Chapter 7

சந்திரசூடன் மதராஸுக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துப் புன்னைவனத்துக்குத் திரும்பி வந்தான். அதற்கு முதல் நாள் புன்னைவனத்தில் ஒரு விசேஷம் நடந்தது என்று அறிந்தான். மலைமேலுள்ள கோயிலில் இரண்டு நாள் உற்சவம் நடந்தது. அதற்காகத் திரளான ஜனங்கள் மலைமேல் ஏறிச் சென்றார்கள். அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். புலியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தபடியால் அனேகர் தடிகள், ஈட்டிகள் முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டும் சென்றார்கள். இந்தத் தடபுடலினால் பயந்துதானோ என்னமோ, புலி பட்டப் பகலில் கீழே இறங்கி வந்து விட்டது. நடுச் சாலையில் ஒரு மாட்டின் மீது பாய்ந்து கொன்றது. இந்த விஷயம் பரவி விடவே உற்சவத்துக்கு வந்திருந்த ஜனங்களில் பலர் கூச்சலிட்டுக் கொண்டு அங்கு மிங்கும் ஓடினார்கள். தைரியசாலிகள் தடிக் கம்புகளையும் ஈட்டிகளையும் வேல்களையும் எடுத்துக் கொண்டு புலியைத் தாக்க ஓடி வந்தனர். மனோகரும் துப்பாக்கியை எடுத்து வந்தான். அதற்குள் புலி 'காபரா' அடைந்து ஓடிவிட்டது. புலியைப் பார்த்தவர்கள் அதற்கு ஒரு கால் ஊனம் என்றும், நொண்டி நொண்டி நடந்தது என்றும் சொன்னார்கள்.

'புலி அடித்த மாட்டை அங்கேயே விட்டு வைத்திருந்தால் திரும்பவும் புலி வரும்' என்று அனுபவசாலிகள் சொன்னதன் பேரில் அப்படியே செய்தார்கள். நாலாபுறத்திலும் காவலும் போட்டிருந்தார்கள்.

இந்த நிலையிலேதான் சந்திரசூடன் திரும்பி வந்தான். ஹோட்டலில் மேற்கூறிய விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்டான். துப்பாக்கியைக் குண்டு போட்டுக் கெட்டித்துக் கையில் எடுத்துக் கொண்டான். முதலில் மனோன்மணி வீட்டுக்குப் போனான். அவள் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டாள் என்று தெரிந்தது. குழந்தை ராஜ்மோகன் 'சமர்த்து மாமா'வைப் பார்த்ததில் மகிழ்ச்சி கொண்டான். மழலை மொழிகளில் முதல் நாள் ஊருக்குள் புலி வந்ததைப் பற்றியும் கூறினான்.

"மாமா! எனக்குப் புலி பார்க்க வேணுமென்று ஆசையாயிருக்கிறது. அம்மாவோ வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்கிறாள். நீங்கள் என்னை அழைத்துக் கொண்டு போய்ப் புலி காட்டறேளா, மாமா!" என்றான்.

"ஆகட்டும், ஆகட்டும்! அந்தப் பொல்லாத புலியைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து உங்கள் வீட்டு வாசலிலேயே கட்டிப் போட்டு விடுகிறேன்" என்று சொன்னான் சந்திரசூடன்.

பிறகு அவன் பண்ணையாரின் வீட்டுக்குப் போனான். அவரிடம் தனியாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். சென்னையில் பெரிய அனுபவசாலியான வக்கீல்களுடன் கலந்தாலோசித்து எழுதிக் கொண்டு வந்திருந்த உயில் நகலைப் படித்துக் காட்டினான். அவருக்கும் அது திருப்தி அளித்தது. ரிஜிஸ்ட்ரார் ஆபீஸுக்குச் சீக்கிரம் சென்று ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வந்துவிடவேண்டுமென்றும் அதுவரையில் யாருக்கும் விஷயம் தெரிய வேண்டாம் என்றும் பண்ணையார் கூறினார்.

இதற்குள் ஊரில் ஏதோ அல்லோலகல்லோலம் நடக்கிறது என்பதற்கு அறிகுறியான கோஷங்கள் எழுந்தன. "புலி திரும்பி வந்திருக்கிறதாம்!" என்று வீட்டு வேலைக்காரர்கள் சொன்னார்கள். சின்ன எஜமானர் முன்னமே துப்பாக்கி சகிதமாகப் போயிருப்பதாகவும் தெரிவித்தார்கள். சந்திரசூடனும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். "ஜாக்கிரதை, ஐயா ஜாக்கிரதை! நம்ம முரட்டுப் பிள்ளையையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்!" என்று பண்ணையார் சொல்லி அனுப்பினார்.

சந்திரசூடன் பண்ணையார் வீட்டை விட்டு வெளியேறிக் கூச்சல் அதிகமாகக் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்றான். கிட்டத்தட்ட தபாலாபீசை நெருங்கிய போது ஒரு விந்தையான காட்சியைக் கண்டான். அது விந்தையான காட்சிதான்; அதே சமயத்தில் மிகப் பயங்கரமான காட்சியும்தான்.

