Chapter 3
இரவெல்லாம் எங்கோ கிடந்து தூங்கிவிட்டு – பகலெல்லாம் எங்கெங்கோ அலைந்து திரிந்தபின் – மாலையில் தாயிடம் திரும்பிக் கொண்டிருந்தான் மண்ணாங்கட்டி.
தெருமுனையில் வரும்போதே குடிசைக்குப் பக்கத்தில் கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஓடோடி வந்தான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு தாயைப் பார்த்ததும், “யம்மாவ்!” என்று அலறி வீழ்ந்தான்.
“யம்மா… யம்மா… யம்மா!” இதே குரல் நாள் முழுதும் விம்மி விம்மி ஒலித்தது. மண்ணாங்கட்டி சிலையாய் அமர்ந்திருந்தான். கேவிக் கேவி மூச்சு இளைத்தது.
பிரமை தட்டிப் பொறி கலங்கி உட்கார்ந்திருந்த அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மாரியாயி…
அவனைக் கதறக் கதற விட்டுவிட்டு அவன் தாய் போய்விட்டாள்…!
- இல்லை, தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள்!
strong>4
இரவு…
மாரியாயியின் அடுப்பு புகைந்து அடங்கிவிட்டது. புருஷனுக்குச் சோறு போட்டாள்.
- அவள் மனசில் என்னவோ ‘திக்’கென்றது.
“பாவம், இனிமே எங்கே போயி ‘அம்மா, பசிக்குது – சோறு போடு!’ன்னு கேப்பான்?… மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கூட்டியா மச்சான். அவனைப் பார்க்காமெ என்னாலே ஒரு பிடி சோறு துன்ன முடியாது!” என்று அழுதாள் மாரி.
சோற்றுத் தட்டில் கையை உதறிவிட்டு மாணிக்கம் எழுந்து ஓடினான்.
- அதோ… அதோ!
“டேய், மண்ணாங்கட்டி” என்று கூவிக்கொண்டே ஓடுகிறான்.
ஆனால், அது வேறு யாரோ?
- “டேய், மண்ணாங்கட்டியெப் பார்த்தியாடா?”
“இல்லியே…”
- “அவனைப் பார்த்தியா?”
“ஊஹீம்…”
“நீ பாத்தியா?
“சுடுகாட்டுக்குப் போறேன்னு போனான்!”
“சுடுகாட்டுக்கா?”
-”மண்ணாங்கட்டி, மண்ணாங்கட்டி!”
மாணிக்கம் ஓட்டமும் நடையுமாகச் சுடுகாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான்.
- போகும் வழியில் – அதோ, சடையம்மன் கோயிலில் யாரது? அவனா? மண்ணாங்கட்டியா?…
“மண்ணாங்கட்டி!”
- ஆமாம், அவனேதான்.
ஓடிவந்த மாணிக்கம் அவனை வாரி அணைத்துக் கொண்டான்.
“வாடா, போவோம்!” என்று அவனை இழுத்தான் மாணிக்கம்.
“அம்…மா…வ்…” என்று உணர்ச்சிகள் வெடித்துச் சிதறிக் குழம்பிய குரலில் அலறியவாறே மாணிக்கத்தை இறுகத் தழுவிக்கொண்டான் மண்ணாங்கட்டி.
“எங் கண்ணில்லே, அழுவாதேடா!” என்று ஆறுதல் கூறிய மாணிக்கத்தின் கண்களிலிருந்து நீர் பெருகியது.

