Chapter 3

கள்ளக் காதலர்களையும், கள்ளங் கபடமற்ற காதலர்களையும் கண்ணகி சிலை, ஒற்றைச் சிலம்போடு மறைத்து வைத்தாளோ அல்லது தனக்கு கிடைக்காத சுகங்கள் எல்லாம் இவர்களுக்கு கிடைக்கிறதே என்ற ஆதங்கத்தில் முகம் திருப்பி, அவர்களுக்கு முதுகைக் காட்டுகிறாளோ... அன்றைய இளங்கோ அடிகளுக்கும் இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கும் மட்டுமே வெளிச்சம்.

கவிதாவும், செல்வாவும் மெரினா கடற்கரையில் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடைப்பட்ட இரண்டும், கெட்டான் மண்வெளியில் உட்கார்ந்தார்கள். எதுக்கும் கைய கொஞ்சம் தள்ளி வையுங்க' என்று அவனைத் தள்ளிக் கொண்டே கவிதா செல்லச் சிணுங்களாய் சிணுங்கினாள். அதோடு முன்னெச்சரிக்கை... வாய்க்கு வந்தது, வயிற்றுக்கு வந்துவிடக்கூடாதே என்ற பயம். அது பயமுறுத்தலாக வெடித்தது. திடீரென்று, வீட்டில் நடந்த ரகளை நினைவுக்கு வந்தது. செல்வா அங்கே இல்லாதது போல் அனுமானித்துக் கொண்டது போல், கவிதா, தலையைத் தொங்கப் போட்டாள். உடனடியாக அவளது மாற்றத்தை புரிந்து கொண்ட செல்வா, இப்படிக் கேட்டான்.

"ஏன் ஒரு மாதிரி ஆயிட்டே கவிதா..." "இன்னைக்கு வீட்ல ஒரே ரகளை எங்கண்ணன் மோகனன், வீட்டுக்கு எப்பவாவது ஒரு தடவை வருவான். வந்த உடனேயே, அப்பா கிட்ட பணம் கேட்பான் அடிக்கப்போறது மாதிரி கையை ஓங்குவான் நான் தடுக்கப் போனால், என்னையும் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவான். அப்பாவையும் மீறி பீரோவை, உடைத்து, பணத்தை எடுத்துக்கிட்டு போயிடுவான். அவன் நடவடிக்கையும் சரியாய் இல்ல... ஐ.ஏ.எஸ். ஆபீசரான எங்கப்பாவால, ஒரு நிமிஷத்துல அவனை உள்ள தள்ள முடியும். ஆனால், பெற்ற மகனாச்சே.... திடீரென்று ஏனோ அந்த ரகள் நினைப்பு வந்துட்டுது."

"ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை இருக்கு. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வும் இருக்கு... கவலப்படாத கவிதா... எப்போதாவது ஒருநாள் ஒங்கண்ணன் திருந்துவார். பல பெரிய இடத்துப் பிள்ளிங்க இப்படித்தான் இருக்குதுங்க..."

கவிதா சிறிது விலகி உட்கார்ந்தாள். காய்ந்த மண்ணை குடைந்து குடைந்து ஈர மண்ணை எடுத்து வலது கையால் பிசைந்தபடியே, இடது கையை அவன் தோளில் போட்டாள். போட்டபடியே கேட்டாள்.

"எனக்கு பயமா இருக்குது செல்வா! பேசாம படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாமுன்னு உதறிவிட்டு, ஓங்க கிராமத்துலப் போயி செட்டில் ஆயிடலாமா?"

"ஒவ்வொரு நாளும் இப்படி கிளிப்பிள்ளை மாதிரி கேட்டதையே கேட்டால் எப்படி கவிதா? நீ இப்போ பிளஸ் டூ நானோ காலேஜ்ல முதலாம் வருடம். பட்டப்படிப்பை முடித்து எப்படியும் வேலைக்குப் போகணும். நீயும் உன் ஆசைப்படி டாக்டருக்கு படித்து கிளினிக் வைக்கணும். அதுக்குப்பிறகுதான் கல்யாணம்."

