முன்னுரை
சமீபத்தில் பத்திரிகைகளில் 'அம்மாமி அப்பளாம்' என்னும் விளம்பரத்தைப் பார்த்ததும், எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடனே பாகீரதி அம்மாமியின் ஞாபகம் வந்தது. அவளுடைய அருமைப் புதல்வனும் என்னுடைய பிராண சிநேகிதனுமான கேதாரியின் அகால மரணத்தை எண்ணிய போது உடம்பை என்னவோ செய்தது. கேதாரிக்கு இந்தக் கதி நேருமென்று யார் நினைத்தார்கள்? இது போன்ற சம்பவங்களை எண்ணும்போது தான் மனித யத்தனத்தில் நமக்கு நம்பிக்கை குன்றி, விதியின் வலிமையில் நம்பிக்கை பலப்படுகிறது.
கேதாரி நோய்ப்பட்டு கிடந்தபோது அவனை வந்து பரிசோதனை செய்யாத பெரிய டாக்டர்கள் சென்னையில் யாரும் இல்லை. ஆயினும் அவர்களில் யாரும் அவனுடைய நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏதேதோ வியாதியென்றும், காம்ளிகேஷன் என்றும் சொல்லி வைத்தியம் செய்தார்கள். கேதாரி பிழைக்கவுமில்லை. அவனுடைய சிநேகிதர்களையும் உறவினர்களையும் பரிதவிக்க விட்டு இறந்துதான் போனான். இதுபற்றி அச்சமயம் டாக்டர்களுக்கே ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. "என்ன வைத்திய சாஸ்திரம்? என்ன டாக்டர்கள்? எல்லாம் வெறும் படாடோ பந்தான்" என்று ஜனங்கள் சொன்னார்கள்.
கேதாரியின் விஷயத்தில் டாக்டர்கள் பேரிலாவது வைத்திய சாஸ்திரத்தின் மேலாவது யாதொரு தவறுமில்லை யென்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதை நான் எழுதுகிறேன். அவனுடைய உடல் நோயின் வேர் அவனுடைய மனோ வியாதியில் இருந்தது என்பதும், அந்த மனோவியாதி நமது சமூகத்தைப் பிடித்திருக்கும் பல வியாதிகளில் ஒன்றைக் காரணமாகக் கொண்டதென்பதும் டாக்டர்களுக்கு எப்படித் தெரியும்? அவனுடைய அருமைத் தாயாருக்கும், இளம் மனைவிக்கும் கூட அது தெரியாத விஷயமே. அவனுடைய அத்தியந்த நண்பனான நான் ஒருவனே அந்த இரகசியத்தை அறிந்தவன். கேதாரி மரணமடைந்த புதிதில் அதைப்பற்றிப் பேசவோ எழுதவோ முடியாதபடி துக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். இப்போது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது. என்னுடைய ஆத்ம சிநேகிதனுக்கு நான் செய்யவேண்டிய கடமையாகக் கருதி அவனுடைய கதையை வெளியிடுகிறேன்.
ஆமாம்; ரொம்பவும் துயரமான கதைதான். நம்முன் சிலர் சோக ரசத்தை அநுபவிப்பதற்காக நாடகங்களுக்குப் போவோம்; ஆனால் வாழ்க்கையில் நம் கண் முன் நிகழும் சோக சம்பவங்களைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொள்வோம். அத்தகையவர்கள் கேதாரியின் கதையைப் படிக்காமல் விடுவதே நல்லது!

