விருப்பம்; விழா மூலம் அந்த வட்டத்து வணிகர்களின் நட்பு கிடைக்கும் என்ற எண்ணம். கணக்கு சரியாகவே போட்டிருந்தார் அமைச்சர். பாராட்டும் பிரமாதமாக அமைந்தது. பிரத்தியேக ‘நிருபர்’, புகைப்படக்காரர் புடைசூழ அமைச்சர் வந்திருந்தார்.

‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்று நமது முன்னோர்கள் சொன்ன பொன்மொழியின்படி திருவாளர் சாத்தப்பிள்ளைவாள், செல்வம் தேடிச் செல்வாக்கு தேடி நமக் கெல்லாம் பெருமை தேடி கொடுத்திருக்கிறார். சில வேளைகளில் வியாபாரிகளைக் கண்டிக்கிறோம். ஆனால் இப்படிப்பட்ட நாணயமான, நேர்மையான வியாபாரிகளை அல்ல. இவர்கள் நமது நாட்டுக்கே தூண் போன்றவர்கள். எங்கள் அரசாங்கம் இத்தகைய வியாபாரிகளுக்கு எல்லாவிதமான உதவியும் செய்யச் சித்தமாக இருக்கிறது.

அமைச்சரின் ‘பேருரை’ கேட்டு, வைபவப் பொறுப்பாளர் களான குத்தாலம் குழுவினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

சாத்தப்பன், பேசும்போது அடக்கம், தெளிவு, அனுபவம் எல்லாம் ததும்பியதாகக் கூறிக் களிப்படைந்தனர்.

* * *

விழா முடிந்ததும் பயணிகள் விடுதியில் சென்று தங்கி யிருந்த அமைச்சரிடம் போலீஸ் மேலதிகாரி ஒருவர் சந்தித்துச் சில விநாடிகள் பேசினார். மறுநாள் காலையில் புறப்பட இருந்த அமைச்சர் அவசர அவசரமாக அப்போதே புறப்பட்டுவிட்டார். வணிகர்கள் ஒருவரையும் கண்டு பேசாமல் அமைச்சர், சென்றதும், ஒரு ‘வேன்’ நிறையப் போலீசை அழைத்துக் கொண்டு, மேலதிகாரி, சாத்தப்பன் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று, அவனைக் கைது செய்தார்கள்.

ஊரே திடுக்கிட்டுப் போய் விட்டது. திகில் கப்பிக் கொண்டது. தாழம்பட்டியாருக்கு ஒன்றும் புரியவில்லை. விழா காண வந்திருந்த தங்கப்பன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான். தருமாம்பாள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சாத்தப்பன் துளியும் கலங்கவில்லை. கைகளைக் கூட நீட்டினான். விலங்கு போடுவதாக இருந்தால் போடுங்கள் என்று கூறியபடி, முடுக்காகப் பேசினால் தன் வேலை சுலபமாகி இருக்கும், இவன் அமைதியாகவும் மரியாதையாகவும் பேசுகிறானே இவனிடம் நாம் பக்குவம் தவறி நடந்து கொள்வது முறையாக இருக்காதே என்று எண்ணிச் சங்கடப் பட்ட போலீஸ் மேலதிகாரி “என் கடமையைச் செய்கிறேன். வருத்தமாகக் கூட இருக்கிறது.” என்று சமாதானம் கூறினார். அதனால் என்ன! கடமையைச் செய்யும் போது கலங்கக்கூடாது. அதனால் நமக்கே சங்கடம் தொல்லை, ஆபத்து வருவதானாலும் கலங்கக்கூடாது” என்று சாத்தப்பன் போலீஸ் அதிகாரியிடம் பேசிடக் கேட்டு, தாழம்பட்டியார் திகைத்துப் போனார்.

“ஜாமீனில் விடுவார்களல்லவா சார்! நான் ஜாமீன் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்.” என்று தாழம்பட்டியார் கூறியதற்குப் போலீஸ் அதிகாரி பதிலளிக்கவில்லை, சாத்தப்பன் தான் பதில் கூறினான்.

“இது கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாயிற்றே... ஜாமீனில்விட மாட்டார்கள்” என்பதாக, போலீஸ் அதிகாரி புன்னகை புரிந்தபடி “ஐயா சகல விவரமும் தெரிந்து வைத்திருக்கிறார்” என்று சிறிதளவு குறும்புடன் கூறினார்.

“பார்த்தாயா மகமது! எனக்கு அப்பவே சந்தேகம்! என்னமோ மோசடி நடந்திருக்குது; இல்லையானா இந்தப் பயலுக்கு ஏன் இவ்வளவு செல்வம் என்று. கொள்ளை அடிச்சிருக்கான் பய! யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க என்கிற தைரியத்திலே இங்கே வந்து வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறான்.

“மோட்டாரைப் பார்த்தாயா, எல்லாம் பெரிசு.”

“ஊரைக் கொள்ளை அடிச்சா உனக்கும் எனக்கும் கூடத்தான் கிடைக்கும் இதைவிடப் பெரிய மோட்டாரு... பாடுபட்டுத் தேடின பணமாக இருந்தாத்தானே கணக்குப் பார்ப்பானுங்க. இது எப்படியோ வந்தது தானே...”

“ஈயச் சுரங்கம்னு சொல்றபோதே எனக்குச் சந்தேகம்... ஈயத்திலேயா இவ்வளவு பணம் புரளும்னு...”

“கொள்ளை மட்டும் இல்லையாமே, கொலைக் குற்றமே இருக்குதாம், - ஆசாமி பேர்லே...”

“வெளிவேஷம் போட்டுக் கொண்டு நம்மைப் போல இருக்கிறவங்களை ஏமாற்றிவிடலாம்... சர்க்காரு சும்மாவிடும்மா... பார்த்தாயா, அவன் கழுத்திலே போட்ட மாலை கூட வாடலே, வதங்கலே, அதுக்குள்ளே கையிலே மாட்டி விட்டாங்க, காப்பு, இரும்புக் காப்பு...”

“உள்ளபடி நாணயமான தொழில் செய்யறவா, ஏன் இத்தனை வருஷம் தலைமறைவா இருக்கவேணும். சொல்லு.”

“எனக்கு அப்பவே சந்தேகம்.. நான் அப்பவே சொன்னேன் நம்ம பூசாரிகிட்டே, அய்யோவ்! இதிலே என்னமோ மர்மம் இருக்குதுன்னு...”

“சர்க்காரே! தன்னோட உள்ளங்கையிலே இருக்கிறதா காட்டிக்கிட்டானே பார்த்தாயா, இப்போ காட்டுடா கையைன்னு வந்துட்டாரு டி.எஸ்.பி.

“சப்-ஜட்ஜ் வேலை, தம்பிக்கு வாங்கிக் கொடுத்ததாகச் சொன்னாங்களே. அப்போதே எனக்குச் சந்தேகம். எப்படி இப்படிப்பட்ட செல்வாக்கு கிடைச்சிருக்கும்னு...”

“அதெல்லாம் செல்வாக்கும் இல்லே மண்ணும் இல்லை... பழமொழி இல்லே காக்கா உட்கார பனம் பழம் விழன்னு; அது போல... தங்கப்பன் என்ன தகுதியில்லாதவனா... சப்-ஜட்ஜு வேலை தன்னாலே வராதா அவனுக்கு. கோர்ட்டிலே கூட, அதிகமாக அலட்டிக் கொள்றதில்லே தங்கப்பன்... மத்த வக்கீல் களைப் போல... பல பேர் அதைப் பார்த்து அப்பவே சொல்லி இருக்கறாங்க தங்கப்பன் ஜட்ஜு வேலைக்குத் தகுதின்னு...”

“சப் ஜட்ஜு வேலை, தம்பிக்குக் கிடைக்கப் போகிற விஷயம் எப்படியோ தெரிந்துவிட்டிருக்கு பயலுக்கு. ‘இதுதான் சமயம்னு போடு போட்டிருக்கிறான், நான் வாங்கித் தர்ரேன் சப்-ஜட்ஜி வேலைன்னு...”

“அப்படித்தான் இருக்கவேணும். இப்படிப்பட்ட கொலைக்காரப்பயலா உன்னோட அண்ணன் என்று நாலு பேர் கேட்டா, சப் - ஜட்ஜி மனசு என்ன பாடுபடும். தலை இறக்கமாகத்தானே இருக்கும்.”

“சந்தேகமா அதுக்கு இவன் இப்பத்தானா தலை இறக்கமான காரியத்தைச் செய்யறான். அந்தக் காலத்திலேயே எவளையோ இழுத்துக்கிட்டு ஓடிட்டானே, அது என்ன காரியம். குடும்பத்துக்கு கெட்ட பெயர் தேடினவன் தானே...”

“பாவம் தங்கப்பன், படிச்சி பட்டம் பெற்று, ஒரு நாணயமான வக்கீலாகி குடும்ப கௌரவத்தைக் காப்பாத்தினான்... இப்ப இவன் வந்து சேர்ந்தான் அதைக் கெடுக்க.”

“வாயைத் திறக்கிறானா பார்த்திங்களா... இப்பவும் ஓர் அகம்பாவம்.”

“தலைக்கு மேலே போகுது, அது ஜான் போனா என்ன, முழம் போனா என்ன என்கிற போக்கு.”

“எல்லாப் போக்கும் பத்து நாளிலே தெரிந்துவிடும்...”

எல்லோருடனும் சேர்ந்து இதே முறையில் பேசினாலும், மகமது மோட்டார் டிரைவரைச் சந்தித்து தகவல்கள் ஏதாவது கிடைக்கிறதா என்பதிலே ஈடுபட்டார். விளக்கம் தருகிற விதமான தகவல் கிடைக்கவில்லையே தவிர, சாத்தப்பன் கைது ஆனது பற்றியோ என்ன நேரிடும் பற்றியோ டிரைவர் துளியும் கலக்கமோ கவலையோ கொண்டதாகத் தெரியவில்லை. வழக்கப்படி மோட்டாரைச் சுத்தப்படுத்துவதும், கதைப் புத்தகம் படிப்பதும் காப்பிக் கடைக்குப் போவதுமாக இருந்து வந்தான். தாராளமாகச் செலவும் செய்து கொண்டிருந்தான். இதைக் கண்ட மகமது மேலும் திகைப்படைந்து போனார்.