"அதுக்குள்ள நான் கிழவியாயிடுவேன்... நீங்க கிழவனாயிடு விங்க..."

"காதலர்களுக்கு முதுமை , வந்தாலும் காதல் என்றுமே இளமைதான் கவிதா"

"அதுவும் சரிதான் எப்போதோ வரப்போற கல்யாணத்தப் பற்றி இப்போ எதுக்கு பேசணும்?"

"காதல் என்கிறது கல்யாணம் வரையுன்னு கண்ணதாசன் பாடினாரே! நாம் காதலர்களாகவே இருப்போம்."

"தத்து புத்துன்னு உளறாதீங்க செல்வா! நான் ஒங்ககூட சுத்துறது எங்கப்பா காதுல விழுந்துட்டுதுன்னு வச்சுக்கவும் அவர் மூணுல ஒன்றை செய்வார் இல்லையான்னா மூன்றையும் செய்வார் ஒன்று, இந்த வயசிலேயே காதலாடின்னு அடி அடின்னு அடிப்பார் இல்லன்னா அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்கள் போலீஸ்ல பிடிச்சுக் கொடுப்பார்."

"மூணாவது?"

"என் படிப்பை நிறுத்திட்டு, ஏதாவது ஒரு பெரிய இடத்துப் பயலுக்கு கல்யாணம் செய்து வைப்பார்."

"நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கட்டும். கவலைப்படாதே. இன்னும் சில வருஷத்துல நாம் சொந்தக் காலுல நிற்கப் போறோம். அதுவரைக்கும் இலைமறைவு காய்மறைவா மூணு மாதத்திற்கு ஒரு தடவையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு தடவையோ சந்திப்போம்."

சுடிதாரோடு, அவள் நிறத்தைப் போன்ற புதுநிற துப்பட்டாவோடு அவனோடு இணைந்து உட்கார்ந்திருந்த கவிதா, அவன் அப்போதே தன்னை கைவிட்டு விட்டதுபோல் அழாக் குறையாய் பேசினாள்.

"என்ன செல்வா நீங்க...? வாரத்துல ஒரு நாள் தானே சந்திக்கிறோமுன்னு நான் ஒரு வாரத்துல ஒரு நாள்தான் இருக்கணுமுன்னு ஆசைப்படுகிறேன். ஆனா நீங்க என்னடான்னா, மாதக் கணக்கில வாய்தா போடுறீங்க... போகட்டும் உங்களுக்கு வேலை கிடைச்சதும் உங்கப்பா உங்க சாதியிலே ஒரு பெரிய இடத்துப் பெண்ணா நிச்சயிச்சாருன்னா என்ன செய்வீங்க? நீங்கதான் அப்பா பிள்ளையாச்சே!"

செல்வா, சிறிது நேரம் கண்களை மூடினான் அந்தக் கண்களில், உள் உருவமாய் அப்பா வந்து நின்றார். ஆண் சரஸ்வதி போன்ற வெள்ளாடைத் தோற்றம். அதிர்ந்து பேசமாட்டார். ஆனால், அவர் பேச்சு அழுத்தமாக இருக்கும். கிராமத்தில் எல்லாத் தந்தைகளும், தம் பிள்ளைகளைத் திட்டும்போது, இவனை அவர் “டா” போட்டு பேசக்கூட யோசிப்பார். அவர் தன்னையோ பிறரையோ திட்டி ஒரு நாளும் கேட்டதில்லை அப்படிப்பட்ட அப்பா இப்போ..

சொந்தக் கிராமத்துக்கு மானசீகமாய் போய், தந்தையின் தரிசனத்தில் மூழ்கிப் போன செல்வாவை, கவிதா, ஒரு உலுக்கு உலுக்கினாள். அவன் சோகம் அவளுக்குப் புரிந்தது பேச்சை மாற்றுவதற்காக அவன் இடுப்பில் கைபோட்டுக் கொண்டு கேட்டாள்.

