Chapter 3

பிள்ளையவர்களுக்கு இருந்த ஒரே ஆசையெல்லாம் திருநெல்வேலிக் கடன்காரர்களைத் தம் காலடியில் வைத்து ஆட்டிப் பார்க்க வேண்டும் என்பதே. அது சாத்தியமில்லாததால், தம்முடன் நெருங்கி, தாம் வசிக்க நேர்ந்த சமுதாயத்தைக் காலடியில் கொண்டுவந்து வைத்து, ஒரு நாளைக்காவது கண்ணில் விரலைவிட்டு ஆட்ட வேண்டும் என்பதே! இந்த ஆசை, பசியின் சாயை மறைய மறையப் பிரம்மாண்டமாக வளர ஆரம்பித்தது. உமையாள்புரம் பிள்ளை, வடலூர்ப் பிள்ளையைப் பண வசூலுக்கும் சரக்குப் பிடிக்கவும் அனுப்ப ஆரம்பித்தார். பல முதலாளிகளுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் அளித்தார்.

கொழும்புக் கடையில் உதவித் தொழிலுக்குப் போகிறவர்களுக்கு எப்பொழுதாவது தனிக்கடை ஆரம்பிக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கும்; அல்லது ஏற்படும். பிள்ளையவர்கள் விஷயத்திலும் இது ஏற்பட்டது.

வடக்கத்தி சேட் ஒருவன் இவரை நம்பிப் பணம் கொடுக்க உத்தேசித்தான். தவிரவும் உமையாள்புரம் பிள்ளையும் ஏதோ உதவினார். ஒரு நல்ல நாளில் வடலூர்ப் பிள்ளையின் சொந்தக் கடை திறக்கப்பட்டது. முதலாளி ஸ்தானத்தைப் பெற்றுவிட்டால் வியாபார அநுபவம் வந்துவிடுமா? அதனால்தான் ஆள்வைத்துக் கடை நடத்த வேண்டியதாயிற்று. வியாபார நுணுக்கம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் முதலாளியான பிறகு வைப்பாட்டி வைத்துக் கொள்ளாமல் இருப்பது கௌரவக் குறைவு. அதை உத்தேசித்தோ அல்லது இயற்கையின் தேவையாலோ மலிவான சிங்கள வைப்பாட்டியை வைத்துக்கொண்டார்.

பிள்ளையவர்கள் தொழிலை ஆரம்பித்த நேரத்தின் விபரீதமோ என்னவோ? வர்த்தக உலகத்தில் பணம் புரளுவது கஷ்டமாயிற்று. பெரிய பெரிய விலாசங்கள் இரண்டு மூன்று தொடர்ந்தாற்போல் முறிந்தன. கடன்காரரின் பிடுங்கல் அதிகமாயிற்று. பிள்ளையவர்களின் வியாபார ஓட்டமும் அவ்வளவு தெளிவில்லை. திருநெல்வேலிக் கதை மறுபடியும் கொழும்பிலும் 'ஒன்ஸுமோர்' அடித்துவிடுமோ என்ற பீதி அதிகமாயிற்று. ஆனால் மிரண்டுவிடவில்லை. பேச்சு வெளிவராமல் இருக்க, சரக்குகள் அதிகமாக வாங்க ஆரம்பித்தார். திடீரென்று மூன்று கிடங்குகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டன.

அன்று சாயங்காலத்திற்குள்ளாகவே அவ்வளவிலும் லக்ஷ ரூபாய்க்குச் சரக்கு. சாயங்காலம் கடையடைக்கும்பொழுது சிப்பந்திகளைக் கூப்பிட்டுச் சம்பளமும், அதற்குமேல் ஐந்தும் பத்தும் கொடுத்து, கணக்குத் தீர்ப்பதுபோல் காட்டிக் கொள்ளாமல் கண்களில் மண்ணைத் தூவினார். கடை, கிடங்கு எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டி சீல் வைத்தார்; சிங்களத்தியின் வீட்டுக்குப் போய்விட்டார்.