முகவுரை

அவதார புருஷர்கள் பலர் தோன்றிய பெருமை உடையது நம் நாடு. யுகதிருப்பங்களில் அரசியல், சமூகம், இலக்கியம், சமயம் இவை சீர்குலைவதற்கான நிமித்தங்கள் தோன்றும் பொழுது, கடவுள்தன்மை மிக்க மகான்கள் எதிர்பாராத விதமாய் வருகின்றார்கள். குறைபாடுகளைத் தீர்த்து விட்டு அதிசயமான வழியில் மறைகின்றனர். புத்தபிரான், சங்கரர், சைதன்யர், இராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்ற பெருந்தகையோரின் மரபில் வந்து அண்மையில் நம் கண்முன்பே திருச் செயல்களை நிகழ்த்தியவர் காந்தி மஹாத்மா. மற்ற அவதார புருஷர்களிடம் தென்படாத தனிச்சிறப்பு இவருக்கு உண்டு. மக்களோடு ஒருவராக இவர் இழைந்து பழகியவர்; ஏழையின் உள்ளதை உணர்ந்தவர்; கடல் போன்ற எதிர்ப்புகளுக்கு அசையாத மலை போன்ற உறுதியினர்; தீவிர உண்மைகளைச் சோதனை செய்வதில் சற்றும் தளராதவர்; உடல் வருந்தினாலும் உள்ளத் தெளிவை விடாதவர்; முரணாக நின்று போரிட்ட மூட நம்பிக்கையை விலக்கத் தம் மன்னுயிரையும் இழக்கத் துணிந்தவர். "நாம் யார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம்,ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம், இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற அப்பரது வாக்கை மெய்ப்பித்தவர்.

அற்புதங்கள் நிரம்பிய இவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத முற்றிலும் தகுதி உள்ள ஓர் இலக்கிய கர்த்தா தமிழ் நாட்டுக்குக் கிடைத்தது அதன் பெரும் பாக்கிய மென்றே கூறலாம். இன்று தமிழ் மொழியை உயர்ந்த பீடத்தில் வைத்த பெருமை 'கல்கி'யையே சாரும். தமிழர் இதயத்தில் என்றென்றும் இடம் கொண்ட அவர் ஆக்கிய இந்தத் திவ்ய சரிதை எத்துணை அழகு வாய்ந்ததாய் இருக்க வேண்டும்! இதைப் புத்தக வடிவில் வெளியிடும் எமக்கு ஏற்படும் மகிழ்ச்சி ஒரு புறம் இருக்கட்டும். தாம் சிருஷ்டி செய்த இவ்வரிய செல்வத்தை அனைவரும் படித்து இன்புறுவதைப் பாராமல் அவர் பரமபதம் அடைந்ததுதான் எங்களுடைய பெருங்குறை. இருந்தாலும் நித்திய உலகிலிருந்து இந்தச் சிறு முயற்சியின் மீது தம் நோக்கைச் செலுத்தி அவர் எங்களுக்கு நிறைவான ஆசி தருவாரென்பது திண்ணம். தமிழன்பர்கள் இந்நூலை வரவேற்பதன் மூலம் அவருடைய திருக்குறிப்பைப் பெற்றவராவோம்.

பதிப்பாளர்.

அமரர் கல்கி / ஆசிரியர் "கல்கி".

எளிய குடும்பத்திலே பிறந்து சுய முயற்சியால் முன்னுக்கு வந்த மேதைகளில், "கல்கி" ச்ரீ ரா. கிருஷ்ணமூர்த்தி அவர் களும் ஒருவர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தேசீய இயக்கத்தில் ஈடுபட்டு விட்டார். சிறைக்குப் போனார். விடுதலையாகி வந்த பிறகு, "நவசக்தி"யில் திரு. வி. க. வுக்குக் கீழே சில ஆண்டுகள் தொண்டாற்றினார். பின்பு, ராஜாஜி அவர்களுடைய அன்புக்கும், அபிமானத்துக்கும் பாத்திரராகி திருச்செங்கோடு சென்று கதர்ப் பணியிலும் மதுவிலக்குத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தார். அப்புறம் ஸ்ரீ எஸ். எஸ். வாசனுடைய அழைப்புக்கிணங்க, சென்னைக்கு சென்று, "ஆனந்த விகடன்" ஆசிரியப் பொறுப்பேற்று, பல ஆண்டுகள் அதைச் சிறப்பாக நடத்தினார். இந்தியாவிலேயே பிரபலமான வாரப் பத்திரிக்கையாக அதை ஆக்கினார். இணையற்ற தம் எழுத்துத் திறமையாலே எல்லோரையும் பிரமிக்க வைத்தார்.

