நூலைப் பற்றி
டாக்டர் அமரர் அண்ணா அவர்கள், 'காஞ்சி' இதழில் தொடர்ச்சியாக எழுதி வந்த கற்பனை ஓவியம்தான் இந்த வெள்ளை மாளிகையில்.
வெள்ளை மாளிகை என்ற சொற்றொடரைக் கேட்டதுமே, அது அமெரிக்க நாட்டு ஜனாதிபதியின் மாளிகை என்பதை அனைவரும் அறிவர்,
இதுவரையில் அந்த வெள்ளை மாளிகை, கருப்பு இனத்தவரான நீக்ரோவரை, தன்னுள், அதன் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.
டாக்டர் அண்ணா அவர்களது கற்பனை கண்ணில், ஒரு நீக்ரோவர், ஜனாதிபதி யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுகிறார்.
எவ்வளவு உயர்ந்த பதவியிலிருந்தா லும், கருப்பர் இனம், அதற்கு இழைக்கப் படும் கொடுமைகளிலிருந்து தப்ப முடிய வில்லை என்பதை, அந்தப் பதவி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நிகழ்ச்சிகள் கற்பனையேயானாலும், இன்றைய வரையில் நிலைமைகள் அப்படியேதான் இருக்கின்றன என்பதை அறிய முடியும்.
கருப்பு இனத்தவரைப் பற்றி அறிஞர் அவர்கள் கண்ட பல்வேறு நூல்களிலிருந்து பிழிந்தெடுத்துத் தயாரிக்கப்பட்ட தேனடைதான் இந்நூல்.
படிப்பதற்கு மட்டுமல்ல -சிந்திக்கவும் வேண்டும் - படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே இதனை மலிவு விலையில் வெளியிட முன்வந்துள்ளோம்.
வரவேற்கப்படுவதன் அளவை, அமரர் அவர்களது கருத்துக்கள் பரவுவதற்கு ஒரு அளவுகோல் என்றே மதிப்பிடுகிறாம்.
ஆங்கில எழுத்தாளர் இர்விங் வாலஸ் எழுதியுள்ள மனிதன்' என்ற நூலிலிருந்து பிறந்ததுதான் இதுவென்று அறிஞர் அண்ணா அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.
இனி, அந்த ஜனாதிபதியின் பரிதாபத்தில் பங்கேற்க நீங்கள் உள்ளே போகலாம்.
-பதிப்பகத்தார்.