“ஏம்பா! டிரைவர், எஜமானரு போலீசிலே சிக்கிக் கொண்டாரே என்று பயப்படாதே. நாங்க எப்படியும் அவரை வெளியே கொண்டுவர ஏற்பாடு செய்வோம். சமயம் வரணுமேல்லோ...”

“இது சகஜமுங்க... ஐயாவுக்கு இப்படிப்பட்ட ஆபத்து அடிக்கடி மிரட்டும்; ஆனால் அவரு எல்லாவற்றையும் விரட்டி அடித்து விடுவாரு... வல்லமை சாலி...”

“பதறது எங்க மனசு... இப்படிப்பட்டவர் பேர்லே கொலை, கொள்ளை போன்ற அபாண்டம் வந்து விழறதைப் பார்த்து... இதுக்கு முன்னாடி எப்பாவாவது போலீசு பிடிச்ச துண்டா உன்னோட முதலாளியை...”

“பல மாதிரியான கேசு தொல்லை ஏற்படும். ஒரு தடவை இவருடைய தொழிலிலே பங்காளியை இவர் கொலை செய்ய முயற்சி செய்தார்னு கேசு போட்டாங்க. ஒரு ருஜுவும் கிடைக்கல்லே... விடுதலை கிடைச்சுது...”

இந்தத் தகவலை எடுத்துக் கொண்டு மகமது தன் நண்பர்களைத் தேடிக் கொண்டு சென்றான். அனால் சூளை சின்னப்பன், இதைவிட அதிசயமான தகவலைச் சேகரித்து வைத்திருந்து அதைக் கூறி மகமதை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டான்.

அப்போதே சொன்னேன் (3)

“முத்துமாலையாம்; பத்தாயிரம் ரூபா விலை இருக்குமாம், அதுதான் இவனைக் காட்டிக் கொடுத்து விட்டிருக்குது...”

“முத்துமாலையா... அது என்ன புதுத் தகவலு...”

“அய்யோவ்! நம்ம சூளையிலே வேலை பார்க்கறானே வெள்ளை... தெரியுமேல்லோ. அவனுடைய சம்சாரம் இருக்காளே பூங்காவனம் தெரியுமேல்லோ... அவ கொண்டு வந்த தகவல் நான் இப்ப சொன்னது...”

“பூங்காவனம் என்ன சொன்னா...”

“அவ போயிருக்காய்யா நாட்டாமை வீட்டுக்கு; ஒரு வேலையா. அப்ப, இவ வந்திருக்கிற விவரம் தெரியாமப் படிக்கு, தங்கப்பனும் தருமாம்பாளும் பேசிக் கொண்டது, காதிலே விழுந்திருக்குது. அந்த முத்துமாலையைத் தூக்கி வடிவுக்கு உங்க அண்ணன் கொடுக்கறபோதே எனக்குச் சந்தேகம்; திருட்டுச் சொத்தாக இருக்கும் என்கிற சந்தேகம்னு தருமாம்பா சொல்ல, அதைக் கேட்டு தங்கப்பன், வீணா இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் மனத்தைக் குழப்பாதே; ஏற்கெனவே என் மனசு நொந்து கிடக்குதுன்னு சொல்ல, ஏன்! படகு மோட்டார்லே வந்திருக்கிறானே நம்ம அண்ணன் என்ற பூரிப்போ! என்று இடிக்க! அவன் மேலும் கோபமடைந்து உனக்குச் சாத்தப்பனைப் புரிந்துகொள்கிற அளவு மூளை கிடையாதுன்னு பேச, எனக்கு மூளை இருக்கட்டும் இல்லாமல் போகட்டும் ஜட்ஜு வேலை பார்க்கறதுக்குத் தேவையான மூளை இருக்குதான்னு நீங்க முதலிலே தெரிந்துகொள்ளுங்க என்று ஏச, தங்கப்பன் அவளை அடிக்கக் கையை ஓங்க, பயந்து போய் தருமாம்பாள் கூச்சலிட, ஒரே ரகளையாகி இருக்குது. பூங்காவனம் இதைப் பார்த்து விட்டு வந்திருக்கிறா...”

மறுநாள் காலைப் பத்திரிகையை வைத்துக் கொண்டு குத்தாலம் குழுவினர் மிக ஆர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். முத்து மாலை பற்றிய முழு விபரமும் தரப்பட்டிருந்தது...

போலீஸ் அதிகாரியின் கடமை உணர்ச்சி

‘மைத்துனன்’ பிடிபட துணை நின்றார்

முத்துமாலை ‘மர்மம்’

என்ற கொட்டை எழுத்துத் தலைப்புகளுடன், சாத்தப்பன் சம்பந்தப்பட்ட விவரமான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

சாத்தப்பன், வடிவுக்குத் திருமணத்தின்போது வர முடியாமல் போய்விட்டதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, விலையுயர்ந்த ஒரு முத்துமாலையைப் பரிசாகக் கொடுத்திருக்கிறான்; அண்ணன் தந்த பரிசு என்று பூரிப்புடனும் பெருமையுடனும் அந்த முத்துமாலையை வடிவு தன் புருஷனிடம் காட்டியிருக்கிறாள்; முத்துமாலையைக் கண்டதும் களிப்படைந்து கணவன், மைத்துனன் சாத்தப்பனைப் புகழ்ந்து பேசுவான், காது குளிரக் கேட்கலாம் என்பது வடிவின் எண்ணம். வைரமாக இழைத்துத் தருகிற பொருள்தானே ஒரு பெண்ணுக்கு அதிக அளவு மகிழ்ச்சியையும் பெருமையையும் தரும். அதிலும் சப்-இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும் அவளுடைய கணவன் சபாபதி, ‘சம்பளம்’ போதும் என்ற போக்கினன். அதனால் ஊரிலே நல்ல பெயர் இருந்ததே தவிர, வடிவு மனம் மகிழும்படி ‘நகை நட்டு’ வாங்கித் தரக் கூடிய நிலை இல்லை. அதற்காகச் சபாபதி வருத்தப் பட்டுக் கொள்ளவும் இல்லை, பணம் பெருத்தவர்களிலே முக்கால் பகுதிக்கு மேல், பிடிபடாத குற்றவாளிகளே என்பது அவன் எண்ணம். அந்த எண்ணத்துடன்தான், அவன் சாத்தப்பனையும் பார்த்தான். அதிகமாகக் கூடப் பேசவில்லை. தனக்கு வேலை இருப்பதைக் கூறிவிட்டு சென்னை திரும்பிவிட்டான். சில நாட்களுக்குப் பிறகு தான் வடிவு வந்திருக்கிறாள் முத்துமாலையுடன்.

முத்துமாலையைக் கையிலே வாங்கிய சபாபதியின் கண் களிலே மகிழ்ச்சி பிறக்கவில்லை; குரலில் ஒரு குளுமை எழ

வில்லை; மாலையைக் கூர்ந்து கவனிப்பதும் எதையோ யோசிப்பதுமாகச் சில விநாடிகள் இருந்துவிட்டு,

“உன்னோட அண்ணன் கொடுத்ததா?” என்று கேட்டான்.

வேடிக்கை பேசுவதாக எண்ணிக் கொண்டு வடிவு “பின்னே! உங்க அண்ணன் வாங்கிக் கொடுத்தாரா?” என்று பதில் கூறினாள்.

கேலி நிரம்பிய முறையிலே சிரித்தபடி சபாபதி. “என் அண்ணன் எங்கே கொள்ளை அடித்தார். இதுபோல முத்து மாலையைப் பரிசு தர!” என்று கூறிவிட்டு, முத்துமாலையுடன் அவசரமாகத் தன் மேலதிகாரியிடம் சென்றார். கணவன் பேச்சின் பொருள் தெரிந்து கொள்ளாமல் வடிவு திகைத்துக் கிடந்தாள்.

மேலதிகாரியிடம் சபாபதி முத்துமாலையைக் கொடுத்து “எதிர்பாராத முறையில் கொடி கொண்டா கொள்ளை சம்பந்தமான துப்பு துலக்கக் கூடிய இந்த ‘முத்துமாலை’ என்னிடம் கிடைத்திருக்கிறது, நாலு வருஷங்களுக்கு முன்பு கொடி கொண்டா என்ற மலையூரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களிலே ஒன்று இந்த முத்து மாலை. முத்துமாலையின் ஒவ்வொன்றிலும், கொ, கொ, கொ. என்ற எழுத்துகள் செதுக்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. கொடி கொண்டா கொள்ளிச்சாமி என்பதைக் குறிப்பதே கொ.கொ. கொ. என்ற எழுத்துக்கள். இவை என் மனைவிக்குப் பரிசாகக் கொடுத்தது என் மைத்துனன். அவள் அண்ணன், பல வருடம் வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தவன் பெயர் சாத்தப்பன்; பெரிய செல்வனாகக் காணப்படுகிறான். அவனைக் கைது செய்தால், நாலு வருடங்களாகத் துலங்காமலிருக்கும் ‘மர்மம்’ விளங்கி விடும்” என்ற விவரம் கூறியிருக்கிறான். மேலதிகாரி, சபாபதியின் கடமை, நேர்மை ஆகியவற்றைப் பாராட்டிவிட்டு, சாத்தப்பனைக் கைது செய்திருக்கிறார். இந்த விவரம் அவ்வளவும் தரப்பட்டிருந்தது பத்திரிகையில். சபாபதியின் படம், மேலதிகாரியின் படம், முத்துமாலையின் படம், கொள்ளச்சாமியின் படம், கொடி கொண்டாமலையின் படம். மடத்தின் படம், சாத்தப்பன் படம் இவை பத்திரிகையிலே போடப்பட்டிருந்தன. இதழ் தந்த தகவலைப் படித்த ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

படித்தவன் - பணம் சேர்க்கும் வித்தையிலே வேறு கெட்டிக்காரனாக இருந்திருக்கிறான் - இருந்தும் திருட்டுச் சொத்து எப்படியும் பிடிபட்டுவிடும் என்று கூடவா தெரிந்து கொள்ளாமலிருப்பது.