தமிழ் இலக்கிய வரலாற்றிலே, "ஆனந்த விகடன் யுகம்" என்று சொல்லும்படியாக ஒரு காலத்தையே சிருஷ்டித்தார். பின்பு "கல்கி"யைத் தொடங்கினார். ஸ்ரீ சதாசிவத்தின் அபூர்வமான நிர்வாகத் திறமையாலும் ஒத்துழைப்பின் மூலமும் ஒரு சில ஆண்டுகளுக்குள் அதை "விகட"னுக்கு இணையாக ஆக்கினார். "விகடன்" மூலமும், கல்கி மூலமும் தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், தேசப் பற்றும் ஏற்பட அவர் செய்த தொண்டை என்றும் மறக்கவே முடியாது.

இருபதாம் வயதில் பிடித்த பேனாவை ஐம்பத்து மூன்றாம் வயது வரை, அதாவது, மறையும் வரை கீழே வைக்கவே இல்லை. "சாவதற்குள் என் சக்தி முழுவதையும் உபயோகித்துவிட விரும்புகிறேன். வாழ்கையை ஒரு சிறு மெழுகுவத்தியாக நான் கருதவில்லை. அதை ஒரு அற்புத ஜோதியாக மதிக்கிறேன். அதை எதிர்கால சந்ததியாருக்கு கொடுப்பதற்கு முன், எவ்வளவு பிரகாசமாக எரிய வைக்க முடியுமோ, அவ்வளவு பிரகசமாக அதை எரிய வைக்க விரும்புகிறேன்" என்றார் காலஞ்சென்ற பெர்னார்ட்ஷா. அதை அப்படியே வாழ்கையில் கடைப் பிடித்தவர் "கல்கி".

தமிழ்க் கவிதைக்கு பாரதி எப்படி புத்துயிர் அளித்தாரோ அப்படியே வசன இலக்கியத்துக்கு நவஜீவன் அளித்தவர் "கல்கி". தமிழில் எதை வேண்டுமானாலும் எழுத முடியும், அதையும் ரொம்ப ரொம்ப தமிழிலேயே எழுத முடியும், குழந்தைகள் கூட அதைப் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் "கல்கி".

அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சங்கீத விமர்சனம் - எல்லாவற்றிலும் அவர் தன்னிகரற்று விளங்கினார். கவிதைகளும் இயற்றியுள்ளார். அவர் தொடாதது எதுவுமே இல்லை; அவர் தொட்டுப் பொன்னாக்காதது எதுவுமே இல்லை. சாகா வரம் பெற்ற அபூர்வமான சரித்திர நவீனங்களை அவர் தமிழுக்கு அளித்துள்ளார். "சிவகாமியின் சபதம்", "பொன்னியின் செல்வன்", "பார்த்திபன் கனவு" முதலிய நூல்கள், இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகுங்கூட, தமிழ் மக்களின் இதயங்களை இன்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் என்பது நிச்சயம்.

மொழிக்குப் புத்துயிர் அளித்தது போலவே, மக்களின் வாழ்க்கையிலும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.நல்ல காரியம் எதுவாயிருந்தாலும் அதில் முன்னின்று உழைத்தார். அவர் கலந்து கொள்ளாத முக்கிய விழா எதுவுமே இல்லை. பாரதிக்கு எட்டயபுரத்தில் ஒப்புயர்வற்ற நினைவுச் சின்னம் கட்டினார். தேசத்தின் தந்தையாகிய காந்திமஹாத்மா வுக்கு ஸ்தூபி கட்ட அரும்பாடு பட்டார். தூத்துக்குடியில் வ.வு.சி.கல்லூரி ஏற்படுத்துவதற்குப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். முது பெரும் எழுத்தாளராகிய வ. ரா. வுக்கும்

வேறு பல கலைஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் நிதி திரட்டிக் கொடுத்து உதவி செய்தார். அன்னதான சிவன் சங்கத்தின் தலைவராக இருந்து சிறந்த பணியாற்றியிருக்கிறார். சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு உழைத்த பெரியார் அவர். ஸ்ரீ. ரா. கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்ட போதிலும், "கல்கி" தமிழ் இலக்கிய வானிலே என்றும் அழியாப் புகழுடன், அமர தாரையாக விளங்குவார்.

மங்கள நூலகம்.

நுங்கம்பாக்கம் சென்னை - 6