விடி வெள்ளி
பசுமலைக் கிராமம் பனிப் போர்வை போர்த்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது கார்த்திகை மாதத்தின் கடைசி. எந்த நம்பிக்கையும் ஆசையும் அவளைத் தூண்டுகோல் போட்டு அந்தக் கிராமத்துக்கு இழுத்து வந்ததோ, அந்த நம்பிக்கை வறண்டு விட்டது. பவானி பெருமூச்சு விட்டபடி படுக்கையில் புரண்டு படுத்தாள். விடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தது. விடிந்து தான் அவள் என்ன புதுமையை அடையப் போகிறாள்? அண்மையில் படுத்திருந்த அவள் மகன் பாலு. நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்தப் பச்சிளம் முகத்தில் வருங்காலத்தைந் பற்றிய சிந்தனைகளையோ, கவலைகளையோ காண முடியாது தெளிந்த நீரைப் போலவும் நிர்மலமான ஆகாயத்தைப் போலவும் அம் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
பவானி நன்றாக விழித்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியாக வெளியே தெரியும் ஆகாயத்தைக் கவனித்தாள். சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்து ஓய்ந்த வான வெளியில் திட்டுத் திட்டாக மேகங்கள் சிதறிக் கிடந்தன. அவை வான வெளியில் மெதுவாக தளர்ந்து செல்வதைக் கவனித்த பவானிக்கு மனிதனின் ஆசைகளும், எண்ணங்களும் முடிவு தெரியாத ஒரு நோக்கதுடன் ஓடுவதைப்போல இருந்தன. மேகக் கூட்டங்கள் எங்கேதான் போகின்றன? கடுங்கோடை...க்கு அப்புறம் வறண்டுபோன வயல்களுக்கும், நீர் நிலைகளுக்கும் மரையைப் பொழிந்துவிட்டு அவை மீண்டும் பிரயாணத்தைத் தொடங்குகின்றன. ஆனால், தன்னுடைய வறண்டு போன வாழ்க்கை வளம்பெற வழி இருக்கிறதா?
பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கபடமில்லாத முகத்தைக் கவனித்தாள். களங்க மற்ற அந்த முகம் ஒன்று தான் அவளுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. அவனுடைய சிறு கரங்களைச் சேர்த்து தன் கைக்குள் பற்றிக் கொண்டாள். 'இன்று இவை சிறு கரங்கள் தான். ஆனால், நாளடைவில் வளர்ந்து வலிமை பெற்று விடும். பிறகு வாழ்க்கையில் ஆதரவற்றுப்-போன தனக்கு ஆதரவு தரும் அன்புக் கரங்களாக அவை மாறும்' என்றெல்லாம் பவானியின் எண்ணங்கள் ஊர்ந்தன.
படுக்கையின் தலைமாட்டில் கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்த கம்பளிச் சட்டை, ஷர்ட், வேஷ்டி, கைக் குட்டை முதலியவை அவளைப் பார்த்துச் சிரித்தன.
கயிற்றுக் கட்டிலின் மீது விரிக்கப் பட்டிருத்த மெத்தை வெறிச் சென்று கிடந்தது. சில மாதங்களுக்கு முன்பு நோயாளியாக அந்தக் கட்டிலின் மீது வாசு படுத்திருந்தான். நோயாளி என்று சொல்லித்தான், பலரும் அவனை ஒரு நோயாளியாகக் கருதினார்கள் - துல்லியமான வேஷ்டியும், அதன் மீது வெண்ணிற ஷர்ட்டும் அணிந்து, மேலே கம்பளிச் சட்டையை மாட்டிக்கொண்டு விட்டால் அவன் ஜோராகத்தான் இருந்தான். ஆளை நாளடைவில் உருக்கி உருக்குலைக்கும் காச நோயாளி அவன் வலுவூட்டும் ஆகாரங்களும் டானிக்குகளும் அவனை அவ்வளவு ஜோராக வைத்திருந்தன. 'நெட்டி யால் செய்த பொம்மை இது. என்றைக்காவது இது சாய்ந்து விடும்' என்று பவானி நினைக்கவே யில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடலாம் என்று தான் நினைத்தாள். நல்ல காற்றுக்காகவும், சுகவாசத் துக்காகவுமே அவள் பசு மலைக்கு வந்தாள்.
கல்யாணமாகிய சுருக்கில் அவள் ஒரு குழந்தைக்குத் தாயும் ஆகிவிட்டாள். செக்கச் செவேலென்று அவள் அந்தத் தங்க மதலையை ஈன்றபோது இருவர் உள்ளங்களும் கரை காணாத ஆனந்த வெள்ளத்தில் திளைத்தன. ’வாழ்க்கை தித்திக்கும் தேனாகவும், செங்கரும்பாகவும் தான் இருக்கப் போகிறது’ என்றெல்லாம் நினைத்தார்கள். ஆனால், குழந்தைக்கு நான்கு வயது ஆவதற்கு முன்பு வாசுவின் உடல் நிலை பாதிக்கப் பட்டது. திடீரென்று அவன் வாய் ஓயாமல் இரும ஆரம்பித்தான்.
