கத்திமேல் நடந்து....
நமக்குக் கிடைக்கும் தகவல்கள், சில சமயம் வாழ்க்கையைப் பற்றிய நமது அணுகுமுறையையே மாற்றிவிடுகின்றன. என்றாலும், இந்த மாற்றத்திற்கு தகவல்களின் தன்மையும், அவற்றை உள்வாங்கிக் கொள்கிறவரின் மனப்போக்கும், காரணமாகின்றன. என்னைப் பொறுத்த அளவில், ஏழை எளியவர்களைப் பற்றியும், வாழ்க்கையின் எந்த மட்டத்திலும் வதைபடும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் அதிகமாக எழுதிவந்தேன்; வருகிறேன். கைக்குக் கிடைத்த தகவல்கள், இந்த கருப் பொருளுக்கு வலிவு சேர்த்திருக்கின்றன.
எனது அரசுப்பணி சார்பாக சுற்றுப்பயணம் செய்தபோதும், புதிய நூல்களைப் படிக்கும் போதும், ஒவ்வொரு துறையிலும் வளமான தகவல்களைக் கொண்ட நிபுணர்களை சந்திக்கும் போதும், நான், அதுவரை பெறாத புதிய தகவல் தாக்கங்களைப் பெறுகிறேன். இவற்றை சமூக உலைக் களத்தில், புடம் போடுகிறேன். இந்தத் தகவல்களை, வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது, எனது அணுகுமுறை மாறாமல், ஒரு கிரியா ஊக்கியாகவே இருந்து வருகிறேன். ஆனாலும், நான் மாறாமல், எனது படைப்புக்கள் மாறியிருக்கின்றன. இவற்றின் சமூகத்தளம் அப்படியே இருந்தாலும், அதன் வெளிப்பாடுகள், மற்ற படைப்புகளில் இருந்து, மாறுபட்டு நிற்பதாக நினைக்கிறேன். "வாடாமல்லி"யும், "பாலைப்புறா"வும் இப்படி, ஆய்வு செய்து எழுதப்பட்ட படைப்புக்கள்.
திசைமாறும் எழுத்தாளக் கவனம்......
மானுடத்தில், கிட்டத்தட்ட கால்வாசிப்பேர் எதிர்நோக்கும் ஆண்மைக் குறைவு பிரச்சினையைப் பற்றி, ஒத்தை வீடு, கலை வடிவத்தில் ஆய்வு செய்கிறது. முற்றிலும், ஆண்மையின்மை என்பது வேறு. ஆண்மைக் குறைவு என்பது வேறு. இதனை, டாக்டர். க . காந்தராஜ் அவர்கள், நான் நினைத்தது போல், அருமையாக வேறுபடுத்திக் காட்டியுள்ளார். ஆண்மை அற்றவன், தன் பாரத்தை, விதியின் மேல் இறக்கி வைத்துவிட்டு, வேறு வேலைகளைப் பார்ப்பான். ஆனால், ஆண்மைக் குறைவு உள்ளவன் பரிதாபத்துக்குரியவன். இவனுக்கு அத்தனை ஆசைகளும் உண்டு. ஆனால், அந்த ஆசைகளை, முழுமையாய் செயல்படுத்த முடியாதவனாகிறான். மனைவிக்கோ அல்லது மற்ற பெண்ணுக்கோ, ஆரம்ப சூரத்தமைாக ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்துவிட்டு, பிறகு அதையே தன்னைமீறி தரைமட்டமாக்கி விடுகிறான். இவன், நொந்து நொந்து, வெந்து போகிறவன். நமது இரக்கத்திற்கு உரியவன்.
என்றாலும், இவன், மனிதநேயத்தோடு அணுகப்படுவதில்லை. மூலையில் ஒதுக்கி வைக்கப்படவேண்டிய பாத்திரமாகவே வைக்கப் படுகிறான். இத்தகைய பாத்திரத்தை, பிரகாசப்படுத்துவதே, இந்த "ஒத்தை வீட்டின்" நோக்கம். பொதுவாக, ஆண்மைக்குறைவு உள்ளவனின் மனைவி, வெனோடோ ஓடிப்போவதாக அல்லது தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்படுகிறது. ஆண்மைக்குறைவு உள்ளவனுக்கு உள்ள ஆசை, இயலாமை, ஏக்கம், துன்பம், துயரம், அவமானம், சுய பரிதாபம் போன்றவற்றை எந்த எழுத்தாளியும், அதிகமாக சித்தரிப்பதில்லை. வியாபார ரீதியில், இந்த பிரச்சினைக்குரியவனின் மனைவி மீதே, எழுத்தாளக் கவனம் செல்கிறது.
