Chapter 2

சின்னுமுதலியின் பரம்பரைத் தொழில் கைத்தறி நெசவு. ஆனால் அந்தத் தொழிலை அவன் மறந்து வெகுகாலமாயிற்று. அவனுக்கு மனைவியும், ஒரு பிள்ளையும், ஒரு பெண்ணும் இருந்தனர். மனைவியும், பதினைந்து வயதான பிள்ளையும் நன்றாக நெசவு செய்வார்கள். இவர்கள் சம்பாதிக்கும் பணத்தினால்தான் குடும்ப நிர்வாகம் நடந்துவந்தது. மகள் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பாள். சின்னுமுதலி நாடகம் நடிக்கும் இடங்களில் தனக்குக் கிடைக்கும் வெள்ளரிக்காய், தேங்காய், வாழைப்பழம், வடை, முறுக்கு முதலிய பரிசுப் பொருள்களைக் கொண்டு வருவான். அப்பொழுதெல்லாம் குழந்தைகள் அவனை ஆவலுடன் எதிர்க்கொண்டு அழைப்பர்கள். அவனுக்குப் பணங்காசும் கிடைப்பதுண்டு. ஆனால் அதுமட்டும் வீட்டுக்கு வராது. பின், எங்கே போயிற்று என்று சொல்லவேண்டியதில்லையல்லவா?

ஆம்; சின்னுமுதலியின் விதூஷக சாமர்த்தியங்களுக்கெல்லாம் பெரும்பாலும் ஆதாரமாயிருந்தது கள்ளு, சாராயந்தான். ஆரம்பத்தில் கள்ளுக் குடித்து வந்தான். ஆனால் நாளடைவில் கள்ளில் அவ்வளவு 'ஜோர்' பிறப்பதில்லை யென்றறிந்து, சாராயத்தில் புகுந்தான். கூத்து நடத்துபவர்கள், சாராயக்கடை எவ்வளவு தூரத்திலிருந்தாலும், முன்னாடியே ஆள் அனுப்பி இரண்டு புட்டி சாராயம் வாங்கி வந்து தயாராய் வைத்திருப்பார்கள். ஆனால் வருஷம் 365 நாளுமா கூத்து நடக்கும்? கூத்தில்லாத நாட்களுக்கும் சாராயம் வேண்டுமல்லவா? எனவே, கூத்தில் கிடைக்கும் பணம் மற்ற நாட்களுக்கு உபயோகமாகும். அத்துடன், சின்னுமுதலிக்குத் தறிகள் செப்பனிடத் தெரியும். சிறுவயதில் பழகியிருந்தான். இந்த வேலையில் கிடைக்கும் கூலிப்பணத்தையும் சாராயக்கடைக்கே அர்ப்பணம் செய்து வந்தான். அவன் மனைவி பத்மாவதிக்கு இது மிகவும் கஷ்டமாய்த்தான் இருந்தது. ஆனால் அவள் என்ன செய்ய முடியும்? 1921-ம் வருஷத்தில் நடந்த காந்தி இயக்கத்தின் போது ஊரில் ஒரு முறை கட்டுப்பாடு செய்தார்கள், யாரும் குடிக்கக் கூடாது; குடித்தால் பதினைந்து ரூபாய் அபராதம் என்று. ஆனால் பஞ்சாயத்தார் முதல் ஊர்ஜனங்கள் வரையில் எல்லாரும் ஒருமுகமாகச் சேர்ந்து சின்னுமுதலி விஷயத்தில் மட்டும் விலக்குச் செய்துவிட்டார்கள். அவன் குடிக்காவிட்டால் 'விதூஷக பார்ட்' போட முடியாது. அவன் விதூஷகனாய் வராவிட்டால் கூத்து எதுவும் ரஸப்படாது. ஆகவே, அவனை மட்டும் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கியிருந்தார்கள். இந்த நிலைமையில் பத்மாவதி "குடிக்கவேண்டாம்" என்று சொன்னால் நடக்கிற காரியமா?