பதிப்புரை

தமிழ் நாவல்களைச் ‘சரித்திர நாவல்கள்’, ‘சமூக நாவல்கள்’ என்று, இரு பெரும் பிரிவாகப் பிரிப்பது தற்காலத்தில் பெரு வழக்காயுள்ளது. எது சரித்திர நாவல், எது சமூக நாவல் என்று நிச்சயிப்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் இல்லாவிடினும், சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளையும், அக்காலச் சூழ்நிலையையும் மையமாக வைத்து எழுதப்படுவது சரித்திர நாவல் என்றும், தற்கால நிகழ்ச்சிகள், சமுதாயச் சூழ்நிலை இவற்றை மையமாகக் கொண்டு எழுதப் பெறுவது சமூக நாவல் என்றும் பொதுவாகக் கருதப் பெறுகிறது.

வரலாற்றுச் செய்திகளை முறையாகத் தொகுத்து ஒழுங்குபடுத்தி எழுதி வைக்கும் பழக்கம் நம்மவர்களிடையே இருந்ததில்லை. வரலாற்றுச் செய்திகளை அறிவதற்கு கர்ணபரம்பரைக் கதைகளையும், கல் வெட்டுகளையும், இலக்கியங்களையுமே நாம் பெரிதாக நம்பவேண்டிய நிலையில் இருக்கிறோம். இலக்கியங்களும் வரலாற்றுச் செய்திகளைத் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவதில்லை. சுவை மிகு இலக்கியங்களின் நடு நடுவே வரும் குறிப்புகளைக் கொண்டுதான் வரலாற்றுச் செய்திகளையறிய வேண்டும்.

இலக்கியங்களில் வரும் குறிப்பைக் கொண்டு வரலாற்றுச் செய்திகளைச் சேகரிப்பதற்குப் பழந்தமிழ் இலக்கியத்தில் பரந்த அறிவும் ஆழ்ந்த புலமையும் வேண்டும். இந்த இரண்டும் நிறையப் பெற்றவர் ஆசிரியர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள். சங்க நூல்களையும் இடைக்கால இலக்கிய-இலக்கணங்களையும் முறையோடு பூரணமாகக் கற்றுத் தேர்ந்து பண்டிதப் பரீட்சையில் வெற்றி பெற்றவர் திரு. நா. பார்த்தசாரதி.

சங்க இலக்கியங்களில் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகளைக் கொண்டு மூன்று தமிழ் மன்னர்களின் தலைநகரங்களைப் பற்றியும் தனித்தனியே மூன்று நாவல்கள் எழுத வேண்டும் என்ற திரு. நா. பா. வின் திட்டப்படி மூன்றாவது நாவல் இது. ‘மணி பல்லவம்’ சோழப் பேரரசின் தலைநகரைப்பற்றிப் பேசுகிறது. பாண்டியர்களின் பழம்பெரு நகரான ‘கபாடபுரம்’ இரண்டாவது நாவலாக உருப்பெற்று விட்டது. கடல் பிறக் கோட்டிய சேரர் பெருமான் செங்குட்டுவனின் காலச்சூழ்நிலையை விளக்குகிறது இந்த ‘வஞ்சிமாநகரம்’.

இந்தச் சுவையான நாவலைத் தொடராகத் தமது சிங்கப்பூர் “தமிழ் முரசு” நாளிதழில் வெளியிட்டு மலைநாடெங்கும், மற்றொரு மலைநாடுடைப் பேரரசன் சேரன் செங்குட்டுவனின் புகழ் பரப்பிய திரு. சாரங்கபாணி அவர்கட்கும், இந்த வரலாற்று நாவலை நூல் வடிவில் வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்களித்த ஆசிரியர் திரு. நா. பா. அவர்கட்கும் எங்கள் உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.

சென்னை கண. முத்தையா

9–2-68 தமிழ்ப் புத்தகாலயம்