இந்த வகையில், இந்த "ஒத்தை வீடு", ஒரு பெண்ணின் பாலியல் மொற்றத்தைப் பற்றி மட்டுமல்லாது, அவளது கணவனின் பிரச்சினையையும், அனுதாபத்துடனும் மனித நேயத்துடனும் சித்தரிப்பதாகக் கருதுகிறேன்.
அனுபவச் சுழல்
"பயர்" என்ற திரைப்படம், வந்தாலும் வந்தது. அதற்குப் பிறகு, ஆண் பெண் - ஆகிய இருபாலரின் ஓரினச்சேர்க்கை , நியாயப் படுத்தப்படுகிறது. இது, ஒரு தவறான அணுகுமுறை என்று, நான் கருதியபோது. இதற்கு மாற்றாக, ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமென்று நினைத்தேன். நடுவண் அரசின் தகவல் துறை இணை இயக்குநராக பணியாற்றியபோது, எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவதற்காக, பல ஓரினச்சேர்க்கை இளைஞர்களை சந்தித்து இருக்கிறேன். இவர்கள், எப்படி இந்த பாலியல் திரிபுக்கு உட்பட்டார்கள் அல்லது உட்படுத்தப் பட்டார்கள் என்பதை, நேரடியாகப் பேசித் தெரிந்திருக்கிறேன். இதன் அடிப்படையில் எழுந்ததுதான், "புதை மண்." ஒரு இளைஞன், தெரிவித்த அவனது அனுபவத்தைச் சுற்றியே, இந்தப் படைப்பை, சுழல விட்டிருக்கிறேன்.
இந்த இரண்டு கருப்பொருட்களிலும், ஆபாசம் தொனிப்பது இயல்பு. ஆனாலும், சமூகப் பொறுப்பாளன் என்ற முறையில், கத்திமேல் நடப்பது போலவே, சில விவகாரங்களை, இலைமறைவு காய்மறைவாய் எழுதி இருக்கிறேன். அப்படியே ஆங்காங்கே தவர்க்க முடியாத படி, ஒரு சில வார்த்தைகள், வெளிப்பட்டால், அவை, ஒரு டாக்டர், தனது நோயாளியை, உடல் திறந்தும், மனம் திறந்தும் பார்ப்பது போன்றது.
கத்தியும் "கத்தி"யும்.....
கத்திமேல் நடந்தாலும், இறுதியில், "கத்தி"யும் சொல்ல வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இந்த இரண்டு படைப்புகளிலும், இறுதியாக வரும் சிகிச்சை முறை, கட்டுரைத்தன்மை வாய்ந்தது போல் தோன்றலாம் பிரச்சாரவாடை என்றும் பேசப்படலாம். என்றாலும், இது தவிர்க்க முடியாதது
இவற்றைப் படிக்கும் வாசகருக்கு, இந்த இரு பிரச்சினைகளுக்கும், முடிவு கட்டலாம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வை, தோற்றுவிக்கவேண்டும். அதற்கு, யதார்த்தமான சிகிச்சை முறைகளை, உள்ளது உள்ளபடியே கொடுக்க வேண்டியது. அவசியமாகிவிட்டது. கதையை மட்டுமே விரும்பு கிறவர்களுக்கு, இந்த இரு படைப்புக்களின் இறுதி அத்தியாயங்கள், சலிப் பூட்டலாம். ஆனால், இவை, கருத்தைச் சுற்றிய படைப்புக்கள், படைப்பைச் சுற்றிய கருத்துக்கள் அல்ல. இவற்றைப் படிக்கிற ஒரு சராசரி வாசகருக்கு, பாலியல் திரிபுவாதிகளை, அனுதாபத்துடன் நோக்கவும், இயலுமானால் மீட்கவும் வகை செய்யும் என்றும் நம்புகிறேன். "ஒத்தை வீடு', "மாலைமதி"யில் வெளியான உடனேயே, கொடைக்கானலில் உள்ள, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, இதனை தம்பதியருக்கு வழங்கும் ஆலோசனைக்கு ஒரு ஆதார நூலாக வைத்திருப்பதாய் அறிகிறேன்.
