Chapter 18
வெளியே புறப்பட்ட மகராஜன் மறுபடியும் தூணில் சாய்ந்து உட்கார்ந்தான்.
"சவுக்கெலெயே காத்தைக் காணமே, ஊருக்குள்ள பின்ன ஏன் வெந்து நீறாகாது! அண்ணாச்சி இந்த வருஷம் காய்ப்பு எப்படி?" என்று தலையை இருட்டில் நீட்டி எச்சிலைத் துப்பிக் கொண்டே கேட்டார் சிதம்பரம் பிள்ளை.
"காய்ப்பென்ன, பிரமாதமா ஒண்ணுமில்லெ - ஏதோ வீணாக காயிரதுக்கு கெணத்துத் தண்ணி வேரடியிலே பாயிது..."
"இல்லெ, ஒரு பத்து முப்பது ரோசாக் கம்பு வச்சுத் தளுக்க வச்சா பிரயோசனமுண்டு - ஒரு பயலைப் போட்டாப் போகுது" என்றார் சிதம்பரம் பிள்ளை.
பேச்சில் சோர்வு தட்ட அவர் சுப்புப் பிள்ளையைப் பார்த்தார்.
"தெரஸர் பிள்ளைவாள், ஒங்ககிட்ட ஒரு விசயமா கலந்துகிட்டுப் போகலாமுண்ணு வந்தேன் - ஐயாவும் வந்தாஹ - ஊர் விசயம் - தலை தெறிச்சுப் போய் அலயரான்கள் சில பயஹ - இப்பிடி வாருங்க..." என்று எழுந்து விசுவநாத பிள்ளையை வெளியில் அழைத்துக் கொண்டு போனார் சுப்புப் பிள்ளை.
"ஆமாம், ஆமாம், சரிதான்... வாங்குதவன் பாடு குடுக்கவன் பாடு, நமக்கென்ன?... அப்படியா! பிள்ளைவாளுக்கு எடைலேயா வந்து விளுந்தான்... அப்பமே எனக்குத் தெரியுமே... காறை வீடு கட்னா கண்ணவிஞ்சா போகும்?..." என்ற விசுவநாத பிள்ளையின் பேச்சுக்கள் இடைவிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக விழுந்தன.