"ஆமா... ஒங்கப்பா, அந்தக் காலத்துல கிராமத்துல ஆண்கள்ல பெண்கள்ல பலரை காதலிக்க செய்ததாய் திருக்குறள் மாதிரி சொன்னீங்களே. இந்த அதுக்கு ஒரு குறளோவியம் கொடுக்கிறீங்களா..."

செல்வா, மீண்டும் கடற்கரைக்கு வந்தான். தந்தையின் தரிசனத்தை அரைகுறையாய் விட்ட அதிருப்தியோடு அவளைப் பார்த்தான். அவள் சொல்லுங்க' என்று அவன் முடியை பிடித்து இழுத்தபோது, இவன் மூளைக்குள் பதிவான அப்பாவின் பேச்சு இவன் பேச்சானது.

"அந்தக் காலத்துல, அதாவது அறுபது வருஷத்திற்கு முன்னால, கிராமங்களில் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் எல்லா வகையிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டதாம். குறிப்பா கலைஞரோட "பராசக்தி", "மனோகரா" வசனங்கள், ஒரு உலுக்கு உலுக்கியதாம். "பராசக்தி" நாடகங்களை போடாத கிராமங்களே கிடையாதாம்.

அதுக்கு முந்தன காலத்துல, கல்யாணமான கணவன் மனைவி, ஒருவாரம் வரைக்கும் நாணிக்கோணி, அப்புறந்தான் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். அப்புறம் காய்ஞ்ச மாடு கம்பம் புல்ல மேய்ஞ்ச கதையாம். கல்யாணமான பதினோறாவது மாசத்திலே ஒன்பதாவது மாசம் வந்திடுமாம். கம்மாக்கரைவரை தோள் மேல கைபோட்டு, கையோடு கை சேர்த்து, பேசிக்கிட்டே போகிற இந்தத் தம்பதி, ஊருக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில், புருஷன்காரன் முன்னால் நடப்பானாம். பெண்டாட்டியானவள் அவன் யாரோ தான் யாரோ என்பது மாதிரி, அரை கிலோமீட்டர் பின்னால நடப்பாளாம். இதை எங்கப்பா ஒரு உதாரணமா சொன்னாரு... எங்கப்பாவோட குட்டாம்பட்டி வாத்தியாருக்கும், வெட்டாம்பட்டி வாத்தியாரம்மாவுக்கும் கல்யாணம். கல்யாணம் முடிந்த ஒரு மணி நேரத்துல அந்த வாத்தியாரம்மா புருஷனாகிப் போன வாத்தியாருக்கு நாலுபேரு முன்னால் காபி டம்ளரை நீட்டினாளாம். "சூடு ஆறு முன்னால் குடிங்கன்னு" சொன்னாளாம். அவ்வளவு தான். ரெண்டு பட்டி வாய்களுக்கும் அவல் கிடைச்சது மாதிரியாம். இப்படி ஒரு பொம்பள இருப்பாளா?ன்னு ரெண்டு ஊர்க் காரர்களும் ரெண்டு மாசம் வரைக்கும் சிரிப்பா சிரிச்சாங்களாம்."

"அப்போ உங்கப்பாவும் அம்மாவும் காதலித்து, கல்யாணம் பண்ணினாங்க என்கிறதா நீங்க சொன்னது பொய்தானே?"

"பொய் இல்ல கவி! நிசம்தான் எங்கம்மாவும் அப்பாவும் அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை அதாவது கலைஞரோட வசனக்கால தலைமுறை. எங்கப்பா, எட்டாவது படிக்கும்போது நல்ல தமிழ் வருமாம். கலைஞர் தமிழை கண் மூடிக்கிட்டே