எப்போதோ நடந்த கொள்ளைதானே - இன்னமுமா அது பற்றிய நினைப்பு இருந்து கொண்டிருக்கும் என்ற எண்ணமாக இருக்கும்.

சீமானாகி விட்டோம். இனி, எவன் நம் மீது சந்தேகப்படப் போகிறான் என்ற நினைப்பு.

தங்கை புருஷன் போலீஸ் அதிகாரி! திருட்டுச் சொத்து, அவனிடம் இருந்தால், யார் சந்தேகப்பட்டுப் பிடித்து விடப் போகிறார்கள் என்ற விதமான அசட்டுத் தைரியம்...”

ஊரார் இப்படிப் பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள்.

எல்லோரும் வழக்கு நடைபெறும் நாளை மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.

பாவம்! தங்கப்பன் முகத்திலே ஈயாடவில்லை. இருக்கு மல்லவா வேதனையும் வெட்கமும் என்று பலர் பேசி வந்தனர்.

தங்கப்பன் உள்ளபடி மிக வேதனையுடன் காணப்பட்ட டான்.

நீங்க ஏன் மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்வது! கூடப்பிறந்தவன் கூண்டிலே கிடக்கிறானே என்ற வருத்தமா! இப்படிப்பட்ட ஆசாமிகளிடம் துளியும் இரக்கம் காட்டவே கூடாது என்று மனைவி கூறக் கேட்டு, தங்கப்பன் கொதித்துக் குமுறினான்.

போதும், உன்னுடைய தர்மோபதேசம்... என் வேதனையைக் கிளராதே... என்று கோபித்துக் கொள்டான்.

அந்தப் பெண்ணோட ஜாதகம் நல்லதாக இருக்கவே இந்த இழிவு அதற்கு வந்து சேராமலிருந்தது. முதலிலே, இந்த சாத்தப் பனுக்குத்தானே இந்தப் பெண்ணைக் கட்டுவதாக இருந்தார்கள்! என்று குளத்தங்கரை மாநாட்டிலே பேச்சு தொடங்கியது; ஏம்பா! நான்தான் அப்போதே சொன்னேனே! மிராசுதாரர் பலே சாமார்த்தியசாலின்னு... இந்தப் பயலோட எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று முன்னதாகவே மிராசுதாரருக்குத் தெரிந்திருக்குது, அதனாலேயேதான், சமயம் பார்த்து ஆசாமியை விரட்டிவிட்டு தன்னோட மகளை, தங்கப்பனுக்குக் கொடுத்திருக்கிறார்! அனுபவம்; அறிவு.

அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. முதலிலே நினைத்தபடி சாத்தப்பனுக்கே அந்தப் பெண்ணைக் கொடுத்திருந்தா, இந்நேரம் என்ன ஆகியிருக்கும் மிராசுதாரரோட கௌரவம்? பஞ்சு பஞ்சாகப் பறந்து போயிருக்குமே! ஊர், சிரிப்பா, சிரிக்குமே சிரித்திருக்குமே. நல்லவேளை, தப்பித்துக் கொண்டார்.

குளத்தங்கரை மாநாட்டிலே இப்படிப்பட்ட பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, சிறையிலே தள்ளப்பட்டிருந்த சாத்தப்பன், உடன் இருந்த குற்றவாளிகளுடன், ஒரு கவலையுமில்லாமல் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான்.

உடனிருந்தவர்களிலே பெரும்பாலானவர்கள், ‘அந்தஸ்து’ காரணமாக உயர் வகுப்புச் சிறையிலே இருந்தனர்.

இலஞ்சம் வாங்கிய அதிகாரிகள், மோசடி செய்த வணிகர் கள், கள்ள நோட்டு அடித்த கனவான், கோயில் நகையைத் திருடிக் கொண்டு முலாம்பூசிய நகையைக் கோவிலிலே மாற்றி வைத்துவிட்ட எத்தன், இப்படிப்பட்டவர்கள், சாத்தப்பனின் சகாக்கள், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், தம்மீது ‘அபாண்டம்’ சுமத்தப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெளிவில்லாத

வராக இருந்ததால், தண்டிக்கப்பட்டு விட்டதாகவும் கூறினர். ஒருவர் இருவர் மட்டுமே, ஏதோ போதாத வேளை - புத்திகெட்டு விட்டது - தவறு செய்து விட்டேன் - அனுபவிக்கிறேன் முன் - ஜென்ம வினை - என்று கூறினர்.

சொத்து திருட்டுச் சொத்துதான்... தெரியும்... ஆனால் களவாடியது நான் அல்ல... ஆனால் என்ன...? யார் களவாடினால் என்ன? என்னால் தண்டனையை அனுபவிக்க முடியும். ஆகவே நான் தண்டனையைப் பெற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறேன்... என்ற சாத்தப்பன் சொல்லக் கேட்டு, இதை என்ன, வேதாந்தம் என்று கொள்வதா, மனக் குழப்பம் என்று சொல்லுவதா என்று தெரியாமல் அந்தக் கைதிகள் திகைத்தனர்.

மடத்திலே கொள்ளை அடிக்கப்பட்ட சொத்து என்பது உண்மையா? என்ற கேள்விக்குத் துளியும் பதறாமல் சாத்தப்பன், ‘இல்லாமல் பிறவாது அள்ளாமல் குறையாது!’ என்று பதிலளித்தான். மேற்கொண்டு எந்த விவரமும் தரமறுத்து விட்டான்.

சிறைக்குச் சென்று சாத்தப்பனைப் பார்த்துவிட்டு வந்து மோட்டார் டிரைவரிடம், குத்தாலம் குழுவினர், புதுத் தகவல் தெரிந்து கொள்ள எப்படி எப்படியோ கிளறிப் பார்த்தனர். எந்த விஷயமும் சொல்ல மறுத்துவிட்டான்.

எப்படி அப்பா உன் எஜமானர் இருக்கிறார்? என்று குத்தாலம் கேட்டதற்கு, டிரைவர், ‘அவருக்கென்ன, ‘ராஜா’ போல நிம்மதியாகத்தான் இருக்கிறார் என்று மட்டுமே பதிலளித்தான்; வழக்கு என்ன ஆகும் என்பது பற்றிக் கூடப் பேச மறுத்துவிட்டான்.

* * *

கோர்ட் கூடிற்று. திரளான கூட்டம்.

“சாமிகளே! இந்த முத்துமாலை, தங்களுடையது தானே”

‘அபசாரம்! அபசாரம்! நான் - எனது - என்ற மயக்கத் திலிருந்து நான் விடுபட்டவன். என்னுடையது என்று எதுவும் இல்லை”

“சுவாமிகளே! அது சிலாக்கியமான வேதாந்தம்... போற்றப்பட வேண்டிய தத்துவம். ஆனால், இப்போது நாம் ஒரு கொள்ளை பற்றி வழக்கினை விசாரித்துக் கொண்டிருக் கிறோம். அதனால், உண்மையைச் சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த முத்துமாலை, தங்கள் மடத்திலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதுதானே...”

“நான் இருக்கும் இடத்தை மடம் என்றும், இந்த நச்சுப் பொருளை முத்துமாலை என்றும் பேதைகள், பெம்மான் அருள் பெறாதவர்கள் பேசுவர்.”

“எமது பொறுமையை மிக அதிக அளவு சோதிக்க வேண்டாம், சுவாமிகளே! தங்களுக்கு எந்தப் பொருள் மீதும் பற்று இருக்காது; உணருகிறோம். ஆனாலும் களவு, கொள்ளை போன்ற குற்றம் செய்திடும் சமூக விரோதிகளைத் தண்டித்தாக வேண்டும். அதுதான் நியாயம். அந்த நியாயம் வெற்றி பெறத் தாங்கள் உதவி செய்திட வேண்டும். தங்கள் மடத்திலிருந்து பல விலையுயர்ந்த பொருள்கள் கொள்ளை போய்விட்டது! உண்மைதானே... போலீசில் வழக்குப் பதிவாயிற்றே. ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?...

எம்மானின் ஜோதிஸ்வரூபத்தைக் காணாதோரே, பொன் என்றும், மணி என்றும், வைரம் வைடூரியம் என்றும், முத்து என்றும் பவழம் என்றும் பிதற்றுவர் அப்பனே! என் கண்களுக்கு எல்லாம் ஒன்றாகவே தெரிகிறது, கொள்ளை நடந்ததாகக் கூறுகிறீர்கள். நான் அறியேன்... என் கண்முன் தெரிவதெல்லாம் ஐயன்! ஐயன்! ஐயன்! எங்கும் ஐயன்! எப்போதும் ஐயன்! எதிலும் ஐயன்! ஐயனின்றி வேறில்லை...”

கோர்ட்டிலே சிலரால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. நீதிபதிக்கே கூடச் சங்கடமாக இருந்தது.

சாத்தப்பன், தன் பார்வையை, சாமியாரிடமே பதித்து வைத்திருந்தான்.

வழக்கறிஞர் எத்தனை பணிவாகவும் சாமர்த்தியமாகவும் கேள்விகளைக் கேட்டும் கொள்ளிச்சாமியாரிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.

வழக்கு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குளத்தங்கரை மாநாடு கூடிற்று.

“அப்போதே சொன்னேன் அல்லவா, இந்தச் சாத்தப்பன் மீது உள்ள குற்றத்தை ருஜுப்படுத்துவது கடினம் என்பதாக! கோர்ட் திணறுவதைப் பார்த்தீர்களால்லவா என்று குத்தாலம் கேட்டார்.

“என்னமோ இதிலே சூது இருக்கத்தானே செய்யுது, பெரிய வேதாந்தம் பேசுகிறானே அந்தச் சாமியார் - என்று மகமது கூறினான்.

“இந்தச் சாமிக்கு என்ன பைத்தியமா... கேட்கிற கேள்விக்குத் தாறுமாறா பதில் பேசுதே... தத்துவம் பேசற இடமா-, கோர்ட்டு...”

“போய்க்கேள் அந்தச் சாமியாரை... என்னைக் கேட்டா...”

எப்பவும் இப்படித்தானா, ஏடாகூடமான பேச்சு... இப்ப இந்தச் சாமியாரு ஒரு வாக்குமூலமும் கொடுக்காது போனா, உங்க அண்ணனைத் தண்டிக்க முடியாது, இல்லையா...

