Chapter 8
"என்னப்பா, இன்னந் தெரியலையா? நம்ம மேலவீட்டு தெரஸர் பிள்ளை இருக்காஹள்லா - அவுஹ மகன் மகராச பிள்ளை! - என்னய்யா சௌக்கியமா?" என்று கடைப் பட்டறையிலிருந்தபடியே விசாரித்தார் சுப்புப் பிள்ளை.
மகராஜன் அவர் திசையைப் பார்த்துச் சிரித்தான்.
"என்ன எசமான் சவுக்கியமா - அங்கே பட்டணத்திலே மளெ உண்டுமா? - ஐயா, உடம்பு முந்தி பாத்த மாறுதியே இரிக்கியளே!" என்றான் வேலாண்டி.
பீடியை இரண்டு தம் இழுத்து எறிந்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்ட டிரைவர், ஸீட்டில் உட்கார்ந்து கொண்டு, 'வண்டி புறப்படப் போகிறது. பிரயாணிகள் ஏறிக்கொள்க!' என்ற பாவனையில் ஹார்ன் அடித்தான். கண்டக்டர் அப்பொழுதுதான் தனக்கு ஞாபகம் வந்த 'ஹிந்து' பத்திரிகையை அவசர அவசரமாகக் கடைக்கு எடுத்து ஓடினான்.
தங்கள் தேக உபாதையை நீக்கிக் கொள்ளச் சென்றிருந்த பிரயாணிகள் அவசர அவசரமாக ஓடி வந்தனர். அதில் ஒரு முஸ்லீம் அன்பர் - பார்வைக்குச் செயலுள்ளவர் போல் முகத்தில் களை இருந்தது - அவர் முன் ஸீட்டைப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் அவசரமாக அதில் குறிவைத்து ஓடிவந்தார்.
இவ்வளவு கூட்டத்தையும் கவலையின்றிக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர், "என்ன மரைக்காயர்வாளா? ஏது இப்படி?" என்று முகமலர்ந்து குசலப் பிரச்னம் செய்தார்.

