Chapter 21

"மூதி தொலைஞ்சுட்டுப் போகுது. அண்ணெக்கி வந்து மூக்காலே அளுதானேன்னு பாத்தேன்... ஊர்லே தேவமாருன்னு பேர் வச்சுக் கிட்டு பூனையாட்டம் ஒண்டிக்கெடந்தா என்னதான் நடக்காது... புள்ளைமாருக்குன்னுதான் இந்த வூரா... அப்போ நாங்க போயிருந்தோம்... அதெத்தான் அத்துப் பேசட்டுமே... என்னடே தொப்ளான், எங்கே அவசரம்?" என்றார் வைத்தியர்.

தலை தெறிக்க ஓடிவந்த தொப்ளான், "நீங்க இங்கியா இரிக்கிய, தெரஸய்யா சமுசாரத்துக்குத் தடபுடலாக் கெடக்கு, ஒங்களெ சித்த சத்தங்காட்டச் சொன்னாவ - டவுன் பஸ்ஸு போயிட்டுதா? பாத்தியளா?" என்று பஸ் எதிர்பாக்கப்பட்ட திசையை வெறிக்கப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

"அதுவும் அப்பிடியா! காத்தெக் கட்டிப்போட முடியுமா? வேலாண்டி, நான் அப்பம் ஒரு சேதி சொன்னேனே பாத்தியா - பாத்துக்கோ..."

ஈரம் சொட்டும் பச்சிலை முடிப்போடு குறுக்குப் பாதை வழியாக ஊரை நோக்கி நடந்தார் மருத்துவர்.

"என்னடே! தொப்ளான் - நீ எங்கலே போரே...?"

"நான் ஒரண்டையும் போகலே... பட்டணத்து எசமான் பெரிய டாக்குட்டரெக் கூப்பிட டவுனுக்குப் போராவ..."

"என்னடே பஸ் வந்துதா?" என்று கொண்டே 'மெட்ராஸ்' மெருகிழந்து, கவலை தேங்கிய முகத்துடன் வந்தான் மகராஜன்.

"இல்லே எசமான், ஒண்ணையும் காங்கலியே!" என்றான் தொப்ளான்.