Chapter 5

சம்பத்துக் காரணமாக ஜாதி வித்தியாச மனப்பான்மையைச் சிறிது தளர்த்தி, ஒரு விதத்திலும் பட்டுக் கொள்ளாமல் 'வைத்தியர்வாள்' என்று மருதப்ப மருத்துவனாரை அழைப்பது அவரது சமீபத்திய சம்பிரதாயம்.

'வைத்தியர்வாள்' இச்சந்தர்ப்பத்தில் வீட்டு முற்றத்தில் ஏதோ பச்சிலைகளை ஸ்புடமிட்டு முகம் வியர்க்க ஊதிக் கருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது பாம்புச் செவியில் சம்பாஷணை அரை குறையாக விழுந்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்த மருத்துவனார், "பிள்ளையவாள், என்ன சொல்லுதிஹ?" என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

"என்ன! நம்ம கள்ளப்பிரான் பிள்ளே இருந்தானே... அவனைத் தான் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேன்... அவனைப் பத்தித்தான் உங்களுக்கு நல்லாத் தெரியுமே..." என்று கடையிலிருந்தபடி குரலெழுப்பினார்.

உடலைத் துடைத்துக்கொண்டு, வேஷ்டியை உதறிக்கட்டியவண்ணம் கடையை நோக்கி நடக்கலானார் வைத்தியர்.