ஒப்பிப்பாராம் அந்தக் காலத்துல பெண்கள் ஆறு, அஞ்சு படிச்சிட்டு பீடி சுத்துனாங்க.... எட்டாவது வகுப்பான இ.எஸ்.எல்.சி. படித்துட்டு ரெண்டு வருஷம் டிரெயினிங் படிச்சுட்டு வாத்தியாரம்மாவா வந்தவங்க. பின் கொசுவம் கட்டுகிற பெண்கள் மத்தியில் இவங்க முன் கொசுவம் வச்சு புடவை கட்டினாங்களாம். வாத்தியாரம்மாக்களுக்கு செகண்டிரி கிரேட் டீச்சர், இல்லன்னா அந்தக் காலத்து பெரிய படிப்பான எஸ்.எஸ்.எல்.சி. வாலிபர்கள் பிடிக்குமாம். பீடி சுத்துற பெண்களுக்கு ஹீரோ டெய்லர், ஒயிர்மேன், பீடிக்கடை ஏஜெண்டு, கணக்கப்பிள்ளை, பெட்டிக் கடை இளைஞன், சைக்கிளில் மிட்டாய் போடும் வியாபாரி.

ஆக மொத்தத்துல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொருத்தி மேல கண்ணாம். ஆனால், தமிழ்தான் வராதாம். அப்பாகிட்ட வந்து லவ் லெட்டர்' எழுதித் தரும்படி கேட்பாங்களாம். உடனே எங்கப்பா கலைஞர் பாணியில், கண்ணே .. பெண்ணே - முத்தே... மாணிக்கமே.... இடையில்லா இளம் பெண்ணே ... வானத்துச் சந்திரனே... பூமியில் உதித்த புதுமலரே - காணியில் பூக்கும் செண்பகமே... உன் புருவங்கள் வேல்... உன் விழிகள் மீன்... உன் கழுத்தோ சங்கு' என்கிற பாணியில் எழுதிக் கொடுப்பாராம். ஒருவேளை காதலுக்கு பதிலாக, எழுதிக் கொடுத்தவரையும், எழுதச் சொன்னவரையும் கம்பத்தில் கட்டி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதைமேல் ஏற்றிவிடலாம் என்ற அச்சத்தில், எங்கப்பாவே சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய வர்ணனையை, மார்பகத்திற்கு மேலே தான் வைத்துக் கொள்வாராம்."

சீ போங்க இந்த மாதிரி பேசுறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரி மேற்கொண்டு சொல்லுங்க.... பிடிக்காட்டியும் கேட்டுத் தொலைக்கேன்."

வீட்ல அப்பா அம்மாகிட்டயும் அண்ணன்மார் கிட்டயும் முண்டக்கண்ணி, கட்டையில் போறவள், மூதேவி, மேனா மினுக்கி, க்வுகண்ணி, சண்டாளி, சதிகாரி, பிடாரி, பேய், வீட்டக்கெடுக்கிற ஊமச்சி, பல்லிளிச்சாள்' என்று பல்வேறு பட்டங்களை வாங்கிக் கொள்ளும் இந்தப் பெண்களுக்கு கண்ணே கண்மணியே என்ற வசன நடையில் எழுதிய கடிதத்தை, எழுத்து கூட்டிப் படித்த பிறகு, எழுதியவன் மீது ஒரு கிக் வந்துவிடுமாம். அப்புறம் புளியந்தோப்பாம்.... இல்லன்னா கரும்புத்தோட்டம்..''

அப்போ ஒங்கப்பாவுக்கு ஏகப்பட்ட காதலிகளா?

