முன்னுரை — டாக்டர். க. காந்தராஜ் பாலியல் நிபுணர், சென்னை

"இந்த இரண்டு குறுநாவல்களுக்கும், நீர்தான்யா முன்னுரை எழுதணும் என்றார் சு. சமுத்திரம் அவர்கள். முன்னுரை எழுதுற தகுதி எனக்கிருக்கா? யோசிச்சுதான் சொல்றீங்களா? என்று கேட்டதுதான் இந்த நாவலே, உம்மோட தொழில் சம்பந்தப்பட்டது. அதனாலே நீங்க எழுதினா சரியா இருக்குமுன்னு பட்டது. படிச்சு எழுதுமய்யா' என்று நாவலை என் கையில் திணித்துவிட்டுப் போனார், நண்பர் சமுத்திரம்

எனக்குக் கதைகள் படிப்பதில் அதிகமாக ஆர்வம் இருந்ததில்லை. வரலாறு, மானுடவியல், அரசியல், சினிமா (டெக்னிக்கல் விஷயங்கள் பற்றி - நடிகர் நடிகையர்களைப் பற்றி அல்ல) போன்றவை சம்பந்தமான என் தொழிலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் ஆர்வம் அதிகம். அதேசமயம், சு. சமுத்திரம் போன்றவர்களின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்க்கும். காரணம், வரலாற்றிற்கும், சமுத்திரம் அவர்களின் நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் வரலாற்றில், முன்னொரு காலத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய செய்திகளும், அவர்களின் சாதனைகள், வேதனைகள் மட்டுமின்றி வாழ்ந்த விதமும் அடையாளமின்றி வீழ்ந்த விதமும் சொல்லப்பட்டிருக்கும். இவருடைய நாவல்களும் சிறுகதைகளும் இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்ப வர்களின் வரலாறாக இருக்கும்.

சு. சமுத்திரத்தின் கதாபாத்திரங்கள் கற்பனையாக தோன்றாமல், "இதோ இவர்தான் அந்த நாவலில் வருகிற அவரா" என்று நாம் அடையாளம் காட்டுகிற அளவுக்கு உயிருள்ளதாக இருக்கும். ஆனால், அந்த பாத்திரங்களுக்கு வருகிற பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற எந்த எழுத்தாளரும் சிந்திக்காத அல்லது தொடப்பயந்த ஒரு சமூகப் பிரச்சினையை, தன் கதாபாத்திரங்கள் வழியாக தனக்கே உரித்தான பாணியில் எடுத்துச் சொல்லும்போது, நமக்கு ஏற்படுகிற சிலிர்ப்பும் தாக்கமும் அவரது எழுத்துக்களின் சக்திக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மீண்டும் வித்தியாசம்...

சமுத்திரம் மீண்டும் வித்தியாசப்பட்டிருக்கிறார். தமிழ் நாவல்களில், பொதுவாக எந்தப் புதுமையும் இருப்பதில்லை. சினிமாவைக் குறை கூறுகிற இந்த தமிழ் எழுத்தாளர்களின் நாவல்களும், பெண்களைச் சுற்றியே இருக்கும். ஒரு மத்திய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சம்பிரதாயமான ஒரு பெண்ணுக்கு நேருகிற குடும்பப் பிரச்சினைகள் தான் பெரும்பாலான தமிழ் நாவல்களின் கரு.

எதிர்வீட்டு வாலிபன், விரோதமாகிவிட்ட அத்தை அல்லது மாமா மகன், சக மாணவன், சக ஊழியன் என்ற யாராவது ஒருவரிடத்தில் காதல், வேண்டாத திருமணம், ஆகாத மாமியார், மலடு, நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை அல்லது கணவன், சரியான முறையில் வளராத மகன் - மகள், வரதட்சணை என்று ஒரு வட்டதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், பெண்களுக்கு முப்பத்து மூன்று என்ன - முன்னூறு சதவீதமே உரிமை வழங்கினால் கூட, இவர்கள், இந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

ஏதோ அத்தி பூத்தாற்போல், சிலபேர் துப்பறியும் நாவல்கள் எழுதுகிறார்கள். அதிலும்கூட "Damsel in Distres" (ஆபத்தில் இருக்கும் அழகி) என்ற ஃபார்முலா இருக்கும். விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் எழுதுவது என்பது தமிழில் இல்லையென்றே சொல்லலாம். ஒரு பிரபலமான விஞ்ஞானத் தொடர், பின்னால் அது தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது. அதில் எத்தனை பங்கு சுய கற்பனை என்றால், சோகம். 1984 என்ற மிகப் பிரபலமான ஆங்கில நாவல், Presiclent's Analyclot, West World , Logan's Run போன்ற பிரபல ஆங்கிலப் படங்களின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி, தன் சுய கற்பவனையில் எழுதியதாகக் காட்டிய அந்தப் பிரபல எழுத்தாளரின் முயற்சி, விவரம் தெரியாதவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது வேறு விஷயம்

