Chapter 2
ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்திலும் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது... மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்?... விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்... அப்பொழுது அவர் மனக்கண் முன் வள்ளியம்மையாச்சி புதுப்பெண் கோலத்தில் தம் கைபிடித்து வந்த காட்சி தோன்றியது.
வைரவன் பிள்ளை தூங்குவதற்காக உட்கார்ந்த இடத்தருகில் ஒரு சிறு ஜன்னல் - பனங் கம்பு 'அழி' வைத்தது. உள்ளிருந்து குசுகுசு என்ற சப்தம்.
"ஏட்டி, அஞ்சு கொத்துச் சவடி (சங்கிலி) உனக்குன்னு தானேட்டி சொன்னா, பேச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாக்கிட்டே கேட்டு வாங்கிக்க!"
"ஆமாம் எனக்குத் தூக்கம் வருதுங்கே - என்னைப் போட்டுப் படுத்தாதே!..." என்று வெடுக் கென்னும் ஓர் இளம் பெண் குரல்.
உடனே 'வீல்' என்று தொட்டிலில் அழும் குழந்தைக் குரல்...
"சவமெ, நீயும் ஆரம்பிச்சிட்டியா?... ஒன் வாய் ஓயாதா?... செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா? எனக்குன்னு தான் வந்திட்டுதம்மா...!" என்ற அங்கலாய்ப்பு...
"அதாரது பாப்பாத்தியா...?" என்று நினைத்தார் வைரவன் பிள்ளை. அவள்தான் பிள்ளையின் நாற்பது வயதான முதல் புத்திரி பாப்பாத்தியம்மாள். அவளுக்கு, வயது வந்த ஒரு பெண்ணும், நான்கு வயதுச் சிறுவனும், பத்து மாதக் கைக்குழந்தையும் உண்டு...

