Chapter 19
இருவரும் சில நிமிஷங் கழித்துச் சவுக்கைக்குள் ஏறினர்.
"என்ன!..." என்று சிரித்தார் பண்ணைப் பிள்ளை.
"இதுக்கு நீங்க எதுக்கு வரணும்? சொல்லிவிட்டா நான் வரமாட்டனா?... ராசா, நீ வீட்டுக்குப் போயி கண்ணாடி அலமாரியிலே சாவிக் கொத்தை வச்சிட்டு வந்துட்டேன்... எடுத்தா... அப்பிடியே அம்மைக்கி அந்த டானிக்கை எடுத்துக் குடு... எல்லாம் நாளைலேயிருந்து ஒன் வயித்தியத்தெப் பாக்கலாம்..." என, மேல்வேஷ்டியை எடுத்து உதறிப் போட்டுக் கொண்டு வெளியேறினான் மகராஜன்.
"வீட்டுலே உடம்புக்கு எப்படி இருக்கு - தாவளையா?... நம்ம மாப்ளைக்கி இன்னம் எத்தனை வருஷம் படிப்பாம்?... காலா காலத்லெ கலியாணத்தெ கிலியாணத்தெ முடிச்சுப் போட வேண்டாமா?..."
"நானும் அப்பிடித்தான் நெனச்சேன். அடுத்த வருசத்தோட படிப்பு முடியிது... வார தை மாசம் நடத்திப் போடணும்னு உத்தேசம்... மூக்கம் பயலெ எங்கே இன்னம் காணம்?..." என்று வெளிக்குரலை எதிர்பார்த்துத் தலையைச் சாய்ந்தபடி கேட்டார்.
"சவத்துப் பய இப்பம் வருவான்... ராத்திரி பத்திரத்தை எளுதி முடிச்சுக்கிடுவோம்... காலெலெ டவுனுக்குப் போயி ரிஸ்தர் பண்ணிப் போடுதது... கூச்சல் ஓஞ்சப்பரம் பத்திரத்தெ எம்பேருக்கு மாத்திக்கலாம்..."
"அது அவாளுக்குத் தெரியாதா?... காரியம் முடிஞ்சாப் போதும்..." என்றார் சுப்புப் பிள்ளை.