சமுத்திரத்தின் நாவல்களில் சம்பவங்கள் கொஞ்சம்தான் இருக்கும். ஆனால், மனிதர்களின் மனவியல், நூல் முழுவதும் விரவிக் கிடக்கும். சமூகத்தில், வெளிவராத, இருட்டாக்கப் பட்டிருக்கிற பல மனோ வியாகூலங்களை அலசி ஆராய்ந்து அந்த சூழ்நிலையில், மனிதர்களின் நடத்தையில் ஏற்படும் விசித்திர, புரியாத மாறுதல்களை அப்படியே எழுத்துக்களின் மூலமாகக் கொண்டுவரும் அற்புத சக்தி கொண்டவர் சமுத்திரம்.

சிட்டுக்குருவி - கருங்குரங்கு - பச்சைப்புறா

முதலாவது நாவலின் மையக்கரு, ஆண்மை இழப்பு. இது, நம் நாட்டைப் பொறுத்தவரையில் சிட்டுக்குருவி லேகியம் விற்பவர்கள் சம்பந்தப்பட்டது என்று அசட்டை செய்கிற விவகாரம். அதன் உள்ளே நுழைந்து பார்ப்பவர்கள், மிகமிகக் குறைவு. எருதின் புண் காக்கைக்கு எப்படித் தெரியும் என்பார்கள். அதைப்போல் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர்களின் வேதனையை, சமூகம் அக்கறையோடு கேட்டதுகூட கிடையாது. இந்தத் துறையில் இருக்கும் எங்களைப் போன்ற டாக்டர்கள், பலசமயம் இந்த மாதிரி பாதிக்கப்பட்டவர்களின் சில விபரீத முடிவுகளைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறோம். ஆங்கில மருத்துவம், சரியான மருத்துவம் கண்டு பிடிக்காமல் திணறிக் கொண்டிருக்கம் பிரச்சினையில், இதுவும் ஒன்று. அதன் விளைவு, சிட்டுக்குருவிகளும், கருங் குரங்குகளும், பச்சைப்புறாக்களும், பச்சோந்திகளும் பரிதவித்துப் போகின்றன.

ஆண்மைக் குறைவைப் பற்றி தமிழில் வேறு நாவல்கள் வந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது. ஏர்னஸ் ஹெமிங்வேயின் சன் ஆல்ஸோ ரைஸஸ் (Sun Also Rises) என்ற ஆங்கில நாவல், சில மாய்பஸான் கதைகள், தமிழில் "சாரதா” என்ற திரைப்படம் - எனக்குத் தெரிந்து இவைகள் தான், இந்தப் பிரச்சினையை ஓரளவு அணுகியவை. இவற்றில் கூட, ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்டவனுடைய வாழ்க்கையில் வந்த பெண்கள் அல்லது அவன் மனைவி என்று பெண்களின் பிரச்சினைகள்தான் அலசப்பட்டன மீண்டும், என்னைப் பொறுத்தவரையில், ஆண்மைக் குறைவினால், ஆண்- பெண் இருபாலர்க்கும் ஏற்படும், உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளை சம அளவில் விறுவிறுப்பான முறையில் அணுகியிருக்கும் முதல் நாவல் “ஒத்தை வீடு” என்று கருதுகிறேன்.

யதார்த்தம்

சமுத்திரம் நாவல்களில், வழக்கப்படி எனக்கு ஏற்படும் பிரச்சினை, இதில் சற்று அதிகமாகவே ஏற்பட்டது. இந்த நாவலை மேலோட்டமாகப் படிக்க முடியாது. சமுத்திரத்தின் ஒவ்வொரு அலையும் வித்தியாசமானவை. அதைப் போலவே சமுத்திரம் நாவல்களின் ஒவ்வொரு வரியும் பல்வேறு கருத்துக்களோடு நம் மனதைத் தொடும். ஊருக்குப் பொது வழிப்பாதை போட நிலத்தில் இடம் கேட்டு ஆக்கிரமிக்க முயலும் கிராமப்புற ஊரார்களை, அதிகாரிகள் மூலம் சரிக்கட்டவேண்டும் என்ற பிரச்சினையைக் கொண்ட சகோதரியும், உணர்ச்சியின் உந்துதல்களுக்கு எதிர்பார்த்த மாதிரி செயல் படுகிற மாமியாராக நாயகனின் தாயும், பக்கத்து வீட்டு உமாவும், தன் மனைவிமீது கண் வைத்திருப்பதாக நாயகனை சந்தேகிக்க வைக்கும் இந்திரனும், அவ்வப்போது வந்தாலும், அவர்கள் நாவலின் யதார்த்ததத்துக்கு காரணமாகிறார்கள்.

