மணிக்கொடியும் - மனிதக்கொடியும்
சமுத்திரம் அவர்களின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதும் காரணத்தால், எனக்கும் இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று, நான் கர்வம் கொள்ளவில்லை. அல்லது சுரண்டல் லாட்டரி மாதிரி, இது ஒரு சான்ஸ் என்றும் எடை போட்டுக் கொள்ளவில்லை.
சாகித்திய அகாடமியால் கௌரவிக்கப்பட்ட நாவல் ஆசிரியரின், சிறுகதைப் படைப்பாளியின், சட்டயர் என்னும் சாட்டையால் சமூக அநீதிகளை போலீஸ் அடி' போல் உள்காயம் கொடுத்துச் சாடும் இலக்கியத் தோழரின் கதைகளைத் தொகுப்பாகப் படித்து, அவரது பரிமாணங்களின் வீச்சை காணமுடிந்த மகிழ்ச்சிக்கு ஆளானேன் என்பதே உண்மை.
இந்தத் தொகுப்பில் உள்ள பல சிறுகதைகள் வெளிவந்த இலக்கியப் பத்திரிகைகளை நான் படிக்கச் சந்தர்ப்பம் இல்லாததால், அவற்றில் வெளிவந்த சமுத்திரத்தின் கதைகளை நான் அனுபவிக்க முடியாமல் இருந்தது. ஆனால் மேற்படி கதைகளில் பல, இந்தத் தொகுப்பில் இடம் பெற்று பல்லாயிரக் கணக்கான வாசகர்களைத் தனதாக்கிக் கொள்ளப் போகிறது.
சு. சமுத்திரம், வார்த்தைகளை எடுத்து ஆளுகிற லாகவம், வாசகர்களை அழுத்தமாக ரசிக்க வைக்கிறது.
மூத்த மகளை, அப்பா ஒரு படிக்காதவனுக்கு கட்டி வைத்தார். இளைய மகளுக்கு ஒரு சேஞ்ச்சுக்காக, படித்த மாப்பிள்ளையாகப் பார்த்து கட்டி வைத்தார். அவன், மாசக் கடைசியில் சேஞ்சே இல்லாத ஆபீஸ் சூப்பிரென்டன்ட் என்று தெரிகிறது. அடிக்கிற அடியில், புளியங்காய் கொத்தாகக் கீழே விழுகிற மாதிரிதான் கதையில் கடைசி பகுதி அமைகிறது.
எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளுக்கு ஒரு பிடி சோற்றுக்கு வழி பண்ணலாயக்கில்லாத கணவன், ஆபீசில், எந்த லஞ்சத்துக்கும் மசியாதவனாக என் பொண்டாட்டி பகட்டுக்கும், சேலைக்கும் பணம் கேட்டு தாலியைக் கழட்டி எறிகிறவள் அல்ல, என்னோட... நேர்மையை தன்னுடைய தாலி பாக்கியமாக நினைக்கிறவள் என்று சொல்லும் போது மனுஷங்க இருக்க வேண்டிய இடம் எது என்கிறதைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டுகிறார். இது கதைத் தலைப்பாக காட்டி இருப்பது சாலப் பொருத்தமே.
சொந்த வாழ்க்கையை மனித நேயத்தோடு வாழ்கிறவர் களால் தான் இலக்கியவாதியாகவும் திகழ முடியும்.
கூலிக்கும், புகழுக்கும் எழுதுகிறவன் எழுத்து நன்றாகவே விற்பனையாகும். அவை, அன்றாடம் சமையலுக்குத் தேவையான காய்கறிகள். அவையும், அவசியந்தான். ஆனால் பாரிமுனை பேனா வியாபாரியின் கிறுக்கல்களை யனார்பாடோவின்ஸியின் ஓவியங்களோடு ஒப்பிடக்கூடாது.
சமையலறைக்குள் போடா வின்ஸிகள் வராவிட்டாலும் சமையலறையில் உள்ளவர்கள், ஓவியக் கண்காட்சிக்கு போகலாம்.
