காதல் அரும்பியது
குழந்தை பாலுவுக்காகப் பவானி சென்னை வந்தாள். பசுமலையில் ஊரார் அவளைக் கண்ட விதமாகப் பேசி ஏசுவதைப் பொறுக்க முடியாமல் அவன் நற் பெயரெடுத்து, நல்வாழ்வு வாழவேண்டும் என்கிற எண்ணம் அவள் மனத்துள் எழுந்தது. பாலு சென்னை வந்த பிறகு படிப்படியாக அவன் குணத்தில் மாறுதல் ஏற்பட்டது. 'பசுமலையில் இருந்த பாலுவா இவன்!' என்று பெற்ற தாயே வியந்து போற்றும்படியாக அவன் நடந்து கொள்ள ஆரம்பித்தான். முன்னைப் போல அவன் இப்பொழுது சுமதியுடன் காரணமின்றிச் சண்டை பிடிக்க முடியாது. ஏனெனில், அவளும் இவன் வம்புக்கு வருவதில்லை. ஆனால், அவனால் மட்டும் அந்தச் சிறு சம்பவத்தை மறக்க முடியவில்லை . சுமதியின் பேரில் கோபித்துக் கொண்டு ஜெயஸ்ரீயின் புஸ்தகத்தைக் கிழித்தவன் அல்லவா!?
அதன் பிறகு எத்தனையோ முறைகள் அவன் ஜெயஸ்ரீயைப் பல இடங்களில் சந்தித்திருக்கிறான். அவளுடன் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியும் இருக்கிறான். ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி பிரஸ்தாபித்து ..இப்படிச் செய்தது என் தவறு தான்" என்று அவளிடம் கூறிவிட வேண்டும் என்கிற ஆசை அவன் உள்ளத்தில் மேலோங்கி இருந்தது. ஆனால், அதற்குப் போதிய துணிச்சலோ வயதோஏற்படவில்லை. அத்துடன் ஜெயஸ்ரீ ராதாவைப்போல எல்லோருடனும் சகஜமாகப் பழகும் நிலையில் இல்லை. அதாவது எப்பொழுதும் ஒருவித சங்கோஜம் அவளிடம் நிலைத் திருந்தது. சுமதியைத் தேடிக் கொண்டு அவள் அங்கு வரும்போதெல்லாம் பாலு இருப்பதைப் பார்த்திருக்கிறாள். நீண்ட அவள் கருவிழிகள் இரண்டும் சஞ்சலத்தால் சுற்றிச் சுழன்று அவனைச் சரியாகப் பார்க்க விடாமல் அடித்து விடும். ஏதோ ஒரு வெட்கம். கூடவே ஒரு பயம் எல்லாமாகச் சேர்ந்து கொள்ளும். அவள் அந்த இடத்தில் நிற்காமல் விறுவிறு என்று சுமதியைத் தேடிக் கொண்டு போய் விடுவாள்.
'என்ன இப்படி விழுந்தடித்துக் கொண்டு வருகிறாய். கூடத்தில் எதைப் பார்த்துவிட்டு இப்படிப் பயப்படு கிறாயாம்!' என்று உரத்த குரலில் கேட்டுக் கொண்டே சுமதி கூடத்தை எட்டிப் பார்த்து விட்டு. ’ஹே! ஹோ பாலுவைப் பார்த்துவிட்டா இப்படிப் பயப்படுகிறாய்?' என்று அவளைக் கேலி செய்வாள்.
ஜெயஸ்ரீக்கு மேலும் வெட்கமாகப் போய் விடும்.
“ஐயே! சும்மா இருடி அம்மா. நீ போடுகிற கூச்சல் எட்டுத் தெருவுகளுக்குக் கேட்கும் போல் இருக்கிறதே. இதற்குத்தான் இங்கே நான் வருகிறதில்லை..." என்பாள். சுமதிக்கு இவளுடைய நாணத்தைப் பார்த்து மேலும் இவளை நையாண்டி செய்யத் தோன்றும்.