இந்த இரண்டு படைப்புகளும், "மாலைமதி"யில், வெளியானவை. பொதுவாக, மாத நாவல்கள், வாசகனை மலினப்படுத்தும் வகையிலிலேயே வெளியிடப்படுவண்டு. என்றாலும், நான் எப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம், அப்படியே பிரசுரிக்கப்படும் என்று வாக்களித்ததோடு, தரமான ஓவியங்களோடு, அந்த வாக்கை நிறைவேற்றிய, "குமுதம்" ஆசிரியக் குழுவிற்கு , என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு படைப்புக்கருக்கள், உருவம் பெறுவதற்கு, டாக்டர். க. காந்தராஜ் அவர்களே காரணமாவார். இந்த படைப்பிற்கு, ஒரு அற்புதமான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார். அவர் தொழில் முறையில், பாலியல் நிபுணராக இருந்தாலும், பொது வாழ்வில், மிகச் சிறந்த பேச்சாளர்; இலக்கியவாதி. அவருக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், வட சென்னையில் வாழும், தாவரயியல் பேராசிரியர், முனைவர். சுப்பிரமணியன் அவர்கள், வழக்கம் போல், பல அரிய விஞ்ஞானத் தகவல்களை தந்துதவி, இந்த படைப்பை வளப்படுத்தியதற்காக, நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த நூலை, ஏகலைவனின் பிற நூல்களைப்போல், அருமையாக அச்சிட்டுக் கொடுத்த மணிவாசக நூலகப் பேராசிரியரும் சிந்தனையாளருமான முனைவர் ச. மெய்யப்பன், அவருடன் இணைந்து பணியாற்றும் தோழர்கள் சோமு, குருமூர்த்தி ஆகியோருக்கும், இந்த மாதிரியான, அறிவும் உணர்வும் கலந்த படைப்புக்களை எதிர்பார்த்து வாங்கிப் படிக்கும், எண்ணற்ற வாசகத் தோழர்களுக்கும், என் மனமார்ந்த நன்றி.
தோழமையுடன்,
சு. சமுத்திரம்.
பாலியல், இனப்பெருக்கம் போன்றவற்றில், நாம் இயற்கையிடம். குறிப்பாகத் தாவரங் களிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது முழங்கால் உயரத்திற்குச் சுருட்டை இலைகளோடு கிடக்குதே பிரளிச் செடி அது வண்ணத்துப் பூச்சி, ஆரம்பத்தில் புழுவாய் இருப்பது போல், தரையோடு தரையாய் சின்ன சுருட்டை முளையாய்த் தோன்றும். இப்படிப் பல முளைகள் சிதறிக் கிடக்கும். இந்த முளைகள் எல்லாமே பெண் பாலாய் இருந்தால், இந்த முளைகளில் ஒன்று வேகவேகமாய் வளர்ந்து. பெண் செடியாகி, ஒருவித இனமாற்றத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம், தரைக்கு வந்து, நீரில் கரைந்து, பிற முளைகளில் ஊடுறுவி, அத்தனை பெண் முளைகளையும், ஆண் செடிகளாக்கி விடும்.
ஒரு ஆல விதை. எப்போது செடியாகி, மரமாகி, விழுதாகி, பல்கிப் பரவவேண்டும் என்பது, அந்த விதையிலேயே கணிப்பொறி திட்டங்களாய் உள்ளன. இந்த திட்ட நிகழ்வுகள் நிறைவு பெறுவதற்கு. அந்த விதையை விதைப்பதும். விதைத்ததை சுற்றி முள் வேலியைப் போடுவதும், உரமிடுவதும் காடுகளில் தானாகவும், நாடுகளில் நம்மாலும் நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு தவறும்போது, இந்த நிகழ்வுகளுக்குள் தடுமாற்றம் ஏற்படுகிறது.
இதேபோல், ஒரு குழந்தைக்குள் இருக்கும். மனிதனை அல்லது மனுஷியை - முழுமையாக வெளிக்கொணர, குடும்பத்தளமும், சமூகத்தளமும் ஒத்து வராதபோது. அந்தக் குழந்தை. பாலியல் திரிபு போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் மனிதனாகிறது. இவனுக்கு அல்லது இவளுக்கு பாலியல் மீறல், பழக்கமாகிறது.

