Chapter 5

பெருமாள் கோனாரின் கருமாதிக்கு மறுநாள் காலை கிருஷ்ணன் பழையசோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது அடுத்த வீட்டுக்காரி, "அமிர்தம்! சங்கதி கேட்டாயா?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.

"என்ன சமாசாரம்?" என்று அமிர்தம் கேட்டாள்.

"பிடாரி, பூங்கொடியை வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள். அந்தப் பெண் அழுதுகொண்டே கிளம்பிப் போகிறது."

"ஐயோ பாவம்! அது எங்கே போகும்?" என்றாள் அமிர்தம்.

"அது என்ன கர்மமோ? போக்கிடம் ஏது அதற்கு? எங்கேயாவது ஆத்திலே குளத்திலே விழுந்து செத்து வைத்தாலும் வைக்கும்..."

கிருஷ்ணன் அதற்குமேல் கேட்கவில்லை. சட்டென்று எழுந்திருந்து கையலம்பிவிட்டு வாசலில் வந்து பார்த்தான். பூங்கொடி தெருவைத் தாண்டி அப்பாலுள்ள பாதையில் போவதைக் கண்டான். இவன் குறுக்கு வழியாக வயல்களில் விழுந்து சென்று அந்தப் பாதையில் அவளுக்கு முன்னால் சென்று ஏறினான்.

பூங்கொடியின் எதிரில் சென்று வழிமறித்து நின்று கொண்டு, "எங்கே போறே?" என்று கேட்டான்.

"நான் எங்கே போனால் யாருக்கென்ன?" என்று பூங்கொடி சொல்லிக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

"சொல்லாது போனால் நான் விடமாட்டேன்," என்றான் கிருஷ்ணன்.

"சீர்காழிக்குப் போறேன்; அங்கே மில்லிலே வேலை செய்து பிழைக்கலாமென்று"

"ஏன் இத்தனை நாள் இருந்த ஊரை விட்டுப் போக வேணும்?"

"போகாதே பின்னே எங்கேயிருக்கிறது? மாமி வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டாள்."

"ஏன் அப்படிச் சொன்னாள்? அவளுக்கு உன் மேலே என்ன கோபம்?"

பூங்கொடி சற்று நேரம் சும்மா இருந்தாள். பிறகு, "உனக்கென்ன அதைப்பற்றி? எனக்கும் அந்த வீட்டிலே இருக்கப் பிடிக்கலை; நான் போகிறேன்," என்றாள்.

"நான் சொல்கிறேன் கேள் பூங்கொடி! அந்த நாயின் பணம் உனக்கு வேண்டாம். ஒருத்தருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டு வந்து அந்த வீட்டிலேயே எறிந்துவிடு...நாம்"

"நீ கூட என்னைத் திருடி என்று தானே நினைக்கிறாய்? நான் எதற்காக உயிரோடு இருக்கவேணும்? விடு நான் போகிறேன்" என்று சொல்லிப் பூங்கொடி அழத் தொடங்கினாள்.

கிருஷ்ணன் சிறிது நேரம் சும்மா இருந்தான். பிறகு, "சரி, வா! போகலாம்!" என்றான்.

"எங்கே?"

"வீட்டுக்கு."

"எந்த வீட்டுக்கு?"

"எந்த வீட்டுக்கா? என் வீட்டுக்குத்தான். சீர்காழிக்கு நீ போகவும் வேண்டாம்; மில்லில் வேலை செய்யவும் வேண்டாம். நானிருக்கிற வரையில் அது நடக்காது."

"உன் வீட்டுக்கு வந்தால்...அப்புறம்?"

"புரோகிதரைக் கூப்பிட்டுக் கல்யாணத்துக்கு நாள் வைக்கச் சொல்றது!"

"திருடியைக் கட்டிக் கொண்டாய் என்று ஊரிலே சொல்ல மாட்டார்களா? உனக்கு வெட்கமாயிராதா?"

"யாராவது உன்னை அப்படிச் சொன்னால் அவர்கள் நாக்கை அறுத்துவிடுவேன். அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது."

"உன் ஆயா சம்மதிப்பாளா? அங்கே போய் மறுபடியும் வீட்டை விட்டுப் போகச் சொன்னால்?"

"ஆயா அப்படிச் சொன்னால் உன்னோடு நானும் வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிடுகிறேன். அப்பொழுது இரண்டு பேருமாய்ப் போவோம்."

"சத்தியமாய்ச் சொன்னால் தான் வருவேன்."

"சத்தியமாய்ச் சொல்றேன். வா, போகலாம்!"