ஆண்மைக் குறைவில், இரவு ஏமாற்றத்தை எத்தனை அழகாக நாசூக்காக சொல்கிறார் சமுத்திரம்! நாயகி காலையில் குளிக்காமல் பூஜை அறைக்கு சென்று வருகிறாள். அவள் தலையிலிருந்த மல்லிப்பூக்களின் தன்மையை வைத்தே . கணவனின் சகோதரி எதுவுமே நடக்கவில்லை என்பதை புரிந்து கொள்கிறாள் என்பது, நாகலாகியிருக்கக் கூடியதை நளினமாக்கிய கவிதை "ஐம்பது இரவுகளில், பௌர்ணமிக்குப் பதிலாக

அமாவாசைகளே வந்தன." எப்படிப்பட்ட விஷயத்தை எத்தனை எளிமையாக சமுத்திரம் எழுதிவிட்டார் ! இல்லை ஓவியமாகத் தீட்டிவிட்டார்.

நாத விந்து விளக்கம்....

"நாத விந்து கலாதி நமோ” என்ற அருணகிரிநாதரின் வரிகளுக்கான விளக்கம், எனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. சிருஷ்டியின் ரகசியத்தை, இயற்கை (கடவுள்?) மட்டுமே அறிந்திருக்கும் ஒரு விந்தையை, நம் முன்னோர்கள் ஒரே வரியில் சொல்லி-யிருக்கிறார்கள் என்று எண்ணும்போது, அவர்களின் அறிவியல் அறிவில் கோடியில் ஒரு பங்குகூட இன்றைய தமிழனிடத்தில் இல்லையே என்று நெஞ்சு கனக்கிறது. ஆங்கிலத்தில் படித்து சுயமாக சிந்திக்கும் திறனை இழந்த நாம், நம் முன்னோரின் இம்மாதிரி அறிவியல் திறமைகளை எண்ணிப் பெருமூச்சு விடுவதைத் தவிர, வேறு வழியில்லை. இந்த இரு பக்கங்களுக்கு நான் சமுத்திரம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். வரிக்கு வரி மனப்பாடம் செய்ய வேண்டிய அளவுக்கு அறிவியலும் தத்துவ விளக்கங்களும் கொண்ட இரு பக்கங்கள் அவை.

"பெண் என்பவள் சக்தி சக்தியைத் திருப்தி படுத்த எந்த ஆணாலும் முடியாது.”

"தாம்பத்ய உறவில், மனைவியை அடக்க நினைக்காதே, அடங்க நினை."

"அவளை பப்ளிக்காய் அடக்கணும் , பிரைவேட்டாய் அடங்கணும்."

"ஆணாய் நடக்க முடியாதவன், பிணமாய்த்தான் போகவேண்டும்."

"பொம்மனாட்டிக்கிட்ட போறவன் சாதா ஆம்பிளைன்னா, அவளைக் கட்டி காக்கிறவன் பெரிய ஆம்பிளை."

இவை போன்ற விவாதத்துக்குரிய சிந்தனையைக் கிளறக்கூடிய சமுத்திர முத்துக்கள் நூலின் சிறப்பு.

மனவியல் ...

மனவியல் ரீதியாக, ஆண்மைக் குறைவானவன், அதை நிவர்த்தி செய்து கொள்ள, மீண்டும் மீண்டும், வெவ்வேறு பெண்களிடம் முயற்சிப்பான். அடி மனதில் அழுந்திக் கிடக்கும் பயம், முயற்சிக்கும் நேரத்தில், அவனை ஆக்கிரமித்து, அவனை செயல்பட விடாமல் செய்துவிடும். இந்த மனவியல் மருத்துவத்தின் உண்மையை வெகு அழகாக நெஞ்சைத் தொடும்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார் சமுத்திரம்.

