Chapter 4
மறுநாள் காலை மணி ஒன்பதாகியும் கடை திறக்கப்படவில்லை. வடலூர்ப் பிள்ளையும் முறிந்துபோனார் என்ற செய்தி காட்டுத் தீப்போலப் பரவியது. சேட்ஜிகளும், சிறிய கடைக்காரர்களும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளவில்லை; மனமார, வாயாரத் திட்டினார்கள்.
சிங்களத்தியின் வீட்டில் இருப்பதாகத் துப்புத் தெரிந்தது. எல்லாரும் ஒருமிக்க வீட்டுக்குள் புகுந்தார்கள். "பேமானிப் பயலே!..." என்று ஆரம்பித்தார் சேட்ஜி. மற்றவர்களும் அவர்கள் குலாசாரப்படி திட்டினார்கள்.
பிள்ளையவர்கள் அமைதியாகக் கல்லைப்போல் இருந்தார்... சந்தடி ஓய்ந்ததும், "உங்களை ஏமாற்றுவது என் நோக்கம் அல்ல... கடன் எல்லாவற்றையும் பைசா விடாமல் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெரிய முதலாளிகளே தயங்குகிறார்கள். ஒரே சமயத்தில் எல்லாரும் கேட்டுவிட்டால் எல்லாருக்கும் நஷ்டமாகுமே என்பது என் வருத்தம். இப்பொழுது சொல்லுகிறேன். நீங்கள் கொடுத்திருக்கும் கடனைத் தவணையாகப் பெற்றுக் கொள்ளுகிறீர்களா? அப்படியானால் பாக்கியில்லாமல் செலுத்துகிறேன்.
இல்லாவிட்டால் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறதைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்" என்று கடைசியாகச் சொன்னார். வந்தவர்கள் பீதியடித்துப் போனார்கள். 'இப்பொழுது வசூல் செய்தால் தம்படிகூடத் தேறுமோ என்னவோ? அவன் தவணை மூலம் பூர்த்தி செய்வான் என்பது எப்படி நிச்சயம்?' - ஒரு வழியாக நிர்ணயிக்க முடியவில்லை. முடிவில் அவரைத் திட்டிவிட்டுச் சென்றார்கள்.
வடலூர்ப் பிள்ளை அதனுடன் தூங்கப் போய்விடவில்லை; அல்லது ஊருக்கும் கம்பி நீட்டவில்லை. ஒரு முரட்டு வக்கீலைப் பிடித்து அமர்த்தினார். அவன் கையில் தம் வழக்கையும் யோசனையையும் ஒப்படைத்தார். வக்கீல், கடன் கொடுத்திருந்தவர்களின் பட்டியல் தயாரித்து அவரவர்கள் தொகைக்குத் தக்கபடி விகிதாசாரம் போட்டு, முடிவு கூற ஒரு மாதம் நோட்டீஸ் கொடுத்து அனுப்பினான். சிறு கடன்காரர்கள் கிடைத்தது போதும் என்று ஒன்றுக்குக் காலாக வாங்கிக்கொண்டு ஓடினர். இப்படி மெஜாரிட்டித் தொல்லை ஒழிந்தது. மற்றும் பெரிய புள்ளிகள் வேறு விதியில்லாமல் நிபந்தனையை ஏற்றுக்கொண்டனர்.