பிரசித்தி பெற்ற 'புன்னைவனத்துப் புலி' கடைசியாக அவன் முன்னால் தரிசனம் அளித்தது. புலி மரம் ஏறும் என்று அவன் கேள்விப்பட்டதில்லை. ஆயினும் இந்தப் புலி வளைந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பாதி உயரம் ஏறி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தது. ஜனங்கள் கூச்சல் போட்டுக் கொண்டு நாலாபுறமும் துரத்தவே அந்தக் காயம்பட்ட கிழப்புலி வேறு வழி இன்றித் தென்னை மரத்தின் மேல் பாய்ந்து ஏறிக் கொண்டது போலும்! புலி ஏறிய தென்னை மரத்தின் ஒரு பக்கம் மனோகரனும், அவனுடைய உதவியாளனாகிய ஹமீதும் நிற்பதைச் சந்திரசூடன் கண்டான். மனோகரன் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரத்தின் இன்னொரு பக்கத்தில் - பயங்கரம்! பயங்கரம்! மனோன்மணியின் வீட்டு வாசற்புற மதில்மேல் குழந்தை ராஜ்மோகன் உட்கார்ந்து கொண்டிருந்தான். குழந்தை எப்பேர்ப்பட்ட ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பது, பார்த்த அதே க்ஷணத்திலேயே சந்திரசூடனுக்குத் தெரிந்து விட்டது. மனோகரின் துப்பாக்கிக் குண்டு புலியின் மேல் பட்டாலும் சரி, அல்லது படாவிட்டாலும் சரி, புலி மறுபக்கமாகப் பாய்ந்தால் குழந்தையின் கதி அதோகதிதான்! இவ்வளவு விஷயங்களையும் சில விநாடி நேரங்களில் மனத்தில் கிரகித்துக் கொண்ட சந்திரசூடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று குழந்தையை அணுகினான். குழந்தை, "மாமா! மாமா! புலி புலி!" என்று உற்சாகமாகக் கூவியதைப் பொருட்படுத்தாமல் குழந்தையை அப்படியே தூக்கி எடுத்துக் கொண்டு மதில் சுவருக்கு அந்தப்புறத்தில் குதித்தான். அவன் குதித்த அதே சமயத்தில் குண்டு ஒன்று அவர்களுக்குச் சமீபமாகத் தலைக்கு மேலே சென்று மனோன்மணியின் வீட்டுச் சுவரில் பாய்ந்தது.

சந்திரசூடன் குழந்தையை அப்படியே கீழே விட்டு விட்டு பக்கத்திலிருந்த மதில் வாசல் வழியாக வெளிவந்தான். புலி இன்னமும் தென்னை மரத்தின் மேல் தான் இருந்தது. சுவர் ஓரமாகக் கிடந்த தன் துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டான். அவன் சுட்ட குண்டு புலியின் மீது பாய்ந்தது என்று தெரிந்து கொண்டான். உடனடியாக இன்னும் இரண்டு மூன்று துப்பாக்கி வேட்டுச் சத்தமும் கேட்டது. புலி கீழே தடால் என்று விழுந்தது. ஒரு துள்ளுத் துள்ளி எழுந்திருக்கப் பார்த்து மறுபடியும் தள்ளாடி விழுந்தது. பயங்கரமான ஓர் உறுமல் உருமி விட்டுப் பிராணனை விட்டது.

மறுநிமிடம் ஜனக் கூட்டம் புலியைச் சூழ்ந்து கொண்டது. சந்திரசூடனும் புலிக்கு அருகில் சென்றான். அதற்குள் அங்கே வந்திருந்த மனோகரன் இவனைக் கண் பார்வையினாலேயே சுட்டு விடுகிறவனைப் போல் பார்த்து, "செத்த பாம்பை அடிக்கிற சூரர் உம்மைப் போல் கண்டதில்லை. நான் மூன்று குண்டு போட்டுப் புலியைக் கொன்ற பிறகு, நீ எதற்காக அதைச் சுட்டீர்?" என்று கோபமாகக் கேட்டான்.

"அதனால் என்ன! மூன்றோடு, நாலு! செத்த புலியில் பங்கு கேட்க நான் வரவில்லை; புலியைக் கொன்ற பெருமை முழுவதும் தங்களுக்கே இருக்கட்டும்!" என்றான் சந்திரசூடன்.

"ஒருவர் குறி வைத்த வேட்டையின் பேரில் இன்னொருவர் சுடுவது சட்ட விரோதம் தெரியுமா?"

"வேட்டை சம்பந்தமான சட்டம் ஒன்றும் எனக்குத் தெரியாது, ஸார்! தயவு செய்து மன்னிக்கவும்."

"மன்னிக்கவாவது மண்ணாங்கட்டியாவது? குறி பார்த்துச் சுடவாவது உமக்குத் தெரிகிறதா? மயிரிழை தவறியிருந்தால், குண்டு என் பேரில் அல்லவா பாய்ந்திருக்கும்?"

"அடடா! அப்படியா! ரொம்ப ரொம்ப வருந்துகிறேன். போனது போயிற்று. இனிமேல் நடக்க வேண்டியதைப் பாருங்கள்!" என்று சொல்லிவிட்டுச் சந்திரசூடன் அங்கிருந்து மெள்ள நகர்ந்தான்.

செத்த புலியை ஜனங்கள் ஊர்வலமாக எடுத்துக் கொண்டு போனார்கள். புலியைச் சுட்டுக் கொன்ற வீரன் மனோகரனுக்கு மாலை சூட்டி அவனையும் ஊர்வலத்தின் முன்னணியில் அழைத்துச் சென்றார்கள். தமுக்கு தம்பட்ட முழக்கங்களும், "மனோகரனுக்கு ஜே!" என்ற கோஷமும் வானை அளாவின.