ஏன் எங்க அண்ணன் கட்டாயமாகத் தண்டிக்கப் பட்டாக வேண்டுமா...?

குற்றத்தைச் செய்தவங்க தண்டனையை அனுபவிப்பது தானே நியாயம்...!

நியாயத்தை அப்படியே கரைத்துக் குடித்துவிட்டது போலப் பேசாதே.

முத்துமாலை, உங்க அண்ணனிடம் இருந்ததுதானே, அது கொள்ளை போன பொருள்தானே.

நீ சொல்லுற அப்படி, கொள்ளை அடிக்கப்பட்ட பொருள் என்று.

நான் மட்டுமா சொல்கிறேன். இந்த ஊரே சொல்லுது.

ஆனா எந்தச் சாமியார் மடத்திலே இருந்து இந்தப் பொருள் கொள்ளை அடிக்கப்பட்டதாகக் கூறப்படுதோ, அந்தச் சாமியார் அப்படிச் சொன்னாத்தானே...

பார்! பார்! அந்தச் சாமியாருடைய வாயிலே இருந்து உண்மை கக்கிக் கொண்டு வருதா இல்லையான்னு. கோர்ட்டா, கொக்கா! போதும் உன்னோட ஞானோபதேசம், உண்மையைச் சொல்லய்யான்னு போடுவாங்க பத்து; முதுகிலேயும் கன்னத்திலேயும்.

தங்கப்பனுக்கும் அவன் மனைவிக்கும் இப்படி ஒரு வாக்குவாதம்.

எவ்வளவு பெரிய குற்றம் செய்தவனாக இருந்தாலும் அண்ணனிடம் ஒரு பாசம் இருக்கத்தானே செய்கிறது என்று எண்ணி தருமு, தன் கணவனுடைய சிலாக்கியமான குணத்தைப் பற்றி வேலையாட்களிடம் எடுத்துப் பேசக் கேட்ட தங்கப்பனின் முகத்தில் வேதனைக்குறிகள் மேலும் ஆழமாகப் பதிந்திடலாயின.

* * *

ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு... டிரைவரிடம் வெகு கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறேன் ஒரு தகவல் என்று பேச்சைத் துவக்கினான் மகமது.

அவன் பெரிய அழுத்தக்காரனாச்சே, ஒரு தகவலும் கொடுப்பதில்லையே...

அவனா கொடுத்தான்! அமிர்தா ஓட்டல் ஸ்வீட்டும், காரமும், ‘டிகிரி’ காபியுமல்லவா கொடுத்தது என்று கூறிவிட்டுச் சிரித்தான். மேலும் விவரம் தரலானான். முடியவே முடியாது. வேண்டவே வேண்டாமென்றுதான் டிரைவர் சொன்னான். ஆனால் மிகவும் வற்புறுத்தி அமிர்தா ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போனேன்... அப்போது வேறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிப்பேசி பக்குவப்படுத்தி, கடைசியில் முக்கியமான ஒரு தகவலைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன், அது என்ன வென்றால், இந்த டிரைவரிடம் தங்கப்பனுக்கு ஏகப்பட்ட பயமாம் அவன் சொல்கிறான். என் எஜமானர் சாத்தப்பனுடைய கால் தூசுக்குக்கூட சமமாக மாட்டார் உங்கள் தங்கப்பன். இவ்வளவு எதற்கு என்னைக் கண்டாலே கூட உங்கள் தங்கப்பனுக்குப் பயம். வெட்கம் என்கிறான்” மகமது சொன்னான்.

இது பெரிய புதிர்தானப்பா! நீ சொல்வதைப் பார்த்தால் இந்த டிரைவருக்கும் தங்கப்பனுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கவேண்டும்போல அல்லவா இருக்கிறது என்றார் குத்தாலம்; கூறிவிட்டு நான் அப்போதே சொன்னேனே கவன மிருக்கிறதல்லவா, தங்கப்பன் இந்த டிரைவரிடம் அதிக அளவு மரியாதை காட்டுகிறான். தேவையில்லாத அளவு மரியாதை! என்று கூறினான்.

* * *

தம்பி கூடத்தான் சொல்கிறான். ஜாமீனில் போகலாம். ஏற்பாடு செய்கிறேன் என்று. ஆனால் நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன், என்று சாத்தப்பன் சிறையிலிருந்த தன் சகாக்களிடம் கூறினான். வெளியே சென்றால் வழக்கை நடத்த ‘தோதாக’ இருக்குமே என்று சிலர் கூறியபோது கூட சாத்தப்பன் அதெல்லாம் என் டிரைவர் வெளியே இருக்கிறான், கவனித்துக் கொள்வான் என்று சமாதானம் கூறினான்.

* * *

வழக்குமன்றத்தில் சுவாமிகளிடம் எந்த வாக்குமூலமும் வாங்க முடியாத நிலையே நீடித்துக் கொண்டிருந்தது சாத்தப் பனைக் காட்டி வழக்கறிஞர்.

“சுவாமிகளே! இவரைத் தெரியுமா உங்களுக்கு. இவர் பெயர், தொழில், இவரைப் பற்றிய விவரம் கூற முடியுமா? இவர் தங்கள் மடத்திற்கு வந்ததுண்டா? என்றெல்லாம் கேள்விக் கணைகளை விடுத்தார். சாமிகள் இவர் யார்? நான் யார்? நீ யார்? எல்லோரும் அவன் பிள்ளைகள்! அவனோ யாருக்கும் பிள்ளை அல்ல! அவன் ஆட்டுவிக்கிறான். நாம் எல்லோரும் ஆடுகிறோம். அவன் அடக்கினால் எல்லோரும் அடங்குகிறோம். சூரியனை அடக்குகிறான். சந்திரனைத் தேய்க்கிறான். அலையை எழுப்பு கிறான் - ஆயிரத்தெட்டு அற்புதங்களையும் ‘ஐயன்’ செய்கிறான். முத்துமாலையைத் தருபவனும் அவனே, அதைக் களவு போகச் செய்பவனும் அவனே! கூண்டில் நிற்பவனுக்கு அவன்தான் பொறுப்பு. எதிரே நிற்பவர்களுக்கும் அவன்தான் பொறுப்பு என்று பழையபடியேதான் பதில் அளித்து வந்தார். ஒரு கட்டத்தில், நீதிபதிக்கே கோபம் பிறந்து, கேள்விகளுக்குப் பொறுப்பான முறையில் பதில் அளிக்காவிட்டால் கோர்ட்டை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்குரிய தண்டனை தரப்படும் என்று கூற நேரிட்டது. அப்போது ‘சுவாமிகள்’ இடி இடியெனச் சிரித்து, அதுவரை அந்தக் கோர்ட்டும் நீதிபதியும் கேட்டறியாத வேதாந்தப் பேச்சினைப் பொழிந்து தள்ளினார்.

* * *

என்ன இருந்தாலும் அண்ணன் தம்பி என்ற பாசம் விடாது என்பார்களே, அது உண்மைதான். பாரேன், தங்கப்பன் இந்த வழக்கு முடியும் வரையில் ‘லீவ்’ போட்டு விட்டு இங்கேயே தங்கி விட்டிருக்கிறான் என்று குத்தாலம் பேச்சைத் துவக்கினார்.

அதிசயம் அதிலேகூட இல்லை; வழக்குமன்றத்திலே சாத்தப்பனும் தங்கப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் பார்வையைக் கவனித்தீர்களா... சாத்தப்பன் பரிதாபத்துடன் பார்க்கிறான் தங்கப்பனை, தங்கப்பன் பார்வையிலே பயம் தெரிகிறது. இது அதிசயமில்லையா என்று சின்னப்பன் கேட்டார்.

பயத்துக்குக் காரணம் வேறு ஒன்றும் இல்லை. சாத்தப்பன் தண்டிக்கப்பட்டு விட்டால், தனக்கும் தன் குடும்பத்துக்கும் கெட்ட பெயர் ஏற்படுமே என்பது பற்றி ஏற்பட்ட பயமாகத்தான் இருக்கும் என்று குத்தாலம் விளக்கமளித்தார்.

* * *

நீங்கள் எதற்காகப் பயப்பட வேண்டும், ஒரே மரத்திலே ஒரு பழம் ருசியாகவும், மற்றொரு பழம் புளிப்பாகவும் இருப்பதை உலகம் காணவில்லையா, அதைப்போல இந்தக் குடும்பத்திலே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு போகிறார்கள். அண்ணனுக்கு பெயர் கெட்டு விட்டால் நமக்கும் தானே கெட்ட பெயர் என்று ஏன் எண்ணி வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள் விட்டுத் தள்ளுங்கள் என்ற தருமு கூறிடக் கேட்ட, தங்கப்பன், ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் தருமு உனக்கு இருக்கும் நெஞ்சழுத்தம் எனக்கு இல்லை. உன்னாலே ஒரு பொருளை விரும்பவும் முடியும், பிறகு அதே பொருளை வெறுக்கவும் முடியும். இரண்டுக்கும் உன் மனம் இடம்கொடுக்கும். அந்தத் துணிவு எனக்கு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்” என்றான் துக்கம் தோய்ந்த குரலில்.

அப்போதே சொன்னேன் (4)

புரிகிறது, புரிகிறது, நீங்கள் எங்கே பொடி வைத்துப் பேசுகிறீர்கள் என்பது. நான் ஒன்றும் முட்டாள் அல்ல. இதைக்கூடப் புரிந்து கொள்ளாமலிருக்க. முதலிலே உங்கள் அண்ணனோடு பழகினேன். அவரைக் கலியாணம் செய்து கொள்ளச் சம்மதித்திருந்தேன். பிறகு என் விருப்பத்தை மாற்றிக் கொண்டு உங்களை ஏற்றுக் கொண்டேன்; அதைத் துணிச்சல் என்று கூறுகிறீர்கள். பைத்தியம். பைத்தியம். எல்லாம் உங்கள் அண்ணனுக்கே தெரியும், என் விருப்பம் என்ன என்பது என்றாள் தருமு.

இது என்ன புதுக்கரடி விடுகிறாய் என்று கேட்டான் தங்கப்பன்.

