Chapter 14

வீட்டுக்கார முதலியாரவர்களுக்கு,

அநேக கோடி நமஸ்காரம். தாங்கள் நான் வீட்டில் இல்லாத சமயத்தில் இங்கு வந்து சென்று கொண்டிருப்பது கேட்க வருந்துகிறேன். இத்துடன் ரூ.50க்கு ஒரு செக் வைத்து அனுப்பி வைத்திருக்கிறேன். நாளது தேதி வரையில் உள்ள பாக்கியையும் வருகிற மாத வாடகையையும் எடுத்துக்கொண்டு மீதியைத் தங்கள் வசம் வைத்திருந்தால், நான் கடைப்பக்கமாக வரும்போது பெற்றுக் கொள்ளுகிறேன்.

இப்படிக்கு தங்கள் வி.பி.

1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு, தேனாம்பேட்டை, சனிக்கிழமை

ராம பத்மா பிரசுரம் லிமிட்டெட் முதலாளி ஸ்ரீ எல்.எஸ்.பி அவர்களுக்கு

நமஸ்காரம்.

தாங்கள் தங்களது சகபாடி ஸ்ரீ ராமலிங்கம் மூலமாக ரூ. 50க்கு அனுப்பியிருந்த செக்கைப் பாங்கியில் எடுக்க மறுத்துவிட்டார்கள். இதன் மூலம் எனக்கு இரண்டாவது தடவை அவமானம் விளைவித்துவிட்டீர்கள். எழுத்தாளன் என்றால் உங்கள் வீட்டுக் கொத்தடிமை என நினைத்துக் கொண்டீர்களோ? இது ஜனநாயக உலகம். எழுத்துக்கும் எழுதுகிறவனுக்கும் எங்கும் மதிப்பு உண்டு. ராம பத்மா பிரசுராலயம் தமிழ் இலக்கிய சரித்திரத்திலேயே தனக்கென ஒரு மாசு விளைவித்துக் கொண்டிருப்பது கண்டு பரிதபிக்கிறேன். தங்கள் செக்குக்குக் கௌரவம் கொடுத்து, நான் வேறு ஒரு நண்பரிடம் அனுப்பியதனால் ஏற்பட்டுள்ள விபரீத பலனை, இலக்கிய நலனை முன்னிட்டாவது கூடிய சீக்கிரத்தில் நேர்படுத்த முடியும் என எதிர்பார்க்கிறேன்.

(குறிப்பு: திரும்பவும் தாங்கள் ராமலிங்கத்தை அனுப்பவேண்டாம்.)

தங்கள் வி.பி.

1/27, கண்ணாயிரம் பிள்ளை தெரு தேனாம்பேட்டை புதன்கிழமை