Chapter 1
விடிந்து வெகு நேரமாகிவிட்டது.
அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை.
எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர் மாணவன் கையிலிருந்த புத்தகத்தில் ஏகாக்கிர சிந்தையாக இருந்தான்.
அன்று இரவு அவனுக்குச் சிவராத்திரி; பரீட்சை நெருங்கினால் பின் மாணவர்களுக்குச் சிவராத்திரி ஏன் வராது?
வெளியே தடதடவென்று கதவைத் தட்டும் சப்தம் அவனது யோகத்தைக் கலைத்தது.
"மிஸ்டர் ராமசாமி! மிஸ்டர் ராமசாமி!" என்று அவன் நண்பனின் குரல்.
கதவைத் திறக்கிறான்.
"என்னவே! நீரெல்லாம் இப்படி 'ஸ்டடி' செய்தால் பரீட்சை தாங்குமா? 'கிளாஸ்' தான்!" என்று வந்தவன் சிரித்துக்கொண்டே உள்ளே வந்தான்.
"ஏது, ரொம்ப நேரமாகிவிட்டது போலிருக்கே? நீர் உள்ளேயிரும்; நிமிஷத்தில் ஜோலியை முடித்துவிட்டு வந்து விடுகிறேன்; 'இண்டியன் ஹிஸ்ட்ரி'யை முடித்துவிடலாம். 'எ மினிட்' " என்று சொல்லிக் கொண்டே உள்ளே ஓடினான்.
"உம்ம படிப்புக்கு நான் எங்கே?" என்றார் வந்தவர்.