கரடியுமில்லே. காவடியுமில்லே. உண்மையைத்தான் சொல்லுகிறேன். எனக்கு ஆரம்ப முதலே உம்மிடம் தான் உண்மையான அன்பு. அப்பா, அண்ணனைத் தேர்ந்தெடுத்த தால், தலை அசைக்க வேண்டி இருந்தது. தலை மட்டும்தான் அசைந்தது. உள்ளம் அல்ல. எப்படியாவது என் உண்மையான விருப்பத்தை உங்கள் அண்ணனிடம் தெரிவித்து விட வேண்டும் என்று முயற்சி செய்தேன். கடைசியில் அதிலே வெற்றியும் பெற்றேன். ரசவாதி ரங்கலாலை மறந்துவிடவில்லையல்லவா. அவனுடன், இருந்தாளே, ஒரு பெண், கவனிமிருக்கிறதல்லவா ‘மைக்கண்ணி’ காதிலே விழுகிற முறையில். அதைக் கேட்ட பிறகுதான், உன் அண்ணன், எங்கள் வீட்டுக்கு வருவதைக் குறைத்துக் கொண்டார். ஊம், என் அப்பாவும் வேறு ஏதேதோ காரணம் இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள். உண்மையான காரணம், நான் உங்களைத்தான் விரும்புகிறேன் என்பதை நானே பக்குவமாக உங்கள் அண்ணன் காதிலே விழும்படிச் செய்தது தான் என்று கூறிவிட்டு, தருமு, எப்படி என் சாமார்த்தியம், உங்களுக்கு உண்டா அப்படிப்பட்ட சாமார்த்தியம்! என்று கேலிப் புன்னகையை உதிர்த்துக் கொண்டே கேட்டாள். தங்கப்பன் கண்களில் நீர்த்திவலைகள் தோன்றின. ‘தருமு! உன்னுடைய சாமார்த்தியமும் என்னுடைய சாமார்த்தியமும் ஒருபுறம் இருக்கட்டும். என் அண்ணனுடைய தியாக சுபாவத்தைப் பார்த்தாயா... எனக்காகத் தனக்குக் கிடைக்க இருந்த நிலையை இழந்து விடச் சம்மதித்தைக் கவனித்தாயா! துளியும், மனம் கோணாமல், தன்மீது வேண்டுமானால் ஏதாவது பழி ஏற்பட்டுவிட்டுப் போகட்டும் தன் தம்பியின் விருப்பம் நிறைவேற வேண்டும் என்றல்லவா என் அண்ணன் எண்ணி நடந்து கொண்டார். உத்தமர்களால் மட்டுந்தானே அது முடியும் என்று உருக்கமாகக் கூறினான்.

தம்பியின் விருப்பம் என்று கூறினீர்களோ, அப்படியென்றால், உங்களுக்கும் என்மீது அன்பு என்றா சொல்கிறீர்கள்.

வெறும் அன்பு அல்ல; காதல்; உயிர். ஒவ்வொரு கணமும் துடித்தபடி இருந்தேன். உன் அப்பா, உன்னை எனக்கு ‘அண்ணி’ ஆக்குவது என்று தீர்மானமாக இருப்பதையும் என் அண்ணன் அதற்கு இணங்குவதையும் கண்டு பதறினேன். மீறிட வழி இல்லை. நீயோ, என் அண்ணனிடம் உன் மனத்தையே பறிகொடுத்து விட்டவள்போல நடந்து கொள்வதைக் கண்டேன். எங்காவது ஓடி விடுவது என்று முடிவு செய்தேன்... கடைசியில் நான் அல்ல, அவர் ஓடினார் ஊரை விட்டு; பழி ஏற்றுக் கொண்டு... உன்னை நான் அடைந்தேன்... அவர் இப்போது கள்ளன் என்ற பெயருடன் கோர்ட்டிலே நிற்கிறார். எல்லாம் எனக்கு மனத்துணிவு இல்லாததால், ஆனால் இனி அப்படி இருக்கப் போவதில்லை என்று உறுதி கலந்த குரலில் பேசினான். தருமு அந்தக் குரலில் இருந்த உறுதியைக் கவனிக்கவில்லை. தங்கப்பன் தன்னிடம் காதல் கொண்டு துடிதுடித்துக் கிடந்ததாகக் கூறினானே அதைக் கேட்டதாலே எழுந்த உருக்கத்தின் பிடியிலே இருந்தாள்.

“என்னங்க... நான்தான் ‘மைக்கண்ணி’யிடம் என் விருப்பத்தைப் பேசி அவர் காதில் விழும்படியாகச் செய்தேன்; நீங்கள் எப்படி உங்கள் எண்ணம் அவர் காதில் விழும்படிச் செய்தீர்கள் என்று கேட்கலானாள்.

எல்லாம் அதே மைக்கண்ணி மூலமாகத்தான். உன்னுடைய விருப்பத்தைப் பற்றி என்னிடம் விசாரித்தாள். அண்ணன் ஏற்பாடு என்றுதான் எண்ணுகிறேன். நானும் துணிந்து கூறிவிட்டேன். எங்காவது கண்காணா தேசத்துக்கு ஓடிவிடப் போகிறேன் என்பதாக. அப்போது அந்த “மைக்கண்ணி விளையாட்டுக்காகப் பேசுவதாக எண்ணிக் கொண்டேன். அவள் சொன்னாள்: நீங்கள் ஏன் ஓட வேண்டுமா? உங்கள் அண்ணனை இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடுகிறேன் என்பதாக.

கடைசியில் அப்படியே அல்லவா நடந்துவிட்டது.

எப்படி நடந்தது? நம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அண்ணன், என்ன அந்த மைக்கண்ணியுடனா வாழ்க்கை நடத்து கிறார். இவள் வேறு எங்கோ சென்றுவிட்டாள். அண்ணன் திருமணமே செய்து கொள்ளவில்லையே... என்று கூறிக் கொண்டே, பெருமூச்செறிந்தான்.

மடாலய மானேஜர், முத்துமாலை, மடாலயத்துடையது என்பது பற்றியும், வேறு சில பொருள்களும் இந்த மாலையுடன் களவாடப்பட்டதாகும், அதனைக் கொள்ளை என்றே கூறலாம் என்றும், ஏனெனில் மடாதிபதியிடம் ‘உபதேசம்’ பெறுபவனைப் போல வந்த ஒருவன், நகைப்பேழையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டதாகவும், விவரம் கூறினான்.

மடாதிபதியின் வாக்குமூலம் சாதகமளிக்காதபோது, மானேஜரின் வாக்குமூலத்தைக் கொண்டு மட்டும், முத்துமாலை மடாலயச் சொத்து என்று தீர்மானிக்க சட்டம் இடம் கொடுக்குமா என்பதுபற்றி சுவையாக ஊரிலேயே பேசப்பட்டபோது, குளத்தங்கரை மாநாட்டிலேயா நடைபெறாமலிருக்கும்.

* * *

வேறு இடங்களில் சட்டம் பற்றிய சுவையான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, தங்கப்பன் அறையில் சூடான பேச்சும், டிரைவரிடம் நடைபெற்றது.

“என்னிடம் ஒரு முழக்கயிறு கொடுத்துவிட்டு, பிறகு உன் விருப்பம் போல் நடந்து கொள். வேறு நான் என்ன சொல்ல முடியும். உன்னைத் தடுத்து நிறுத்த எனக்கு என்ன உரிமை இருக்கிறது. வருவது வந்துதான் தீரும். நடப்பது நடக்கட்டும். ஆனால் நடைபெறக் கூடாதது நடைபெறுவதற்குள் நான் கண்ணை மூடிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன். கடைசி முறையாகக் கேட்கிறேன். நீ கோர்ட்டிலே சாட்சி கூறத்தான் போகிறாயா? அண்ணனுடைய சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டாயா...”

“உங்கள் அண்ணனுடன் தொடர்பு ஏற்பட்ட நாளிலிருந்து அவர் சம்மதம் பெறாமல் நான் எந்தக் காரியத்தையும் செய்த தில்லை. இப்போதும் அப்படித்தான்...”

“கோர்ட்டிலே, என்னதான் சொல்லப் போகிறாய்...”

“வேடிக்கையான கேள்வியைக் கேட்கிறீர்களே, கோர்ட்டிலே என்ன சொல்லுவேன்? உண்மையைத்தான்!”

“உண்மையை... சரி... உண்மையைச் சொல்லு... என் உயிரைக் குடி... ஊரார் இழிவு பேசட்டும்... என்ன வேண்டுமானாலும் பேசட்டும்... எனக்குக் கவலை இல்லை... நான் ஏன் கவலைப்பட வேண்டும்... எதற்காகக் கவலைப்படுவதற்குத் தேவையான உணர்ச்சியுள்ள உருவம் இருந்தால்தானே...”

“பரவாயில்லையே! மடாலயத்தில் இல்லாமலேயே மடாலயப் பேச்சுப் பேசுகிறீரே வழக்கறிஞர் தொழில் பார்த்ததை விட, மடாதிபதி வேலையைப் பார்த்திருக்கலாம் போல இருக்கிறதே. வேதாந்தமே பேசுகிறீர், செய்வதை எல்லாம் செய்துவிட்டு, சிக்கிக் கொள்கிறபோது, இந்த வேதாந்தம் எங்கிருந்து வந்து சேர்ந்து கொள்கிறது பல பேர்களிடம்... பேசுமய்யா பேசும்... எல்லா வேதாந்தத்தையும் ஒரேயடியாகப் பேசிவிடும்...”

தங்கப்பனால் டிரைவரிடம் தொடர்ந்து பேச முடியவில்லை.

“இந்த முத்துமாலையைப் பற்றிய விவரம் தெரியுமா உனக்கு...?”

“தெரிந்த விவரத்தைக் கூறத்தான் வந்திருக்கிறேன்.”

“என்ன விவரம் கூறப் போகிறாய். இந்த முத்து மாலை பற்றி...”

“இது 64 நல்முத்துக்கள் கொண்ட மாலை, அதிலே ஆறு முத்து சொத்தை. மொத்தத்திலே தரமான மாலை...”

“நகைக்கடை அல்லய்யா, இது. கோர்ட்... குற்றவாளி களைப் பற்றிய விசாரணை நடக்கிற இடம்... நகைக்கடை அல்ல...”

