Chapter 17

கலியாணிக்கு அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பரிதாபமாக இருந்தது. தன்னை 'மூத்தாளைப் போல்' இருக்கவில்லை என்று வைதாலும், தன் மீது ஓர் அந்தரங்கமாக நம்பிக்கை வைத்திருப்பதால் அதை மோட்சம் செய்வதா என்று எண்ணினாள்.

கலியாணிக்கு இரண்டையும் ஏக காலத்தில் பிரிய மனமில்லை. வீடு, பேச்சு, சம்பிரதாயம் இதையெல்லாம் உடைக்க மனம் வரவில்லை. சுப்புவையரை ஏமாற்றவும் மனம் துணியவில்லை. இருளில் வழி தெரியாது தவிக்கும் பாதசாரி, ஏதாவது ஒன்றைத் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானது என்று சங்கற்பித்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுவது போல், தன் கணவர் நித்தியம் பூஜை செய்யும் கோவிலுக்குச் சென்று கலங்கிய உள்ளத்திற்குச் சாந்தியை நாடினாள். கோவில் மூலஸ்தானத்தின் இருளுக்கு இவளது மன இருள் தோற்று விட்டதாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் மங்கிய தீபவொளியில் லிங்கம் தெரிவது போல் சர்மாவின் முகம் தான் அவள் அகத்தில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

அன்று இரவு கலியாணி சுப்புவையர் பக்கத்தில் உட்கார்ந்து கால் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதிகாலையில் எழுந்து ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு வருவதற்கு அனுமதி கேட்டாள். காரணம், சர்மாவின் மீது ஆசையிருந்தாலும் அவரைச் சந்திக்காதிருக்க வேண்டுமென்ற நினைப்பு.

"விடியக் காலத்தில் ஏன் நதிக்கு...?" என்றார் சுப்புவையர்.

"குளத்தில் ஜலம் வற்றி நாற்றமெடுக்கிறதே என்று யோசித்தேன்!" என்றாள்.

"சரி, சரி, போய்ட்டு வாயேன்; அதுக்கென்ன கேள்வி வேண்டியிருக்கு? நேக்குத் தூக்கம் வருகிறது, சும்மா தொந்தரவு செய்யாதே!" என்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

கலியாணிக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. சர்மாவை நினைக்கும்பொழுதெல்லாம் ஒரு மகிழ்ச்சி, அவர் மறுபடியும் தன்னைத் தழுவமாட்டாரா என்ற ஆசை. இப்படியே தன் பொருளற்ற கனவுகளிடையே அவள் தூங்கினாள்.

கொழுந்து மாமலைக்குச் சென்ற சர்மாவுக்கு வேலை ஓடவில்லை. அன்று முழுவதும், கலியாணி என்ன நினைப்பாளோ, அவளை மறுபடியும் எப்படிப் பார்ப்பது என்பதே யோசனை. அன்று இரவு முழுவதும் காட்டிலேயே இருந்துவிட்டார். அப்பொழுதும் சாந்தி பிறக்கவில்லை. அதிகாலையில் சென்று சாமானை எடுத்துக் கொண்டு ஊரைவிட்டே போய்விடுவது என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்.

கொழுந்து மாமலை ஆற்றுக்கு அக்கரையில் இருந்தது. ஊருக்கு வரவேண்டுமானால் ஆற்றைக் கடந்துதான் வர வேண்டும். மணி மூன்று இருக்கும்பொழுது ஆற்றங்கரையை யடைந்தார். மனத்தில் சாந்தி பிறக்கவில்லை. உள்ளம் பேய் போலச் சாடியது.