Chapter 3
இதைக் கேட்ட வைரவன் பிள்ளைக்குக் கைக்குழந்தை பாப்பாத்தி, சமைந்து (பருவமெய்தி) சடங்கு நடக்கும் போது அவள் நின்ற கோலம்... அப்புறம் மணப் பந்தலில் அவள் நின்ற காட்சி... எல்லாம் அவர் மனக்கண் முன் சலனப்படமாக விரிந்தது. பாப்பாத்தி எப்பொழுதும் அப்படித்தான்... அவள் பிறக்கும்போதுதானே கடை முறிந்து நாலு பக்கமும் பணமுடை... கஷ்டத்தில் வளர்ந்த பெண் - காசில் இருந்த கருத்து அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது... அவள் மகளுக்கென்று சொல்லியிருந்தால், அவள் மகளுக்குத்தானே. அதற்குள் எதற்கு இந்தச் சின்னப் புத்தி... "ஏட்டி, இந்த வெத்திலையைத் தட்டு" என்று எடுத்த வாய் - அதிகாலையில் எழுந்திருந்ததும் அவர் போட்டுக்கொள்வதற்காகத் தயாராக வெற்றிலையை இடித்து வைத்தல் அவரது பல் போனதிலிருந்து தட்டாது நடந்துவரும் பழக்கம் - சடக்கென்று நின்றது... உள்ளத்தின் குழப்பம் புதிய மாறுபாட்டில் மேலும் குழம்பியது.
வீட்டில் பக்கத்தில் நின்று குடிமகன் சுடலை ஊதிய இரட்டைச் சங்கின் அலறல் மறுநாள் வந்ததைப் பிள்ளையவர்கள் பிரக்ஞைக்குக் கொணர்ந்தது... அதே சமயத்தில் உள்ளிருந்து பெண்களின் அழுகைக் குரல், சங்கத்தின் ஏக்க அலைகளுடன் தொடர்ந்து மனப் பாரத்தை அதிகப் படுத்தியது... வைரவன் பிள்ளையின் பார்வை விடிவெள்ளியை நாடியது... அது அவர் கண்ணில் தென்படவில்லை. எதிர்வீட்டுக் கூரை, முன்பே அதை விழுங்கிவிட்டது. கூரையின் உச்சிக்கோடுதான் வானத்திற்கு ஓர் எல்லை காட்டியது.
தெருக்கோடி முனையில் 'ஜல் ஜல்' என்ற மாட்டுச் சலங்கையின் சப்தம்... சிறிது நின்றது. யாரோ இறங்கினர்... தெருக் கோடியிலிருந்தே... "என்னைப் பெத்த தாயாரே!" என்ற பிலாக்கணம்... பார்வதியும் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற திருப்தி வைரவன் பிள்ளைக்கு... பார்வதி கடைக்குட்டிப் பெண்... தூரத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்...
அப்பொழுது விசிப்பலகை ஒன்றிலிருந்த உருவம் எழுந்து, சடசடவென்று சோம்பல் முறித்த வண்ணம், "சம்போ மகாதேவா!" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே, "பாட்டையா, நல்லாத் தூங்கினியளா? அதாரது?" என்று சொல்லிக்கொண்டே, வண்டி வந்த திசையை நோக்கியது...
அதற்குள் வண்டி மெதுவாக வாசற்படியில் நின்றது... முன்னால் பார்வதி நெஞ்சிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்... உள்ளே அழுகைக் குரல் பலமாயிற்று...
"கரிசங்கொளத்து மாப்பிள்ளை வாராஹ!" என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக் கள்ளர் பிரான் பிள்ளை - அவர்தான் மற்றொரு பலகையில் படுத்திருந்தவர் - எழுந்திருந்தார்.