“இது நகைக்கடை அல்ல என்பதாலேதான், நகை பற்றிய விவரம் உங்களுக்குத் தெரிந்திருக்காதே என்று இதனைச் சொல்லுகிறேன். மாலையின் விலைமதிப்பு ஏழாயிரம் ரூபாய் இருக்கும்.”

“முத்துமாலையின் விலை பற்றிய கேள்வியே இங்கே எழவில்லை. இதுபற்றி... வழக்குக்குத் தொடர்பான விவரம் கூறலாம்... நகை வியாபார, விவரம் தேவையில்லை...”

“ஐயா, எனக்கு அது தேவை. நான் ஒரு நகை வியாபாரி, ‘ஐயா!”

சாத்தப்பரிடம் மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறேன்... நகை வியாபாரத்திலே பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதனால்... ஏன்... இந்த மாலையாலே கூட எனக்குக் கஷ்டம். நஷ்டம், ஏராளம்.”

“இந்த மாலைக்கும் உனக்கும் என்ன தொடர்பு...”

“இந்த மாலையைக் கொடுத்ததே நான்தானே... என்னிடமிருந்து இந்த மாலையைப் பெற்றுக்கொண்ட வரும் இங்கே தானே இருக்கிறார்!”

“என்ன! என்ன! தண்ணீர்! தண்ணீர்! மெல்ல! மெல்ல! - என்று பலரும் பதறிக் கூறினர், தங்கப்பன் திடீரென்று மயக்கமாகிக் கீழே விழுந்தது கண்டு, வழக்கு மன்றத்திலே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

மனத்திற்கு ஏதோ அதிர்ச்சி! அதனால் ஏற்பட்ட மயக்கம்; உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை... என்று கூறினார்கள், தங்கப்பனைக் கோர்ட்டிலிருந்து மருத்துவ விடுதிக்கு எடுத்துச் சென்றபோது.

* * *

அப்போதே சொன்னேன் கவனமிருக்கிறதல்லவா; இந்த டிரைவர் டிரைவரல்ல; டிரைவராக வேலை பார்க்கிறானே யொழிய, இவன் சாத்தப்பனுடன் சரிசமமாகப் பழகுகிறான். ஆசாமி வெறும் வேலையாளாக இருக்க முடியாது என்று... எனக் குத்தாலம் கூறினார்.

அவனோட சாட்சியம் வந்ததும் கேசு தூள்தூளாகி விட்டதே.

ஆகாமலிருக்குமா... நான்தான் அப்போதே சொன்னேன். இந்தக் கேசு சாத்தப்பனை ஒன்றும் செய்யாது என்பதாக.

ஆமாம்... முத்துமாலையைச் சாத்தப்பனிடம் விலைக்கு விற்றதற்கான ரசீதும் தானே காட்டினான்.

அதுசரி... இவ்வளவு எளிதாக விஷயம் இருக்கும்போது, சாத்தப்பன் ஏன் எடுத்த எடுப்பிலேயே இதை அதிகாரிகளிடம் சொல்லியிருக்கக் கூடாது. ஜெயிலுக்குப் போயிருக்க வேண்டிய அவசியமே இல்லையே...

குளத்தங்கரை மாநாட்டில் இந்தப் பிரச்சனை எழுந்தது; விவாதம் தொடர்ந்தது; முடிவு கண்டறியப்படவில்லை. ஆனால் வேறோர் இடத்திலே நடைபெற்ற பேச்சிலே இதற்கு ஒரு விளக்கம் பிறந்தது.

“தம்பி! எப்படியோ, சாமார்த்தியமாக என்னிடம் நகையை அவன் விற்றான் என்பதைக் கண்டறிந்து, அவனையும் கோர்ட்டிலே அதை ஒப்புக்கொள்ளும்படியாகச் செய்து, என்னைக் காப்பாற்றினாய். அண்ணனிடம் உனக்கு உள்ள பற்றும் பாசமும் அப்படிப்பட்டது...”

“அண்ணா! அண்ணா! என்னைக் கொல்லாதே! வேண்டாம் இந்தச் சித்தரவதை! வேண்டாம் அண்ணா! இனியும் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை...”

“மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே... உன் சாமார்த்தியமான தலையீட்டினால்தான், துப்பு துலங்கிற்று. என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதி இருக்கின்றன... இதோ பார்... பெரிய பெரிய தலைப்புகளுடன் செய்தி வந்திருக்கிறது. தம்பி! முதலிலே அவன் மிகவும் பிடிவாதம் செய்தானாமே... ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றானாமே... எப்படி அவனை உன் வழிக்குக் கொண்டு வந்தாய்...”

தங்கப்பனுக்குக் கண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அலறினான். பதறிப்போய், அங்கு வந்த பெரிய டாக்டர் சாத்தப்பனிடம் மரியாதையுடன், “விவரம் தெரிந்த நீங்களெல்லாமா, இப்படி நடந்து கொள்வது. இவருக்குத் துளியும் மனஅதிர்ச்சியே ஏற்படக்கூடாது. ஆபத்து அடியோடு நீங்கி விட்ட நிலையில் அவர் இல்லை. ஆகவே அதிகம் பேசக் கூடாது. மன்னிக்க வேண்டும். இனியும் இங்கு இருந்து பேசிக் கொண்டிருக்க அனுமதிப்பதற்கு இல்லை. டாக்டர்கள், தங்களை இவ்வளவு நேரம் அனுமதித்ததே தவறு... பெருந்தவறு... என்று கூறியதுடன், சாத்தப்பனை அழைத்துச் சென்றுவிட்டார்.

* * *

டிரைவர் முன்னாளில் நகை வியாபாரியாக இருந்தவர்; நொடித்துப் போனவர்; சாத்தப்பனிடம் பல நகைகள் விற்றிருக்கிறார்; நொடித்துப் போனவருக்குச் சாத்தப்பன் தன்னிடமே வேலையும் கொடுத்திருக்கிறார் வைத்துக் கொண்டு ஆதரித்து வருகிறார் என்ற செய்தி பரவி குளத்தங்கரை மாநாட்டில், மறுபடி

யும் குத்தாலம் அப்பேதே சொன்னேன் அல்லவா, சாத்தப்பன் பெரிய மனிதன் அலாதியான பெருந்தன்மையான குணம் அவனுக்கு என்று பேசிடலானார்.

சாத்தப்பனுடைய குணாதிசயம் இருக்கட்டும் தம்பி! தங்கப்பனுடைய குணம் என்ன சாமான்யப்பட்டதா! அண்ணன் இன்று கௌரவமாக வெளியே உலவ யார் காரணம்? தங்கப்பன் அல்லவா... டிரைவர் சாட்சியம் எப்படிக் கிடத்தது? தங்கப்பன் திறமையாலே அல்லவா என்று அர்ச்சித்தார்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கணும் என்பார்களே. இந்த நகை வியாபாரி நொடித்துப் போன நிலையிலே வேலை கொடுத்த சாத்தப்பன் ஆதரித்து இருக்கிறாரே. அப்படியிருக்கும் போது முத்துமாலை விஷயமாக அவர் பேரிலே ஓர் அபாண்டம் விழுந்தபோது, இவனல்லவா முந்திக் கொண்டு போலீசிலே சொல்லியிருக்க வேண்டும். ஐயா! முத்துமாலை களவுப் பொருள் அல்ல... அது நான் அவருக்கு இன்ன நாளிலே இன்ன விலைக்கு விற்றிருக்கிறேன் என்று ஏன் சொல்லவில்லை...

அது என்னத்தாலே தெரியுமய்யா... சொல்றேன் கேள்... வாழ்ந்து கெட்டவங்க இருக்கிறாங்க பாரு... அவங்களோட சுபாவம் ஒரு மாதிரியா ஆகிடும்... சாத்தப்பன் வேலை கொடுத்து உதவி செய்தாரு... அதனாலே அவரிடம் அன்பு மரியாதை இதெல்லாம்தானே ஏற்பட வேண்டும். இந்த டிரைவரோட மனத்திலே என்று யோசிக்கிறே ஆனால இந்த மாதிரி சில பேருக்கு நாம் எவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருந்தோம் நமக்கு இன்று இந்தக் கதி ஏற்பட்டுவிட்டதே; இவனிடம் கை கட்டி சேவகம் செய்யும்படியான நிலை வந்திருக்குதே. இவனே கூட பல பேரிடம் யார் தெரியுமா நம்ம டிரைவர்? நகை வியாபாரம் செய்து ‘ஒகோ’ன்னு வாழ்ந்து வந்தாரே நாகலிங்கம். அதே ஆசாமிதான் என்று சொல்லாமலா இருப்பான்; எத்தனை பேர் அதைக் கேட்டுக் கேலியாகச் சிரித்திருப்பார்கள் என்றெல்லாம் எண்ணி எண்ணி அருவருப்பு பொறாமை கொண்ட மனம் ஏற்பட்டுவிடும். எப்படியோ ஆசாமி சிக்கிக் கொண்டான்; நமக்கு வந்த தாழ்வு இவனுக்கும் வரட்டும் என்ற ஒரு நினைப்பு வந்திருக்கும் அதனாலேதான் சாத்தப்பனைக் காப்பாற்றும் ருஜு தன்னிடம் இருந்தும் டிரைவர், ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்திருக்கிறான்.

எனக்கு முதலிலே இருந்தே அவனிடம் ஒரு சந்தேகம் உண்டு, நடந்ததை எல்லாம் பார்க்கிறபோது, என் மனத்திலே டிரைவரைப் பற்றி முதலிலே தோன்றிய எண்ணம் சரியானது என்று தெரியுது.

எல்லா விவரமும் இருக்கட்டும்... முத்துமாலை மடாலயத் தது என்பது விளங்கி விட்டது. இது இந்த நகை வியாபாரிகளிடம் எப்படி வந்தது. சாத்தப்பனுக்கு இவன் கொடுத்தான். ஆதாரம் காட்டினாங்க. ஆனா இந்த நகை வியாபாரியிடம் இந்த முத்துமாலை வந்த விதம்?

