Chapter 5

சில நாட்களுக்குப் பின் ஒருநாள் மாலை. கல்லூரியிலிருந்து வந்த சுந்தரம் உடைகளைக் களைந்து கொண்டிருந்தபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டுக் கிளம்பிப் போய்விட்ட வேணுவிடமிருந்து வந்த கடிதத்தைக் கொண்டு வந்து அவரிடம் தந்தாள் ரமணி அம்மாள்.

அதில் முக்கியமான கடைசி வரிகள் இவைதான்:

“நான் தாத்தாவின் பேரனாகத்தான் இருக்க லாயக்கானவன். வந்துவிட்டேன். உங்கள் வாழ்க்கை நெறிகள் புரியாமல் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,வேணு.”

கடிதத்தைப் படித்து முடித்ததும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அர்த்தத்தோடு பார்த்துக் கொண்டனர்…

“பழைமைவாதிகள் என்பவர்கள் எழுபது வயதுக்கு மேல்தான் இருக்கணும்கறது இல்லே… இருபது வயசிலேயும் இருக்கலாம்…” என்று அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

ரமணி அம்மாள் சற்று நேரம் அவர் முகத்தையே ஏக்கத்தோடு வெறித்து நோக்கினாள்… அவள் கண்கள் சிவந்து கலங்கின…

அவள் தனது ஆழ்ந்த துயரத்தையே ஒரு புன்முறுவலாக்கி அவரிடம் கேட்டாள்: “இன்னுமா… நீங்கள்… நீங்கள்….” என்று துடித்த அவள் உதடுகள் தனது கன்னத்தில் அழுந்தும்படி அவர் அவளைத் தழுவிக் கொண்டார்.

அதன் பிறகு நடந்தவை, அவர்களின் அந்தரங்க விவகாரங்கள்!