Chapter 12

"ஸார்! ஸார்!"

அயர்ந்த நித்திரையில் ராமலிங்க வெற்றி நாடகத்தில் மறுபடியும் மறுபடியும் உழன்று ரஸித்துக் கொண்டிருந்த இலக்கிய மேதை வி.பி.யை இந்த விகற்ப உலகுக்குச் சடபடவென்ற சத்தமும், ஏழாம் கிணற்றடியிலிருந்து வரும் "ஸார்" என்ற அழைப்பும் மல்லுக் கட்டி இழுத்து வந்தன.

"ஏது, வீட்டுக்கார முதலி விடியறத்துக்கு மிந்தியெ முற்றுகை போட்டுவிட்டானா?" என்ற உதைப்புடன், "என்ன முதலியார்வாளா, நேற்று வந்திருந்தீர்களோ? நான் ஒரு ஜோலியாய்ப் போனேன். வர்றத்துக்கு லேட்டாயிட்டது" என்று சமாதானம் சொல்லிக்கொண்டு கதவைத் திறந்தார்.

எதிரே ராமலிங்கம் நின்று கொண்டிருந்தார்; நீண்ட ஜிப்பா, மொராக்கோ தோல் பை சகிதம் நின்றிருந்தார்.

"ஏது! ராமலிங்கமா! வாருங்க உள்ளே" என்று அழைத்துக் கொண்டு சென்று நேற்றிரவு தமக்கு ஹம்ஸ தூளிகா மஞ்சமாக அசதியைப் போக்கிய ஜமுக்காளத்தின் பேரில் உட்கார வைத்துவிட்டு, காகிதப் பொட்டலத்தில் சுருட்டி வைத்திருந்த வெற்றிலை மடிப்பை எடுத்துக் கொண்டு அந்த ஜமுக்காளத்தின் வேறு ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, காய்ந்து போன சுண்ணாம்பைச் சூர்ணமாக்கி, வெற்றிலையில் போட்டு மடக்கி வாயில் மென்று அதக்கிக்கொண்டு, "என்ன இவ்வளவு காத்தாலேலெ?" என்றார்.

ராமலிங்கம் வாய் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்திருந்தார். அதில் ரொக்கமாக ஒரு பத்து ரூபாயும் ஐந்து நாட்கள் தவணை கழித்துத் தேதியிட்ட 50 ரூபாய் செக்கும் இருந்தன. "ராமலிங்கம் கைவசமுள்ள புரூப்பைப் பார்த்துக் கையோட அனுப்பிச்சுட்டா ரொம்ப ஒத்தாசெயா இருக்கும்; புஸ்தகம் சீக்கிரம் வெளிவந்தால் எல்லாருக்கும் சவுகரியந்தானே?" என்று எழுதியிருந்தது.

"புரூப் எங்கே?" என்றார் வி.பி.