அதற்கும் ஒரு கணக்குக் காட்டியிருக்காங்களே... வேறே ஒரு நகை வியாபாரி இந்த நகை வியாபாரிக்கு விற்றதாக...

யாரு அவன்... எங்கே இருக்கிறான்...

அது இனிதான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு, சாத்தப்பன் பேரிலே உள்ள பழி நீங்கிவிட்டது... நகை வியாபாரி, முத்துமாலையை யாரிடம் தான் வாங்கியதாகச் சொல்லியிருக்கிறானோ அதுபற்றி தகவல் விசாரித்துக் கொண்டு இருக்கிறாங்க... வேறே என்ன செய்யறது.

டிரைவர் பேரிலே போலீஸ் ஒரு ‘கண்’ வைத்தபடிதான் இருப்பாங்க. இல்லையா...?”

ஆமாம். ஆமாம் பார்வை விழுந்தபடிதான் இருக்கும்.

கொள்ளிச் சாமியார் மடத்திலே கொள்ளை நடந்தபோது, அவனுக்கு ‘வக்கீலாக’ இருந்தவர் ஒருவர் உண்டாமே... அவரிடம் போய்க்கூடத் தகவல் விசாரித்தார்களாமே...

விசாரிக்கப் போனார்கள். ஆனால் பாவம் அந்த வக்கீல் முடக்கு வியாதி ஏற்பட்டு, பேச முடியாத நிலையில் இருக்கிறாராம்... வழக்கு சம்பந்தமான கட்டுகளைப் படித்ததிலே, பிடி பட்டவன் தக்க ருஜு இல்லாததாலே விடுதலை செய்யப் பட்டதாகத் தெரிகிறது...

முடக்கு வியாதி மட்டும் வராமலிருந்திருந்தா, அந்த வக்கீல் இப்ப, பெரிய ஜட்ஜு ஆகியிருந்திருப்பாராமே.

அப்படித்தான் கேள்வி. அவரிடம் வேலை கற்றுக் கொண்டவர்களெல்லாம், இன்றைக்குப் பெரிய நிலையிலே இருப்பதாகக் கேள்வி.

* * *

நாட்கள் பல உருண்டோடின. வேறு பரபரப்பூட்டும் செய்திகள் குளத்தங்கரை மாநாட்டுக்குக் கிடைக்கவில்லை. தங்கப்பன் உடல் நலம் முழுவதும் பெறவில்லை என்றாலும் இனி உயிருக்கு ஆபத்து இல்லை என்ற நிலை பிறந்தது. தருமுவின் தாலி பாக்கியத்தை ஊர் மெச்சிக் கொண்டது.

அண்ணன் பேரிலே ஏற்பட்ட அபாண்டத்தாலே தங்கப்பன் மனம் அதிர்ச்சி அடைந்தது, என்று ஊர் பேசிக் கொண்டது.

வடிவு தங்கப்பனைக் காண வந்திருந்தான் உடன் வந்திருந்த அவள் கணவன் போலீஸ் இன்ஸ்பெக்டர், சாத்தப்பனைக் காணவே கூச்சப்பட்டான்.

“என் கடமையைச் செய்தேன்... மன்னிக்க வேண்டும்.”

“மன்னிக்க வேண்டும் என்று சொல்லாதே... மதிக்க வேண்டும் என்று சொல்லப்பா! உன்னிடம் எனக்கு உண்மையான மதிப்பு ஏற்பட்டதற்குக் காரணமே, உன் கடமையை, தாட்சண்யத்துக்குக் கட்டுப்படாமல் செய்தாய் என்பதாலேதான்...”

“ஆனால் கடைசியில் பார்க்கப் போனால், வீண் சந்தேகம் கொண்டதுதான் மிச்சமாகிறது... அவசரப்பட்டு விட்டேன்... மேலதிகாரிகளிடம் சொல்வதற்கு முன்பு, நானே நேரிலே வந்து உங்களிடமே விசாரித்திருந்தால் இத்தனை விபரீதம் நடந்திருக்காது...”

“உன்னுடைய நேர்மையையும் துணிவையும் உலகு உணர இந்தச் சம்பவம் பயன்பட்டது என்பதிலே எனக்கு ஒரு மகிழ்ச்சி. பெருமை. எப்படித்தான் நடந்து கொள்கிறாய் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்... நான் எதிர் பார்த்ததைவிட மேன்மையாக நடந்து கொண்டிருக்கிறாய். உனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்று கருதுகிறேன்.

உன் மனப்போக்கைப் பாராட்டுகிறேன். ஆனால் முடிவு வரவேற்கக் கூடியது அல்ல. துவக்க காலம் உனக்குச் சிறிது துடிதுடிப்பு, அவசரம், திடீர் முடிவெடுக்கும் இயல்பு இருக்கத் தான் செய்யும். ஆனால் படிப்படியாகப் பக்குவம் ஏற்பட்டுவிடும். வேலையை விட்டு விலகாதே. சரியல்ல, என் தம்பி கூட இப்படித்தான், இனிதான் ஜில்லா ஜட்ஜு வேலையில் இருக்கப் போவதில்லை. விலகிவிடப் போகிறேன் என்று பிடிவாதம் செய்கிறான். அவனுக்கும் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

தங்களுடைய ‘வாதம்’ என்னைத் திருத்திவிட்டது.

என் தம்பியும் இதைப் போலவே தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அவன் ஒரு விதமானவன். என் பேரிலே விழுந்த வழக்கிலே நான் விடுதலையாகி விட்டேன் என்றாலும், அப்படி ஒரு வழக்கு வந்ததே ஓர் இழுக்கல்லவா. அப்படி ஓர் இழுக்கு விழுந்தவனுடைய ‘தம்பி’ இவன் என்று நாலுபேர் நாலு விதமாகப் பேசுவார்களே, என்பதை எண்ணி வேதனைப் படுகிறான்.

என் மனத்தை மாற்றி விட்டதைப் போல அவருடைய மனத்தையும் மாற்றாமலா விடுவீர்கள்?

* * *

ஒரே ஒரு கணம்தான் அண்ணா! அந்தச் சபலம் எனக்கு... சபலத்துக்குப் பலியாகி விட்டேன்...

சபலம் எல்லாமே அப்படித்தான் தம்பி! ஒரு கணம், ஒரு நொடி... அந்த ஒரு நொடிப்போதிலே மனத்திடம் துளி கெட்டாலும் தீர்ந்தது. பாதைகெட்டு விடும்.

அப்படித்தான் அண்ணா, நடந்தது, அவன் குற்றம் செய்தவன் என்பதற்கான சாட்சியம் ருஜு இருந்தது. அதை நான் கோர்ட்டிலே கொடுத்திருக்க முடியும். வேண்டுமென்றே மறைத்தேன்... அவன் தப்பித்துக் கொண்டான்... ஊரே பாராட் டிற்று. அவனுக்காக வாதாடிய வக்கீலின் திறமையால்தான் அவன் விடுதலையானான் என்று... ஆனால் அவனைக் கூண்டுக்குள் தள்ளக்கூடிய ருஜு என்னிடம் இருந்தது... அதைக் கோர்ட்டிலே நான் காட்டாமலிருந்து விட்டேன்... அந்த முத்து மாலை என்னை மயக்கிவிட்டது... அதைக் கொடுத்து காலிலே விழுந்தான்... பேராசை, பெற்றுக் கொள், பெற்றுக் கொள் என்று தூண்டிற்று... நேர்மை தூங்கிவிட்டது... வழி தவறினேன்...

அப்போதே சொன்னேன் (5)

விவரம் யாவும் தெரியும் தம்பி! களவாடி பிடிபட்டான், உன்னால் விடுதலை பெற்றான். ஊரெல்லாம், சுற்றி அலைந்தான்... கடைசியில் என்னிடம் அடைக்கலமானான், டிரைவராக. தன் கதையை விவரமாகச் சொன்னபோது, முத்துமாலை பற்றிக் கூறினான்... நீ தான் அதைப் பெற்றுக் கொண்டாய் என்பதை இங்கு வந்த பிறகுதான் எனக்குத் தெரிவித்தான். முத்துமாலையைப் பெற்றுக் கொண்டவன் என் தம்பிதான் என்பது எனக்குத் தெரிந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன்... நானே தான், உனக்குத் தெரியாமல், அதை உன்னிடமிருந்து எடுத்தேன்... எடுத்தேனா! களவாடினேன்... அதை எடுக்கும் போது உன் பெருமையை எண்ணாமலில்லை. ஒரு கண சபலம் காரணமாக, அந்த முத்துமாலையை நீ பெற்றுக் கொண்டாயே தவிர, அது அளவுப் பொருள் ஆகவே அதைத் தருமுவுக்குக் கொடுக்கக்கூடாது, எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்று எண்ணி, ஒளித்து வைத்திருந்தாய் அல்லவா... அது ஒரு கணம் சபலத்துக்கு ஆட்பட்டுவிட்டாலும், உன் மனத்திலே உள்ள நேர்மை உணர்ச்சி அடியோடு மறந்து விடவில்லை என்பதைக் காட்டுகிறதல்லவா, அதனால் பெருமிதம் எனக்கு...

அப்போதே என்னை இழுத்துப் போட்டு உதைத்திருக்க வேண்டும் நீங்கள்...

உன்னையாடா தம்பி! சிறுவயதிலே அடிக்கடி பொறாமை காரணமாக என்மீது ஏதாவது பழி சுமத்துவாயே... அப்போது கூட நான் உன்னை அடித்ததில்லையே... நான் உன்மீது என் உயிரை அல்லவா வைத்திருக்கிறேன் உன்மீது எப்போதும் எனக்குக் கோபம் ஏற்பட்டதில்லையே... வாலிபத் துடிப்பு எனக்கு இருந்த நாட்களிலேயே...

முத்துமாலையை எடுத்ததுடன், அதை ஏன் அண்ணா! வடிவுக்குக் கொடுத்து; நீங்களாக வம்பை விலைக்கு வாங்கிக் கொள்ள முனைந்தீர்கள்.

ஒரு சிறு விளையாட்டா தம்பி! வடிவு புருஷன் எப்படிப் பட்டவன், நேர்மையானவனா, பொருளைக் கண்டு நெளிபவனா என்று பார்க்க விரும்பினேன். பார்த்தேன்... பூரிப்பு எனக்கு அவனுடைய நேர்மையை உணர்ந்ததில்.