குறிப்பாக, அலுவலகத்தில் வேலை பார்க்கும் கங்கா என்ற பாத்திரம், அதன் மூலம் வெளிப்படுகிற சில அனுபவ விளக்கங்கள், மனிதர்களை ஒரு புதிய கோணத்தில் பார்க்க வைக்கிறது. ஹோட்டலில் நடக்கிற சம்பவங்கள், அதன்பின் கங்காவுக்கும் மனோகருக்கும் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் சமுத்திரத்தின் பார்வையை எந்தப் பரிமாணம் கொண்டு அளப்பது என்ற பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நான் ஆரம்பத்தில் கூறியதுபோல், சமுத்திரம் அவர்களும் இந்த மையக் கருத்தைக் கொண்ட வேற்று மொழி நாவல்களிலிருந்து சம்பவங்களை எடுத்து, அதைத் தன்னுடைய எழுத்துக்களாகக் காட்டி சுலபமாக பேர் வாங்கியிருக்கலாம். ஆனால், இவர் சமுத்திரமாயிற்றே!

"ஒத்தை வீட்டின் " ஒவ்வொரு பக்கத்திலும், அவரின் உழைப்புத் தெரிகிறது. சித்த மருத்துவமும், அலோபதி மருத்துவமும், மனவியில் ரீதியான இந்த பிரச்சினையை எப்படி அணுகுகின்றன என்பதை வெகு நுட்பமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார். குடும்பத்திலும், சமூகத்திலும் நடக்கும் பல்வேறு இனம் புரியாத குழப்பங்களுக்கு, ஆண்மைக் குறைவு போன்ற பாலியல் பிரச்சினைகள் எப்படி காரணமாகின்றன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வைத்திருக்கிறார். மருத்துவர்களுக்கே தகராறு செய்யும் இந்த விஷயத்தை, விறுவிறுப்பாகவும், சுவையாகவும், உள்ளத்தை ஊருடுறுவும் வகையிலும் சொல்ல சமுத்திரம் ஒருவரால்தான் முடியும்.

புதை மண்

புதை மண்ணில், சு. சமுத்திரம் என்ன புதிதாக சொல்ல வந்திருக்கிறார்..?

புதிது புதிதாகத் தோன்றிவரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும், தொழில்களும், ஒரு தனி மனிதனின் அடிமனதில் ஏற்படுத்துகிற பிரச்சினைகளும், அதனால் அவனுடைய வாழ்க்கையே திசை தடுமாறிப் போவதையும், பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவைகள் பரவுவதற்கு, அவை காரணமாக இருப்பதையும் - என் போன்ற இந்தத் துறையைச் சார்ந்த மருத்துவர்கள் உணர்ந்து வேதனையடைந்து, இதைமாற்ற வழியுண்டா என்று குழப்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான், சு. சமுத்திரம் அவர்கள், தன் சக்திமிகுந்த எழுத்தாற்றலை, இந்தத் துறையின் பக்கம் திருப்பி, இளைஞர் சமூகத்திலும், இலக்கிய உலகத்திலும் வியக்கத்தக்க அற்புதமான மாறுதல்களை உருவாக்கியிருக்கிறார்.

அலிகளைப் பற்றிய அவரது வாடாமல்லியும், எய்ட்ஸ் நோயாளிகளைப் பற்றிய அவரது பாலைப்புறாவும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாபெரும் புரட்சி என்பது உலகறிந்த உண்மை . இந்தப் புதைமண், அதேபோல் சந்தர்ப்ப வசத்தால், தன்னினச் சேர்க்கையாளனாக (HOMO SEXUAL) மாறிய ஒரு கிராமத்து இளைஞனின் கதை. இதைப் படிக்கும் போது, அந்த இளைஞனின் நாட்குறிப்பை, அவனது அனுமதியோடு படிக்கின்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அவன் ஹோமோ செக்சுவலாக மாறி, அதை, அவன் ரசிக்க ஆரம்பிக்கும்போது, நமக்கு ஏற்படுகிற பதைபதைப்பு அவன் அந்த செயலில் ஈடுபட்டு, அதை உணர்ந்து வேதனைப்படும்போது, நமக்குள் கசிகிற ரத்தக்கண்ணீர், அவன் அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடும்போது, நமக்கு ஏற்படுகிற ஒரு நிம்மதி - நாவலின் உயிரோட்டத்துக்கு இந்த உணர்வுகளே சாட்சி.