”வந்தால் என்னவாம்! எங்கள் பாலு என்ன, நீ பயப்படும்படியாக அவ்வளவு மோசமாகவா இருக்கிறான்? செக்கச் செவேல் என்று ராஜா மாதிரி அவனும் அவன் கிராப்பும்! போடி பைத்தியக்காரி. வீண் வேஷம் போடுகிறாய்"
இவர்கள் பேச்சை ஒன்றுவிடாமல் ரசிப்பான் பாலு. மெதுவாக பூமி அதிராமல் மென்னடை போட்டுக் கொண்டே சற்று முன் வந்த சுந்தரியின் முக லாவண்யத் தில் அவன் தன்னையே மறந்திருப்பான். உலகத்தில் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள். அவனுடன் எத்தனையோ பெண்கள் படிக்கிறார்கள் இப்படி ஒரு மென்மை, இம்மாதிரி ஓர் அடக்கம், இம்மாதிரி ஓர் அழகு அவர்களிடத்தில் அவன் காணவில்லை . காதல் கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் வயதை அவன் பூராவாக அடைந்திராவிடிலும் அவன் மனத்தே அரும்பி இருக்கும் அந்தக் காதல் நாளடைவில் மலர்ந்து மணம் வீசினால் போதும் என்று தான் அவன் நினைத்தான். அதை அந்த புனிதமான காதலை அவன் அம்பலப்படுத்த விரும்பவில்லை. தன் இதயத்துள் வைத்துப் பூட்டிப் பாதுகாக்கவே விரும்பினான்.
ஜெயஸ்ரீக்குத் தன் பாட விஷயமாகப் பல சந்தேகங்கள் எழும். பாலுவைக் கேட்டால் விளக்கித் தருவான் என்பதும் தெரியும். இருந்தாலும் கேட்பதற்குத் துணிச்சல் இருக்காது.
”சுமதி! இதைப்பற்றி நீயே கேட்டுச் சொல்லி விடேன்" என்று சுமதியைத்தான் தொந்தரவு செய்வாள் அவள். ”ஏனோ அம்மா! உங்கள் இருவருக்கும் நடுவில் நான் வக்காலத்து வாங்க வேண்டு மாக்கும் ஊஹும்! முடியாது நீதான் கேட்க வேண்டும்?" என்று கூறி இருந்த இடத்தை விட்டு அசைய மாட்டாள் சுமதி.
இதற்குள் பவானி வீட்டில் இருந்தால்... "எங்கே அம்மா வந்தாய் ஜெயஸ்ரீ?" என்று விசாரிப்பாள்.
”நீங்கள் சும்மா இருங்கள் அத்தை. அவளுக்குப் பாலுவிடம் ஏதோ பாடம் கேட்க வேண்டுமாம்!"
”கேளேன் அம்மா. அங்கே கூடத்தில் தானே இருக் கிறான்?”
தன் உள்ளத்தில் அரும்பியிருக்கும் காதல் அரும்பின் தேவதை இப்படித் திக்கித் திணறி அவதிப்படுவதைப் பார்க்க அவன் உள்ளம் சகிப்பதில்லை.
”என்ன அம்மா அது?” என்று கேட்டுக் கொண்டே வந்து மேஜை அருகில் உட்கார்ந்து அவள் சந்தேகங்களை விளக்குவான் பாலு. அப்பொழுது அந்தப் பெண்ணின் கண்களை அவன் எவ்வளவு தான் சந்திக்க முயன்றாலும் அந்த நயனத் தாமரைகள் பூமியை விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றுவிடும்.
”புரிகிறதா?" என்று கேட்பான்.
”உம்....”
"எங்கே, திரும்பவும் நான் சொன்னதைச் சொல் பார்க்கலாம்?" என்று கூறி மேஜை மீது கிடந்த புஸ்தகத்தை மூடி விடுவான் பாலு. அப்பொழுதாவது அவள் தலை நிமிர்ந்து தன்னைப் பார்க்கக் கூடும் என்கிற ஆசை அவனுக்கு.
ஜெயஸ்ரீயின் முகத் தாமரையில் முத்து முத்தாக வேர்வைத் துளிகள் அரும்பி கன்னங்கள் சிவப்பேற கிடுகிடு என்று அந்தப் பதிலை ஒப்பித்து விட்டுத் தலையைக் குனிந்து கொள்வாள்.
”அப்பாடா! இதற்கா இவ்வளவு பயம்?' பாலு மேலும் அவளைப் பயப்பட வைக்காமல் அங்கிருந்து சென்று விடுவான்.
இவர்கள் உள்ளத்தில் அரும்பி இருக்கும் காதலைப் பற்றிச் சுமதிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.