ஆமண்ணா! இவ்வளவு நேர்மையாளருக்கு மத்தியில், நான்... செ! எனக்கே வெட்கமாக இருக்கிறது... இந்தச் சுமையோடு நான், மற்றவர்களுக்கு நீதி வழங்கும் வேலையிலே இருக்க வேண்டும்... மனம் ஒப்பவில்லை அண்ணா! மனம் ஒப்பவில்லை...

களவுப் பொருளைப் பெற்றுக்கொண்டோமே என்ற பழியைப் பற்றிய மனச்சுமையைத்தானே குறிப்பிடுகிறாய்?

ஆமாம்... ஏன்... அது என்ன சாமான்யமான குற்றமா...

களவுப் பொருளைப் பெறுவது, தவறு; குற்றம்; மன்னிக்க முடியாத குற்றம். நான் மறுக்கவில்லை... ஆனால், தம்பி! உன்னிடம் தரப்பட்ட அந்த முத்துமாலை, மடத்திலிருந்து களவாடப்பட்டது உண்மை... ஆனால் அது மடத்துக்கு எப்படிக் கிடைத்தது தெரியுமா?...

யாராவது மடத்துக்குக் காணிக்கை கொடுத்திருப்பார்கள்...

இல்லை, தம்பி! இல்லை. அந்த முத்துமாலை நம் முடையது, தம்பி! நம்முடையது! கொ. கொ. கொ. என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதால், கொடி கொண்டா மலை கொள்ளிச்சாமியாருடையது என்று ஆயிற்று. ஆனால், அது நம்முடையது. இந்தக் கொள்ளிச்சாமியார் மடம் வைக்காத முன்பு ஊரூருக்கும் சென்று உபதேசம் செய்து கொண்டிருக்கும் ‘போலி’யாக இருந்த வந்துபோது, நம்முடைய வீட்டிலே அப்பா இவனுக்கு ‘பூஜை’ நடத்தினார். அப்போது இவன் நம்முடைய வீட்டிலிருந்து களவாடிச் சென்றிருக்கிறான் இந்த முத்துமாலையை... போன பொருள்தான் திரும்பி வந்திருக்கிறது நம்மிடம்...

திடுக்கிட வைக்கிறீர்களே. இந்த விவரம் வந்திருக்கிறது நம்மிடம்...

ரங்கலால் மூலமாக... ரசவாதி ரங்கலால் தெரியுமல்லவா... இந்தச் சாமியார்கள் ஒவ்வொருவரை மயக்க ஒவ்வொரு வித்தை காட்டுவார்கள்... பலரை மயக்க நமக்கு ‘ரசவாதம்’ தெரியும் என்று கூறுவார்கள். அதிலே மயங்கிச் சேர்ந்து, சாமியாரின் பல அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருந்தவன் ரங்கலால். அவன் மூலமாகவே இந்த விவரம் அறிந்தேன்.

ரங்கலால் என்ன ஆனான்... அந்தப் பெண்...

ரங்கலாலா... அவன் முதலிலே என்னைத் தன் வலையில் விழ வைக்கலாம் என்று எத்தனித்தான்... முடியவில்லை அந்தப் பெண்ணுக்கும் ‘மோசடி’ வாழ்க்கை பிடிக்கவில்லை... நாணயமான ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு, தனியே சென்று விட்டாள்... இவன் எங்கோ பினாங்கோ, மோரிசோ ஓடி விட்டான்.

உள்ளபடி இது நம்முடையது என்பதைக் கேட்க, ஓரளவுக்கு எனக்கு மன நிம்மதி ஏற்படுகிறது என்றாலும்...

நீதிபதி வேலை பார்க்க மனம் இடம் தரவில்லை... ஒருவிதத்திலே, தம்பி! உன் எண்ணம் சரியானதுதான்... பொருள் நம்மிடமிருந்து களவாடப்பட்டது என்றாலும், அதை நாம் சட்டத்துக்கு உகந்த முறையிலேதான் திரும்பப் பெற வேண்டும்; குறுக்கு வழியில் அல்ல... அதை நான் ஒப்புக் கொள்கிறேன்...

மேலும், கொள்ளிச்சாமியாரின் அக்கிரமம் ருஜுப் படுத்தப் பட்டும், முத்துமாலை நம்முடையது என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டுமல்லவா...

ஆமாம்... அதற்கான வேலைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்... அதற்கு வடிவு புருஷன் ஏற்றவன்... அவன் எப்படியும் கண்டு பிடித்துவிடுவான்...

இதெல்லாம் ஓரளவு மனத்துக்கு ஆறுதல் தருவதாக அமைந்திருப்பினும், முத்துமாலை களவாடப்பட்டிருக்கிறது மடத்திலிருந்து; அந்தக் குற்றவாளியை நான் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தப்பி விட உடந்தையாக இருந்திருக்கிறேன்; நீங்களோ அவனை உங்களிடம் வேலைக்கே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தவறானதாகத்தான் தோன்றும், தம்பீ! முழு விவரம் தெரியாத முன்பு, இவன் மடத்திலே தங்கி கொள்ளிச்சாமிக்கு ஓர் அபூர்வமான தைலம் தயாரித்துக் கொடுத்திருக்கிறான்... அது கொடிய குஷ்ட நோயைத் தீர்க்கக் கூடியது... இந்தச் சாமியார்; அதை மருந்து என்று கூறாமல், தன்னுடைய மாய சக்தி என்று கூறி ஏய்த்து வருவது இவனுக்குப் பிடிக்காமல், தகராறு கிளப்பி

யிருக்கிறான்.

தனக்குத் தருவதாகச் சொன்ன தொகையைக் கொடுக்கும் படி வற்புறுத்தி இருக்கிறான். மடத்துத் தலைவன் கொடுக்க மறுக்கவே, ஒரு நகைப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவது என்று தீர்மானித்திருக்கிறான். அதுதான் பிறகு ‘கொள்ளை’ என்ற வடிவும் கொண்டது.

என் மனச் சுமையிலே பெரும் அளவு குறைந்து விட்டது அண்ணா! ஆயினும், நான் நீதிபதியாக இருக்க மட்டும் மனம் இடம் தரவில்லை...

என் தம்பி நீதிபதியாக இருக்கிறான் என்ற பெருமிதம் எனக்கு இனிப்பளிக்கும்; அதை இழக்க மனமில்லை. என்றாலும், நீதித் துறையிலே உள்ளவர்கள் ஒரு துளியும் எந்த விதமான களங்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

* * *

மாதங்கள் உருண்டோடின; தங்கப்பன் வேலையை விட்டு விலகி விட்டான். வக்கீல் வேலை கூடப் பார்க்கப் போவதில்லை என்று கூறிவிட்டான். அண்ணனுடன் சேர்ந்து வியாபாரம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டான்.

* * *

நான் அப்போதே சொன்னேனே கவனமிருக்கிறதல்லவா, சாத்தப்பன் பெரிய புள்ளி என்பதாக. தம்பியைக்கூட வேலையில் இருக்க வேண்டாம் என்று கூறி விட்டானாம்.

வேலையிலே என்னய்யா கிடைக்கும், ஆயிரம் இரண்டாயிரம் மாதம் இருக்கும். மாதம் ஓர் இலட்சம் புரளுமாமே. வியாபாரத்திலே...

என்னமோ போ! நம்ம ஊரிலே ஒரு பெரிய குடும்பம், இடையிலே பலவிதமான கஷ்டம் ஏற்பட்டாலும் இப்போது நிம்மதி அடைந்திருக்குது. அதுவரையிலே மகிழ்ச்சிதானே, யாருக்கும்.

நான் அப்போதே சொன்னேன். அண்ணன், தம்பியோ ஒற்றுமையைப் பார்க்க வேண்டுமென்றால், சாத்தப்பன் தங்கப் பனைப் பார்க்க வேண்டுமென்று, கல்லூரியிலே படிக்கிற காலத்திலே அவ்வளவு ஒற்றுமை...

சாத்தப்பனுக்குத் தன் தம்பியிடம் அவ்வளவு பாசம்...

தங்கப்பனுக்கு மட்டும்! அண்ணன் பேரிலே வழக்கு வந்தபோது எவ்வளவு கவலை, பாவம்... ஆள் துரும்பு துரும்பாக இளைத்துப் போய் விட்டானே...

எவ்வளவோ கஷ்டப்பட்டு அண்ணன் பேரிலே ஒரு குற்றமும் வராமல் காப்பாற்றினான் இல்லையா...

தருமு அதைத்தான் ஊரெல்லாம் பெருமையாகப் பேசிக் கொள்வதாகக் கேள்வி.

சாத்தப்பனுடைய புதிய வியாபாரக் கம்பெனி துவக்க விழாவுக்கு ஒரு மந்திரி வாராராமே...

கேள்விப்பட்டேன்... முந்தி வந்த மந்திரி இல்லே... இவர் வேறே...

பந்தல் பெரிய அளவு... விருந்து வைபவம் பிரமாதமாகத் தான் இருக்கும். பெரிய வீட்டு விசேஷமில்லையா...

தருமுகூடத் தலை முழுகாமலிருப்பதாகச் சொல்றாங்களே...

நான் அப்பவே சொன்னேன் கவனமிருக்கிறதா, பெரிய வீட்டு மதிப்பு எப்பவும் குறையாதுன்னு...

குளத்தங்கரையிலே வழக்கம்போல மாநாடு நடைபெற்றுக் கொண்டு வந்தது.

சாத்தப்பன் தங்கப்பன் ஆகியோருடைய புதிய ‘மருந்தகம்’ துவக்கப்பட்டது.

மாநாட்டினர், நோய் நொடி மருந்து வகை, அதிலே கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவு ஆகியவற்றிலே கவனத்தைத் திருப்பிக் கொண்டனர்.

“நம்ம முகமதுகூடத்தான் என்னமோ ‘சூரணம்’ செய்வதாகச் சொல்றாரு. யாறு சீந்துவாங்க...” என்று கேலி பேசினார் குத்தாலம்.

எல்லாத்துக்கும் ஒரு காலம் வரணுமோல்லோ என்று மகமது பதிலளித்தார்.

முற்றும்