Chapter 5
மனோகர், வீட்டுக்குத் திரும்பியபோது, முற்றத்தில் அம்மா... திண்ணை விளிம்பில் அக்கா... திண்ணைச் சுவரில் சாய்ந்தபடி சங்கரி.... அம்மா முகத்தில் எள்ளும் கொள்ளும்; அக்கா முகத்தில் புருவச் சுழிப்புக்கள்... அவள் முகத்தில் கண்ணீ ர் வெள்ளம்...
மனோகர் அதட்டினான் தேக்கிவைத்த வெறுப்பையெல்லாம் சினமாகக் கக்கினான்.
"என்ன இதெல்லாம் "
அக்காக்காரி கரங்களைப் பிசைந்தபோது, அம்மாக்காரி அசுரக் கோபத்துடன் பதிலளித்தாள் மருமகளைச் சுற்றி மானசீகமாக ஒற்றைக் குற்றவாளிக் கோட்டை போட்டபடியே குரலிழகப் பேசினாள்.
"லீவு நாளும் அதுமா வீட்டைவிட்டுப் போறானே என்னம்மா நடந்ததுன்னு கேட்கப் போனேன்... என் பிள்ளையைக் காணோ மேன்னு நான் பட்டபாடு... எனக்குத்தான் தெரியும்... பெத்தவளுக்குத் தெரியுறது மத்தவளுக்குத் தெரியலியே... ஒரு மாமியார், மகன் எங்கே போனான்னு மருமககிட்ட கேட்கப் படாதா.... எப்படியோ போகட்டும்... அக்காவிஷயம் என்னாச்சு. அந்தப் பயல்களைச் சும்மா விடப்படாது."
"எம்மா! எந்த நேரத்துல, ஒனக்கு, எதைப் பேசுவதுன்னு விவஸ்தை இல்லையா? சங்கரி.... எதுக்காக ஒப்பாரி வைக்கிறே... யதார்த்தமாத்தானே கேட்டிருக்காங்க..."
சங்கரியால் கட்டுப்படுத்த முடியவில்லை ... கண்ணீரும் கம்பலையுமாய் அழுதழுது சொன்னாள் –
'அப்படிக் கேட்டால் தப்பில்லதான்... ஆனால் அப்படிக் கேட்கலியே... நான் ஒங்களை வீட்ட விட்டுத் துரத்திட்டேனாம். நான் இந்த வீட்டுக்கு வந்ததிலேருந்து, நீங்க பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டிங்களாம்.... எல்லாம் கடவுளுக்குத்தான் தெரியும்... சொல்லுங்க.... ஒங்கள நானா துரத்துறேன்? வேணுமுன்னால் எங்க வீட்டுக்குப் போயிடுறேன்..."
மனோகர், பீறிட்டுக் கத்தினான். சுவரில் முகம் போட்டு நீர்க் கோடுகள் போடுகிறவள், திடுக்கிட்டுத் திரும்பும்படிக் கத்தினான்.
"ஏன் ஊரக் கூட்டுறது மாதிரி ஒப்பாரி போடுறே. சரியான காட்டுமிராண்டி... தாய்வீட்டுக்கு ஒரேயடியாய் வேணுமுன்னாலும் போயேன்... நான் தடுக்கல..."
சங்கரி, சுவரோடு, சுவராய் உறைந்து நின்றாள். இந்த மூன்று மாத காலத்தில், அவனிடமிருந்து கேட்டறியாத வார்த்தை அந்த அதிர்ச்சியில், அழுகை, திரவத்தில் இருந்து திட நிலைக்கு வந்தது.. ஆனாலும், சொர்ணம்மவுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.... மகனின் சட்டையில் ஒட்டிய தூசி தும்புகளைத் தட்டிவிட்டாள்.
மனோகருக்கும், ஓரளவு திருப்தி. கட்டிய மனைவியை பப்ளிக்காய் அடக்கி விட்டானே!

