Chapter 2

அன்று சாயங்காலம் 6 மணியிருக்கும்.

நாயகம், சுந்தரேச பிள்ளையின் வீட்டையடைந்தார். நாயகத்திற்குக் கூச்சம். இவ்வளவு பெரிய மாளிகையில் தான் காணாத கனவுப் பெண் இருப்பதில் உள்ளூரப் பூரிப்பு. அவள் எப்படி இருக்கிறாளோ? அறிவில் தனக்கு ஒத்தவளாக, சம்பாஷணையில் இன்பம் ஊட்டுபவளாக இருப்பாள் என்பதில் சந்தேகமில்லை.

சுந்தரேச பிள்ளை நல்ல குஷிப் பேர்வழி. வக்கீல் தொழிலில் நல்ல வரும்படி வந்தால் ஏன் குஷியாக இருக்க முடியாது?

வெராந்தாவைக் கடப்பதற்கு முன் துடை நடுக்கம். அந்தப் பெண் எப்படி இருப்பாளோ?

வேலைக்காரன் நாயகத்தை உள்ளே அழைத்துச் செல்லுகிறான்.

நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக்கொண்டிருந்த சுந்தரேச பிள்ளை, நாயகத்தைப் பார்த்ததும் ஏக ஆரவாரத்துடன், "வாத்தியார் ஸாரா? வாருங்கள் வாருங்கள்" என்று சிரித்தார்.

"டேய் நீ போய் சின்ன அம்மாளைக் கூப்பிட்டுக்கொண்டு வா" என்று அனுப்பிவிட்டு, "நளினா! நளினா!" என்று வேலைக்காரனுக்குக் கொடுத்த வேலையைத் தானே, நாற்காலியில் உட்கார்ந்த வண்ணம் செய்யவாரம்பித்தார்.

உடனே உள் ஹாலில் இருந்து ஒரு கதவு திறந்தது. "என்ன அத்தான்" என்ற பெண் குரல்.

நாயகம் அந்தத் திசையை நோக்கினான். நாகரீக உடை, நாகரீக மூக்குக் கண்ணாடி, நெற்றியில் சுருண்டு தவழும் சிறு ரோமச் சுருள், கவலையற்ற மாதிரியாகக் கவலையுடன் உடையணிந்த கோலம், சிரித்த கண்கள், குறும்பு தவழும் அதரங்கள்... பொதுவாக திரு. நாயகம் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந்த பெண்களின் இலட்சியம் தோன்றியது.

அந்தத் திசையை நோக்கிய நாயகத்திற்கு உடல் முழுவதும் வியர்த்தது. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கால்கள் உட்கார வேண்டுவதுபோல் உடலைக் கீழே இழுக்கவாரம்பித்தது. நாயகம் கோழை அல்ல. ஆனால் அன்று அவருக்குப் பரவசத்தினால் ஏற்பட்ட பயம், அச்சுச் சட்டம் போல் அவருக்கு நிரந்தரமான வாய்ப்பூட்டு போட்டது.

"நளினா! இவர்தான் உனது வாத்தியார். மிஸ்டர் நாயகம் அவள்தான் எனது மைத்துனிப் பெண், ஹேமநளினி; இந்த விசையாவது பாஸ் பண்ண வழியைப் பாரு" என்று சிரித்தார் சுந்தரேச பிள்ளை.

திரு. நாயகத்திற்கு அந்தச் சந்தரப்பத்திற்குத் தக்க பதில் என்ன கூறுவது என்பது பெரும் பிரச்சனையாக இருந்தது. அந்தப் பிரச்சனை தீருவதற்கு அவகாசம் கிடைக்கவில்லை.

"ஸார், வாருங்களேன்" என்றாள் நளினி.

நாயகம் பின்னே சென்றான்.