Chapter 7
ராஜ மார்த்தாண்டன், வீரன், பலவான். நீந்திக்கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல.
மிதப்புக் கட்டை மாதிரி நீருக்கு மேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக்கும் நுரைக்கு மேல், முகத்தைத் தூக்கிக் கொண்டு நீந்துகிறான்.
வாரியிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது.
"ஊர்வசி!"
"அவள்தான் வருவாளே! வருகிறாளே!"... தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன.
நீந்துகிறான்.
எதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சியைக் காண முடியாத நெடும்பாறை!
அதில் நின்று கொண்டால்...
அவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது.
அப்பா!
இன்னும் ஒரு கை!
எட்டிப் போடுகிறான்.
பின்புறம் இடிமுழக்கம் போல் ஒரு ஹுங்காரம்! நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன.
அப்புறம் ராஜமார்த்தாண்ட சோழன் அல்லன் - முங்கி மிதக்கும் ஒரு சரீரம்...

