பதிப்புரை

பத்தரைமாற்று இலக்கியத்தில் பூவேலைக்காவது ஒரளவு இடமுண்டு பூச்சு வேலைக்கு இடமே கிடையாது. திரு லாச ராமாமிருதத்தின் படைப்பு களில் பூவேலைகூட இடமறிந்து, அளவறிந்துதான் காணப்படும். மற்றபடி அதில் சத்தியத்தின் தண்ணொளி ஜ்வலிப்புதான்.

பண்புகளுக்கு உருவமில்லை. அவை அருவங்கள். அவற்றின் சாயைகள் சூட்சுமமானவை. திரு லா. ச. ராவின் எழுத்தொளியில் பண்புகளின்உயிர்ப் பண்புகளின்-சூட்சுமச் சாயைகள் பிறக்கும் போது, அவை வாசகர்களின் உட்புலன்களின் மேல் படரும்போது ஏற்படும் கூச்சம் திரு லா.ச.ரா-வுக்கு முன் தமிழுக்குப் புதிது; இன்று தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் ஆதாரம்.

திரு லா. ச. ரா.வின் எழுத்து, அவருடைய பாஷையில், தன்னுடைய நாளைக் கண்டுவிட்டது. ஆகவே அது வாசகர்களின் நாளை அடையாளம் கண்டுகொண்டு, அதனுடன் ஒன்ற முடிகிறது. வாசகர்களுக்கு அவருடைய கதைகளில் ஏற்படும் பரவசத்திற்கு இதுதான் காரணம்.

இலக்கியச் சுரங்கங்கள் போன்ற பல பத்திரிகை களிலிருந்து கதைமணிகள் சேர்த்து ஜனனி என்ற ஆரம் செய்திருக்கிறார் ஆசிரியர். வாசகர்களின் இதயத்தில் இதன் ஒளி வீசும் என்பது நிச்சயம். தமிழ் வாசகர்களது உள்ளத் துடிப்பின் ஒரு அம்சத்தின் உருவம்தான் ஜனனி.

ஒரு அமானுஷ்யமான தெய்வீகச் சூழலை மையமாக வைத்து, காவியம் போன்று இச்சிறுகதைகளைச் சிருஷ்டித்திருக்கும் எழுத்துச் சித்தர் லா. ச. ரா.-வுக்கு வானதியின் வணக்கங்கள் உரித்தாகுக.

அன்புள்ள

ஏ. திருநாவுக்கரசு

வானதி பதிப்பகம்