Chapter 18

இன்னும் நன்றாக விடியவில்லை. ஆற்றில் யாரோ துணி துவைப்பது போலச் சப்தம். இவ்வளவு அதிகாலையில் அங்கு யார் வர முடியும்?

"யாரது?" என்றார்.

"யாரது?" என்ற பதில் கேள்வி பிறந்தது.

குனிந்து துவைத்துக் கொண்டிருந்த உருவம் நின்றது. ஒரு பெண் - கலியாணி!

"கலியாணி! நீயா இங்கு!... இந்த நேரத்தில்! பயப்படாதே! நான் தான் சர்மா!"

"நீங்களா!"

அவள் சொல்லி முடியுமுன் சர்மா அவளை அப்படியே தழுவிக் கொண்டார். அவள் விலக முயன்றாள். இருவரும் தடுமாறிப் பாதி ஜலத்திலும் பாதி மணலிலும் விழுந்தனர். கலியாணியின் முகத்திலும் அதரத்திலும் மாறி மாறி முத்தமிட்டார். கலியாணி தடுக்கவில்லை. அவருடைய போக்கிற்கெல்லாம் தடை செய்யவில்லை.

சற்று நேரம் கழிந்தது.

"கலியாணி!"

"என்ன?"

"என்னுடன் வந்துவிடு! இந்த மனித நாற்றமே அற்றவிடத்திற்குச் சென்றுவிடுவோம்!"

"ஐயோடி! அது முடியாது!"

அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது மிரண்ட பார்வை மின்னியது.

"பிறகு...?"

"எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லுகிற மாதிரி... அதற்குப் பயமாக இருக்கிறது!"

சர்மாவுக்கு உலகம் அர்த்தமற்ற கேலிக்கூத்துப் போலும், அசட்டுத் தனம் போலும் பட்டது.

"கலியாணி, நான் போகிறேன்!" என்றார்.

"எங்கே? போகவேண்டாம்! இங்கேயே இருந்துவிடுங்கள்!"

"சீ! அது முடியாத காரியம். என்னுடன் வா!" என்று கையைப் பிடித்தார்.

"முடியாது!"

மறுபடியும் அக்கரைப் பக்கம் ஒரு மனித உருவம் சென்று இருளில் மறைந்தது.

கலியாணியின் வாழ்க்கை - அலையில் ஒரு குமிழி உடைந்து போயிற்று.

(முற்றும்)

ஊழியன், 15-02-1935