நீ வேற .. எங்கப்பாவுக்கு, அப்போ வயதே பதினாலுதான். டெயலர், ஒயர்மேன் மாதிரி ஆட்களுக்கு இந்த மாதிரி லெட்டர்கள், அவங்க பேரில் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதுல எல்லாப் பெண்களுமே விழுந்துட்டாளுகளாம். ஒரு ஸ்டேஜ்ல, அதாவது எங்கப்பாவுக்கு பதினெட்டு வயசு வந்தபோது, 'நாம ஏன் இப்படி ஒரு லெட்டர் எழுதி ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடாதுன்னு ஒரு நினைப்பு வந்துட்டுதாம். இதுக்காக சிறப்புக் காதல் கடிதம் எழுதியிருக்கார். இந்த லெட்டரில் விழுந்தவள் தான் எனது அம்மா. இன்னும் எழுந்திருக்கல.... எங்கப்பா, அவ்வளவு பெரிய உள்ளூர் மேதை. கிராமத்திலேயே அந்தக் காலத்துலயே எஸ்.எஸ்.எல்.சி பாஸான முதல் படிப்பாளி. மற்றவங்க அதைத் தாண்டல.. அதோட பொது அறிவுப் புத்தகங்கள நிறையப் படிப்பாரு... வீட்ல இந்து பத்திரிகையத்தான் வாங்குவாரு... அந்தக் காலத்து வில்லுப் பாட்டாளிகளுக்கு சில சமயம் இவரே பாட்டு எழுதிக் கொடுப்பாரு... நாடகங்களுக்கு கதை வசனம் எழுதி அரங்கேற்றினவரு... லேசுப்பட்டவரு இல்ல..."

"எப்பாடி சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாச்சு. போகட்டும். உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி. புலிக்கு பிறந்தது எதுவாய் இருக்கும்.

"என்ன பைத்தியக்காரத்தனமாக கேள்வி. புலியாத்தான் இருக்கும்."

"அதனால வர்ணனைப் புலியான லட்சுமணன் என்கிறவருக்கு பிறந்த செல்வா என்கிற நீங்க, உங்க பேருக்கு ஏத்தாப்போல, என்னை வர்ணித்து ஒரு புதுக்கவிதை எழுதி இதே இந்த இடத்துல அடுத்த வாரம் வாசித்துக்காட்டணும். இல்லாட்டி நீங்க வரவேண்டியதில்ல.... சரியா?"

"சரியில்லம்மா... பள்ளிக்கூடத்துல நேர் நேர் புளிமா என்று தமிழாசிரியர் சொல்லும் போது, இதை ஏன் "மடையா" என்று சொல்லக்கூடாது சார் என்று கிண்டலடித்தவன் நான் தமிழ்ல தட்டுத் தடுமாறித்தான் தேறினேன் என்னை விட்டுடும்மா."

"புளிமா என்கிற வார்த்தைக்கு இணையாக ஒரு வார்த்தையை கண்டுபிடித்தலிருந்தே உங்களிடம் இலக்கிய ஆர்வம் இருப்பது தெரிகிறது. அதனால நீங்க எனக்கு புதுக்கவிதையில் ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்."

"எனக்கு மேடைப்பேச்சுதான் வரும். கவிதை வராதும்மா

"ஒரு துறையில் கொடி கட்டிப் பறக்கறவங்களால் மற்ற துறையிலும் பிரகாசிக்க முடியும். காரணம் இது ஒரு வகையான சக்தி. இந்த சக்தியை அழிக்க முடியாது. மாற்றிக் காட்ட முடியும் கமான்! உங்கள் கல்லூரி மேடைப் பேச்சுத் திறனை ஒரு புதுக்கவிதையாய் வடித்துக் கொண்டு வாங்க.... வரணும்.. வந்தாகணும்.."

"கவிதையா? நானா?”

"ரெண்டுந்தான்."

கவிதா வெட்டொன்று துண்டு ரெண்டாய் பேசப் பேச, செல்வா அப்படி ஆனவன் போல் துடி துடித்தான். கவிதை... அதுவும் புதுக்கவிதை... அய்யகோ... (இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை.

கவிதாவிடம் அடைக்கலமாகவும் அநாதையாகவும் நினைவலைகளில் பயணம் செய்த செல்வா , அப்படியே தூங்கிப் போனான். நள்ளிரவில் செல்வாவை, சித்திக்காரி யதார்த்தத்திற்கு கொண்டு வந்தாள்.

"உன் மனசுல என்னடா நினைப்பு? இன்னும் விளக்கை அணைக்காமல் இருக்கே? நான் சொன்னதுக்கு ஒரு மட்டு மரியாதை வேண்டாம்? அவர் வரட்டும். நாளைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும்."

செல்வா, இரண்டு துண்டாய் ஆனவன் போல், விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.