சமூக அக்கறை

சு. சமுத்திரம், நுனிப்புல் மேய்பவர் அல்ல என்பதற்கு, இந்த நூல் மற்றொரு எடுத்துக்காட்டு. தன்னினச்சேர்க்கையில் ஈடுபட எந்தச் சூழ்நிலைகள் காரணம், அதிலிருந்து விடுபட பாதிக்கப் பட்டவனும், அவனைச் சேர்ந்தவர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாகக் சித்தரித்திருப்பது சமுத்திரம் அவர்களின், சமூக அக்கறைக்கு சான்றாக விளங்குகின்றது.

வழக்கப்படி சமுத்திரம் அவர்களின் நையாண்டிக்கும் இந்த நூலில் நிறைய இடமிருக்கிறது. சில உதாரணங்கள் :

"கட்டிடப் பிளானை தலைகீழாகப் பார்த்த கார்ப்பரேஷன் கிளார்க்."

"அவர் எண்ணம் சம்ப்பில் விழாத, கார்ப்பரேஷன் தண்ணீர்போல் ஆனது."

"இந்தக் கவிஞர்களின் கவிதைகளையே திருடி, அங்குமிங்குமாய் மாற்றி, அசல் சினிமாக் கவிஞனாய் ஆகிவிடலாம்."

"அய்யகோ" - இது அவன் தந்தை, கலைஞரின் தாக்கத்தால் அடிக்கடி சொல்லும் வார்த்தை

"குழந்தைகளை யூனிபாரமாகக் கூட்டி வந்தான்."

"செல்வம் என்றால் மரபுக்கவிதை; செல்வா என்றால் புதுக்கவிதை."

இப்படி நூல் முழுக்கப் பரவிக் கிடக்கும் மாறுபட்ட பார்வைகள். ராமனும் லட்சுமணனும் வெவ்வேறு தாய்க்குப் பிறந்தவர்கள். அதனால்தான், பாசமாக இருக்க முடிந்தது. ஒரே தாய்க்குப் பிறந்த பிள்ளைகள் பங்காளிகளாக மாறும்போது, பாசம் போய்விடுகிறது.

அடுத்த பிறவியில் ஐந்து கணவர்களுக்கு மனைவியாக வேண்டும் என்று தவமிருந்து திரௌபதியாகப் பிறந்த நளாயினியும், ராவணன் படத்தை வரைந்து, அவனை நினைத்த சீதையும், மைத்துனன் சுக்ரீவனோடு, காம விளையாட்டு நடத்திய, வாலியின் மனைவி தாராவும், கணவனின் செயல் சரியில்லை என்று வாதிட்ட மண்டோதரியும், பஞ்ச பத்தினிகள் என்று கொண்டாடப்படுகிறார்கள். மண்டோதரியைத் தவிர, மற்ற நால்வருமே கற்பில் சந்தேகத்துக்குரியவர்கள் என்றாலும், இவர்களை பத்தினி என்கிறது மதம். மதம், பத்தினித் தன்மைக்கு கற்பு தேவையில்லை என்று உறுதியாகக் கூறுகிறது.

இதுபோன்ற கருத்துக்கள், என் போன்ற வயோதிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். எப்படிப்பட்ட வாதங்கள் ! நூல் முழுவதும் இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனைகள்... ஒரு வரியைக்கூட தள்ளிவிட்டு போக முடியவில்லை .

சினிமாத்தனம்

முடிவு சற்று சினிமாத்தனமாக இருந்தாலும், தவறுக்கு வருந்துபவனை வாழ்வதற்கு சமூகம் அனுமதிக்க வேண்டும் என்ற நேர்சிந்தனை, இந்த நூலைப் படிக்கும், பல தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு, நம்பிக்கையையும், நல்லவழி சென்று நல்லபடி வாழ்வதற்கான ஊக்கத்தையும் கொடுக்கும்.

என்னைப் போன்ற மருத்துவர்களெல்லாம், நோயாளிகளிடம் நிறையப் பேசி, ஆலோசனை வழங்கலாம். ஆனால், ஒரு "புதைமண்” - ஒரு “ஒத்தை வீடு” ஏற்படுத்துகிற தாக்கம், ஆயிரம் மருத்துவர்களின் சேவையையும் மிஞ்சி நிற்கும்; உடனடிப் பலனையும் ஏற்படுத்தும்.

எல்லா இளைஞர்களும், அவர்களைப் பெற்றவர்களும் கண்டிப்பாகப் பலமுறை படிக்கவேண்டிய நூல். இது சிபாரிசு அல்ல; ஆலோசனை