ரசிக்கலாம். ஆகவே இம்மாதிரியான சிற்பங்கள் பத்திரிகை உலகுக்கு ஒரு கட்டாயத் தேவை.
சமுத்திரத்துக்கு ஒரு ராகம் உண்டு. அவரே கண்டு பிடித்துள்ள ராகம். பொருளாதாரத்திலோ, சமூக அந்தஸ்திலோ, சாதிசமயங்களிலோ அமுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு ஜடமாகி விட்டவர்களை மனிதராக்கி - மகோன்னதமாக்கிக் காட்டும் ரச வித்தையாளர்.
கொட்டாவிக் கச்சேரி செய்ய, சமுத்திர பாகவதருக்குத் தெரியாது. அன்றே, என் ஆவியும், உயிரும் குன்றே அனையாய் ஆட் கொண்டனையே என்ற மாணிக்க வரிகளில் வரும் ஆவியை ஆன்மாவை உணரச் செய்யும் கருத்துச்சேரி, இவரது கதைச் சேரி.
அனைத்துக் கதைகளிலும் சிறிதும் மழுங்கவே மழுங்காத வைர ஊசி போன்ற உறுதியான கண்ணோட்டம். சமூக சீர் திருத்த நையாண்டி, இந்த சமுத்திரத்தில் விழுந்தால் வேஷக்காரர்களின் அரிதாரம் கரைவதைத் தவிர, வேறு வழியே இல்லை .
அரசு அதிகாரிகள், அரசு சிப்பந்திகள், மேல் தட்டினர் ஹிப்போக்கிரைட்ஸ் எனப்படும் மித்யாசாரர்கள் - ஆகிய இவர்களுடைய உலகத்தில் புகுந்து, நம்மால் அடிபட முடியாது. ஆனால் அத்தகைய அடிகளும் ரணங்களும் எப்படி இருக்கும், ரணப்படுத்துகிறவர்களின் வக்கிரங்கள் எப்படி இருக்கும், ரணப் படுகிறவர்களின் சதையும் மனசும் எப்படித் துடிக்கும் என்பதை சமுத்திரத்தின் கதைகள் மூலம் அனுபவித்து விடலாம்.
கதைகளைப் படிக்கும் போதே, நமது ஆழ் மனத்தில் நல் சிந்தனைகளை மேலெழுப்பி நம்மை உயர்த்தும், உயர்ந்த சேவையை, இவரது அனைத்துக் கதைகளிலும் ரசிக்கலாம். ருசிக்கலாம். திருந்தக்கூடாது என்று பிடிவாதமான திடவாதமான மனோ இயல்பு கொண்ட மூர்க்கர்கள் கூட தங்களை அறியாமல், ஓரளவாவது பண்படுவார்கள்.
மெஸேஜ் மெஸேஜ் என்று ஏன் தேடுகிறார்கள்? தமிழகத்தில் மேஸேஜைத் தவிர என்ன இருக்கிறது? மற்றவர்களைக் காட்டிலும் சமுத்திரத்தின் திவ்ய சக்ஷக்களுக்கு
அந்த மேஸேஜ் தெளிவாகப் புலப்படுகிறது. நன்றி
ஆழ முகிழ்ந்து எடுத்த மனிதநேயத்தின் பண்பாட்டுத் தத்துவங்களை வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் விநியோகிக்கும், பிரசார பிராண்டு அற்ற மனித நேய உணர்வே அவரது எழுத்துக்களின் வசீகரத்துக்கும், வாழ்வுக்கும் காரணங்களாக அமைந்துள்ளன.
புதுமைப்பித்தனிலிருந்து ஜெயகாந்தனில் இருந்து வேறுபட்ட ஓர் எழுத்து மேதை சமுத்திரம். இவரது வார்ப்புகள் மனிதக் கட்சியைச் சார்ந்தவை.
பழையவர்கள் மணிக்கொடிக் காலம் என்ற ஒன்றைச் சடங்காகக் கொண்டாடுவார்கள். சமுத்திரம், மனிதக் கொடி கால எழுத்தாளர் என்பதை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் உணர்த்துகிறது.