"டாக்டரிடம் காட்டி மருந்து சாப்பிடுங்கள்" என் றாள் பவானி.
”ஆமாம், இருமலுக்குப் போய் மருந்து சாப்பிடுகிறார்கள்! ஏதாவது கஷாயம் வைத்துக் கொடு" என் றான் வாசு அவளிடம்.
கஷாயத்திலும் கல்கத்திலும் தற்கால வியாதிகள் மசிந்து போகிறதில்லை என்பதை அவன் என்ன கண்டான்?
"பவானி! சாயங்காலத்தில் ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கிறது. லேசாகத் தலைவலி கூட இருக்கிறது" என்றான் ஒரு தினம் அவன், காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.
பவானி பதறிப் போனாள். "சொன்னால் கேட்டீர்களா? பெரிசாக எதையாவது இழுத்து விட்டுக் கொண்டு?" என்று சொல்லிக் கொண்டே கணவனை அழைத்துக்கொண்டு டாக்டர் வீட்டுக்குக் கிளம்பினாள்.
அங்கே டாக்டர் அவனைப் பரிசோதித்து விட்டு, ”என்ன சார்! ஒரு மாசமாக இருமுகிறது என்கிறீர்கள்? சாவகாசமாக வருகிறீர்களே! காசம் ஆரம்பித்திருக்கிறதே" என்றார் ஈனஸ்வரத்தில்.
பவானியின் மனம் ’திக்' கென்று அடித்துக் கொண்டது. இருந்தாலும் அவள் தைரியசாலி. நம்மால் முடிந்தவரை நல்ல வைத்தியமாகச் செய்து பார்க்கிறது" என்றாள் டாக்டரிடம் தைரியமாகவே.
”செய்து தான் ஆகவேண்டும் அம்மா. வியாதி பணத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுமே!" என்றார் டாக்டர்.
”பணத்தை நாம் தானே சம்பாதிக்கிறோம்? அதுவா நம்மைச் சம்பாதிக்கிறது? என்னால் முடிந்த வரையில் பார்த்து விடுகிறேன். பிறகு பகவான் இருக்கிறான்” என்று நம்பிக்கையுடன் பவானி அவருக்குப் பதில் அளித்தாள்.
டாக்டருக்கு அவளுடைய தைரியத்தைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது . அவரால் முடிந்த வரையில் வைத்தியம் செய்தார். அருகில் இருக்கும் பசுமலையில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளச் சொல்லி, தான் அடிக்கடி வந்து கவனிப்பதாகவும் கூறினர்.
பசுமலை கிராமத்துக்கு வந்த பவானிக்குப் படிப்படியாக ஏமாற்றமே ஏற்பட்டது. கணவனைக் காச நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டு அந்தக் கிராமத்துக்கு வந்தாள். ஆனால், கடவுளின் கருணை தான் அவள் விஷயத்தில் வற்றி விட்டதோ அல்லது விதியின் விளையாட்டுத்தானோ? அதை யார்தாம் தீர்மானித்துப் பதில் கூற முடியும்? அங்கு வந்த சில மாதங்களில் வாசு இறந்து விட்டான். அன்று உலகமே அவள் வரைக்கும் அஸ்தமித்து விட்டது போல் இருந்தது . இனிமேல் வாழ்க்கையில் அவளுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை என்று தீர்மானித்தாள் பவானி. இல்லை என்பதற்குப் பவானிக்குப் பொருள் விளங்கி விட்டது. ஒரே சூன்யமான நிலைக்குத்தான் அப்படிப் பெயர் வைத்திருப்பதாக அவள் நினைத்தாள்.
இவை யெல்லாம் பழைய நினைவுகள். ஆனால் அவள் மனதில் பசுமையுடன் பதிந்திருப்பவை வியாதியை வென்று எப்படியாவது தானும் கணவனும் இன்ப வாழ்க்கை நடத்தவேண்டும் என்று துடித்த உள்ளத்துக்கு ஆறுதல் தரும் நினைவுகள் என்று அவற்றைச் சொல்ல வேண்டும்.
பவானி பெருமூச்சுடன் படுக்கையில் உட்கார்ந்தாள். கீழ் வானத்தில் உதயத்தின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன. தொலைவிலே தெரியும் அந்த ஒளிதான் விடி வெள்ளியோ? சூரிய உதயத்திற்கு முன்தோன்றும் விடிவெள்ளி என்று இதைத்தான் சொல்லுகிறார்களோ? திரும்பிப் படுக்கையைப் பார்த்த பவானியின் கண்களுக்குப் பாலுவும் ஒரு விடி வெள்ளியாகவே தோன்றினான். ஆம் இன்று சிறு பையனாக இருப்பவன் நாளை உதயசூரியனாக மாறி புண்பட்ட அவள் மனத்துக்கு ஆறுதல் அளிப்பவனாக இருக்கலாம்.
பாலுவின் தூக்கம் கெடாமல் பவானி உள்ளம் கசியக் குனிந்து, பாலுவின் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டாள்.

