Chapter 3
"ஸார் இண்டியன் ஹிஸ்டரியில்தான் போய்விட்டது" என்று சிரித்தாள் நளினி.
"அதற்கென்ன கொஞ்சம் ஸ்பெஷலாகப் பார்த்துக் கொண்டால் போகிறது" என்றார் நாயகம். இந்த வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வருவதற்குள் பிரம்மப் பிரயத்தனமாகிவிட்டது.
"ஸார் கூச்சப்படாதீர்கள். உங்கள் வீடு மாதிரி பாவித்துக் கொள்ளுங்கள்" என்றாள் நளினி.
திரு. நாயகத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. தன்னை அவள் கோழை என்று நினைத்துச் சிரிக்கிறாள் என்று அவருக்கு அவமானம், கோபம். சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.
குரலை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, "நான் கோழை அல்ல" என்று தமது வெற்றிக்கொடி நாட்டினார்.
"உங்களை யார் அப்படிச் சொன்னார்கள்? குரல் ஏன் அப்படிக் கம்மிக் கிடக்கிறதே, காச சம்ஹாரி மாத்திரை இருக்கிறது எடுத்துத் தரட்டுமா?" என்றபடியே அலமாரியைத் திறந்து தேடினாள்.
நாயகத்திற்கு தமது ஜயக்கொடி பறிக்கப்பட்டு தரையில் புரள்வதைக் கண்டார். இத்தனைக்கும் ஒரு சிறு பெண். ஒரு அறை கொடுத்தால்... அலமாரியைப் பார்ப்பதுபோல் தன்னைப் பார்த்து ஏன் சிரிக்க வேண்டும்? இவனது மானத தத்துவ ஆராய்ச்சியில் ஒரே பொருள்தான் பட்டது. இந்த மதனைக் கண்டதும்...
"இன்று என்ன ஆரம்பிக்கலாம்" என்றார் நாயகம்.
"நான் எல்லாம் படித்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்தால் நன்றாக இருக்கும் சார்" என்றாள் நளினி.
"என்ன?"
"போன பரீட்சைக் கேள்விகள் தவிர நல்ல முக்கியமான கேள்விகள் ஐந்திற்கு விடை எழுதித் தந்தால் சீக்கிரம் பாடங்களைத் திருப்பிப் படித்துவிடலாம். வேலையும் குறைவாக இருக்கும்" என்றாள்.
"அப்பொழுது நான் கேள்வி கொடுக்கிறேன், நீ எழுதி வை."
"எனக்கு மற்றதைப் படிக்க வேண்டியிருக்கிறதே. தயவுசெய்து நீங்கள் எழுதித் தாருங்கள் ஸார்" என்று சிரித்தாள் நளினி.
அவள் புன்சிரிப்பு அவருக்குக் கட்டளை மாதிரி இருந்தது.
"புஸ்தகம் காகிதங்களை எடு" என்று வாங்கி உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்.

