Chapter 23
"ஏலே தொப்ளான், என்னலே இன்னங் குடிமகனைக் காணலெ; போனியா?" என்று அதட்டினார் பிள்ளை.
"வூட்லெதான் இருந்தாரு; 'நீ போ, இதாவாரென்'னு சொன்னாரு!" என்றான் தொப்ளான்.
"என்ன இன்னமா வர்ரான் - ரெண்டு மணி நேரமாச்சே... நீ போய் இன்னொரு சத்தங் குடு..."
இரண்டு தென்னங் கீற்றுகளை இழுத்துவந்து தொப்பென்று போட்ட பலவேசம், "மாடசாமியத்தானெ கேக்கிய? அவன் வைத்யரு வீட்டெப் பாத்துப் போகுததெக் கண்டேன்!" என்றான்.
"நீதான் போயி அவனெ இப்படிக் கையோட கூட்டியா... நேரம் என்ன ஆகுது பாரு..." என்றார் சிதம்பரம் பிள்ளை.
"ஆகட்டும், எசமான்!" என்று சென்றான் பலவேசம்.
கால் மணி கழித்து, தனியாகவே திரும்பி வந்தான் பலவேசம். ஆனால் ஓடி வந்தான்.
"எசமான், நான் போனேன். வெளிலே மருதப்பரு நிண்ணுக்கிட்டிருந்தாரு. 'இனிமே, குடிமகன் இந்த வேலைக்கு வரமாட்டான்; அவன் தொளில் இதில்லே; இனிமேச் செய்ய முடியாதாம்ணு போய்ச் சொல்லு'ன்னு சொல்லிப்பிட்டாரு!" என்றான் பலவேசம்.
"மாடசாமியா அப்படிச் சொன்னான்?" என்று தென்னங்கீற்றைத் தடுக்காக முடைந்துகொண்டிருந்த சுப்புப் பிள்ளை எழுந்தார்.
"இல்லெ, மருதப்பருதான் சொன்னாரு."

