Chapter 5
வைரவன் பிள்ளை, உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார்.
அவர் பக்கம் ஒண்டிக்கொண்டு அவரை அண்ணாந்து ஏறிட்டுப் பார்த்த வண்ணம், "நாந்தான் ஆச்சிக்கு நெய்ப் பந்தம் பிடிச்சேனே!" என்று தன் திறமையை விளக்கிக் கொண்டான் சிறுவன்.
"பயலெப் பாருங்களேன்!... ஏலே, ஒங்க ஆச்சியே எங்கடா?" என்றார் சுந்தரம் பிள்ளை.
"செத்துப் போயிட்டா!" என்று அர்த்தமில்லாமல் சொன்னான் சிறுவன்.
"அது பசலெ, அதுக்கென்ன தெரியும்?" என்றார் வைரவன் பிள்ளை.
"அவனா? வலுப் பயல்லே, அவனுக்கா தெரியாது!... ஏலே, ஒங்க ஆச்சியை..." என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர், பால் முதலிய கிரியைக்கு வேண்டியவற்றையும், குடம், சொம்பு முதலியவற்றையும் எடுத்து வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை, "எல்லாம் காலா காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே! நீங்க மேல வீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க!..." என்றார்.
சுடலை மறுபடியும் மெழுகு வைத்த இரட்டைச் சங்கை முழக்கினான். எல்லோரும் துண்டை உதறித் தோள் மேல் போட்டுக்கொண்டு எழுந்தனர். சுடலை முன்னால் முழக்கிக் கொண்டே நடந்தான்.
வைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்தார். அவருக்கு முன்னால், தலை முண்டிதமான அவருடைய ஒரே மகன் செல்லுகிறான்... மனசிலோ நடையிலோ கவலை தள்ளாடவில்லை.
வைரவன் பிள்ளை மனக்கண்முன், மணக் கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை யாச்சியின் உருவம் நின்றது...
சுடலை சங்கை முழக்கினான்...
இனிப் பார்க்கப் போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது...
"ஏலே நீயுமா? திரும்பலையா?" என்ற சுந்தரம் பிள்ளை குரல்... பேரன் தொடர்வதைத் திரும்பிப் பார்த்தார்.
மறுபடியும் சுடலை சங்கை முழக்கிக் கொண்டே சந்து திரும்பினான்.
(முற்றும்)
தினமணி, வருஷமலர் - 1937

